அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயபாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனிந்
நன்நாட் செய்த நாளணி வேள்வியில்…
எனவரும் சிலப்பதிகாரப் பாடல் அடிகளால் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவில் இலங்கை வேந்தன் கஜபாகுவும் கலந்துகொண்டமை உறுதியாகின்றது. தொடர்ந்தாற்போல்,
நங்கைக்கு நாட்பலி பீடிகைக்
கோட்டம் முந்தறுத்து ஆங்கு
அரத்தை கெடுத்து வரந்தரு மிவளென
ஆடித் திங்க ளவையி னாங்கோர்
பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப
மழைவீற் றிருந்து வளம்பல பெருக்கி
பிழையா விளையுள் நாடாயிற்று
எனவரும் பாடல் அடிகள் கணணகிக்கு இலங்கையில் ஆடிப் பு+ரணையில் (எசல பௌர்ணமி) விழாவெடுத்ததையும் அதனால் நாடு வளமுற்றதையும் கூறும்.
கயபாகு கி.பி 2ம் நூற்றாண்டில் (113 -135) அனுராதபுரியை இருக்கையாக்கி இலங்கையை ஆட்சி செய்தவன். சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவில் கலந்துகொண்ட பின்னர் கண்ணகியின் காற்சிலம்புடன் நாடு திரும்பிய கயபாகு கண்ணகிக்கு கோவில்கட்டி விழாவெடுத்ததாக சிங்கள இலக்கியமான ராஜாவளிய குறிப்பிடும். அவன் முதலில் கண்ணகிக்கு அமைத்த கோவில் அவனது ஆட்சியிருக்கையான அனுராதபுரத்தில்தான் அமைந்திருக்க வேண்டும் என்பது பல ஆய்வாளர்களாலும் முன்வைக்கும் கருத்தாகவுள்ளது. அனுராதபுரம் இசுறுமுனி ஆலயத்தில் ஒருகையில் சிலம்புடன் காணப்படும் அழகிய பத்தினி சிலை இதுகுறித்த கவனத்தை ஈர்ப்பதாக அமையினும் ஒரு சரியான முடிவினை எட்ட இது போதுமான காரணமாக அமையவில்லை.
வடபகுதியிலுள்ள முல்லைத்தீவில் முதல் கோவில் எழுப்பியதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இவ்வாலயம் வற்றாப்பழையில் அமைந்துள்ள கண்ணகி ஆலயமாகக்கொள்ளலாம் என ((When the cult was brought to Sri Lanka, a Hindu temple, dedicated in honour of the goddess, was first built at Vattapalli near Mullaitivu (Ethnology Vol. 1 p. 124). ஆரியதாச ரத்னசிங்க போன்ற ஆய்வாளர்கள் கருதவும் செய்கின்றனர். எனினும் கிழக்கில் பாடப்படும் உடுகுச் சிந்து மற்றும் ஊர் சுற்றுக் காவியங்களில் அந்த இடம் அங்கணாமைக் கடவையெனக் குறிப்பிடப்படுவதைக் காணுகின்றோம். இதுகுறித்த மீளாய்வு அவசியமானதாகும்.
