பாலை மணலில் சரிந்து படுத்தார் ஆர்னிகா.
“படுங்க… ஒட்டகம் கிட்டகம் வந்து எக்கு தப்பா கடிக்கட்டும்!” என்றேன்.
ஏறக்குறைய எல்லா உல்லாசப் பயணிகளும் போன பின் ஒரு வாகனம் எங்கள் முன் வந்து நின்றது.
“வண்டில ஏறுங்க!” காரின் உள்ளிருந்து கத்தினான் ஒருவன். அவன் முகத்தைப பார்த்து அடையாளம் கண்டு கொண்டேன். எங்களைக் கூட்டி வந்து இப்படி தொலைத்தவன் இவன்தான்.
“எங்கடா போன… சாவஞ் செத்தவனே!” கத்தினேன். நாம் திட்டும் வார்த்தைக்கு அவனுக்கு அர்த்தம் தெரியாது என்கிற தைரியம் தான் எனக்கு.
கார் மீண்டும் கிளம்பியது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களை ஹோட்டலில் இறக்கி விட்டது கார்.
அறைக்கு வந்தோம்.
எங்கள் மகள் ஜாஸ்மினுடன் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தியில் பேசினேன்.
“விடிஞ்சா நாங்க புர்ஜ் கலிபா போகவா?”
“புர்ஜ் கலிபா வேண்டாம். காஸ்ட்லி புர்ஜ் கலிபா அனுபவத்தை நீங்கள் துபாய் பிரேமிலும் பெறலாம்!”
“நன்றி செல்லம்!”
அடுத்து எங்கள் மருமகனின் சாச்சியிடம் தொடர்பினோம்.
“துபாய் பிரேமின் நுழைவுக் கட்டணம் தலைக்கு 50 திர்ஹாம். நீங்கள் டாக்ஸியில் போக வேண்டாம். சிவப்பு லைன் மெட்ரோவில் ஏறி மேக்ஸ் மெட்ரோ ஸ்டேஷன் ஸ்டாப் இறங்குங்கள். அந்த ஸ்டாப்பின் முந்தைய பெயர் அல் ஜபிலியா. அங்கிருந்து பத்து நிமிடம் நடந்தால் துபாய் பிரேம் போய் விடலாம்… துபாய் பிரேம் அமைந்திருப்பது ஜபீல் பார்க்கில்!”
“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!”
கொண்டு வந்திருந்த பிளம் கேக் துண்டுகளை தின்றோம். ஹோட்டலுக்கு வெளியே வந்து தேனீர் அருந்தினோம்.
மெட்ரோ ஸ்டேஷனுக்கு நடந்தோம்.
மெட்ரோவில் இந்தியர்கள்தான் முழுக்க. ஒவ்வொருவரின் முகத்திலும் உழைத்துச் சம்பாதித்து பணத்தை வீட்டுக்கு அனுப்பும் சிரத்தை தெரிந்தது.
மேக்ஸில் இறங்கினோம்.
தினம் 75 நிமிடங்கள் நடக்கும் எனக்கு 15 நிமிடங்கள் நடப்பது பெரிய விஷயம் இல்லை. நடை விஷயத்தில் ஆர்னிகா மிகப்பெரிய சோம்பேறி. ஆனால் அவரும் நடக்க ஆரம்பித்து விட்டார்.
உயர உயரமான கட்டடங்களுக்கு இடையே புகுந்து நடந்தோம்.
துபாய் பிரேமின் பிரதான வாசலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
துபாய் பிரேம் போட்டோக்களை கோல்டன் பிரேம் செய்து மாட்டுவோமே அதனை நினைவூட்டியது.
துபாய் பிரேம் 2013ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 01.01.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.
துபாய் பிரேம் 150 மீட்டர் உயரம் 93 மீட்டர் அகலம். உச்சித்தளத்தில் 50 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி பாலம் இருந்தது.
துபாயின் ஒரு பக்கம் டெய்ரா, பர் துபாய் போன்ற பழைய துபாயையும், துபாய் பிரேமின் இன்னொரு பக்கம் புர்ஜ் கலிபா, ஷேக் ஜாயித் ரோட் போன்ற புதிய துபாயையும் பார்க்கலாம்.
