நூலகத்தின் பல்வேறு அரங்குகளில் இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
நுழைவுச்சீட்டு தரும் அறையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவரிடம் ஆர்னிகா முறையிட்டார்.
“நாங்கள் கணவன் மனைவி மூத்த குடிமக்கள். இந்தியாவில் இருந்து வருகிறோம். நாங்கள் எழுத்தாளர்களும் கூட. எழுத்தாளர்களுக்குக் கோவில் நூலகம் தானே? ஆன்லைனில் எங்களுக்கு நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை. தாங்கள் தயவு செய்து எங்களுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்குங்கள்!”
கவுன்ட்டரில் அமர்ந்திருந்தவர் முறுவலித்தார்.
“உங்க பெயர் என்ன?”
“ஆர்னிகா நாசர்”
“உங்க மனைவியின் பெயர் என்ன?”
“அலிமா என்கிற வகிதாநாசர்…”
தலைக்கு 150 எகிப்தியன் பவுண்டுகள் வீதம் இருவருக்கும் 300 எகிப்தியன் பவுண்டுகள் வாங்கிக்கொண்டு நுழைவுச்சீட்டுகள் கொடுத்தார்.
பார்வையாளர் நேரம் காலை 10 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை.
நாங்கள் அலெக்சான்டரியா நூலகத்திற்குள் நுழைந்த நேரம் மாலை நான்கு மணி.
பண்டைய அலெக்சான்டரியா நூலகம் கிமு 331ல் கிரேக்க அறிஞர் பாவெரமின் டெமட்ரியஸ் உதவியுடன் தாலமி வம்சத்தால் தொடங்கப்பட்டது.
திறந்து வைத்தவர் முதலாம் தாலமி சோடார் அல்லது அவரது மகன் இரண்டாம் தாலமி பிலடெல்பஸ்.
நூலகம் திறக்கப்பட்ட இடம் அலெக்சான்ட்ரியாவின் அரசப்பகுதி. அங்கே கலைகளின் தெய்வங்களான மியூஸ்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் மற்றும் ஆராய்ச்சி மையம் இருந்தன. அந்த நூலகத்தின் நூறாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நூலகத்தைக் கலைத் தேவதைகளின் ஆலயம் (மியூசியன்) என்றனர். பிப்லியோதேகே (புத்தகத்தொகுப்பு) என்றும் அழைத்தனர்.
நூலகத்தின் லத்தீன் பெயர் அலெக்சான்ட்ரினா பிப்லியோதெஸ்.
புதிய நவீன் பிப்லியோதேகா அலெக்சான்டரினா 2002-ல் திறக்கப்பட்டது. (16.10. 2002) 1970 களின் நடுப்பகுதியில் கருத்தாக்கம் செய்யப்பட்டு யுனெஸ்கோவின் ஆதரவுடன் நார்வேஜிய நிறுவனமான ஸ்னோ ஹெட்டாவால் வடிவமைக்கப்பட்ட இந்த 220 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிலான வளாகம் பெருமைக்குரியது. ஒரு பிரமாண்டமான சாய்ந்த தட்டின் வடிவமைப்பைக் கொண்டது இந்த நவீன நூலகம்.
1972 கிழக்குத்துறைமுகத்தில் உள்ள பழமையான நூலகத்தை புனரமைக்கும் திட்டம் அலெக்சான்ட்ரியா பல்கலைக்கழகத்தால் முன்மொழியப்பட்டது.
1988 - 1989 யுனெஸ்கோவும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமும் ஒரு உலகளாவியக் கட்டடக்கலைப் போட்டி தொடங்க உதவின. வெற்றி பெற்ற வடிவமைப்பு மத்தியத் தரைக்கடலை நோக்கிச் சாய்ந்திருக்கும் ஒரு சூரிய வட்டத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. இது நீரிலிருந்து உதித்து உலகை ஒளிரச் செய்யும் இரண்டாவது சூரியனைச் சின்னமாகக் குறிக்கும்.
நூலகத்தின் வெளிப்புறச் சுவர்களில் அஸ்வான் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதில் வரலாற்று மற்றும் நவீன எழுத்து முறைகளின் எழுத்துக்களும் அகர வரிசைகளும் செதுக்கப்பட்டுள்ளன.
1995ல் எகிப்திய அரசாங்கம் வழங்கிய நான்கு ஹெக்டேர் நிலத்தில் அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்கின. முதன்மையான வாசிப்பு அறை - 11 அடுக்குத்தளங்களில் 20, 000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது வரலாற்று ரீதியாக உலகின் மிகப்பெரிய திறந்தவெளி வாசிப்பு இடங்களில் ஒன்றாகும்.
