கோ. சந்திரசேகரன்

சேலம் மாவட்டத்தில் பிறந்த கோ. சந்திரசேகரன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவரின் தந்தையார் பெயர் கோ.கோபாலகிருஷ்ணன், தாயார் பெயர் ராஜம்மாள். திருநெல்வேலி, கடலூர், மற்றும் சேலத்தில் பள்ளிப்படிப்பைப் படித்த இவர் சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலை பட்டமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முதுகலை பட்டமும், சென்னை தரமணியிலுள்ள டாக்டர் ஏ எல் முதலியார் முதுகலை அடிப்படை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நாளமில்லாச் சுரப்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.
விலங்கியல் துறையில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், கணினி மற்றும் இணையத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக தன்னை முழுவதும் இணையதள வடிவமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டார். 2001 ஆம் ஆண்டில் இவர் துவங்கிய ‘சென்னைநெட்வொர்க்.காம்’ இணையதளம் இன்று வரை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, 2006ல் இவர் துவங்கிய ‘சென்னைநூலகம்.காம்’ இணையதளம் இன்று உலகின் முன்னணி இணைய தமிழ் நூலகமாகத் திகழ்கிறது. தற்சமயம் 8 இணையதங்களை சொந்தமாக நடத்தி வரும் இவர், பல்வேறு இணையதளங்களை வடிவமைத்தும் பராமரித்தும் வருகிறார்.
2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் நூல்களை மின்னூல்களாக குறுந்தகடுகளிலும் வெளியிட்டு வருகிறார். அவற்றில் முக்கியமானவை ‘தமிழ் மின்னூல் தொகுப்பு’, ‘அமரர் கல்கியின் படைப்புக்கள்’, ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’, ‘தமிழ் புதினங்கள் -1’, ‘கம்பராமாயணம்’ போன்றவை. 2009 ஆம் ஆண்டு முதல் கௌதம் பதிப்பகம் எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கிச் சிறப்புற நடத்தி வருகிறார்.
இவர் ‘இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?’, ‘பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?’, ‘உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்குங்கள்’, ‘தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி?’, ‘நிஜமாகா நிழல்கள்’, ‘மண்மேடு’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இதில் நிஜமாக நிழல்கள், மண்மேடு ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளும் தன்னாட்சிக் கல்லூரி ஒன்றில் பாடநூலாக இடம் பெற்றிருக்கிறது.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.