திருமணத்திற்கு முன் என் பெயர் ‘அலிமா’. பள்ளிச் சான்றிதழ்களிலும் கூட ‘அலிமா’ என்கிற பெயர்தான். ஆனால் வீட்டில் ‘வகிதா’ எனக் கூப்பிடுவர்.
வடக்கில் வகிதா ரஹ்மான் என்கிற நடிகை இருந்தார். அவரின் பெயரால் என்னைச் செல்லமாக ‘வகிதா’ என அழைத்தார்களோ என்னவோ? திருமணத்திற்கு பின் என் பெயர் ‘அலிமா (எ) வகிதா நாசர்’ என மாறியது.
ஆர்னிகாவுக்கு ‘அலிமா’ என்கிற பெயர் பிடிக்காது.
பின்னாளில் ஆதார் கார்டில் என் பெயர் ‘அலிமா’ நீங்கி ‘வகிதா நாசர்’ ஆகியது. திருச்சியில் ஒரு மனையை அலிமா என்கிற பெயரில் வாங்கியிருந்தோம்.
அதனை விற்க ‘அலிமா’ என்கிற பெயருக்கு மீண்டும் மாறினேன்.
அதனால் ‘வகிதாநாசர்’ என்கிற ஆதார் அட்டையை வங்கியில் கொடுத்த போது ‘அலிமா’ என்கிற பெயர் ஓவர் லாப் ஆகியது.
ஆதார் கார்டில் ‘வகிதா நாசர்’ என பெயர் திருத்தம் கோரினோம். இரண்டு தடவைகளுக்கு மேல் பெயர் மாற்றம் பண்ண முடியாது என பதில் வந்தது.
‘அலிமா(எ) வகிதா நாசர்’ என்கிற பெயரை கெசட்டில் கொடுத்து பழைய பெயர் அலிமாவுக்கு திரும்புவது என முடிவெடுத்தோம்.
கெசட் பெயர் மாற்றம் உடனடியாக நடக்காது. பெயர் மாற்றம் வந்தாலும் பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றுவது கடினம்.
தலை வலிக்க யோசித்தோம்.
அப்போது நான் ஒரு யோசனை கூறினேன். “பேசாம ஏர் டிக்கெட்களில் என் பெயரை கான்சல் பண்ணிடுங்க… நீங்க மட்டும் போய் வாங்க!”
“நோ.. போனா உன்னுடன் தான் போவேன்… இல்லேன்னா டோட்டல் ட்ரிப்பை கான்சல் பண்ணுவோம்!”
நிலாமகனிடம் யோசனை கேட்டபோது, “அம்மா! ஏர்போர்ட்ல எதைக் கேப்பாங்கன்னு யாராலும் சொல்ல முடியாது. முஸ்லிம்களைப் பாத்தாலே ஆயிரம் கேள்விகள் கேப்பாங்க… ஆதார் கார்டு கேக்க வாய்ப்பிருக்கு… ஜாக்கிரதை!” என்றான்.
ஜாஸ்மினிடம் யோசனை கேட்ட போது, “அம்மா! ஏர்போர்ட்ல பான் கார்டை காட்டுங்க. ஆதார் கார்டை கேட்டா பெயர் திருத்தத்துக்கு அப்ளை பண்ணிருக்கம்னு சொல்லுங்க. உள்நாட்டு விமான நிலையத்தில் ஆதார் கார்டு முக்கியம். சர்வதேச
விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டும் விசாவும் தான் முக்கியம்!”
எங்களுக்கு வருடாவருடம் ஐடி ரிட்டர்ன் பண்ணும் இளவழகனிடம் கேட்டேன்.
“ஏன் சார் என் பான் கார்டை செக் பண்ணினா வகிதா நாசர் வருகிறதா, அலிமா வருகிறதா?”
“வகிதா நாசர் தான் வருகிறது!”
“பான் கார்டை நம்பி நாங்க பயணம் போகலாமா?”
“நீங்கதான் வகிதா நாசர்னு ஒரு டாக்டர் சர்டிபிகேட் எடுத்துக்கங்க. தவிர கடந்த மூணு வருட உங்க ஐடி ரிட்டர்ன் நகல்களை எடுத்திட்டு போங்க!”
“ஓகே சார்!”
அப்போதுதான் முகநூல் நண்பர் மூலம் அறிமுகமான ஜஸீலா பானு துணைக்கு வந்தார்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு?”
“ஆதார் கார்டில் பிரச்சனை!” விவரித்தேன்.
எதிர்முனையில் அவர் சிரித்தார். “நல்ல கதையா போச்சு போங்க. இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல உங்க ஆதார் கார்டை கேட்க மாட்டாங்க. தைரியமா நீங்க ட்ராவல் பண்ணலாம்!”