ஆரம்பத்தில் ஆடிப் பூரணையை (எசல பௌர்ணமி) மையப்படுத்தியே கண்ணகி விழா இடப்பெற்றுள்ளமையை மத்திய மலை நகரான கண்டியில் வருடந்தோறும் இடம் பெறும் எசல பெரகராவின் (ஆடி ஊர்வலம்) வரலாறு தெளிவுறுத்தும். இது சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோட்டமமைத்து முதல் விழாவெடுத்த நாளைக் குறிப்பதாக அமையும். மிகச் சிறப்புவாய்ந்த இந்த விழாவில் முதல்நாள் பத்தினித் தெய்வத்தின் காற்சிலம்பினைக் கொண்ட வெள்ளிப் பேழையைத் தாங்கிய வண்ணம் பெரிய கொம்பன் யானை முன்னால் வர தொடர்ந்து ஏனைய யானைகள் நாத தெய்யோ (சிவன்), விஷ்னு தெய்யோ (திருமால்), கதிர்காமத் தெய்யோ (முருகன்) ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்ட பேழைகளை தாங்கிய வண்ணணம் கண்டிநகர வீதிகளை வலம் வருவது அன்று ஆயிரக்கணக்கான மக்களைக் கொள்ளை கொண்ட சிறப்பு நிகழ்வாக அமைந்திருந்தது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டியில் புத்த பிரானின் புனிதத் தந்தம் (பல்) வைக்கப்பட்டுள்ள தலதா மாளிகையைத் தரிசிக்கவந்த தாய்லாந்து மற்றும் சீன பௌத்த துறவிகளின் வேண்டுகோளின் பேரில் புத்தரின் தந்தத்தைக் கொண்ட பேழையே முதல்நாளில் இவ்வூர்வலத்தில் இடம்பெறவேண்டுமெனக் கூறப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாவும் மறுநாள் கண்ணகி ஊர்வலம் இடம் பெற்றதாகவும் காலப்போக்கில் பௌத்த சிங்கள மக்களின் மேலாதிக்கப் போக்கால் புத்தரின் தந்தத்தைக் கொண்ட பேழை மட்டுமே ஊர்வலத்தில் இடம் பெற்றுவிட்டதாகவும் இதன் வரலாறு தெளிவுறுத்துகின்றது. எனினும் தலதா மாளிகைக்கு அண்மித்ததாக அமைந்துள்ள பத்தினி தெய்யோ தேவாலய, நாத தெய்யோ தேவாலய, விஷ்னு தெய்யோ தேவாலய மற்றும் கதிர்காம தெய்யோ தேவாலய என்பவற்றில் வழிபாடுகள் செய்யப்பட்ட பின்னரேயே எசலப் பெரகரா ஆரம்பிக்கப்படுவது இன்றும் தொடரவே செய்கின்றது.
அன்று சிங்கள மக்களின் முதன்மைபெற்ற வழிபாடாக பத்தினி வழிபாடு இருந்துள்ளமை ஐயத்துக்கிடமின்றி ஆய்வுகள் மூலம் வெளிப்படவே செய்கின்றன. அனுராதபுரத்தில் இசுறுமுனி தேவாலயத்தில் ஒரு கையில் சிலம்பையேந்திய பத்தினி சிலை இருந்தமையும் அதற்கு அப்பிரதேச மக்களால் நீண்டகாலமாக வழிபாடியற்றப்பட்டமையும் வரலாற்றுப்பதிவாகவேயுள்ளது. கண்டி லங்காதிலக விகாரையிலுள்ள ஆறு வழிபாட்டிடங்களில் ஒன்று பத்தினியம்மனுக்கு உரியதாகும். மிகப் பழமைமிக்கதான இவ்வாலயக் கட்டிடத்தினை இன்றும் நம்மால் அவதானிக்கமுடியும்.
கொழும்பு - அவிசாவளையில் களனி கங்கைக்கு அண்மையில் அமைந்த நவகமுவ பத்தினி ஆலயம் மிகப் புகழ்பெற்றதகும். இவ்வாலயம் கஜபாகுவின் ஆட்சியில் கட்டப்பட்டதாகவே அதன் வரலாறு கூறப்படுகின்றது. போர்த்துக்கீசரின் ஆட்சியில் ஏனைய பல ஆலயங்ளோடு அவ்வாலயத்தையும் இடிக்க போர்த்துக்கீச ஆளுனரால் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இடிக்கப்பட்ட போது அப்பிரதேச மக்கள் பத்தினியம்மனை இரந்து