ஆர்னிகாவுக்கு சற்றுக் குள்ளமாக இருக்கிறோம் என்கிற வருத்தம் எப்போதுமே உண்டு. ஆர்னிகா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது ரேஷன் கார்டுகள் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு எதிரிகள் உண்டு. ஆர்னிகாவை அவர்கள் விமர்சிக்கும் போது, ‘ஆர்னிகா ஒரு குள்ளப்பயல். அவன் ஒய்ப் அவனை விட உயரம்’ எனப் பிரச்சாரம் செய்வர். ஆர்னிகா பல தடவை என்னுடன் சேர்ந்து நின்று இருவர் உயரங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார். ஆர்னிகா என்னை விடச் சில செ.மீ உயரம் கூடத்தான். எங்கள் வீட்டில் என்னைத் தவிர அனைவரும் உயரமானவர்கள். ஆர்னிகாவின் உயரத்துக்கு தகுந்தபடி என்னை இறைவன் படைத்தான் என மகிழ்ச்சி கொள்வேன்.
நாற்பது வயதில் ஆர்னிகா தனது இளம் தொப்பையைப் போஷாக்காய் வளர்த்தார்.
பின்னாளில் அது பல மடங்காய் மிகைத்தது.
ஆர்னிகாவைப் பின்னாடி இருந்து பார்ப்பவர்களுக்கு ஆர்னிகா யூத்தாகத் தெரிவார். முன்னாடி இருந்து பார்ப்பவர்கள் ‘கிழத்துக்கு எவ்வளவு பெரிய தொப்பை’ என அங்கலாய்ப்பர்.
இஹ்ராம் ஆடையை ஆர்னிகா பயத்துடன்தான் கட்டினார். உம்ராவிற்கு பின் இஹ்ராமை களையும் வரை இஹ்ராம் ஆர்னிகாவின் இடுப்பில் பாதுகாப்பாய் இருந்த இடத்திலேயே நின்றது.
விமானம் முழுக்க ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள்.
இஸ்லாமிய மக்களின் ஜனாஸாக்களை கபன் துணி வைத்து போர்த்துவர். அதனைப் போல எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு இறை இல்லத்திற்கு வரும் ஹஜ்ஜாளிகள் அல்லது உம்ரா பயணிகள் உயிராசைத் துறந்து ஒரு ஜனாஸா மனநிலையில்தான் மெக்கா வருகின்றனர்.
சிலர் உம்ராவுக்குப் பயன்படுத்திய இஹ்ராம் ஆடையை, கபன் துணியாகப் பயன்படுத்த அதனைப் பாதுகாக்கின்றனர்.
நபிகள் நாயகத்திற்கு பிடித்த நிறம் வெண்மை.
மில்லியன்கணக்கான ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள் வெள்ளை நிற இஹ்ராமில் மனித மின்னல்களாய் பிரகாசிப்பர்.
ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளிடம் காணப்படுவது;
* பணம், புகழ், அதிகாரம், மண் பொன் பெண்ணாசை இல்லாத பூரித நிலை.
* ஆன்மிகத்தில் பரவச நிலை.
* ஆண் பெண் பேதமில்லை.
அண்மையில் ஒரு உம்ரா பயணி முதல் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால், அவர் விழுந்தது மெக்காவின் ஒரு செக்யூரிட்டியின் மீது. பயணி காப்பாற்றப்பட்டார். மெக்காவில் தற்கொலை செய்வதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
விமானம் ஜெத்தா விமானநிலையத்தில் இறங்கியது.
ஜெத்தா விமானநிலையத்தின் பெயர் கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் 112 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. முதல் டெர்மினல் மட்டும் 80000 ச.கி.மீ. மொத்தம் மூன்று டெர்மினல்கள் அங்கு உள்ளன.
* வடக்கு ஹஜ் டெர்மினல்
* டெர்மினல் ஒன்று - உள்ளூர் சர்வதேச விமானங்கள் இறங்கும்.
