தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
31.முனைவர் கோ. மீனாவின் சிறுகதைகளில் பெண்ணியம்
முனைவர் க. யோகாம்பாள்
இன்றைக்கு உள்ள இலக்கியப் பிரிவுகளில் சிறந்து செழித்து வளர்ந்து செல்வாக்கு பெற்றுத் திகழ்வது சிறுகதைகள்தான் என்று கூறலாம். ஐரோப்பியர் காலத்தில்தான் சிறுகதை வடிவம் பெற்றது. பின் எட்கர் ஆலன்போ, கோகோல் ஓ ஹென்றி செட்விக் போன்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்கள் சிறுகதைகளை எழுதியும் அதற்குச் சில இலக்கணங்களையும் வகுத்தனர். முதன்முதலில் தமிழில் சிறுகதைக்கு உருவும் உயிரும் கொடுத்தவர் வ.வே.சு.ஐயர். அவரே சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுவர். அவருடைய குளத்தங்கரை அரசமரம் 1910ல் ‘விவேக போதணி’ என்னும் இதழில் வெளிவந்தது. அதன் பிறகு, இக்கதை தம் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் 1917 ல் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்னும் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்தது. இப்படி முந்தைய தலைமுறை தொடங்கி இன்றைய தலைமுறை வரை ஒரு நூற்றாண்டின் பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சிறுகதைகளுள், தரமான சிறுகதைகளாக முனைவர் கோ. மீனா அம்மா அவர்களின் இரண்டு சிறுகதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆசிரியர் குறிப்பு
முனைவர் கோ. மீனா அவர்கள் தம் அறிவியல் தொழில்நுட்ப அறிவைப் போலவே இலக்கியப் படைப்பாற்றலையும் சமூக மேம்பாட்டுக்காக பயன்படுத்தியிருக்கிறார். சிறுகதைக்கு ஏதேனும் ஒரு நிகழ்வு ஒரு பொழுது, ஒரு சில கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு குறைந்த நேரத்தில் படித்து முடிக்கப்படும் வகையில் படைக்கப்படுவது. கதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப் பந்தயம் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை கூறுவர். அதன்படியே ‘தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்’, ‘சுகந்தி டீச்சர்’ இரண்டு சிறுகதைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பெண்மையின் மென்மை திண்மையைச் சித்தரிக்கின்றன. குறிப்பாகப் பெண்கள் - வாழ்வில் நம்பிக்கையும் நல்லுணர்வும் கொள்ளத்தக்க கருத்துக்களை முதன்மைப்படுத்தும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளன.
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’ என்ற சிறுகதையில், ஜெயா ஒரு உலகப் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் மேலாளர். மாதச் சம்பளமே ரூபாய் எண்பதாயிரம், இந்தப் பதவிக்குப் பின்னால் இருப்பது அவளுடைய சலிக்காத உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை இவை மூன்றும்தான் அவளுடைய வேதம். ஜெயலெட்சுமி என்ற ஜெயா பிறந்த சில மாதத்திலேயே போலியோ அட்டாக் காரணமாகக் காலின் அளவு சற்று குறைந்துவிட்டது. விந்தி விந்தித்தான் நடக்க முடியும். விளைவு... அவளிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. ஆனால் படிப்பில் படுசுட்டி. சொந்த ஊர் திருச்சி. தந்தை நடராஜன் ரிடையர்டு பள்ளி வாத்தியார். நடுத்தரக் குடும்பத்தினர்.
எல்லோரும் படிப்பு படிப்பு படிப்புதான். படிப்பு மட்டுமே அவளுடைய சிந்தனையாக இருக்கும். கணினிப் படிப்பில் முதல் மாணவியாக வரப் பெற்று, தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை என்ற வேர் நன்றாக வளர்ந்தது. தானும் சமுதாயத்தில் நல்ல நிலையில் உயர்ந்து, வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் ஜெயாவிற்குக் கல்யாணம் செய்துவிட அம்மா அப்பா முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை ராதாகிருஷ்ணன் இன்ஜினியர், வரதட்சணை, சீர் என்று எதுவும் வேண்டாம் என்று புரோக்கர் மூலம் தெரிந்து கொண்டு மகிழ்ந்தனர்.
