மோனிகா பாடலுக்கு சௌபின் ஸாகிர் துள்ளாட்டம் போட்டது போல ஒரு துள்ளாட்டம் போட்டார் ஆர்னிகா.
“ஏனிந்தக் குதியாட்டம் ஆர்னிகா?” கேட்டேன்.
“எகிப்து விசா ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் வந்து விட்டது!”
“சபாஷ்!”
ஹஜ்யாத்திரை அல்லது உம்ரா செல்பவர்கள் பல சிறப்பு சடங்குகளைச் செய்வார்கள். உற்றார் உறவினர் நண்பர்களை அழைத்து விருந்து வைப்பார்கள். சண்டை போட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானம் பெறுவார்கள். கடன் வாங்கியிருந்தால் கடனை செட்டில் செய்வார்கள். பொதுவாக ஹஜ் செல்வோர் மகன்மகள் திருமணத்தை முடித்துவிட்டுச் செல்வர். ஹஜ் போய் அங்கு மௌத் ஆவதை பெரிய பாக்கியமாக கருதுவர். ஹஜ்ஜை நடந்தே சென்று ஒருவர் நிறைவேற்றுவதாய் ஒரு கதை கூட எழுதி இருக்கிறார் ஆர்னிகா. ஹஜ் போய் உயிருடன் திரும்பி வருவது நிச்சயமில்லாத ஒரு காலம் ஒன்று இருந்தது. இப்போது அப்படி அல்ல ஹஜ் அல்லது உம்ரா மிகமிக எளிதாகிவிட்டது. வசதி படைத்தோர் பத்து இருபது தடவைகள் ஹஜ் போய் வந்து விடுகின்றனர். மெக்கா, ஜெத்தா, மதீனாவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் நூற்றுக்கணக்கான தடவை மெக்காவைத் தரிசித்து விடுகின்றனர்.
என் தந்தை ஹாஜி எஸ்.என் ஷாகுல் ஹமீது அவரது திருமணத்திற்கு முன்பே கப்பலில் ஹஜ் போய் வந்தவர். அவர் போய் வந்த வருடம் 1953. அப்போதைய தென்காசியில் ஹஜ் நிறைவேற்றியவர் என் தந்தை ஒருவரே. அதனால் அவரை ஹாஜியார் என அழைத்தனர்.
ஹாஜியார் வீடு என்றால் அது எங்கள் வீடுதான். என் தந்தை கமலஹாசனை விட மிக அழகானவர். மிக நேர்த்தியாக ஆடை அணிவார். நிறைய வாசிப்பார். குறைவாக பேசுவார். காதில் ஹியரிங் எய்ட் மாட்டி இருப்பார். தினமும் மாலை நேரங்களில் சாமிசன்னதி தெரு சென்று பெரிய லாலாக் கடையில் சுடச்சுட அல்வாவும் கைப்பிடி மிக்சரும் சாப்பிடுவார்.
மெக்காவுக்கு போய் வந்த ஆண் ‘ஹாஜி’ என பட்டம் சூட்டிக் கொள்வதும் பெண் ‘ஹாஜியா’ என பட்டம் சூட்டிக்கொள்வதும் வீண்பெருமை என்பது ஆர்னிகா எண்ணம். ஆடம்பரத்தை காட்ட ஹஜ்ஜை பல முறை நிறைவேற்றுவது தேவையற்றது எனவும் ஆர்னிகா கூறுவார். ஆன்மிகத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்பார்.
நாங்கள் உம்ரா போவதை வரிசைக்கிரமமாக உறவினர்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தோம்.
முதலில் மகன் மருமகளுக்கு அடுத்து மகன் வழி சம்பந்தி வீட்டாருக்கு. மகள் மருமகனுக்கு மருமகன் வழி சம்பந்தி வீட்டாருக்கு. என் அண்ணன் கருணைராஜா காத்தநபி மற்றும் அவர் மகன் வீட்டாருக்கு. என் தம்பி ஜெயின்லாப்தீன் மனைவி மக்களுக்கு. என் தம்பி ஜாகிர் உசேன் மனைவி மக்களுக்கு. என் அண்ணன் அருள்ஆலமீனின் மனைவி மற்றும் மக்கள் வீட்டாருக்கு. என் அக்காள் மின்னல் பாத்திமா வீட்டாருக்கு தெரியப்படுத்தினேன்.
மகன் வழி சம்பந்தி கைபேசியில் பேசினார். அவர் பெயர் ரபீக்முகமது.
சென்னையில் நெடுஞ்சாலைதுறையில் உதவிக் கோட்டப்பொறியாளராகப் பணிபுரிகிறார். அவர் ஒரு பயணத்தேனீ. வாராவாரம் சென்னை - மேல்மருத்தூர் – பள்ளப்பட்டி - கோயம்புத்தூர் என மகள்களுக்காக ஷண்டிங் அடிப்பார்.
என் கணவருக்கும் அவருக்கும் ‘யார் சிறந்த தாத்தா?’ போட்டி நிலவும் அர்ஹான் அவருடன்தான் அதிகம் ஒட்டுவான்.
“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!”
“வஅலைக்கும் ஸலாம் மச்சான்!”
“உம்ரா போகும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு இஹ்ராம் இரண்டு செட்டும் உங்கள் மனைவிக்கு இரண்டு செட் ஹிஜாப்களும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு சௌதி பணமும் உம்ராவில் ஓத துஆ புத்தகங்களும் பரிசளிக்கிறேன்!”
“நன்றி மச்சான்!”
“உம்ரா கிளம்புவதற்கு முன் ஒரு இமாமை கூப்பிட்டு பாத்தியா ஓதுங்கள்!”
“சரி!”
