திருக்குறளில் இடைச்சொற்களின் நிலைப்பாடு
முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
முன்னுரை
ஒப்பற்ற தேசிய நூலானத் திருக்குறளில் சமூகம், வாழ்வியல், அரசியல், பொருளியல், அரணியல், அறம் எனப் பல அரிய கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. இலக்கிய வகைகளுள் அடங்கும் திருக்குறள் வாழ்வியல் இலக்கணங்களை எடுத்துரைப்பதாக அமைகிறது. இலக்கியச் சுவை மட்டுமல்லாமல் சொற்சுவை, பொருள்சுவை, இலக்கணச்சுவை எனத் திருக்குறள் மிளிர்வதைக் காணமுடிகிறது. இலக்கணச் சுவைநயங்கள் ஒவ்வொரு குறளுக்கும் அழகியல் நோக்கோடு பொருளுக்கு வலு சேர்ப்பதாய் அமைகிறது.
நோக்கம்
தன்னளவில் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை ஆகிய அடிப்படைச் சொல்வகைகளைச் சேர்ந்ததாக இல்லாமல் வேறொரு சொல்லையோ, தொடரையோச் சார்ந்து இலக்கணச் செயல்பாட்டினால் மட்டுமே பொருள் தரும் சொல் வகை இடைச்சொல்லாகும். தனித்து நின்று பொருள்தரும் இவ்விடைச்சொற்கள் இலக்கியத்தின் சுவை கருதி புலவர்களால் ஆங்காங்கே கையாளப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அவ்வகையில் திருக்குறளிலும் இடைச் சொற்களைத் திருவள்ளுவர் குறளின் செழுமையைக் கருதி கையாண்டிருக்கிறார். அது ஒரு முழுமையான பொருளைத் தரும் வகையில் அமைகிறது. அவ்விடைச் சொற்களின் நிலைப்பாடானது திருக்குறளின் செழுமையைக் காட்டுவதாக அமைகிறது.
இடைச்சொல் விளக்கம்
இடைச்சொற்கள் மொழிக்கு முன்னோ, பின்னோ, இடையிலோ வரும்பொழுது பெயரைச் சார்ந்துவரின் அப்பெயர்ப் பொருளையே தமக்கும் பொருளாகவும், வினையைச் சார்ந்து வந்தால் அவ்வினைச் சொற்பொருளையே தமக்கும் பொருளாகவும் பெற்றுவரும். ஆகையால் அவை, தமக்கெனத் தனிப்பொருளுடையவை அல்ல. இடைச்சொற்கள், (Function word, Particle) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இடைச்சொல் குறித்துத் தொல்காப்பியர்,
“இடை யெனப்படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்றியலும் தமக்கியல் பிலவே” (இடையியல்-1)
எனச் சுட்டுகிறார்.
இடைச்சொற்கள் செய்யுளில் பயின்று வருகையில் அவற்றின் இறுதி எழுத்துக்கள் திரிந்து வருதலும் உண்டு. இரண்டோ, மூன்றோ இடைச்சொற்கள் சேர்ந்து வருதலும் உண்டு. இதையே,
“...தனித்தியல் இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஒரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்” (நன்னூல் 420)
எனத் தொல்காப்பியரின் கருத்தினையே நன்னூலாரும் குறிப்பிட்டுள்ளார்.
வேற்றுமையுருபு, வினையுருபு, சாரியையுருபு, ஒப்புருபு, தத்தம் பொருள், இசைநிறை, அசைநிலை, குறிப்பு, எண் , எண்பகுதி எனப் பல பொருள் நிலையில் இடைச்சொற்கள் இடம் பெறுகின்றன.
இசைநிறையென்பது வேறு பொருளையுணர்த்தாது செய்யுளில் ஒசையை நிறைத்து நிற்பதாகும். அசைநிலையென்பது வேறுபொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச்சொல்லோடும் சார்த்திச் சொல்லப்படுவதாகும்.
“தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு
எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை
பிரிப்புக் கழிவு ஆக்கம் இன்னென்ன இடைப்பொருள்” (நன்னூல் 421)
இவையாவும் இன்ன பிறவும் இடைச்சொல்லுக்குரிய பொருளாகும் என்பதை இந் நூற்பா சுட்டுகிறது. குறள் நயம் கருதி வள்ளுவர் பொருள்தரும் இடைச்சொற்களை ஆங்காங்கே கையாண்டிருக்கிறார். சொல்லின் இடையில் வருவதால் அதற்கு இடைச்சொல் என்று பெயர் என சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் , பெயரும் வினையும் இடமாக நின்று பொருள் உணர்த்துதலால் இடைச்சொல்லுக்கு அப்பெயர் வந்தது எனத் தெய்வச்சிலையாரும் இடைச்சொல்லின் பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுகின்றனர். பெயர், வினை ஆகிய இரு சொற்களுக்கும் முறையே இடைச்சொல் பின் - முன் வருதல், ஒன்று - பல இணைந்து வருதல் என்பனவற்றை அறிய முடிகின்றது.
ஆங்கு
இது உவமையுருபிடைச் சொல்லாகும். ‘ஆங்கு’ என்னும் பொருள்தரும் இவ்விடைச்சொல் உரையசைப்பொருளில் இடம் பெறுகிறது. இவ்விடைச்சொல் கட்டுரைத் தொடர்பினிடை அசைப்பொருள் படவரும் எனத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.
“கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்” (279)
உவம உருபு மற்றும் உரையசைப் பொருளில் ‘ஆங்கு’ எனும் இடைச்சொல் இக்குறளில் இடம்பெற்றிருக்கிறது.
“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு” (24)
“அச்சம் உடையார்க்கு அரணில்லை; ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு” (534)
“ஒத்துஆங்கு ஒறுப்பது வேந்து” (561)
“வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார், என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று” (584)
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப” (666)
“முடிவும் இடையூறும் முற்றி ஆங்கு” (676)
“பழகிய நட்புஎவன் செய்யும்? கெழுதகைமை
செய்துஆங்கு அமையாக் கடை” (803)
ஆங்கு இன்னும் இடைச்சொல் ‘உவம உருபு’ என்னும் பொருளில் போல, புரைய, அன்ன, போலும் உறுப்புகள் போன்று திருக்குறளில் பயின்றுள்ளதைக் காணமுடிகிறது. அவ்வாறு, அச்செயல், எண்ணிய(வாறே), ஆகிய, அதற்கேற்ப என்னும் பொருளில் ‘ஆங்கு’ என்னும் இடைச்சொல் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இதே போன்றே காண், குறை, போல், போலும் எனும் இடைச்சொற்கள் உரையசைப் பொருளைத் தருகின்றன.
போல
விகுதி எதுவும் ஏற்காது வாக்கியத்தின் அகத்துறுப்பாய் வருவது போல, மன்ற, போலும், அந்தில், எற்று, மற்று (வினைமாற்று) போன்றவை ஒரு நிலைச்சொற்களாகும். ‘போல’ என்னும் உவம உருபானது உரையசைப் பொருளில் இடைச்சொல்லாகப் பயின்றுள்ளது.
“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்” (118)
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல” (151)
“ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம்” (190)
“படை கொண்டார் நெஞ்சம் போல்” (253)
“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்” (287)
“என்பி லதனை வெயில்போலக் காயுமே” (77)
“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்” (283)
“அளவு அறிந்தான் நெஞ்சத்து அறம் போல நிற்கும்” (288)
“எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” (435)
“மனத்து ளதுபோலக் காட்டி ”(454)
“உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” (479)
“வினைபகை என்றிரண்டின் எச்சம், நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்” (674)
781, 788, 822, 826, 888, 946, 974, 1027, 1090,1096, 1097, 1099, 1117, 1118,1159,1161,1180,1190,1222,1224, 1273,1274, ஆகிய குறள்களில் ‘போல’எனும் இடைச்சொல் உவமஉருபு, உரனசைப் பொருளில் வந்துள்ளதைக் காண முடிகிறது.
“உறங்குவது போலும் சாக்காடு” (339)
“வேலொடு நின்றான், இடுஎன்றது போலும்” (552)
“நவில்தொறும் நூல்நயம் போலும் ” (783)
“இரத்தலும் ஈதலும் போலும்” (1054)
“அழல்போலும் மாலைக்குத் தூதாகி” ஆயன்
குழல்போலும் கொல்லும் படை” (1228)
“நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்” (1232)
“தணந்தமை சால அறிவிப்ப போலும்” (1233)
‘போலும்’ எனும் இடைச்சொல் உவம உருபாகவும், 1232, 1233 ஆகிய இரண்டு குறள்களிலும் தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையாகியப் பிரிவுத்துயரை எடுத்துரைக்கும் பொருளிலும் வந்துள்ளதைக் காணமுடிகிறது.