* தெற்கு டெர்மினல்
ஜெத்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் 1981ல் திறக்கப்பட்டது. விமான நிலையத்தை நிர்மாணிக்க ஆன மொத்தச் செலவு எட்டு பில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.
இந்த விமான நிலையம் ஜெத்தா நகரிலிருந்து 19 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
ஜெத்தா விமான நிலையத்தில் இருந்து மெக்காவிற்கு 92 கிமீ தூரம். ஜெத்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதீனாவுக்கு 400 கிமீ தூரம்.
கிபி 2025 ஆம் ஆண்டில் 53 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி இருக்கின்றனர். கடந்த ஒரே வருடத்தில் 310000 விமானங்கள் வந்து போயிருக்கின்றன. 60 மில்லியன் கார்கோ ஏற்றி இறக்கப்பட்டிருந்தது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்து வெளியே வந்தோம்.
மெக்காவிற்கு போக இரண்டு வித போக்குவரத்துகள் அங்கிருந்தன.
ஒன்று-
டெர்மினல் ஒன்றுடன் இணைக்கப்பட்ட ஹராமைன் அதிவேக ரயில் நிலையம். அந்த ரயில் நிலையத்தில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் மின்சக்தியால் இயங்குபவை.
மணிக்கு 300 கிமீ வேகம். இந்த ரயில் நிலையத்திலிருந்து மெக்கா, மதீனா, ஜெத்தா மற்றும் கிங் அப்துல்லா பொருளாதார நகரத்துக்கு ரயில்கள் விடப்பட்டுள்ளன.
வருடத்திற்கு ஆறு கோடி ஹஜ் பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர்.
ரம்ஜான் மாதத்தில் மட்டும் பத்து லட்சம் ஹஜ் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.
ஒரு ரயிலில் 417 பயணிகள் பயணிக்க முடியும். ஒரு நாளில் 100 ட்ரிப்கள் பயணிகள் ஏறி இறங்குகின்றனர். ரம்ஜானில் மட்டும் 130 ட்ரிப்கள்.
ஜெத்தா விமான நிலையத்திலிருந்து மெக்காவுக்கு 40 நிமிடங்களில் போய் விடலாம்.
எகானமி வகுப்பு கட்டணம் 46 லிருந்து 60 சௌதி ரியால்கள்.
பிசினஸ் வகுப்பு கட்டணம் 140 லிருந்து 200 சௌதி ரியால்கள்.
ஒரு பயணி அதிகபட்சம் 25 கிலோ எடையை 65 x 55x35 செமீ அளவுள்ள சூட்கேஸில் எடுத்துச் செல்ல முடியும்.
சூட்கேஸின் சைஸ் மாறுபட்டால் அதனை சௌதி போஸ்ட் மூலம்தான் அனுப்ப முடியும்.
நானும் ஆர்னிகாவும் பொது போக்குவரத்து பேருந்தில் போக முடிவு செய்தோம்.
மக்காவிற்கு இருவிதமான பேருந்துகள் செல்கின்றன.
ஒன்று- சௌதி பொது போக்குவரத்து கழகம் நடத்தும் பேருந்துகள் (Saptco) . தினம் 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கட்டணம் ஒருவருக்கு 33 ரியால்கள், பயணநேரம் 90 -100 நிமிடங்கள். இரண்டு - வடக்கு மேற்கு பேருந்து (North West Bus), இரண்டிலும் பயணிக்க ஆன்லைன் ஆப்லைனிலும் புக் செய்யலாம்.
உம்ரா விசா வைத்திருப்பவர்களுக்கு இலவச ஷட்டில் பேருந்து உண்டு. இதில் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் இலவசமாக பயணிக்க முடியாது.
ஜெத்தாவிலும் கூட தவறான வழிகாட்டல் உண்டு. நாம்தான் கவனமாக பயணிக்க வேண்டும்.
நிலையத்தில் இரு பெண்கள் பயணிகள் பாஸ்போர்ட் விசா சோதித்து பேருந்துகளில் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
நாங்கள் அவர்களிடம் எங்களின் பாஸ்போர்ட் விசா நீட்டினோம்.
