எடுத்த நான்கு விமானப் பயணச் சீட்டுகளை எனது கணவரின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பினான் நிலாமகன்.
தோசைச் சட்டியில் முறுகலாய் வெந்த நெய் தோசையை எடுத்துச் சாப்பிடும் தட்டில் சனார் என போட்டது போல டிக்கெட்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன.
ஆர்வமாய் ஆர்னிகா அவைகளை நோட்டமிட்டார்.
பாஸ்போர்ட்டில் எங்களது பெயர்கள் கீழ்க்கண்டவாறு இருந்தன.
1. ஆர்னிகா நாசர் பிச்சையப்பா ராவுத்தர் சம்சுதீன். பிச்சையப்பா ராவுத்தர் ஆர்னிகாவின் தாத்தா பெயர். சம்சுதீன் ஆர்னிகாவின அப்பா பெயர்.
2. வகிதா நாசர் ஆர்னிகா நாசர். ஆனால் விமான பயணச் சீட்டுகளில் மொட்டையாக ஆர்னிகா நாசர், வகிதாநாசர் என்றிருந்தது.
ஆர்னிகா என்னிடம் திரும்பினார். “நிலாவிடம் சந்தேகங்கள் கேட்கும் முன் டிக்கெட்களின் முழுப் பணத்தை அனுப்பி விடுவோம்!”
“முழுப்பணமும் அனுப்ப முடியுமா?”
“என்னிடம் ஓய்வூதியச் சேமிப்பு ஒரு லட்சத்து பத்தாயிரம் இருக்கிறது. அதிலிருந்து அனுப்பி விடுவோம்!”
பணவிஷயத்தில் ஆர்னிகா கறாரான ஆசாமி. யாருக்கும் கடன் கொடுக்க மாட்டார். அதே நேரம் யாருக்காவது பணம் தர வேண்டி இருந்தால் வீடு தேடிக் கொண்டு போய்க் கொடுத்து விடுவார்.
நிலாமகனுக்கு இண்டியன் வங்கியில் கல்விக்கடன் வாங்கி இருந்தார். நிலா வேலைக்குப் போன பிறகும் மாதாந்திர தவணையைப் பிடிக்காமல் மெத்தனமாக இருந்தது வங்கி. ஆர்னிகா வங்கி மேலாளரைப் பார்த்துப் பிடிக்கச் சொல்லி ஐந்தே வருடத்தில் முழுப் பணத்தையும் கட்டி முடித்தார்.
“சரி, அனுப்புங்க!” என்றேன்.
போன் பேயில் 44041 ரூபாய் ஒரு தடவையும் 40000 ரூபாய் ஒரு தடவையும் பணம் அனுப்பினார். அனுப்பியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டார்.
இப்போது அவனைத் தொடர்பு கொண்டார்.
“நிலா! ஏர் டிக்கெட்ல எங்க பெயர் மொட்டையா இருக்கே… பிரச்சனை எதுவும் வந்திராதில்ல?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை!”
“இன்னொரு சந்தேகம்!”
“கேளுப்பா!”
“டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரமெல்லாம் இந்திய நேரமா?”
“சென்னை புறப்படும் நேரம் இந்திய நேரம். துபாய், ஜெத்தா, கெய்ரோ நேரங்கள் அந்தந்த நாட்டு நேரங்கள்!”
“துபாய் நேரத்துக்கும் இந்திய நேரத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்?”
“90 நிமிஷம் வித்தியாசம். இந்தியாவில் காலை பத்துமணி என்றால் துபாயில் காலை எட்டரை மணி!”
“ஓஹோ!”
“இந்தியாவுக்கும் ஜெத்தாவுக்கும் இரண்டரைமணி நேரம் வித்தியாசம். இந்தியாவில் காலை பத்துமணி என்றால் ஜெத்தாவில் காலை ஏழரைமணி!”
“சரி!”
“இந்தியாவுக்கும் கெய்ரோவுக்கும் மூன்றரைமணி நேர வித்தியாசம். இந்தியாவில் காலை 11.24 என்றால் கெய்ரோவில் மணி காலை 7.53”
‘அந்தந்த நாட்டு நேரங்களை எப்படிக் கண்டுபிடிக்றது?”
“ஒரு எக்ஸ்ட்ரா கைகடிகாரம் எடுத்துட்டு போங்க. அந்த நாட்டுல இறங்கினவுடனே லோக்கல் டைமை செட் பண்ணிக்கங்க!”
“அப்படியா?”
“இன்னொரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட ஏர்டெல் சிம்கார்டு தானே இருக்கு?”
“ஆமா!”
“இன்டர்நேஷனல் ரோமிங் கார்டு போட்டீங்கன்னா உங்க செல் துபாயில் இருக்கும் போது துபாய் நேரம் காட்டும். ஜெத்தாவில் இருக்கும் போது ஜெத்தா நேரம் காட்டும்!”