வழிபட்டதாகவும் அதன்போது கோட்டை மன்னனின் கனவில் தோன்றிய பத்தினி அதனைத் தடுக்குமாறு கோரியதாகவும் பின்னர் போர்த்துக்கேயருடன் நட்புறவு கொண்டிருந்த கோட்டை மன்னனின் வேண்டுகோளின்பேரில் அது இடைநடுவே நிறுத்தப்பட்டதாகவும் அப்பிரதேச மக்கள் இன்றும் கூறுவர். அப்போதிருந்த ஆலயத்துடன் கண்டியரசன் கீர்த்தி சிறி ராஜசிங்கன் (1581 - 1592) இந்துமத நெறிமுறைகளுக்கு அமைவாக கட்டிய அழகிய ஆலயமும் இன்று கம்பீரமாகவே காட்சிதருகின்றது. இவ்வாலயம் மிக முக்கியமாகப் பெண்கள் வழிபாடியற்றும் ஆலயமாக உள்ள நிலையில் அம்மனை வழிபட்டால் குழந்தைப் பேறின் போது எந்தப் பிரச்சனையும் நேராதெனவும் சின்னம்மை, பெரியம்மை, வைசூரி, வெப்பு மற்றும் தொற்று நோய்கள் அண்டாதெனவும் இப்பிரதேச மக்கள் மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாவே இன்றும் உள்ளனர். இவ்வாலத்தில் அமைந்துள்ள ‘திவுறும் கலா’ எனப்படும் சத்தியம் செய்யும் கல் மிக நீண்ட காலமாக நம்பிக்கையின் அடையாளமாகவே அமைந்துள்ளது. ஒரு குழந்தைக்கான சட்ட உரித்து பற்றிய வழக்கொன்றில் நீதிவானின் கட்டளைக்கமைவாக ஒரு பெண் நீதிமன்றப் பணியாளர்களின் முன்னால் இக்கல்லில் தனது கையைவைத்து பொய்ச்சத்தியம் பண்ணியபோது அக்கல்லானது உயரம் குன்றியதாக இன்றும் அது குறித்துப் பேசுவதை அவதானிக்கமுடியும்.
நவகமுவ ஆலயத்தின் வருடாந்த (பெரஹரா) உற்ஷவம் ஆடிப் பூரணையை (எசலப் பெரஹரா) ஒட்டியதாகவே இடம்பெறுகின்றது. ஏழாம்நாள் முடிவில் இடம் பெறும் தெவல் மடுவ (கினி மடுவ) எனப்படும் தீமிதிக்கும் விழா இதில் மிகச் சிறப்புவாய்ந்ததாகும். மறுநாள் களனி கங்கையில் நீராடி விழா நிறைவுறும். இவ்வாலயத்தில் பூசை புனற்காரங்களை மேற்கொள்ளும் ‘கப்புறாளை’ பரம்பரை வழிவந்தவராகவும் பௌத்த சிங்களவராகவுமிருப்பார். அவர் கருணைமிக்கவராக இருக்கவேண்டுமென்பது அம்மனின் கட்டளையாகும். இது குறித்த கதையொன்றும் அம்மக்களிடையே உலவுவதைக் காணமுடியும். ஆலயத்தை ஒட்டியதாக இருந்த பலாமரமொன்றில் கனிந்திருந்த பலாப்பழமொன்றினை ஒரு பிச்சைக்காரன் கண்டபொழுது பசியின் கொடுமையால் அதைப் பறித்து உண்டதாகவும் அதை அறிந்துகொண்ட கப்புராளை அப்பிச்சைக்காரனை ஆலயத்திற்கு அழைப்பித்து அவனைத் தண்டித்ததாகவும் இதனால் வேதனையும் மிக்க ஆத்திரமும் கொண்ட பத்தினி அம்மன் அக் கப்புறாளையையும் அவனது குடும்பத்தினரையும் கொடிய நோய்க்கு இரையாக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
ராஜவலிய தரும் தகவலின்படி கோட்டை அரசிக்கு முற்பட்டகாலத்தே நவகமுவப் பகுதி ஹேவகம் கோறள எனும் பெயரினைப் பெற்றிருந்தது தெரிகின்றது. போர்த்துக்கீசப் படைகளுடன் 1ம் ராஜசிங்கன் முல்லேரியாவில் சண்டைசெய்தபோது அவனது படைகள் இங்குதான் தங்கியிருந்ததெனவும் அப்போது பத்தினி தேவாலயம் பத்தினி கோவில் என்றே அழைக்கப்பட்டதாகவும் தெரிகின்றது. 5ம் புவனேகபாகு (கி.