இந்த நூலகத்தில் 80 லட்சம் புத்தகம் உள்ளன. இந்த நூலகத்தில் நான்கு அருங்காட்சியங்கள், ஒரு கோளரங்கம், கையெழுத்துப் பிரதி மறு சீரமைப்பு ஆய்வகங்கள், பார்வையற்றோர் இளைஞர்கள் மற்றும் வரைபடங்களுக்கான சிறப்பு நூலகங்கள் மேலும் இணைய ஆவணக்காப்பகத்தின் எண்ணிமப்பிரதிகளும் உள்ளன.
நூலகத்தின் 80 லட்சம் புத்தகங்களில் அரபு, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் பிரம்மாண்டமான பன்மொழித் தொகுப்புகள் உள்ளன. இங்கு அரிய அச்சு புத்தகக்கண்காட்சி நடக்கின்றன.
பிரான்ஸ் தேசிய நூலகம் அலெக்சான்ட்ரியாவின் நவீன நூலகத்திற்கு ஐந்து லட்சம் தொகுதிகளை பரிசளித்துள்ளது.
பழைய மற்றும் புதிய அலெக்சான்ரியா நூலகங்களைப் பற்றிக் கீழ்க்கண்ட புத்தகங்கள் விலாவாரியாக விளக்குகின்றன.
* ராய் மெக்லியோட் எழுதிய அலெக்சான்ட்ரியா நூலகம் பண்டைய உலகின் கற்றல் மையம்.
* லூசியானோ கான்போராவின் மறைந்து போன நூலகம்.
* முஸ்தபா எல் அப்பாடி எழுதிய பண்டைய அலெக்சான்ட்ரியா நூலகத்தின் வாழ்வும் விதியும்.
புதிய அலெக்சான்ட்ரியா நூலகக் கட்டடத்தை ஆஸ்திரிய கட்டடக்கலைஞர் கிறிஸ்டோப் கபெல்லர் மற்றும் உள்ளூர் கூட்டாளியான ஹம்சா அஸோஸியேட்ஸும் கட்டினர்.
32 மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான கண்ணாடிக் கூரையின் கீழ் 11 அடுக்குகளில் 20, 000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது இந்த நூலகம்.
15 நிரந்தர சேகரிப்புகளையும் சுழற்சி முறையில் காட்சி படுத்துவதற்காக நான்கு கலை இடங்களையும் கொண்டுள்ளது நூலகம்.
2001 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணை எண் 76ன் கீழ் நிர்வகிக்கப்படும் பிப்லியோதேகா அலெக்சான்டிரினா புரவலர் மன்றம் அறங்காவலர் குழு (15 முதல் 30 உறுப்பினர்களைக் கொண்டது) மற்றும் ஒரு இயக்குநர் ஆகியோரால் ஆளுமை செய்யப்படுகிறது.
இந்த நிர்வாகக்குழு நிர்வாகத் தலைமை, உள்ளகச் செயல்பாடுகள், சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கலாசார வளாகங்களை கையாள்கின்றது.
இந்த நூலகத்தை நாள்தோறும் 2500 மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். வருடத்திற்கு 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கிறது இந்த நூலகம்.
இந்த நூலகத்திற்கு வர விரும்பும் மாணவர்கள் தங்களது சமீபத்திய ஒளிப்படம் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு மற்றும் பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்து தங்களை உறுப்பினர் மேஜையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முதன்மையான வாசிப்புப் பகுதியில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
எகிப்திய மாணவர்களுக்கு மாதாந்திர தள்ளுபடி கட்டணம் 50 எகிப்தியன் பவுண்டுகள். வருடாந்திர மாணவர் உறுப்பினர் சந்தா 150 எகிப்தியன் பவுண்டுகள்.
பிரம்மாண்டமான அலெக்சான்டரியா நவீன நூலகத்தை அண்ணாந்து பார்த்தார் ஆர்னிகா.
அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது.
“80 லட்சம் புத்தகங்கள் அடங்கிய ஒரு புத்தகக்கடலுக்கு வந்திருக்கிறோம். இங்கு இல்லாத தலைப்புகளே கிடையாது. உலகின் அனைத்து அறிவு சார்ந்த எழுத்துக்களும் இங்கு உள்ளன!”
“ஆமாம்!”
“இதனை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?”
“மலைப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. எனக்கு!”
“எனக்கொரு ஆசை வகிதா!”
“என்ன?”
