முதல் உம்ரா முடித்த பின் அறைக்கு திரும்பினோம்.
“ஆர்னிகா! நாம் மெக்கா மதினாவில் இருக்கப் போவது ஐந்து நாட்கள் தான். முதல் உம்ரா நிறைவேற்றிவிட்டோம். அடுத்து என்ன?”
“இன்னும் இரண்டு உம்ராக்கள் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது உம்ரா மகள் குடும்பத்திற்காக. மூன்றாவது மகன் குடும்பத்திற்காக!”
“முடியுமா உங்களால்? ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? நாம் ஒரு தடவை சரவணபெலகோலா போனோம். நீங்கள் படியேற முடியாமல் மலையின் அடிவாரத்திலேயே தங்கி விட்டீர்கள். நான்தான் மலை உச்சி வரை போய் வந்தேன்!”
“செல்லம். அது சுற்றுலா. இது ஆன்மிகப் பயணம். ஆயுளில் ஒரு தடவை. முடிந்தவரை செயல்படுவோமே?”
“நாளை நமக்கு இரண்டாவது உம்ரா!’
“சரி!”
“நாளை நாம் மக்காவிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆயிஷா மஸ்ஜித்துக்கு போகிறோம். அங்கு இரண்டு ரக்காத் தொழுதுவிட்டு புது இஹ்ராம் அணிகிறோம்…”
“அந்தப் பள்ளியின் முக்கியத்துவம் என்ன?”
“நபிகள் நாயகம் தனது மனைவி ஆயிஷா அம்மையாரை இங்குதான் இஹ்ராம் பூணச் செய்தார். மக்காவில் ஏற்கனவே உம்ரா நிறைவேற்றியவர்கள், இரண்டாவது உம்ராவுக்கான இஹ்ராம் இங்கு அணியலாம். இப்பள்ளி ஒரு மீகாத் மையம்!”
“மீகாத் என்றால் என்ன என்று கொஞ்சம் விவரியேன்!”
“மீகாத் என்பது நியமிக்கப்பட்ட இடம் அல்லது நேரம் என பொருள்படும். இஸ்லாத்தில் மீகாத் நிர்ணயிக்கப்பட்ட ஒரு புவியியல் எல்லையாகும். ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பும் யாத்ரீகர்கள் மக்காவை நோக்கிச் செல்வதற்கு முன்பு மீகாத் எல்லைக்குள் நிய்யத் செய்து இஹ்ராம் அணிய வேண்டும்.
ஐந்து மீகாத் இடங்கள் உள்ளன. அவை;
1. மதீனாவிலிருந்து வருவபர்களுக்கான மீகாத் - துல் ஹுலைபா.
2. சிரியா, எகிப்து, வடஆப்பிரிக்கா பயணிகளுக்கான மீகாத் - அல் ஜுஹ்பா.
3. மத்தியப் பகுதி அல்லது நஜ்தில் இருந்து வரும் பயணிகளுக்கான மீகாத் - கர்ன் அல் மனாசில்.
4. ஏமன் மற்றும் தெற்கிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கான மீகாத்- யவம்லாம்.
5. ஈராக் மற்றும் கிழக்கத்திய நாடுகளிலிருந்து வரும் யாத்திரீகர்களுக்கான மீகாத் - தர்த் இர்க்...”
“ஓஹோ!”
“இஹ்ராம் நிலையில் இல்லாமல் இந்த இடங்களைக் கடப்பது ஒரு கடுமையான மீறல் ஆகும். இதற்குத் தண்டனை உண்டு. பெரும்பாலும் அந்தத் தண்டனை ஒரு ஆட்டைப் பலியிடுவதாய் அமையும்!”
“நாம் எந்த விதிகளையும் மீறாமல் கவனமாய் இருப்போம்!”
இருவரும் நான்கு நான்கு பிரட் துண்டுகள் சாப்பிட்டோம்.
காபி தயாரித்துக் குடித்தோம்.
மறுநாள் அதிகாலை. ஒரு டாக்ஸி பிடித்து ஆயிஷா பள்ளிக்குப் போனோம். இரண்டு ரக்காத் தொழுதோம். புது இஹ்ராம் அணிந்தோம்.
மீண்டும் மஸ்ஜித் அல் ஹரத்திற்கு வந்து சேர்ந்தோம். இரண்டாவது உம்ராவை ஆரம்பித்தோம். தவாப் செய்தோம்.