“நாங்கள் சின்னப்புள்ளைகளா இருத்தப்ப ஹஜ் போறவங்களை வழியனுப்ப ஒரு பெருங்கூட்டம் மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல கூடும் பாருங்க… கண்கொள்ளாக்காட்சி!”
“ஆமாம்!”
“2025ல் ஹஜ்யாத்திரீகர்கள் எண்ணிக்கை 175025. அதில் எழுபது சதவீதம் பேர் 122518 ஹஜ் கமிட்டி வழியாகத்தான் போனாங்க. ஹஜ் கமிட்டி. 70வயதுக்கு மேற்பட்ட ஹஜ்ஜாளிகளுக்கு முன்னுரிமை தருகிறது. ஹஜ்ஜாளிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கின்றனர். அந்தக் குலுக்கல் முறைக்கு குவரா (Qurrah) என பெயர். முதல்முறையாக ஹஜ் நிறைவேற்றுவோருக்கு முன்னுரிமை உண்டு. ஒரு ஹஜ்ஜாளிக்கு 25000ரூபாய் மானியம் அரசு வழங்குகிறது. நீங்கள் உம்ரா போய் வருவது இருக்கட்டும். பின்னாளில் ஒரு முழுமையான ஹஜ் நிறைவேத்துங்கள்!”
“இன்ஷா அல்லாஹ்!”
இம்முறை ஆர்னிகா இப்ராகிம் அண்ணனுக்கு போன் பண்ணினார்.
ஆர்னிகாவுக்கு அவர் அண்ணன் முறை. வங்கி மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். நிலாமகனுக்கு அவரது சிபாரிசால்தான் அழகிய மனைவி கிடைத்தார்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“அண்ணன்! நானும் வகிதாவும் உம்ரா போரோம். துஆ பண்ணுங்க!”
“மாஷா அல்லாஹ். நல்லபடியா போய்வாங்க. எங்களுக்காகவும் துஆ பண்ணுங்க!”
“நிச்சயமா!”
“மச்சிகிட்ட சொல்லிடுங்க!”
“சரி!”
மகன்மகளிடம் பேசினோம்.
மருமகள் பஹிமா ஆப்ரின் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து “மக்கால ஜக்காத் கொடுத்திருங்க!” என்றார்.
நாங்கள் குடியிருக்கும் மனாஸ்கார்டன் மக்களுக்குத் தெரிவித்தோம்.
நான் ஆர்னிகாவிடம் திரும்பினேன். “இன்றிரவு இஷா தொழுகைக்கு பிறகு பாத்தியா ஒத பொன்விழா ஜமாஅத் இமாமை கூப்டுங்க!”
மௌலானா மௌலவி அப்ஜலுல் உலமா எஸ். மிக்தாம் ஹீசைன் கலீமீ ஆமிரி பொன்விழா பள்ளிவாசலின் இமாம். அவரது பயானின் ரசிகர் ஆர்னிகா. அவரது பயான் அரைத்தமாவையே அரைக்காமல் அறிவுப்பூர்வமாக இருக்கும். ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் அவர் அவரது பயானின் ஆடியோ பதிவை ஆர்னிகாவுக்கு அனுப்புவார்.
ஆர்னிகா, “அந்த இமாம் பிசியாக இருப்பார். இங்கு பக்கத்துப்பள்ளியில் ஒரு அஸ்ஸாம் இமாம் இருக்கிறாரே அவரை கூப்பிடுவோம்!”
“சரி!” என்றேன்.
புரோட்டாவும் சிக்கன் கிரேஸியும் செய்தேன். பேரீச்சம் பழங்களைப் பீங்கான் தட்டில் பரப்பினேன்.
பெரிய கம்பளத்தை விரித்தேன்.
அஸ்ஸாம் இமாமுக்கு 28வயதிருக்கும் திருமணமாகாதவர் தத்திதத்தி தமிழ் பேசினார்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
வந்து அமர்ந்தார் இமாம்.
“என்ன ஓத வேண்டும்?”
“நானும் என் கணவரும் உம்ரா போகிறோம் எங்களது உம்ரா பயணம் பாதுகாப்பாக அமைய பொதுவாக ஒரு பாத்தியா ஓதுங்கள்!”
இஸ்லாமில் சில உட்பிரிவினர் பாத்தியாவோ மௌலிதுவோ ஓதுவதில்லை.
சாம்பிராணி புகையை மூட்டி ஊதுவத்தியை வாழைப்பழத்தில் செருகினேன்.
இமாம் திறன்பேசியை உயிர்ப்பித்து அதனை பார்த்தபடியே ஓத ஆரம்பித்தார். அஸ்ஸாமி கலந்த அரபி ஓங்கி ஒலித்தது.
அஸ்ஸாமி முஸ்லிம்கள் ஐவகைப்படுவர்.
கோரியா
மோரியா
தேஷி
ஜுலுகா
சையது
நம் இமாம் கோரியா பிரிவைச் சார்ந்தவர்.
ஓதி முடித்துவிட்டு துஆ ஓதினார்.
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பிலாமீன்!
இமாம் சாப்பிட்டார்.
சாப்பிட்டு முடித்ததும் எங்கள் மருமகள் ஒரு பச்சைநிற மார்க்கர் பேனாவைக் கொண்டு வந்து இமாமிடம் நீட்டினார்.
“என் மாமனார் மாமியார் பாதுகாப்பாய் உம்ரா முடித்துவர ஒரு இறைவசனத்தைச் சுவற்றில் எழுதுங்கள்!”
இமாம் மார்க்கர் பேனாவை வாங்கினார்.
சுவற்றில் ‘இன்னல்லதீ ஃப்ரன அலைக்கல் குர்ஆன லராத்துக இலாம ஆது!’ என எழுதினார். எழுத்துக்கள் அமான்ஷ்யமாக மிளிர்ந்தன!