“நிச்சயமாத்தான் சொல்றீங்களா?”
“எங்க ஏஜென்ஸி மூலமா இதுவரைக்கும் ஒரு லட்சம் பேராவது பற்பல நாடுகளுக்கு ட்ராவல் பண்ணிருக்காங்க ஒருத்தர் கிட்ட கூட ஆதார் கார்டு கேட்கப்படவில்லை. அது இந்திய அரசாங்கத்தின் ஆவணம். மற்ற நாடுகளுக்கு அது அனாவசியம்!”
“நன்றி!”
“உங்க துபாய் ட்ரிப்புக்கு நிகழ்ச்சி நிரலும் பட்ஜெட்டும் அனுப்புறேன்… பாருங்கள்!”
“ஓகே!”
“இன்னொரு முக்கியமான விஷயம் வெளிநாடுகளுக்கு ட்ராவல் பண்ணும் போது முகத்தை டென்ஷனா வச்சுக்காதிங்க. அது தேவையற்ற குழப்பங்களையும் சந்தேகங்களையும் குட்டி போடும். ரிலாக்ஸ்டா இருங்க… முகத்தில் எப்போதுமே ஒரு இயல்பான புன்னகையை அணிந்து கொள்ளுங்க!”
“மகிழ்ச்சி!”
“நீங்க ஆள்மாறாட்டம் செய்றீங்களா இல்லையே? அலிமாவும் நீங்கள்தான் வகிதா நாசரும் நீங்கதான். முஸ்லிம்களில் இந்த பெயர் பிரச்சனை, பெரும் பிரச்சனை, ஸ்கூல்ல ஒரு பெயர் இருக்கும். வீட்ல ஒரு பெயர் இருக்கும். அரபு உச்சரிப்புப் பெயரைத் தமிழில் எழுதும் போது அல்லது இங்கிலீஷில் எழுதும் போது உச்சரிப்பு மாறி ஒரு எழுத்து சேந்திருக்கும். ஒரு எழுத்து விழுந்திருக்கும். ஆதார் கார்டு வந்தவுடன் தான் பெயர் குழப்பம் நிவர்த்தி ஆச்சு..”
“எங்க வீட்ல குழப்பமில்லாத ஒரே பெயர் நிலாமகன் தான். முகமது நிலாமகனோ நிலாமகன் முகமதோ இல்லை. பெர்த் சர்டிபிகேட்டில் என்ன பெயரோ அதே பெயர்தான் ஸ்கூல் சர்டிபிகேட்டுகளில். என் மகளின் பெயர் ரெஹனா என்கிற ஜாஸ்மின். கெசட்டில் கொடுத்து ஜாஸ்மினுக்கு தாவினோம். என் கணவரின் பெயர் வெறும் பி. எஸ். நாசர் தான். கெசட்டில் கொடுத்து ‘ஆர்னிகா நாசர்’ என மாற்றினோம். என் மருமகன் பெயர் முஸ்தபா அலாவுதீன் என்பது வெறும் அலாவுதீன் ஆயிற்று. பேரக் குழந்தைகளின் பெயர்களில் எந்த குழப்பமும் இல்லை. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ், யாகூப் பத்ருதீன், முஹம்மது அர்ஹான் இப்படி ஒரே பெயர் தான் பெர்த் சர்டிபிகேட்டிலும் வீட்டில் அழைப்பதிலும்!”
“பெயர்கள் வைப்பதில் மாபெரும் விழிப்புணர்ச்சி தேவை. அந்தக் காலத்தில் ஒரு நபருக்கு பல பட்டப் பெயர்கள் இருந்தன!”
“எங்கள் ஊரில் ஏழுவாயன் தாதா பீர் இருந்தார். என் கணவர் ஊரில் முக்கால் அரைக்கா குடும்பம் இருந்தது. ஒருத்தருக்கு மூக்கொழுகி அனிபா என்கிற பெயரும் இருந்ததாக என் கணவர் கூறுவார்!”
“ஓஹோ!”
“பட்டப் பெயர்கள் வைப்பதில் என் அம்மா பெரிய நிபுணி. என் அம்மாவுக்கு சிஷ்யர் என் வீட்டுக்காரர். எதிர்த்த வீட்டுக்காரருக்கு ‘ஆனந்த விகடன் அட்டைப்படம்’ என பட்டப்பெயர் சூடினார். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டப்பெயர் வைத்தார் ஆர்னிகா. நாற்பது வருடங்கள் கழித்தும் அந்த பட்டப்பெயர்கள் தான் நின்று விளையாடுகின்றன.”
