அசுரர் மந்திரி, 1.பிருகுபுத்திரன் பார்க்கவனாய் இருந்த இவன், குபேரனை வெருட்டிய காரணத்தால் குபேரன் சிவமூர்த்தியிடத்து முறையிட்டனன். சிவமூர்த்தி பார்க்கவனைக் கர்வம் அடங்க எடுத்து விழுங்கத் தேவாசுரர் வேண்டுதலால் சுக்கில வழி விடுத்தருளினர். அது காரணமாய் முன்னினும் சுக்லன் எனும் பெயரும் பெற்றனன். (காசிகாண்டம்)
2. இவன் முதலில் பிருகு குத்திரனாய் அத்தேகன் விட்டுப் பிறந்து விச்சுவாசி என்னும் தேவமாதை விரும்பி மூன்றாவது தேசார்ணவ தேசத்தில் ஒரு வேதியனாகிப் பிறகு கோசலாதிபனாய், வேடனாய், அன்னமாய், பௌண்டரதிபதியாய், சூரிய வம்ச குருவாய், வித்தியாதரராசனாய், வேதியனாய், சாமநனாய், சைவாசாரியனாய், மூங்கிற்காடாய், ஒரு மானாய், மலைப்பாம்பாய், கங்கா தீரத்தில் ஒரு வேதியனாய் இருக்கையில் பிருகுவும், காலனும் இவனைக் கண்டு முன்னய அறிவு தரப் பெற்றுக் காலனால் அசுரகுருவானவன். (ஞானவாசிட்டம்.)
3. இவன் தாய பாகங் கேட்ட நதிபனை ஆறு யோசனை அகலம் பன்னிரண்டு யோசனை நீளமுள்ள யானையாகச் சபித்தனன். உசநன் புத்திரன் என்பர்.
4. இடபாசுர யுத்தத்தில் இறந்த அசுரரை மிருத்துஞ்சய மந்திரத்தால் உயிர்ப்பித்தவன். இவன் குமரர் சண்டமார்க்கன், தம்ஷ்டிரன், துவஷ்டிரன், பத்திரகருமன், இருவர் பெண்கள், தேவயானி, அரசை. மேற் சொன்ன குமரரின் பெயர்களை இவ்வாறுங் கூறுவர். துவஷ்டிரன், தாத்திரி, பதிரன், கன்னன்.
5. இவனிடம் இருந்த மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொள்ள வியாழ பகவான் புத்திரன் கசன் வந்திருப்பதை அசுரர் அறிந்து பல முறை கசனைக் கொல்லத் தேவயானியின் வேண்டுகோளால் கசனைக் கருக்கிச் சாம்பலாக்கிக் கள்ளிற் கலந்து சுக்கிராசாரியருக்கு அசுரர் கொடுக்கத் தேவயானி கசனைக் காணாது சுக்கிரனிடங் கூறச் சுக்கிரன் கசன் தன் வயிற்றில் இருப்பது அறிந்து தான் அவனை உயிர்ப்பிக்கின் தானே இறத்தல் அறிந்து வயிற்றில் அவனை உயிர்ப்பித்து மந்திரம் உபதேசித்துத் தன்னை மீண்டும் உயிர்ப்பிக்கும் படி கேட்டுக் கொண்டு கசனை வெளி விட்டவன்.
6. இவன் தன்னியல்பு அழிந்து ஒரு அரக்கியைச் சேர்ந்து அநேக அரக்கரைப் பெற்றவன்.
7. குபனால் மார்பு பிளப்புண்ட ததீசியை மிருத சஞ்சீவினியால் உயிர்ப்பித்துச் சிவபூசைக்கு ஏவினன்.
8. தேவயானையிடம் யயாதிக்கு ஆசையுற்றதால் யயாதியைக் கிழ உருவாகச் சபித்தவன்.
9. விபுதையால் கயமுகாசுரனைப் பிறப்பித்து அவனைத் தவஞ் செய்து வரம் பெற ஏவினவன்.
10. மாபலி வாமனமூர்த்திக்கு மூன்றடி மண் தானஞ் செய்கையில் தத்த தாரையைத் தடுத்து வாமநரால் ஒரு கண் குருடானவன்.
11. இவன் நட்சத்திரம் மண்டலத்திற்கு மேல் இரண்டு இலட்சம் யோசனை யுயரத்தில் இருப்பவன். இவன் தேரில் பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இவனுக்குத் தாத்ரி என்று ஒரு குமரன் உண்டு.
12. இவன் தண்டனுக்குப் புரோகிதனாயிருக்கையில் அவ்வசுரன் இவன் குமரியாகிய அரசையிடம் செய்த தீமை பற்ற அவன் நாடு காடாகச் சபித்தவன்.
13. பகீரதனுக்குக் கோரனாலுண்டாகிய இடரினின்றும் நீங்கக் கந்தவிரதம் அநுட்டிப்பித்தவன்.