துபாய் பிரேமைக் கட்ட 9900 க்யூபிக் மீட்டர் கான்கிரீட்டும் 2000டன் இரும்பும் 2900 சதுரமீட்டர் கண்ணாடியும் செலவாயின. துபாய் பிரேம் அமைக்க மொத்த செலவு 160 மில்லியன் திர்ஹாம். துபாய் பிரேமைக் கட்டியவர் மெக்ஸிகன் கட்டடக்கலை வல்லுநர் பெர்னான்டோ டோவிஸ். துபாய் பிரேமை ஒரு மணி நேரத்தில் 200 பேர் மட்டுமே பார்க்கலாம். உலகில் பிரேம் வடிவ பெரிய கட்டடம் துபாய் பிரேம் தான் என கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளே நுழைந்ததும் எங்களை ஒளிப்படம் எடுத்தனர். துபாய் பிரேமைப் பார்த்து விட்டு வரும் போது ஒளிப்படம் எடுத்ததற்கு 2000 ரூபாய் கேட்டனர். ஒளிப்படம் வேண்டாம் என்று விட்டோம்.
மின் கூண்டில் போன எங்களை எச்சரித்தனர். “கண்ணாடி பாலத்தில் யாரும் குதிக்க்க் கூடாது!” 360 டிகிரி கோணத்தில் துபாயை பறவை பார்வை பார்த்தோம்.
இரண்டாவது தளத்தில் அருங்காட்சியகம் இருந்தது.
பண்டைய அரபியர்களின் மீன்பிடித் தொழிலை பற்றியும் முத்துக் குளிப்பது பற்றியும் அருங்காட்சியகத்தில் பல தகவல்களாய் சொல்லப்பட்டிருந்தன.
துபாய் பிரேம் பார்த்து முடித்தபின் துபாய் மாலுக்கு கிளம்பினோம். இதற்கு மட்டும் டாக்ஸி. துபாய் மால் பிரம்மாண்டமாய் எங்களை வரவேற்றது.
04.11. 2008 அன்று இந்த துபாய் மால் திறக்கப்பட்டது. டவுன்டவுனின் மையத்தில் அமைந்துள்ள இந்த மால் 3800000 சதுர அடி பரப்பளவு கொண்டது. நான்கு தளங்கள் 1200 சில்லறை விற்பனையகங்கள். 200 உணவு விடுதிகள். 22 சினிமா தியேட்டர்கள். 14, 000 கார் பார்க்கிங் வசதிகள். வருடத்திற்கு 100 மில்லியன் பார்வையாளர்கள். துபாய் மால் கட்ட செலவு 20 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள். ஜூன் 2024ல் மேலும். 1.5 பில்லியன் திர்ஹாம் செலவு பண்ணி துபாய் மால் விரிவுபடுத்தப்பட்டது.
உள்ளே ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள். அக்குவாரியத்துக்கு தலைக்கு ரூபாய் 6558 கட்டணம். எங்களிவருக்கும் 13,000 ஆகும்.
துபாய் மாலை எந்தவித பர்சேசிங்கும் செய்யாமல் சுற்றிப் பார்த்து விட்டு புர்ஜ் கலிபா பார்க்க ஒதுங்கினோம்.
புர்ஜ் கலிபாவின் மீது ஏறி வேடிக்கை பார்ப்பதை விட புர்ஜ் கலிபாவின் வெளியே நின்று வேடிக்கை பார்ப்போம் என வெளியில் சுற்றினோம்.
துபாய் பவுண்டைன் மாலையில் தான் செயல்படும். இரண்டையும் கட்டணம் செலுத்தாமல் பார்த்து பத்தாயிரம் மிச்சம் பண்ணினோம்.
நேரம் மதியம் 12: 30மணி (உள்ளூர்) துபாய் மாலிலிருந்து ப்யூச்சர் ம்யூஸியம் தாவினோம்.
தமிழில் எதிர்கால அருங்காட்சியகம். நுழைவுக்கட்டணம் 160 திர்ஹாம். இந்திய மதிப்பில் தலைக்கு 3840/- நுழைவிடத்தில் திருவிழாக் கூட்டம்.
ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் கவிதை வரிகள் அரேபிய வனப்பெழுத்தில் எழுதப்பட்டிருந்தன.
‘நம்மால் பல நூறு வருடங்கள் உயிர் வாழ்ந்திட முடியாது. ஆனால் நம்மால் பல நூறு வருடங்கள் காலத்தைக் கடந்து நிற்கும் நினைவு சின்னங்களை உருவாக்க முடியும்’
‘யார் எதிர்காலத்தை கற்பனை செய்து அதனை வடிவமைத்து ஒரு வடிவமாய் கட்டி அமைக்கிறார்களோ அவர்களுக்கே எதிர்காலம் சொந்தமானது. எதிர்காலம் யாருக்காகவும் காத்திருக்காது. எதிர்காலத்தை இன்றே வடிவமைக்கும் ஆற்றல் நமக்கு உண்டு’
‘மனித வாழ்வில் புதுப்பிக்கப்பட்ட ரகசியம், மனித நாகரிக முன்னேற்றம், மனிதநேயத்தின் உன்னதம் இவை அனைத்தையும் சமைக்கும் சமையற்கலைஞனே நூதனமானவன் அல்லது புதுமையானவன் ஆவான்’
எதிர்கால அருங்காட்சியகம் ஷேக் ஜாயித் சாலையில் அமைந்துள்ளது. இதனை நிர்மாணிக்க 500 மில்லியன் திர்ஹாம் செலவு. 2022ல் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. அருங்காட்சியக கட்டடம் 77 மீட்டர் உயரம் கூடியது. முழு கட்டிடத்துக்குள்ளும் எங்குமே தூண்கள் கிடையாது. 30000 சதுர மீட்டர் பரப்பளவு. ஏழு தளங்கள். கிபி 2071 ஆம் ஆண்டுக்கு மக்களை நகர்த்தும் முன்முயற்சியே இந்த அருங்காட்சியகம்.
புதிய கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி சீதோஷ்ண நிலை மாற்றங்கள், கல்வி, ஆரோக்கியம், சீர்மிகு நகரங்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து பற்றி இந்த அருங்காட்சியகம் விரிவாகப் பேசுகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் ஆர்னிகாவுக்கு மிகவும் பிடித்த விஷயம் மரபியல் அணு நூலகம் தான். அருங்காட்சியகம் பார்த்து முடிக்கும் போது மணி மதியம் 2.45. ஹோட்டலுக்கு விரைந்தோம்.
பயணச்சுமைகளை சேகரித்தோம்.
எங்களுக்கு இரவு 7.30மணிக்கு ஜெத்தா பிளைட்.
எங்களுக்கு ஒரே குழப்பம்.
‘இஹ்ராம் ஆடையை எங்கே அணிவது?’
மருமகனின் சாச்சி துணைக்கு வந்தார்.
“பிரச்சனையே இல்லை விமான நிலையத்தில் (நுழைவாயில் பி 13 மற்றும் டி-3) குளிக்கும் வசதி உள்ளது. குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்து கொண்டு இரண்டு ரக்காத் அங்கேயே தொழலாம். முதல் ரக்காத்தில் சூரா அல் காபிருன் ஓதலாம். இரண்டாவது ரக்காத்தில் சூரா அல் பாத்திஹா ஓதலாம்!”
டாக்ஸியில் துபாய் விமான நிலையம் விரைந்தோம்.
குளிக்க போவதற்கு முன் நடிகர் செந்தில் போல ஒரு சந்தேகத்தை கிளப்பினார் ஆர்னிகா.
“எனக்கு இருக்ற ராட்சச தொப்பைல இஹ்ராம் கட்டினா நிக்குமா? இஹ்ராம் அவிழ்ந்து போச்சுன்னா லட்சக்கணக்கான விமானப் பயணிகள் முன் அசிங்கப்பட்டு நிப்பேனே?” என்றார்.
இஹ்ராம் ஆர்னிகா இடுப்பில் நிற்குமா, நிற்காதா? மில்லியன் டாலர் கேள்வி என் முன் விஸ்வரூபித்தது.