பெண் பார்க்கும் நாளும் வந்தது. ஜெயாவும் பல கற்பனைகளோடு காத்திருந்தாள். மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர். பெண்ணைப் பார்க்க வரச் சொல்லுங்க என்று வந்தவர்களில் ஒருவர் சொல்ல, பட்டுப்புடவை சரசரக்க பலவித ஆசைகளுடனும், கனவுகளுடனும், வெட்கம் கலந்த புன்னகையுடன் காப்பி ட்ரேயை கையில் ஏந்தி வந்தாள். அனைவரின் கண்களும் ஜெயாவின் காலையே மொய்த்திருந்தன.
உங்க குடும்பத்தை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, ஆனா, பொண்ணுக்கு கால் ஊனம். நடக்க வராதுன்னு எதிர்பார்க்கல என் பையன் நாலு இடத்துக்கு பொண்டாட்டியுடன் போகும் நேரத்தில் அவனுக்கு அவமரியாதையாக இருக்கும். அதனால் நீங்க தப்பா நினைக்கலேன்னா, உங்க இரண்டாவது பெண் ராஜலெட்சுமியை என் பையனுக்கு பிடித்துள்ளது. சிம்பிளா கோயில்ல கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று கூறி, அவள் தங்கையை திருமணம் செய்து கொண்டார் மாப்பிள்ளை ராதாகிருஷ்ணன்.
ஜெயாவும் மன தளர்ச்சி அடையாமல் வேலையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, தன் குடும்பத்திற்கும் தன் தங்கை வீட்டார் கேட்கும் போதெல்லாம் பணம் காசு கொடுத்துக் கொண்டு, தன்னைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், ஒருத்தர் தன்னை வேண்டாம் என்று உதாசினப்படுத்தினால் என்ன, நம்மால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையோடு அவளை மாதிரி ஊனம் நிறைந்தவர்களுக்கும் உதவி செய்து கொண்டு வாழ்ந்தாள்.
தன் தங்கையின் இரண்டாவது பிரசவம் ஸீரியஸ் ஆகிவிட்டது. அடிக்கடி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை போன்று ஒன்று மாற்றி ஒன்று வந்த வியாதியால், கரு சரியாக வளர்ச்சியடையாத காரணத்தால், ராஜி இறந்துவிட்டாள். தன் தங்கை ராஜியின் பெண் புவனா மூன்று வயதே, ‘அம்மா இனிமே வரவே மாட்டாளா பெரியம்மா’ என்று ஜெயாவின் காலைக் கட்டிக்கொண்டு அழும் அந்த குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டு கதறித் தீர்த்தாள் ஜெயா.
ஒரு மாதம் ஓடியது. ஜெயாவின் அம்மா, அப்பா மீண்டும் கல்யாணப் பேச்சைத் தொடங்கினார்கள். புவனா குட்டிக்காகவது நீ மாப்பிள்ளையை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்துக் கிடனும் என்று, இது உங்க விருப்பமா? அல்லது உங்கள் மாப்பிள்ளையின் விருப்பமா? என்ற ஜெயாவின் கேள்விக்கு எங்கள் ரெண்டு பேரோட விருப்பமும் தான் என்றார்.
மாப்பிள்ளையிடம் பொண்டாட்டி செத்த ஒரு மாதத்திற்குள் எப்படி உங்களால் அடுத்த பெண்ணைத் தேட முடியுது.
