தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
46.நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் மொழிநடை
பா. அமுதா
‘நாஞ்சில் நாடனின் சிறுகதைகளில் மொழிநடை’ என்னும் தலைப்பில் அமையும் இக்கட்டுரை சாகித்திய அகாதமி பரிசு பெற்ற ‘சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதைத் தொகுப்பின் மொழிநடைக் கூறுகளை விளக்குவதாய் உள்ளது.
சிறந்த இலக்கியப்படைப்பின் வெற்றிக்கு அதில் பயன்படுத்தப்படும் மொழிநடை என்பது முக்கியமானதாகும். நடை என்பது படைப்பாளர்களின் அணுகுமுறை ஆகும். படைப்பாளன் எந்த அளவு மொழிநடையை செம்மையாகப் பயன்படுத்துகிறானோ அந்த அளவுக்கு வாசகர்களிடம் சென்று சேரும் எனலாம்.
“இலக்கியங்கள் காலங்கள் கடந்து நிற்பதற்கு அவ்விலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி உத்திகளும் காரணமாகின்றன”. (1) இக்கூற்று மேற்கண்ட கருத்தை உறுதிப்படுத்துவதைக் காணலாம்.
தான் சொல்ல வந்த கருத்தை கதை வழி நேரிடையாகச் சொல்லாமல் சில இலக்கிய உத்திகளுடன் சொல்லும் போது கதை மேலும் அழகு பெறுகிறது. படைப்பாளன் தான் பெற்ற உணர்வுகளை, அப்படியே பிறரும் பெற கையாளும் உத்திகள் தான் அந்த இலக்கியத்திற்கு வளமை சேர்க்கின்றன. மேலும், புதுமை பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுகின்றன. மென்மேலும் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது எனலாம்.
நாஞ்சில் நாடன், நம் சமூக அவலங்களையும், மெத்தனமான போக்கையும் மக்களின் அறியாமையையும், மக்களின் தவறான எண்ணங்களினால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதையும், மக்களின் தனிப்பட்ட, மாறுபட்ட மனநிலையையும் தனது எள்ளலுடன் கூடிய நடையால் தன் பாத்திரங்களின் வழியே வாசகர்களைச் சிந்திக்க வைத்து விடுகிறார். மானுடம் தாங்கி நிற்கும் இவரின் கதைகள் மனதைத் தொடுகின்றன.
நாஞ்சில் நாடன் தான் சொல்ல வந்ததை நேரிடையாகச் சொல்லாமல் பாத்திரத் தன்மையுடன் நம்மை ஒன்றிச் சிந்திக்க வைக்கின்றார். இதனால் இவரின் பாத்திரங்கள் மனதில் நிலைத்து நின்று தொந்தரவு செய்வதுடன், அவர் சொல்ல வரும் செய்திகளை விளக்கிச் சொல்லாமலேயே வெற்றியும் பெறுகிறார். இவர் தமது நடையால் தன் கதைகளில் இது சரியானது; இது தவறானது என எதையும் சுட்டிக்காட்டாமலேயே நாம் செய்ய வேண்டியது என்ன என்பதுடன் அறம் எது என உணர்த்துவதிலும் வெற்றி பெறுகிறார். படிப்போரின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைப்பது இவருடைய எதார்த்தமான நடையின் சிறப்பாகும்.
வட்டார வழக்கு
நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் எழுதி வருவது இவரின் சிறப்பாகும். இவரின் வட்டார வழக்கிலமைந்த சொற்கள் கதையின் உயிர்ப்பைக் கூட்டச் செய்கிறது எனலாம். நாஞ்சில் நாட்டு வட்டாரமொழியே இவரின் முக்கிய அடையாளமாகும். வேலை -சோலி; பிறகு - பொறவு; தொடவேண்டாம் - சீந்தாண்டாம் என்பன போன்ற பல நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
பூமுகத்துப் படிப்புரையில் அமர்ந்தவன் கேட்டான்,
“என்ன பாட்டா, காலம்பறையே எந்திரிச்சாச்சா?”
“ஏன்டே, இருக்கானா செத்துட்டானாண்ணு பாத்துக்கிட்டு வரச்சொன்னாளா உங்க அம்மை, கனியாகுளத்துக்காரி”? “தொடங்கீட்டேரா? ஒரு தாக்கல் சொல்லீட்டுப்போலாம்ணு வந்தேன்”
தவசிப்பிள்ளை வந்து கதவருகில் நின்றான்.
“தாயோளி மூக்கு மணத்திரும், ஒரு குருவி படியேறி வந்திரப்பிடாது. வாய் பாக்க வந்திருவான்”.
“ஆமா இப்பம் லங்கையைப் பிடிக்கது பக்தியில்லா பேசப்போறையோ! எங் காதில விழுந்தா ரகசியம் வெளீல பறந்திரும்! “(2) என நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலேயே கதைகள் எழுதப்பட்டுள்ளன.
பிறமொழிச் சொற்கள்
பல கதைகளில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக ஆளப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. சான்றாக, மராட்டிய மாநிலத்தில் நடைபெறுவதாக எழுதப்படும் கதையில் மராத்தி மொழியைக் கையாண்டுள்ளார். வளைகள் எலிக்களுக்கானவை என்னும் சிறுகதையில்
“ஏ காய் சாப்? காய் கலத்தி கேலா அமி? துமி சாங்கானா”? (3).