ஸயீ செய்தோம். மீண்டும் மொட்டை அடித்த தலையில் மொட்டை அடித்துக் கொண்டேன் (தஹலூல்) மக்காவிற்கு அருகிலுள்ள மூன்று மீகாத் மையங்கள்
1. ஆயிஷா மசூதி
2. ஜுரானா மசூதி
3. ஹுதைபியா மசூதி
மதிய ஓய்வுக்குபின் மீண்டும் ஆயிஷா பள்ளிக்கு போய் மூன்றாவதாக இஹ்ராம் அணிந்தோம். தவாப்- சயீ- தலை மழித்தல்.
மூன்று உம்ராக்கள் முடித்த திருப்தியுடன் பயணக் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும் காரில் மதீனா புறப்பட்டோம். மதீனாவில் பல திடுக்கிடும் விஷயங்கள் காத்திருந்தன.
நேரமின்மை காரணமாக நாங்கள் மக்காவில் பார்க்காத இடங்கள்
1. மக்காவின் ஓம் அல் ஜௌத் மாவட்டத்தில் கிங் அப்துல் அஜீஸ் வளாகம் காபாவை போர்த்தும் துணியான கிஸ்வாவை உற்பத்தி செய்கிறது. 1977 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை தங்கம், வெள்ளி நூல்களைப் பயன்படுத்தி 850 கிலோ எடையுள்ள கை மற்றும் இயந்திரங்களால் எம்ராய்டரி செய்யப்பட்ட கருப்புப் பட்டுத் துணியை உருவாக்குகிறது. ஹஜ்ஜின் போது ஆண்டுதோறும் மாற்றப்படும் 47 துண்டுகள் கொண்ட இந்தத் துணித் தொகுப்பைத் தயாரிக்க ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆகும். சாயமிடுதல், நெசவு, கைத்தையல் மற்றும் இயந்திரத் தையல் இங்கு நடக்கிறது. பார்வையாளர்கள் இணைய வழியில் முன்பதிவு செய்ய வேண்டும். கிஸ்வா துணியின் மீது குர்ஆன் வசனங்கள் அச்சிடப்படுகின்றன. பார்வை நேரம் காலை 8 -காலை முதல் 11 மணி வரை. இந்த தொழிற்சாலை ஹரத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கிறது.
2. ஜபல் அல் நூர் எனப்படும் ஹிராகுகை. சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் பகுதியில் மக்காவிற்கு அருகில் ஜபல்-அல்-நூர் எனப்படும் ஒளிமலை உச்சியில் அமைந்துள்ளது. மக்காவிலிருந்து 3 அல்லது 4 கிலோ மீட்டர் தூரம். உயரம் 2100 அடிகள். உச்சிக்கு ஏற1750 படிகள். நபிகள் நாயகம் இறைவனிடமிருந்து முதல் வஹி எனும் இறைச் செய்தியைப் பெற்ற இடம் இது. வழிகாட்டிப் பலகைகள், ஓய்விடங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வசதிகள் நிறைந்த பாதை வழியாக ஹிரா குகையை நாம் தரிசிக்கலாம். நுழைவுக்கட்டணம் கிடையாது.
3. ஜபல் தவ்ர் மலை என்பது சவுதி அரேபியாவில் மக்காவிற்குத் தெற்கே அமைந்துள்ளது. உயரம் 760 மீட்டர். குரைஷியர்களிடமிருந்து தப்பித்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த போது நபிகள் நாயகமும் நபிதோழர் அபூபக்கரும் மூன்று இரவுகள் தஞ்சம் புகுந்த குகை இது. குகைக்குள் யாரும் இல்லாதது போல காட்ட ஒரு சிலந்தி வலை பின்னியது. ஒரு புறாமுட்டை இட்டது. இந்தக் குகையைப் பார்க்க இரண்டு மணி நேரம் நாம் மலையேற வேண்டும். குளிர்ச்சியான நேரங்களில் மலையேறுவது நல்லது. மலையுச்சியில் ஒரு சிற்றுண்டிக் கடை உள்ளது. நுழைவுக்கட்டணம் கிடையாது. Book my booking மூலம் வழிகாட்டி சுற்றுலாவில் மலை ஏறுவது சிறப்பு.