பி 1521 - 1580) காலத்தில் இது ‘கொடகம சன்னாச’ எனும் பெயரினைப் பெற்றுள்ளமை அறியவருகின்றது. இவன் இவ்வாலயத்தின் உற்சவத்திற்கு வேண்டிய எண்ணையைத் தொடர்ந்து வழங்கியுள்ளமை வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது. சீதவாக்கை ஆட்சியிலும் இதன் புகழ் மேலோங்கியதாகவே வரலாறு கூறுகின்றது. மாயாதுன்னை (கி.பி 1521 -1580) போர்த்துக்கேயருடன் சண்டையிட கொழும்புக் கோட்டையை நோக்கி படையுடன் சென்றபோது நவகமுவ பத்தினி ஆலயத்தில் தரித்திருந்து வழிபாடியற்றியதாக தகவல்கள் பெறப்படுகின்றன. போர்த்துக்கேய ஆட்சியாளனின் 1550ன் அறிக்கைப்படி மயாதுன்னையுடன் நவகமுவயில் போரிட புவனேகபாகுக்கு சார்பாக 600 படைவீரர்களை அனுப்பியதும் அதன்பின்னர் போர்த்துக்கேயர் நவகமுவ தேவாலயத்தை அழித்துவிட்டு அங்கே தங்களது முகாமினை அமைத்ததாகவும் தெரிகின்றது. தொல்லாய்வு திணைக்கள அதிகாரியான ஏ.ஈ.எல் திலகவர்த்தனவின் கூற்றுப்படி கி.பி 15ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தே நவகமுவ பத்தினி தேவாலயம் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்கியுள்ளமையை அறியலாம். இங்குள்ள பத்தினி மகா தேவாலயத்தின் மூலவிக்கிரமான பத்தினியம்மனுக்கு தங்கத் தகடு பதித்துள்ளமையும் ஆலய வாசலில் சந்திர வட்டக்கல் வைத்து படியமைத்துள்ளமையும் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
குருநாகலைப் பிரதேசத்தில் வில்வாவ கிராமத்தில் ஒரு குன்றின் மேல் கோவில்கொண்டிருக்கும் பத்தினியம்மன் மிகப் பழமை வாய்ந்ததாகும். இதுவும் கஜபாகுவின் ஆட்சிக்காலத்தில் அவனது ஐம்பதாவது அகவையில் கட்டப்பட்டதாகவே கூறப்படுகின்றது. இங்கு இடம்பெறும் வழிபாடானது சிலம்பினை முக்கியப்படுத்தியதாக அமைவதை நம்மால் அவதானிக்கமுடியும். வருடம் தோறும் அறுவடைக் காலத்தையொட்டி இங்கு பெருவிழா இடம்பெறும். ஐப்பசியில் இடம்பெறும் இவ்விழாவில் கோவில் கப்புறாளை மற்றும் நிலமை போன்றவர்கள் கையில் சிலம்பினை அணிந்திருப்பர். இதில் ஐம்பது தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வர். இது கஜபாகு தனது ஐம்பதாம் அகவையில் இவ்வாலயத்தை அமைத்து ஐம்பது தீபங்களை ஏற்றி வழிபாடியற்றியதைக் குறிப்பதாக ஒரு காரணம் கூறப்படுவது அவதானிப்புக்குரியது. இறுதி நாளில் குருநாகலை வாவியில் தீர்த்தோற்சவ நிகழ்வும் இடம் பெறுகின்றது.
6ம் பராக்கிரமபாகுவின் (1440- 1466) ஆட்சிக் காலத்தில் பத்தினி வழிபாடு அரச முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக இருந்துள்ளமையை கோகில சந்தேசய எனும் சிங்கள இலக்கியம் ஐயத்துக்கிடமின்றி வெளிப்படுத்துகின்றது. இதுவே கண்ணகிதொடர்பில் கி.பி 15ம் நூற்றாண்டில் சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் எழுத்தாவணமாகவும் கருதப்படுகின்றது. பரக்கிரமபாகு பத்தினி வழிபாட்டினைச் சிறப்பாக மேற்கொள்ளவேண்டி கோட்டேயில் மூன்றடுக்கு ஆலயத்தினை பத்தினிக்கு கட்டுவித்ததாக இக்காவியம் தகவலளிப்பதைக் காணலாம்.