“இதுதான்டா ஈஸி!”
“சில முக்கியமான டிப்ஸ்கள் சொல்றேன். கேட்டுக்கங்க!”
“சொல்லுங்க சார்!”
“விமானம் புறப்படும் நேரத்துக்கு மூன்று மணி நேரத்துக்கு முன் விமான நிலையம் போய் விடுங்கள். செக் இன் பண்ணும் அலுவலரிடம் உங்கள் முன் கோபத்தைக் காட்டாதீர்கள். விமான நிலையத்தில் அறிமுகம் இல்லாதவர்கள் பார்சல் கொடுத்து துபாயில் அவரது நண்பர்களிடம் ஒப்படைக்க சொன்னால் பார்சலை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்காதீர்கள். உயிருக்கு மேலாக உங்கள் பாஸ்போர்ட்டை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட்டில் தண்ணீரோ, உணவுக் கறையோ ஏற்படாமல் கவனமாக இருங்கள். ஜன்னலோரச் சீட்டை நீங்கள் இருதடவை அம்மா இரு தடவை பகிர்ந்து கொள்ளுங்கள். விமானத்தில் சீட் பெல்ட் மாட்டுங்கள். ஏர் ஹோஸ்டஸிடம் ஜொள்ளு விடாதீர்கள். நான் எழுத்தாளர் எழுத்தாளர் என யாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்!”
“சரிங்க முதலாளி!”
“போனை அம்மாகிட்ட கொடுங்க!’’
கைபேசியை வாங்கினேன்.
“அம்மா! பாரின்ல உன் வீட்டுக்காரர் சரக்புரக்குன்னு வேகமாக நடந்து போய்டுவார். நீ பின் தங்கி நின்னிருவ. ஒரு பத்து நிமிஷம் அவரை நீ கவனிக்கலேன்னா அவர் உன்னிடமிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பார். எங்கு போனாலும் அவருக்கு இணையாக நடந்து போ. அவ்வப்போது மெதுவாக நடய்யா, மெதுவாக நடய்யான்னு தார்க்குச்சி போடு. ஏதாவது சொன்னா என் புருஷன் புண்படும்னு சொன்னாய் என்றால் புருஷன் நடக்க பின்னுக்கு நீ ஓடு!”
“இப்ப அவருக்கு வயசாயிருச்சுடா. வைகை எக்ஸ்பிரஸ் வேகம் போய்ருச்சு. இப்ப கூட்ஸ் டிரெயின் மாதிரி நடக்கிறார். நான் அவரை பாத்துக்கிரேன்!”
“எப்பப் பாத்தாலும் தாய்கோழி மாதிரி அவரை ஷீல்டு பண்ணு. நீ கொடுக்ற செல்லத்லதான் அவர் பேஸ்புக்குல குதியாட்டம் போடுராரு. டெய்லி சினிமா விமர்சனம். தியேட்டர்ல படம் பாக்ரார். பத்து ஓடிடிகளில் படம் பார்க்கிறார். யூட்யூப்பில் படம் பார்க்கிறார். சினிமா பாத்திட்டு நடிகைகளை ஊட்டி ப்ளம்ஸ், ஐஸ்கிரீம் தேவதை அப்படி இப்படின்னு வர்ணிக்கிறாரு!”
“விட்ரா விட்ரா எழுத்தும் சினிமாவும் அவருக்கு இரண்டு கண்கள் மாதிரி. ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ரெபரன்ஸ் எடுக்கிறார். மூணு மணி நேரம் எழுதுகிறார். ஒரு மணி நேரம் கம்ப்யூட்டர்ல கதைகளை என்னுடன் அமர்ந்து எடிட் பண்ரார். அரை மணி நேரம் ஈமெயில் அனுப்புரார். எழுதுற அவருக்கு சிறந்த வடிகால் சினிமா தான். இன்னும் அவர் கார்ட்டூன் படங்களின் காதலர்!”
“ஓகேம்மா! ஏதாவது சந்தேகம்னா கேளு. போனை வைக்கிறேன்!”
ஒரு நாளைக்கு பத்து தடவை நிலா போன் பண்ணினால் எட்டு தரம் மனைவிக்கு இரண்டு தரம் எனக்கு. ஆர்னிகாவுக்கு ஜீரோ தரம்.
கிரிக்கெட்டும் சினிமாவுமாய் இருந்த நிலாமகன் குடும்பஸ்தன் ஆனவுடன் முழுக்க தன்னை சுருக்கிக்கொண்டான்.
பாசத்தைக் கவிதையாய்க் காட்டத் தெரியாது அவனுக்கு. ஏக் மார் தோ கப்டா தான்.
சமையலறையில் மீன் குழம்பை வைக்கச் சமையலறைக்குச் சென்றேன்.