4. ஜன்னத்துல் முஅல்லா (அல் ஹஜுன்) சவுதி அரேபியாவின் மக்காவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புனிதமான கல்லறைத் தோட்டமாகும். இது மஸ்ஜித் அல் ஹரமுக்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்குதான் நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜா அம்மையார், நபிகள் நாயகத்தின் தாத்தா அப்துல் முத்தலிப் மற்றும் நபிகள் நாயகத்தின் மாமா அபூதாலிப் அடங்கியுள்ளனர். இந்தக் கல்லறைத் தோட்டம் வருடம் முழுக்கத் திறந்திருக்கும். பல நபி தோழர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். எந்தக் கல்லறையிலும் அடையாளக் குறியீடுகள் ஏதும் இல்லை. ஜின்கள் மசூதிக்கு அருகில் இந்தக் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ளது. மஸ்ஜித் அல் ஹரத்திலிருந்து 15 நிமிட நடைதூரம் தான். நுழைவுக்கட்டணம் இல்லை. முன்னர் இங்கு 75 குவிமாடக் கல்லறைகள் இருந்தன.
5. ஜின்களின மசூதி (மஸ்ஜித் அல்-ஜின்) சவுதி அரேபியாவின் மக்காவில் ஜன்னத்துல் முஅல்லா மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள மசூதி ஆகும். நபிகள் நாயகம் குர்ஆனை ஓதுவதைக் கேட்க ஜின்களின் ஒரு குழு கூடி இஸ்லாத்தைத் தழுவிய இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. மஸ்ஜித் அல்-ஹராஸ் எனவும் இந்த மசூதி அழைக்கப்படுகிறது. மஸ்ஜித்-அல் -பயா (விசுவாச பிரமாணத்தின் மசூதி) என்கிற பெயரும் உண்டு. இந்த மசூதி ஹிஜ்ரி 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது. முகவரி : 8464, அல் மஸ்ஜித் அல்ஹரம் சாலை, அஸ் சுலைமானியா, மக்கா 24231.
6. மவுன்ட் அராபத் (இரக்கத்தின் சிகரம்) 70 மீட்டர் உயர கிரானைட் மலை இது. வருடாந்திர ஹஜ் யாத்திரையின் மையப்புள்ளி ஆகும். இங்கு துல் ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பதாவது நாளில் (அராபத் தினம்) யாத்ரீகர்கள் தங்கள் ஹஜ்ஜை நிறைவு செய்வதற்காக பிற்பகல் தொழுகையிலும் மனம் திரும்பலிலும் கழிப்பர். நபிகள் நாயகத்தின் இறுதி பேருரை இங்குதான்.
7. மினா கூடாரநகரம் மக்காவிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம். ஆண்டுதோறும் ஹஜ் பயணத்தின் போது 20 இலட்சம் யாத்ரீகர்கள் தங்கும் குளிரூட்டப்பட்ட கூடார வளாகமாகும். தீயைத் தாங்கக்கூடிய டெப்லான் பூசப்பட்ட கண்ணாடியிழை கூடாரங்கள் கொண்ட நகரம் இது. சைத்தானின் மீது கல்லெறியும் சடங்கின் மையம் இதுதான்.
8. ஜித்தாவில் உள்ள மன்னர் பஹத் நீரூற்று : மெக்காவிலிருந்து 65 கிலோ மீட்டர் தூரம். இந்த நீரூற்று தினமும் சூரிய அஸ்தமனத்தின் போது செயல்படுகிறது. பயண நேரம் காரில் அல்லது ரயிலில் ஒரு மணி நேரம். உலகின் உயரமான நீரூற்று இது. செங்கடல் உவர்நீரை 1024 அடி உயரத்திற்கு பீய்ச்சுகிறது. வேகம் மணிக்கு 375 கிலோ மீட்டர்.
9. மஸ்ஜித் அல் கைப் என்பது மக்காவிற்கு அருகில் மினாவின் தெற்கு அடிவாரத்தில் அமைந்துள்ள மசூதி. இதனை நபிகளின் மசூதி என்பர். நபிகள் நாயகம் உட்பட 70 நபிமார்கள் இங்கு தொழுகை நடத்தியதாக நம்பப்படுகிறது. ஒரே நேரத்தில் இங்கு 50 ஆயிரம் பேர் தொழலாம்.
10. தோர் மலை.
11. புனிதகுர்ஆன் அருங்காட்சியகம்
12. மஸ்ஜித் அல் நிம்ரா.