“இங்கிருக்கும் லட்சக்கணக்கான புத்தகங்களைக் கொட்டி அதில் நான் விழுந்து புரள வேண்டும். புத்தகங்களின் மீதிருத்து வரும் அபூர்வ வாசனையை நுகர்ந்து பார்க்க வேண்டும். இங்கேயே மீதி வாழ்நாள் முழுக்க இருந்து தினம் 8 மணி நேரம் படிக்க வேண்டும். எட்டு மணி நேரம் எழுத வேண்டும் 8 மணி நேரம் தூங்க வேண்டும்!”
சிரித்தேன் நான்.
“வாய்யா என் எக்ஸென்ட்ரிக் புருஷா.. எமோஷனைக் கொஞ்சம் குறை…. எழுத்துதான் உன் பலம் எழுத்துதான் உன் பலவீனமும் கூட”
“ஒரு விஷயம் செய்ய மறந்துவிட்டோம்!”
“என்ன?”
“என்னுடைய புத்தகங்களில் பெஸ்ட் தொகுப்புகள் 25ஐ கொண்டு வந்து இந்த நூலகத்திற்கு பரிசளித்திருக்க வேண்டும் நாம்!”
“தமிழ் புத்தகங்களை பரிசாக வாங்குவார்களா?”
“ஏன் வாங்க மாட்டார்கள்? தமிழ் உலக மொழிகளின் தாய்… தமிழ் மகத்துவமானது தனித்துவமானது!”
தலையாட்டினேன். “சரி, வந்த வேலையை பார்ப்போமா?”
இருவரும் உள்ளே போனோம்.
சிந்து பைரவியில் சிவக்குமார் ‘தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ பாடுவது போல ‘புத்தகங்களைத் தேடி வந்த புத்தகப் புழு நான்’ என பாடினார் ஆர்னிகா.
அடுக்குகளில் இருந்தப் புத்தகங்களை எடுத்து தலைப்புகளை வாசித்தார். பக்கங்களை டபடபவென விரித்து வருடினார்.
ஒவ்வொரு புத்தக அடுக்குகளின் மீதும் சாய்ந்தார் ஆர்னிகா. “என்னைத் தாலாட்ட வருவாயா புத்தகமே… நெஞ்சில் பூ மஞ்சள் தருவாயா புத்தகமே…. தங்க தேரோட்டம் தருவாயா புத்தகமே… இல்லை ஏமாற்றம் தருவாயா புத்தகமே…” பாடினார்.
புத்தகங்களில் சில..
ஷேக்ஸ்பியரின் தொகுக்கப்பட்ட நாடகங்களின் 1623ல் அச்சிடப்பட்ட ஓர் அரிய பதிப்பு.
19 ஆம் நூற்றாண்டின் நெப்போலியனின் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட எகிப்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய பிரம்மாண்டமான படங்களுடன் கூடிய ஆய்வு நூல்.
எகிப்திய பார்வையற்ற எழுத்தாளர் தாஹா ஹுசைனின் சேகரிப்புகள்.
ஐரோப்பிய அச்சுக்கலையின் தொடக்கக்காலத்தை சேர்ந்த அரிய அச்சிடப்பட்ட நூல்கள்.
நேர்த்தியான சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய இஸ்லாமிய காப்டிக் கையெழுத்து பிரதிகளின் தொகுப்பு.
ஏஸ்கிலஸ், சோ போக்கிள்ஸ், யூரிபிடிஸ் மற்றும் கிரேக்க துன்பியல் நாடக ஆசிரியர்களின் படைப்புகள்.
யூக்ளிட் மற்றும் ஆர்க்கிமிடிஸின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள்.
கல்லிமாக்கஸின் பினாகேஸ் எனப்படும் பிரமாண்ட பட்டியல்.
ரோட்ஸ் நகரத்து அப்போலோனியஸ் எழுதிய அர்கோனாட்டிகா
எபிரேய வேதாகமத்தின் வரலாற்று சிறப்புமிக்க கிரேக்க மொழிபெயர்ப்பு
ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி பதிப்புகள்.
மறைந்து போன நூலகம் தொகுப்பு
குறிப்புகள் எடுக்கும் மாணவர்கள் அருகில் போய் அமர்ந்து மானசீகத்தில் ஆர்னிகாவும் ஒரு மாணவரானார்.
அவிழ்த்து விடப்பட்ட கன்னுக்குட்டி தாய்ப்பசுவின் காம்புகளில் முட்டிமுட்டி பால் குடிப்பது போல புத்தகங்களின் சாறை உள்ளடக்கத்தை அள்ளி அள்ளிப் பருகினார் ஆர்னிகா.
அவரை தரதரவென காருக்கு இழுத்து வந்தேன். கார் மீண்டும் கெய்ரோவை நோக்கிப் பறந்தது