திருக்குறளில் இடைச்சொற்களின் நிலைப்பாடு
முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி(ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
தொடர்ச்சி - பகுதி 2
ஏ
விகுதி எதுவும் ஏற்காது வாக்கியத்தின் புறத்துறுப்பாய் வருவது அம்ம, அன்னோ, அந்தோ, நன்றே, அன்றே, ஏ - ஓ - ஔ போன்றவை என மொழியியளார் இடைச்சொல்லைப் பாகுபாடு செய்துள்ளனர்.
‘ஏ’ என்னும் இடைச்சொல் தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை எனும் ஐந்து பொருளில் அமைகின்றது.
“தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்வைந் தேகாரம்மே’ இடையியல்” (9)
எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது.
“தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே” (129)
“அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே” (401)
‘அற்று’ எ- வினைக்குப்பின் வருதல்.
“அறியவற்றுள் எல்லாம் அரிதே” (443)
“துளியின்மை ஞாலத்திற்குஎற்று, அற்றே” (557)
“ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே” (673)
நன்றுநன்று ஏ வினைக்குப் பின் ‘ஏ’ வருதல்.
“நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே” (715) (நன்று + ஏ ( வினை+இ+சொ)
“ஆற்றின் நிலைதளர்ந்து அற்றே”(716)
“இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்காற் பவர்” (779)
“சீரினும் சீரல்ல செய்யாரே” (962)
“இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே” (1064)
“பாலொடு தேன்கலந்து அற்றே” (1121)
“பாடு பெறுதியோ நெஞ்சே” (1237)
நெஞ்சு + ஏ - பெயர்க்குப் பின் ஏ வருதல்
“இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே ” (1294 - நெஞ்சு+ஏ)
“நீரும் நிழல்அது இனிதே” (1309 - இனிது+ஏ)
1241, 1243, 1244, 1247 ஆகிய குறள்களில் ‘ஏ‘ என்னும் இடைச்சொல் ஈற்றசையாகவும் பொருள் சுவைக்காகவும் வந்துள்ளது.
மன், கொல், தில் போன்றவை இன்னொரு விகுதி ஏற்று வருவது ஆகும்.
கொல்
‘கொல்’ என்னும் இடைச்சொல் ஐயம் என்னும் பொருளைத் தருகிறது.‘கொல்லோ ஐயம்’ இடையியல்,20 குற்றி கொல்லோ, மகன் கொல்லோ, நாய் கொல்லோ, என ஐயப் பொருண்மையில் வருவது‘கொல்‘ என்னும் இடைச்சொல்லாகும்.
“கற்றதனால் ஆய பயன்என்கொல்?” (2)
வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் இது அசைநிலையாகும்.
“என் நோற்றான் கொல்எனும் சொல்?” (70)
“என்னைகொல் ஏதிலார் மாட்டு? ”(188)
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்” (228)
“தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான், என்கொலோ?” (318)
“கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ” (1070)
“அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர்கொல்? மாலும்என் நெஞ்சு” (1081)
“தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்” (1103)
“துறைவன் துறந்தமை தூற்றாகொல்” (1157)
“துப்பின் எவனாவர் ? மன்கொல் ?” (1165)
“கண்தாம் கலுழ்வது எவன்கொலோ?” (1171)
“நினைப்பவர் போன்று நினையார்கொல்?” (1203)
“மறப்பின் எவனாவன் மன்கொல்? ” (1207)
“காலைக்குச் செய்தநன்று என்கொல் ? ” (1225)
“புலப்பேன்கொல் ? புல்லுவேன் கொல்லோ?’
கலப்பேன்கொல் ” (1267)
பெரும்பாலும் ‘கொல்’ என்னும் இடைச்சொல் பொருட்பாலில் தலைவன் தலைவிக்கு இடையே ஐயப் பொருளில் வந்துள்ளமையைக் காணமுடிகின்றது.
ஓ
உரத்த ஓசையைக் குறிக்கும் எழுத்தொலி அல்லது ஒலிக்குறிப்பு ‘ஓ’ என்பதாகும்.
‘ஓ’ என்னும் இடைச்சொல் பிரிநிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலைக்கிளவி, சிறப்பு என்னும் பொருளைப் பெற்று வரும்.
“பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன்று என்ப ஓகாரம்மே” (இடையியல்.8)
எனத் தொல்காப்பியம் ‘ஒ’ என்னும் இடைச்சொல்லுக்குரிய பொருளைச் சுட்டுகிறது.
“முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ?” (707)
இதிலுள்ள உண்டோ என்பதிலுள்ள ‘ஒ’ காரம் வினாவிழி நின்ற இடைச்சொல்லாகும்.
“கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ ?” (1070)
இதுவும் வினாப்பொருளைத் தருவதாகும்.
“கூற்றமோ? கண்ணோ’? பிணையோ? மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து” (1085 - தெரிநிலை)
தலைவியை தலைவன் நோக்கும்போது தலைவனின் கண்களுக்குத் தலைவி கூற்றுவனாக, சாதாரண கண்ணாக, மருண்ட பார்வை கொண்ட பெண்மானாகத் தோன்றுகிறாள். ஆகையால் தலைவன் தலைவியைக் காமநோயை விளைவிக்கும் கூற்றுவனோ எனத் தெரிதல் பொருட்டாய் ஒகாரம் வந்துள்ளமையால் இது தெரிநிலை ஓகாரமாகும்.
“ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ?” (1088)
இரக்கப்பொருளில் வந்துள்ளது.
“எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ ” (1208)
‘அன்றோ ’ இதிலுள்ள ஓகாரம் பிரிநிலைப் பொருளில் வந்துள்ளது.
“பாடு பெறுதியோ? நெஞ்சே! ” (1237)
இக்குறள் வினா வழி நின்ற இடைச்சொல்லைப் பெற்றுள்ளது.
“செற்றார் எனக்கை விடல்உண்டோ?” (1245)
“காமம் விடுஒன்றோ? நாண்விடு நன்னெஞ்சே
“யானோ? பொறேன்இவ் இரண்டு” (1247 - எதிர்மறை)
“காமம் எனஒன்றோ?” (1252)
“மறைப்பேன்மன்! காமத்தை யானோ?” (1253 - எதிர்மறை)
“நிறையுடையேன் என்பேன்மன் யானோ?” (1254 - எதிர்மறை)
1149, 1257, 1258, 1260,1293 ஆகிய குறள்களில் ‘ஒ’ என்னும் இடைச்சொல் வினாப் பொருளையே மிகுதியாகத் தருவதாய் அமைந்துள்ளது. மேலும் ‘ஒ’ இரக்கப்பொருளையும் தருவதாகவும் அமைந்துள்ளது.
அரோ
‘அரோ’ எனும் இடைச்சொல் அசைநிலையாய் வருவதாகும்.
‘‘யா கா
பிறபிறக் கரோபோ மாதென வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி” (இடையியல்,31)
யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது எனும் ஏழு இடைச்சொல்லும் அசைநிலையாய் வரும் எனத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்.
‘‘அரிதுஅரோ தேற்றம்!அறிவுடையார் கண்ணும்
பிரிவோர் இடத்துஉண்மை யான்” (1153)
‘‘நோதக இருங்குயில் ஆலுமரோ” (கலித்தொகை, 33.)
‘‘கொடி உவணத்தவரோ”
என ‘அரோ’ என்னும் இடைச்சொல் அசைநிலையாய் வந்துள்ளமையை அறியமுடிகிறது.
மேலும் இந்த அசைச்சொல் உணர்ச்சியை வெளிப்படுத்துபவையாகவும் அமைகிறது.
மன்
‘மன்’ என்னும் இடைச்சொல் கழிவு, ஆக்கம், ஒழியிசை என மூன்று பொருளைத் தருவதாகும் என்பதை
‘‘கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன்று என்ப மன்னைச் சொல்லே” (இடையியல், 4)
எனத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.
‘‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது”(68)
‘‘தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு” (190)
‘‘மன்னுயிர் ஒம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப” (244)
‘‘தன்னுயிர் எல்லாம் தொழும்” (268)
‘‘நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணியர் மேலா யவர்” (1016)
‘மன்’ எனும் இடைச்சொல் பெரும்பாலும் திருக்குறளில் ஒழியிசைப் பொருளைத் தருவதாய் அமைகிறது. பெயரையும் வினையையும் சார்ந்து வருவது மட்டுமல்லாமல் பெயரையும் வினையையும் வேறுபடுத்துவனவாகவும் இடைச்சொற்கள் அமைகின்றன.
ஏ, அரோ, மன்னோ, கொல் போன்றவை பொருளின்றி அசையாக வருகின்றன.
முடிவுரை
தனித்து வராத இடைச்சொல் பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும் இயைபு கொண்டு தான் ஏற்ற இடத்திற்கேற்றவாறு பொருளை உணர்த்துகிறது. திருக்குறளில் ஆங்கு, ஆம், ஆல், உம், ஐ,ஓடு, ஓ, ஓரும், கொல், பிற , மற்று, மன், போல, போலும், ஏ, ஓ, காண், குறை போன்ற இடைச்சொற்கள் மிகுதியாகப் பயின்று வந்து இலக்கியச் சுவைக்கு மேலும் மெருகூட்டுவதாய் அமைகின்றது. இவ்விடைச்சொற்கள் திருக்குறளில் பொருள், மற்றும் நயம் கருதி உரையசையாக, உவமஉருபாக, வினைமாற்றாக, ஒழியிசையாக, முற்றாக இழிவு, சிறப்பு, உயர்வு சிறப்பு, அசைநிலை, ஐயம் ஆகிய பொருள் தரும் வகையில் இடைச்சொற்கள் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். இலக்கிய நயத்தோடு இலக்கண நயத்தையும் இணைத்துத் தருவதாக திருக்குறள் அமைகின்றது. இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச்சொல்லே’எனும் தொல்காப்பியரின் கருத்து உணர்ச்சிப்பொருள் வேறுபாட்டையும், சொல்லாக்க உருபுகளாக அமைந்து சொற்களின் இலக்கணப்பொருளை வேறுபடுத்தலையும் உணர்த்துகிறது.
(நிறைவடைந்தது)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.