சிரித்தார் ஜஸீலா பானு.
“அவங்க உங்க வீட்டுக்காரருக்கு என்ன பட்டப் பெயர் வைத்தார்களோ? அவர்களைத்தான் கேட்க வேண்டும். தைரியமா துபாய் வாங்க வகிதா…” அழகிய முகமன்கள் பரிமாற்றத்துடன் தொடர்பு அறுந்தது.
ஆர்னிகா ஒரு இஸ்லாமிய நீதிக்கதையை எழுதி முடித்து என் கணினி மேஜையில் சுடச்சுட வைத்தார்.
“பென்ஷன் லோன் ரிஜக்டட். ஜெயப்ரியா சீட்டு நஹி. வேறென்ன பண்ண?”
யோசித்தார் ஆர்னிகா.
“என்ன யோசிக்கிறீங்க?”
“நமக்கு இப்ப நாலு லட்சம் தேவையில்லை. ரெண்டு லட்சம் போதும். ரெண்டு லட்சத்துக்கு ஒரு வழி சொல்லவா?”
“இரண்டு லட்சம் உடனே தேவையா?”
“எகிப்து விசாவுக்கு வங்கி கணக்கில் ஒன்றரை லட்சம் காட்ட வேண்டும். துபாய் விசாவுக்கும் வங்கி இருப்பு ஸ்டேட்மென்ட் உதவும்!”
“ஆமாம்!”
“உன் கழுத்தில் கருகமணி கிடக்கட்டும். இரண்டாவது செயின் சில வளையல்கள் சில மோதிரங்களை இண்டியன் வங்கியில் வைத்து நகைக்கடன் பெறலாமா?”
“என் நகை மேல உங்க கண்ணு பட்ருச்சா?”
“மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு நகைக்கடன் ஒரு குளுக்கோஸ் பாட்டில் தானே?”
“நகைக்கடன் வாங்கிக்கொண்டு உம்ரா போகலாமா?”
“அல்லாஹ் மன்னிப்பான்!”
“நகையை எப்போது மீட்டு தருவீர்கள்?”
“மாதம் இருபதாயிரம் வீதம் பத்து மாதங்களில் மீட்டு தருவேன்!”
“புதுசா ஆர்பிஐ ரூல்ஸ் வந்திருக்கு. நகைக்கடன்கள் மேக்ஸிமம் ஒரு வருடம்தான். ஒரு வருடத்திற்குள் முழு பணத்தையும் கட்டி மீட்டு புது அடகு வைக்கலாம்!”
“பென்ஷன் பணத்திலும் கதைப்பணத்திலும் மாசம் இருபதாயிரம் மிச்சம் பிடிப்பது பெரிய விஷயமில்லை”
“சரி… ஓகே… நாப்பது வருட திருமண வாழ்க்கைல நான் நோன்னு எதற்கும் ஒரு வார்த்தை சொன்னதில்லை!”
“நன்றி குட்டிம்மா!”
“நாம நகைக்கடன் வாங்கி உம்ரா போறது வெளில யாருக்கும் தெரிய வேணாம். குறிப்பா நம்ம சம்பந்திமாருக்கு!”
“ஓகே!”
“இரண்டு லட்சம் நகைக்கடன் வைத்து நாம மூன்று நாடுகளுக்கும் டூர் போயிட்டு வர முடியுமா?”
“ஒய் நாட்? சிக்கனமாக இருந்தால் முடியும் செல்லம்!”
கோயம்புத்தூரின் இண்டியன் வங்கி தலைமை கிளைக்கு போனோம். நகை மதிப்பீட்டாளர் நகையை உரசினார். எடை போட்டார்.
ஐநூறு ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு இரண்டு லட்ச ரூபாய் நகைக்கடன் சாங்ஷன் பண்ணினார். பணம் ஆர்னிகாவின் வங்கி கணக்கில் ஏறியது. நகைக் கடனுக்கான பணத்தை அவ்வப்போது கட்ட இண்டியன் வங்கி செயலியைப் பதிவிறக்கம் செய்தோம்.
வீடு திரும்பிய போது – ஆர்னிகாவின் வாட்ஸ் அப்பில் ஜஸீலா பானு அனுப்பிய துபாய் பயண நிரல் வந்திருந்தது.
எங்கள் இரண்டு பேருக்கான தங்குமிடம், சுற்றுலாத் தளங்களின் நுழைவுக் கட்டணங்கள், டாக்ஸி பேர் எல்லாம் சேர்த்து இரண்டு இலட்சத்து இருபதாயிரம் பட்ஜெட் போட்டிருந்தார். நானும் ஆர்னிகாவும் விக்கித்தோம்.