*****
மறு நாள். பஹிமா தயங்கித் தயங்கி வந்தாள். அவளது முகத்தில் தாய்மை கூடாரமிட்டிருந்தது.
“மாமி!”
“என்னம்மா?”
“உங்க வெளிநாட்டுப் பயணம் எனக்கு ட்ரிபிள் ஓகே ஆனால் ஒரே ஒரு பிரச்சனையைப் பத்தி என்னால் பேசாம இருக்க முடியல…”
“என்ன பிரச்சனை?”
“மாமா வளர்க்கிற மியூவை என்னால் பாத்துக்க முடியாது!”
மியூ என்பது ஆர்னிகா வளர்க்கும் பூனை. எதிர்வீட்டு தான்யா வளர்த்த பூனை குட்டிகள் போட்டது. தனக்கொரு குட்டி எனக் கேட்டு வாங்கினார் ஆர்னிகா. ஆரஞ்சு நிற பூனைக்குட்டி!.
பூனையை வாங்கும் போதே ஆர்னிகாவிடம் இரைந்தேன்.
“எனக்கிருக்ற பிரச்சனைகள்ல இந்த மியூவின் புது வருகை தேவைதானா? என்னால அதை கவனிச்சிக்க முடியாது. நாங்க 23 மணி நேரம் மியூவுக்கு பாடுபடனும் நீங்க ஒரு மணி நேரம் மியூவை கொஞ்சிட்டு கிடப்பீங்க. திரும்ப மியூவை தான்யாகிட்டயே கொடுத்திருங்க!”
அவர் பொண்டாட்டி மாதிரியும் நான் புருஷன் மாதிரியும் பாவனை காட்டினார். “இந்த நாப்பது வருஷ திருமண வாழ்க்கைல நான் உன்கிட்ட எதாவது கேட்டிருப்பேனா? மொத தடவையா கேக்ரேன். மியூவை வளர்க்க விடு!”
“இது ஆம்பிளை பூனையா, பொம்பிளை பூனையா?”
“ஆம்பிளை பூனை!”
“இதுவும் குட்டி போடாது என்பதே பெரிய ஆறுதல். பூனைகளைப் பத்தி உனக்குத் தெரியாது. அது கண்ட இடத்ல முடியை உதிர்க்கும் பி பேண்டு வைக்கும்!”
“மியூவுக்கு கூண்டு தயார் பண்ணிடலாம்!”
“கூண்டு எங்கே கிடக்கும்?”
“தேடுவோம்! ஒப்பணக்கார வீதி அங்கே இங்கே எனச் சுற்றி, கடைசியில் ஒரு கிளி புறா வளர்ப்பகத்தை கண்டுபிடித்தோம் கடைக்காரர் ஒரு பறவை கூட்டை பூனை கூண்டாய் மாற்றி வடிவமைத்துக் கொடுத்தார்.
“பூனைக்கு என்ன சாப்பிடக் கொடுக்கலாம்?”
கடைக்காரர் இரண்டு விதமான பாக்கெட்டுகளை எடுத்து நீட்டினார்.
“இது பூனைகள் தீவணம்தான். ஒரு பாக்கட் பத்து ரூபா. இந்த ஒரு பாக்கட் 25 ரூபாய். இதைக் கொடுத்தா பூனை போஷாக்கா வளரும்!”
ஒவ்வொன்றிலும் பத்து பத்து பாக்கட் வாங்கினார் ஆர்னிகா.
“இந்தத் தீவணம் இல்லாம சோத்ல கருவாடை பிசைஞ்சு கொடுக்கலாம். இடது கிண்ணத்தில பால் வலது கிண்ணத்தில தண்ணீர் வையுங்க. தினசரி ஒரு அரை மணி நேரம் பூனையை வெளிய எடுத்து விடுங்க. பூனை ப்ரீயா உலாத்தும்!”
அன்றிலிருந்து மியூவுக்கு இரண்டாவது மாடி சிறு தடுப்பில் தான் ஜாகை. அங்கிருந்து மியூ சப்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும். பேரன் முஹம்மது அர்ஹானுக்கு மியூவைத் தொட அனுமதி இல்லை. தொடாமல் கொஞ்சலாம் விளையாடலாம்.
இதுதான் மியூவின் முன்கதை சுருக்கம்.
“புருஷா! நான் சொல்றதை கேப்பியா?”
“என்ன?”
“இந்த மியூவை கூண்டோட யாருக்காவது கிப்ட்டா கொடுத்திரு. நம்மப் பயணத்துக்கு பூனை தடையா இருக்கிறது. எனக்கு பெரும் மன உளைச்சலா இருக்கு!”
பயணம் முக்கியமா, மியூ முக்கியமா? அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையே விஜய் அல்லாடுவது போல அல்லாடினார்.. ஆர்னிகா.