பத்து வருஷத்துக்கு முன்னால் ஊனமான என்னை வேண்டாமென்று சொன்னவர்தானே நீங்கள்? இப்ப எப்படி பிடிக்கும் என்னை? அன்று என்னிடம் பணம் இல்லை. அதனால் என் ஊனம் மிகவும் பெரிதாகத் தெரிந்தது. இன்று என்னிடம் பணம் நிறைய உள்ளது. அதனால் என் ஊனம் உங்கள் கண்ணுக்குத் தெரியல அப்படித்தானே!
வரதட்சணை வேண்டாம்னு சொல்லிவிட்டு... எத்தனை முறை ராஜி மூலமாகப் பணம் வாங்கிக் கொண்டீர்கள். என் தங்கை மேல் உள்ள பாசத்தால் வாயைத் திறக்காமல் பொறுத்துக் கொண்டேன். இன்று அவளே போய்விட்டாள். இனிமே என்ன. பிள்ளைத்தாச்சி பெண் இறந்து போன துக்கம் இன்னும் எங்களைவிட்டு அகலவேயில்லை. ஆனால் நீங்கள் அடுத்த வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்க! முடியாது. நான் இதற்குச் சம்மதிக்கவே மாட்டேன். என்னை மாதிரி எத்தனையோ பேர் ஊனம் உடையவர்களா எந்த பிடிமானமும் இல்லாமல் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகக் கடவுள் என்னைப் படைச்சிருக்கார்னு நான் நினைக்கிறேன் என்றாள் ஜெயா.
வாயடைத்து நின்றார் மாப்பிள்ளை ராதாகிருஷ்ணன். “புவனாவைத் தாயில்லாமல் எப்படி வளர்ப்பது என்றெல்லாம் நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம். அவளை எதிர்காலத்தில் பெரியாளா கொண்டு வருவது என் பொறுப்பு” என்று சொல்லிவிட்டுப் புவனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு காரை நோக்கிப் புறப்பட்டாள் ஜெயா.
இதில் ஜெயாவின் நம்பிக்கை, விடாமுயற்ச்சி, துணிச்சல், பகிரங்கமாக எடுக்கும் முடிவு வெளிப்படுகிறது.
சுகந்தி டீச்சர்
‘சுகந்தி டீச்சர்’ என்ற சிறுகதையில் சுகந்திக்கு டீச்சர் வேலைக்குப் படிக்கனும், நல்ல டீச்சராக ஆகணும் என்ற ஆசை. 12 ஆம் வகுப்பில் ஆயிரம் மார்க்கு மேல எடுத்திருந்தும் அவள் அப்பா செங்கல் சூளையில் வேலை செய்யும்போது சூளை சரிந்து விழுந்து அநியாயமா செத்துப்போயிட்டாரு. அதுக்குப் பிறகு படிக்கிறதை பற்றி நினைக்கவே முடியலை. அதனால் கல்யாணம் செஞ்சி வச்சிரலாமுன்னு நல்ல வரன் வந்தது செய்திட்டோம் என்கிறார் அவள் அம்மா.
சுகந்திக்கும் நல்ல கணவன் கிடைத்தார். ஆனா தான் டீச்சர் வேலையை விடாம பார்க்கணும் நாளு பேருக்கு சொல்லித் தரணும் என்ற ஆவல். 12 ம் வகுப்பு படித்திருந்தாலும் டீச்சர் வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க. தன் கணவரும் அதற்குச் சம்மதித்தார். ஆயிரத்து ஐநூறு ரூபா சம்பளம் தந்தாங்க. எல்லா குழந்தைகளுக்கும் சுகந்தி டீச்சரைப் பிடிக்கும். நிறைய கதை சொல்லி, அடிக்காம பாடம் நடத்துறவுங்க. முனிசிபாலிட்டி ஸ்கூல்ல படிக்குற படிப்பு வராத புள்ளைங்களுக்கு இலவசமாக டியூசன் எடுக்கிறது சுகந்தி டீச்சர் என்றால் அந்தப் பகுதியில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சுகந்தி டீச்சருக்காகவே அந்தப் பகுதி மக்கள் அந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தார்கள். குழந்தைகளின் கனவு நாயகியாகவே அவள் டீச்சருக்கே உரிய சிறிய கொண்டையுடன், நெற்றி நிறைய குங்குமம் வைத்து மார்பில் புத்தகத்தை அணைத்தபடி சுகந்தி டீச்சர் நடந்து சென்றாலே அந்த லட்சுமியே நடந்து போகிறமாதிரி இருக்கும்.