இதனை ஒத்ததாக இரண்டாம் பராக்கிரமபாகுவின் (1222 - 1257) ஆட்சிக் காலத்திலும் பத்தினிக்குப் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளமை தெரிகின்றது. இது தொடர்பில் மடுவ பத்தினி தேவாலய வரலாற்றின்மூலம் பல்வேறு தகவல்களைப் பெறமுடிகின்றது. 2ம் பராக்கிரமபாகுவின் பிரதம அமைச்சர் தேவபத்திராஜ வெளிநாட்டுப் படைகள் தென் பிராந்தியத்தினூடாக இலங்கைக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக களுத்துறை தொடக்கம் பலப்பிட்டிய வரை பலம்பொருந்திய படையணியொன்றினை நிறுவியிருந்தானெனவும் அக்காலத்தே பாண்டிய படைகள் மற்றும் மலாயப் படைகள் போன்றவை நாட்டுக்குள் ஊடுருவ முற்பட்டபோது அவை துரத்தியடிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து பத்தினியம்மனை நினைவுகூர்ந்து வெலிதோட்டயிலும் மடுவயிலும் பத்தினி கோவில்கள் அமைக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. முன்னர் மடுவ பத்தினி தேவாலயம் கலிங்க உயன என்ற இடத்திலேயே அமைந்திருந்ததெனவும் தற்போதைய அழகிய தேவாலயம் பின்னர் குணதாஸ சில்வா என்பவரால் மடுவயில் அமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாலயத்தில் ஆடி மாதத்தில் இடம்பெறும் வருடாந்த விழா மிகச் சிறப்புவாய்ந்ததாகும். ஆலயக் கப்புறாளை தங்கத்தாலான அம்மனின் சிலம்பை அணிந்துகொண்டு பக்தர்களை ஆசீர்வதிக்கும் நிகழ்வு இங்கு மிக முக்கியமானதாகும்.
சிங்கள மக்கள் பரவலாக வாழும் பல கிராமங்களில் பத்தினி வழிபாடு இன்றும் மேலோங்கிய தன்மையைக் கொண்டுள்ளமையை நம்மால் அவதானிக்கமுடியும். இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அம்மடுவ பத்தினி தேவாலயம், நுவரெலியவிலுள்ள ஹங்குறான்கெட்ட பத்தினி தேவாலயம், களுத்தறை விதியாகொட பத்தினி தேவாலயம், பதுளையிலுள்ள ஹெலகல்பே பத்தினி தேவாலயம், தெவிநுவர கொடகெதற பத்தினி தேவாலயம், நுறுகல பத்தினி தேவாலயம், கல்மடுவ பத்தினி கோவில் , கல்மங்கொட பத்தினி தேவாலயம், எம்வக்க பத்தினி தேவாலயம், ரஜமகா பத்தினி தேவாலயம், வத்துறுகம பத்தினி தேவாலயம், கப்புமுல்ல பத்தினி தேவாலயம், டெடிகம பத்தினி தேவாலயம், சீதவாக்கை மெதகொட பத்தினி தேவலயம், ஹிக்கடுவ சீனிகம பத்தினி தேவலயம், இரத்தினபுரி சமன் தேவலயம், கடுவல புராண ரண்கடு பத்தினி மகா தேவலயம், மடுவ பத்தினி தேவாலயம் போன்றவை குறிப்பிடத்தக்க சிறப்புவாய்ந்த பத்தினி வழிபாட்டினை முன்னெடுக்கும் பத்தினி கோவில்களாகும். மிகப் பழமைவாய்ந்த இவ்வாலயங்கள் அனைத்தும் கஜபாகுவை முன்வைத்தே தங்களது தொடக்ககால வரலாற்றினை வெளிப்படுத்துகின்றன. சீதவாக்கை பத்தினி தேவாலயம் மாயாதுன்னையின் ஆட்சிக்காலத்தே மிகச் சிறப்பிடம் பெற்றிருந்ததாக அது பற்றிய வரலாறு தெரிவிக்கின்றது.