14. அசுரர் வேண்டுகோளின் படி சிவமூர்த்தியை எண்ணித் தவத்திற்குச் சென்றிருக்கையில் இந்திரன் சயந்தியைதேவி மணக்கச் செய்ய மணந்து அவளுடன் யார் கண்ணுக்கும் புலப்படாமல் பத்து வருடம் இருக்கையில் வியாழன் சுக்கிரவுருக் கொண்டு அசுரரை மயக்கியவன் சொற்படி கேட்பிக்கக் கண்டு தான் சென்று உண்மையான சுக்கிரன் நான் எனக் கூறியும் கேளாததனால் அசுரர்களைத் தேவர்களால் அப செயம் அடையச் சாபந் தந்து மீண்டும் வியாழன், தன் காரிய முடிவில் மறைய அசுரர் தங்கள் மோசம் அடைந்தது உணர்ந்து பிரகலாதனை முன்னிட்டு வேண்டத் தன்னை அடைந்த அசுரர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி மீண்டும் அவர்களை மாணாக்கராக்கிக் கொண்டவன்.
15. ஒரு அசுரன் சிவபிரானால் வரம் பெற்றுத் தேவர்களை வருத்தி இருந்தவன். (பார - அநுசா.)
16. இக்கிரகம் சூரியன், சந்திரன் இவை இரண்டையும் தவிர, மற்றெல்லா நட்சத்திரங்களிலும் பிரகாசம் உள்ளது. இது பூமியை விடச் சூரியனுக்குச் சமீபத்தில் இருக்கிறது. உருவில் ஏறக்குறைய பூமிக்குச் சமமானது. இது சூரியனை விட்டு (45) டிகிரிக்கு மேல், அடிவானத்திற்கும், உச்சிக்கும் உள்ள தூரத்தில் பாதிக்கு மேல் விலகி வராது. கீழ்த்திசையில் சூரிய உதயத்திற்கு முன்பே காணலாம். இது சூரியனைச் சுற்றியோடும் கிரகமாதலால் நாடோறும் இதன் உதய காலம் இதன் முந்திய தினத்தின் உதயத்தின் முன்னதாகும். சில தினங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாகச் சூரியனை விட்டு 45 டிகிரி தூரம் விலகிச் சூரியனை நெருங்கத் தொடங்கும். சில நாள்களில் கிழக்கில் காணப்படாது. இது சூரியனைச் சுற்றி வர 7 1Æ2 மாதங்களாகின்றன. இதைச் சூரிய உதயத்திற்கு முன்பு 3 மாதம் மேற்றிசையிலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சூரியனுக்குக் கிழக்காக 3 மாத காலத்திற்கு அதிகமாக மேற்றிசையிலும் காண்கிறோம். இது கீழ்த்திசையில் காணப்பட்ட விதமாகவே மேற்றிசையிலும் தோன்றி மறைகிறது. (இயற்கை அற்புதம்.)
17. இது சூரியனுக்கு இரண்டாவது சம வட்டத்தில் சுற்றி வருவது. இது சூரியனுக்கு 6 கோடியே 70 லட்சம் மைலுக்கு அப்பால் நின்று சுற்றி வருகிறது. இது இருபத்து மூன்றரை மணி நேரத்தில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 23,200. மைல், குறுக்களவு சுமார் 7700 மைல். இது நமக்கு அதிக தூரத்தில் இருப்பதால் சிறியவுருவாகக் காணப்படுகிறது. இதற்கடுத்த வட்டத்தில் நாமுள்ள பூமியாகிய கிரகம் சுற்றி வருகிறது. அசுரர் குரு, ஒரு கண்ணூனன், வௌ்ளி, பிரம மானச புத்திரருள் ஒருவனாகிய பிருகுவினது பௌத்திரன். இவன் அசுர குரு. இவன் மகள் தெய்வயானை. இவன் தாய் தெய்வலோகத்திலே தவஞ் செய்திருந்த போது விஷ்ணுவினால் கொல்லப்பட்டாள். இவன் அசுர மந்திரி எனவும் படுவன். இவன் மகாபலி சக்கரவர்த்தியிடத்திலே மந்திரியாக இருந்த காலத்திலே விஷ்ணு வாமனாவதாரம் எடுத்து மகாபலியிடஞ் சென்று மூன்றடி மண் வேண்டிய போது சுக்கிரன் “இது விஷ்ணுவினது வஞ்சத்தூது நம்பாதொழி” என்று மகாபலியைத் தடுத்த காரணத்தால் விஷ்ணு அச்சுக்கிரன் கண்களில் ஒன்றைக் கெடுத்தார். சுக்கிரன் இறந்த உயிரை எழுப்பும் வன்மை உடையவன். இவனிருக்கும் மண்டலம் அப்புமண்டலம். நவக்கிரகங்களில் ஒன்று. சுக்கிரன் சுப ஸ்தானங்களில் நிற்கப் பிறப்போர் திரிகால உணர்ச்சியும் இராஜ யோகங்களும் உடையவராய் விளங்குவர்.
சுக்கிரன் மழைக்கதிபதி ஆதலின் மழைக் கோள் எனப்படும். அசுரகுரு, ஒரு கண்ணூனன், வௌ்ளி.
சுக்கிரன் பெயர்
அசுரமந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், உசனசன், ஔ்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்திய மந்திரி, நற்கோள், பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வௌ்ளி. ஆக 22.