வாங்கிக் குறித்துக் கொண்டு எங்களை காத்திருக்கக் கூறினர்.
நம்பி அமர்ந்திருந்தோம்.
எங்களுக்கு பின் வந்தோருக்கு எல்லாம் பேருந்தில் இடம் கொடுத்து மெக்காவிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
எங்களை மட்டும் கண்டுகொள்ளவில்லை.
ஆர்னிகா ஒரு டென்ஷன் பார்ட்டி.
ஓடி ஓடி அவர்களிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். பட்டியல் தயாரிக்கும் பெண் ஆர்னிகாவை ‘வாயை பொத்திக்கொண்டு காத்திருங்கள்’ என சமிக்ஞை காட்டினாள்.
ஒரு மணி நேரக்காத்திருப்புக்குப் பின் அந்த பெண் எங்களிடம் வந்தார்.
“நீங்கள் பேருந்தில் கூட்டத்தோடு கூட்டமாக போக வேண்டியதில்லை நீங்கள் இருவரும் சீனியர் சிட்டிசன்ஸ். கார் அமர்த்தியுள்ளோம். நீங்கள் காரில் இலவசமாக போகலாம்!” என்றாள்.
அக்பர் ட்ராவல்ஸ் ஏஜெண்ட் எங்களை முன்னமே எச்சரித்திருந்தார். “நீங்கள் இருவரும் இலவச வாகனங்களில் மெக்காவிற்கு போய் விடாதீர்கள். பெரும் பணம் அபராதமாக தாளித்து விடுவார்கள்!”
ஆர்னிகா அந்த பெண்ணிடம் “நோ… நோ… பைன் பைன்… நாங்க அபராதம் கட்ட வேண்டி வரும்!”
“அபராதம் கிடையாது. நாங்கள் தான் அதிகாரப்பூர்வ ஏஜன்ட் கூறுகிறோமே… பயப்படாதீர்கள் தாராளமாக நீங்கள் இந்த வண்டியில் போகலாம்!”
“வகிதா! அந்த அக்பர் ட்ராவல்ஸ் ஏஜென்சிகாரர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கவா?”
“இந்தியாவில் இப்ப என்ன நேரமோ? அன்டைமாக இருந்தால் உங்க வாட்ஸ்அப் மெசேஜை அவர் பார்க்கமாட்டார்!”
“எனக்கு இந்த காரில் போகப் பயமாக இருக்கிறது!”
“உங்களுக்கு எதைக் கண்டாலும் யாரைக் கண்டாலும் பயம்… இந்த டாக்ஸில போறதுனால பெருசா என்னப் பிரச்சனை வந்திடப் போகுது! ஏறுங்க போகலாம்!”
“எதுக்கு ரிஸ்க்? பஸ்லயே போய்க்குவம் வகிதா!”
அந்தப் பெண் சீரியஸானாள்.
“ஒய் ஆர் யூ ஆர்க்யுயிங்? ஹண்டர்ட் பர்சன்ட் ஷேப்.. தைரியமா கார்ல ஏறுங்க…” ஆர்னிகாவுக்குள் இருக்கும் பட்சி கிரீச்சிட்டது. “மாட்டிக்கிட்டீங்க செல்லங்களா!”
கார் ஓட்டுநர் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.
பயணம் முழுக்க அவர் எதுவும் பேசவில்லை.
மெக்காவிற்குள் கார் பிரவேசித்தது. முதல் மரியாதை படத்தில் ராதா படகிலிருந்து தரையில் காலடி எடுத்து வைக்க படுத்த படுக்கையாய் கிடந்த சிவாஜி ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொள்வார். அதனைப் போல ஆர்னிகா ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொண்டார்.
ஆர்னிகா வாய்விட்டு கூவினார். “இறைவனின் இறை இல்லம் இரு கரம் நீட்டி நம்மை வரவேற்கிறது…”
எங்களின் பயணச்சுமைகளை ஒரு ரோபோ போல இறக்கி வைத்து விட்டு கார் பறந்து மறைந்தது!