கப்புமுல்ல பத்தினித் தெய்வ வழிபாடானது மிகத் தொன்மைமிக்க பரம்பரை வழியமைந்த கப்புறாளை (பூசகர்) முறைமையினைக் கொண்டதாக அமைகின்றது. அத்தோடு இதற்கென தனியான கப்புமுல்ல பத்ததி எனப்பெயர்கொண்ட பத்ததியுமுண்டு. நவகமுவ பத்தினி தேவாலயத்தைப் போன்றே கப்புமுல்ல பத்தினி தொடர்பிலும் பல வாய்மொழிக் கதைகள் கூறப்படுவதை அவதானிக்கமுடியும். பல வருடங்களுக்கு முன்னர் அம்மனை வழிபாடு செய்துவிட்டுத் தனியாளாக மாலைப் பொழுதில் காட்டுவழியே தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணை தமது காமப்பசிக்கு இரையாக்க முனைந்த இரு வெறியர்களை நாக பத்தினி வடிவில் தோன்றி உடலெல்லாம் விசமாக்கிக் கொன்ற அம்மனின் கதை நீண்டகாலமாக அங்கே நிலைத்திருப்பதை அறியமுடிகின்றது.
மாத்தளையின் புகழ்மிக்க சிறி முத்துமாரியம்மன் ஆலய நிகழ்வுகளிலும் பத்தினித் தெய்வம் முக்கியத்துவம் பெறுவதைப் பார்க்கலாம். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொள்ளும் தேரோட்ட நிகழ்வின்போது ஏனைய விக்கிரகங்களுடன் பத்தினி அம்மனின் விக்கிரகமும் தேரில் எடுத்துச் செல்வது இதன் சிறப்பு அம்சமாகும். உண்மையில் சிங்கள மக்களிடேயே காணப்பட்ட பத்தினித் தெய்வ வழிபாடே இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த கண்ணகி வழிபாடாகும். அவ்வழிபாட்டின் சிறப்பியல்புகளை நவகமுவ பத்தினி தேவாலய, கபுலுமுல்ல பத்தினி தேவாலய போன்ற பத்தினி ஆலயங்கள் இன்றும் சிறப்புடன் வெளிப்படுத்தவே செய்கின்றன. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ராஜாவளி, கஜபாகு கத்தா, பத்தினி கத்தா, சிலம்பு கத்தா, பத்தினி தெய்யோ, பத்தினி படிம, தலுமுற பூஜாவ, பகம கம்புறா, பத்தினி கெல்ல, பத்தினி சிரசபத, பாண்டி நலவ, பத்தினி மாலாவ, பலங்க கெல்ல, சலம்ப சந்திய, அம்பவிதிம போன்ற இலக்கியங்களும் மற்றும் கண்ணகி வழிபாட்டிற்குரியதான சிங்களப் பத்ததிகள் போன்றவையும் இதற்குச் சான்றாக அமையும். சோழநாடு நோக்கிப் படையோடு சென்ற இலங்கை கயபாகு மன்னன் பல வெற்றிகளைக் கண்டபின் கண்ணகியின் காற்சிலம்பினைக் கொண்டு வந்தானென்றும் அதன் பின்னர் ஈழத்தின் பல பாகங்களிலும் கண்ணகிக்குக் கோவில் கட்டி விழாவெடுத்தானென்றும் ராஜாவளி குறிப்பிடும்.
திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்குமிடையே பெறப்பட்ட கி.பி 7ம் அல்லது 8ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் சுமார் நான்கரையடிக்குமேல் (56 .6 அங்குலம்) உயரம் கொண்ட தூய வெண்கலத்திலான பத்தினியம்மனின் சிலையானது, பண்டைய பத்தினி வழிபாட்டிற்கு வலிமை சேர்ப்பதாகும். இப்பத்தினி சிலை குறித்து அறிஞர் ஆனந்தகுமாரசாமி விரிவாக எழுதியுள்ளார் (Bronzes from Ceylon - 1914). இலங்கையின் ஆளுனராகவிருந்த சேர் ஜி.பிரவுண்ரிக் (1812 - 1822) கண்டி கைப்பற்றப்பட்டதின் நினைவாக இச் சிலையினை பிரித்தானியாவின் அரும்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியதாக அது குறித்து அறியப்படுகின்றது.