உம்
இன்னொரு விகுதி ஏற்காதது உம், ஏ, ஓ போன்றவையாகும். உம் முதல் - கூடுதல், இணைதல், உடனிருத்தல், பொருந்துதல், ஒட்டுதல், ஒத்தல், ‘உம்’என்னும் சொல்லுக்குக் கூடுதல் பொருள் இருத்தலாலேயே அது இன்றும் எண்ணுப்பொருள் இடைச்சொல்லாக வழங்கப்படுகின்றது என்பது பாவாணரின் கூற்றாகும். எண்ணும்மை இடைச்சொல் பல பொருள்களை ஒன்றுசேர்க்கிறது. ‘உம்’ என்னும் இடைச்சொல் எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டும் உம்மைச் சொல்லாகும் என்பதை,
‘‘ எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே” (இடையியல்.7)
இந்நூற்பா விளக்குகிறது. இதில் எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் இணைந்து வருதல் இல்லை என்பதைத் தொல்காப்பியம்,
“எச்சவும்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுன் மயங்கும் உடனிலையிலவே”
எனச் சுட்டுகிறது.
“தானம், தவம் இரண்டும் தங்கா” (19)
இது முற்றும்மையாகும்.
“சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும்” (31)
உயர்வு சிறப்பும்மையாகும்.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (90)
சிறப்பும்மை
“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்” (471)
உயர்வுச்சிறப்பு
“சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை” (769 - சிறப்பும்மை)
“குணனும் ,குடிமையும், குற்றமும், குன்றா
இன்னும் , அறிந்துயாக்க நட்பு” (793)
முற்றும்மை, இடைச்சொற்கள் ஒன்று வருதல்.
“அறவினையும் ஆன்ற பொருளும், பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்” (909)
“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு” (920)
எண்ணும்மை பெயருக்குப் பின் வருதல்.
“ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்” (952 - எண்ணும்மை பெயருக்குப்பின் வருதல்)
“ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்” (1022 - எண்ணும்மை, பெயருக்குப்பின் வருதல்)
“கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும்” (1101 - எண்ணும்மை, பெயருக்குப்பின் வருதல்)
‘உம்’ என்னும் இடைச்சொல் முற்று, இழிவுச்சிறப்பு, உயர்வுச்சிறப்பு, எச்சம் எனும் பொருளில் திருக்குறளில் பதிவுசெய்யப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
‘உம்’ என்னும் இடைச்சொல் மிக அதிகமான பொருள்களில் வருவதாகும். இதன் அடிப்படைப் பொருள் இணைத்து நிற்பது எனினும் அத்துடன் வேறு பல பொருள்களையும் இது காட்டும்.
மற்று
பொருளில்லாத இடைச்சொற்கள் அசைச்சொல் அல்லது உரையசை எனப்படுகின்றன.
‘மற்று’ என்னும் இடைச்சொல் வினை மற்றும் அசைநிலையுமாய் வருவதாகும். இதையே,
“மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
அப்பால் இரண்டென மொழி மனார் புலவர் ” (1101 - இடையியல் 14)
எனத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.
“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று” (15)
நல்லவர்க்குச் சார்வாய் என்பதிற்குப் பதில் கெட்டவர்க்குச் சார்வாய்என வந்துள்ளதால் இதிலுள்ள ‘மற்று’ வினைமாற்று ஆயிற்று.
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று” (16)
அசைநிலையாகும்.
“அந்தணர் என்போர் அறவோர்,மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்” (30)
இக்குறளிலுள்ள ‘ மற்று’ அசைநிலையாகும்.
“அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம்
புறத்த புகழும் இல” (39)
அசைநிலையாயிற்று.
“மக்கள் மெய்தீண்டல் உடற்கு இன்பம், மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (65)
221, 248, 323, 349, 359, 362,364, 373, 380, 459, 490, 591, 596, 655, 773, 966,1122,1151,1294 ஆகிய குறள்களில் ‘மற்று’ என்னும் இடைச்சொல் குறளுக்கு இடையிலும் இறுதியிலும் அதாவது பெயர்ச்சொல்லோடும் வினைச்சொல்லோடும் சார்த்திச் சொல்லும் வகையில் அசைநிலையிலும் வினைமாற்றாகவும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.
(தொடரும்...)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.