சுகந்தியின் அருமையை உணர்ந்து கொண்ட பள்ளி நிர்வாகம் அவளுக்குத் தலைமை ஆசிரியை பொறுப்பு. அதிக சம்பளம் தர முன்வந்த போது அவள் அதை ஏற்கவில்லை. வேண்டாம் சார். என் கணவர் கை நிறைய சம்பாதிக்கிறார். தலைமை ஆசிரியையாயிட்டா பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களை கண்காணிப்பது என்று மைண்ட் டைவர்ட்டாகி குழந்தைகளைக் கவனிப்பது குறைந்துவிடும். நான் இப்படியே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.
சுகந்தி சேகரின் கல்யாண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. அவர்களுக்கு என்று குழந்தை பேறு இல்லை அதுதான். அந்த வருத்தம் சிறிது இருந்ததே தவிர, சுகந்தி நமக்குன்னு பொறந்தாத்தான் குழந்தையா இப்பவும் நான் தினமும் நூறு குழந்தைகளோடு வாழ்ந்திட்டிருக்கேன். கடவுள் என்னைக்கு கொடுக்கனும்னு நினைக்கிறாரோ அன்னிக்குத் தரட்டும் என்று சொல்லிவிடுவாள்.
அவளுக்கு டீச்சர் வேலையில் ஒரு சந்தோஷம், குழந்தை இல்லை என்கிற குறையே அவளுக்குத் தெரியவில்லை. கணவர் சேகரும், அவளின் சந்தோஷத்துக்குக் குறுக்கே நிற்கமாட்டார். அப்போதுதான் வந்தது அந்தப் பள்ளிச் சுற்றுலா. ஆண்டுதோறும் செல்லும் சுற்றுலா தான்.
குற்றாலத்தில் தினமும் ஒரு அருவிக்குச் சென்று குளிப்பது, மலைப்பிரதேசத்தில் எங்காவது அடர்த்தியான இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது என்று மகிழ்ச்சியாக சென்ற பள்ளி குட்டீஸ்களுக்கு திடீரென்று நடந்த சம்பவம் தான் இது. நீண்ட வரிசையில் குழந்தைகள் அருவியில் குளிக்க நின்று கொண்டிருந்தார்கள். சுகந்தி டீச்சர் அருவிக்கு அருகில் நின்று கொண்டு குளித்த குழந்தைகளைத் திரும்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் திடீரென தண்ணீர் சூறாவளியாக கொட்டத் தொடங்கியது. குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அதிர்ச்சியடைத் சுகந்தி அருவிக்குள் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்ற சென்றாள். இரண்டு இரண்டு குழந்தைகளாக வெளியே கொண்டுவந்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள். இந்தமுறை திரும்பி அவள் வரவில்லை. கடைசியா உயிரற்ற சடலமாக சுகந்தி டீச்சரை அள்ளி வந்தார்கள். மொத்தப் பள்ளியும் மெழுகுவர்த்தி ஏந்தி சுகந்தி டீச்சரின் படத்துக்கு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தியது.
ஆக இரண்டு கதைகளிலுமே ஆசிரியர் மிக நுட்பமாகப் பெண்களின் மனதிடத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜெயாவும் சுகந்தியும் ஏன் இது போன்ற பெண்கள் தான் இந்த சமுதாயத்திற்குத் தேவை என்பதை ஆணித்தரமாக இச்சிறுகதை மூலம் படைத்துக் காட்டுகிறார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.