மராத்திச் சொற்களுக்கான தமிழ்ப் பொருளையும் அட்டவணைப்படுத்தியுள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளையும் கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்தியுள்ளார்.
உவமை, உருவகம் மற்றும் எடுத்துக்காட்டுகள்
நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் உவமை, உருவகம் மற்றும் எடுத்துக்காட்டுகள் போன்ற இலக்கிய உத்திகளைப் பயன்படுத்துதல் சிறப்பாக உள்ளது. இதனால் கதைக்களம், கதாபாத்திரம், அவைகளின் தன்மைகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
கொங்குதேர் வாழ்க்கை கதையில், “பெரியவரிடமிருந்து பிடுங்காத குறையாக நாதசுரம் பறிபோயிற்று. வாசற்படி திண்டில் லயத்தை, தாளத்தைத் தொலைத்தவர் போல், இசை ஞான ரூபத்தை களைந்தவர் போல், சுரத்தை பணயம் வைத்து திருப்ப முடியாதவர் போல், நெடுநேரம் தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்” (4)
செம்பொருள் அங்கதம் கதையில், “வைக்கோற் படப்பில் நாய் கிடந்தாற்போல, தன்னால் தின்ன இயலாது, மாட்டையும் தின்னவிடாது” (5).
யாம் உண்பேம் கதையில், “கும்பி என்பது தூராத கிணறு, அவியாத நெருப்பு, ஆறாத புண், தன்னையே தான் தின்னும் வெறியான மிருகம். உள் ஒளிந்து கிடக்கும் உருவம் இல்லா அணங்கு....” (6)
என இயல்பான எண்ண ஓட்டங்களில் உவமைகளும், உருவகங்களும், எடுத்துக்காட்டுகளும் எடுத்தாளப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
பழமொழி மற்றும் வர்ணணை
தொன்றுதொட்டுப் பயன்டுத்தப்பட்டு வரும் இவ்வுத்திகளும் நாஞ்சில் நாடன் கதைகளில் இயல்பாக வந்துள்ளன.
“மனிதன் தான் நேரில் கண்டவைகளைப் பற்றியும், கற்பனை செய்தவைகளைப் பற்றியும் பிறருக்குச் சொல்ல விழைவதன் விளைவாக வருணனை இலக்கியங்கள் தோன்றுகின்றன” (7) என்பதற்கேற்ப
கொங்குதேர் வாழ்க்கை சிறுகதையில், “எல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை” (8)
கும்பமுனி முறித்த குடைக்காம்பு சிறுகதையில், “ஆக்கப் பொறுத்தவரு ஆறப் பொறுக்கமாட்டேரா”? (9)
செம்பொருள் அங்கதம் சிறுகதையில், “பாம்பின்கால் பாம்பறியும்” (10)
எனப் பழமொழிகளும்,
யாம் உண்பேம் என்ற சிறுகதையில், “பஞ்சம் என்பது தாண்டமுடியாத பாழ்க்கிணறாக வழிமறித்துக் கிடந்தது. எல்லோருக்கும் தான்” (11)
“கொள்ளிக்குடம் சுமக்கையில் ஈரல் கீறிப்பிளந்து வேதனித்தது நாத்ரேக்கு” (12) என வர்ணனைகளும் கதையின் தன்மைகளை, உணர்வுகளைப் புரியவைக்கின்றன.
இவ்விதமான வர்ணனைகள் கதைகளுக்கு வலிமையூட்டுவதுடன் யதார்த்தமான நடையையும் தருகின்றன எனலாம்.
இலக்கியச் சொல்லாடல்களைப் பயன்படுத்துதல்
நாஞ்சில் நாடன் மரபிலக்கியத்தில் முழுமையும் மூழ்கி, நவீனப் படைப்புலகத்தில் கரைகண்டவர். இவர் தம் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் மூலம் அவரின் தமிழார்வத்தை அறிவதுடன், தன் கதைக்கருத்தைக் குறியீடாகத் தலைப்பில் பொருத்துவதையும் அறியலாம். மேலும் தனது சிறுகதைகளின் நடுவே அக்கதைக்குப் பொருத்தமான இலக்கியப் பாடல் வரிகளையும், சொல்லாடல்களையும் பயன்படுத்துகிறார்.
பரிசில் வாழ்க்கை சிறுகதையில்,
“கோயிலின் இடமோ வலமோ நிற்கும் செடிகளில் எது பூத்திருந்தாலும் அது தான் சாமிக்கும். எருக்கலையும் ஆகும் சாத்தாவுக்கு. சிவபெருமானே வெள்ளெருக்கம் சடை முடியான் தானே!
‘யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கோர் வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதோர் கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!
என்பது தானே திருமந்திரம் “(13)
என அமையும் பாடல்வரிகள் கதைக்கு மெருகூட்டுகிறது எனலாம். இதுபோன்று கம்பராமாயணப்பாடல் வரிகள், திருவாசகம் போன்றஇலக்கியப்பாடல் வரிகளையும் இடைஇடையே பயன்படுத்துகின்றார்.
“பதிற்றுப்பத்து” என்னும் சங்க இலக்கியப் பாடலின் அமைப்பைப் போன்றே களம் உரைத்தது, குணம் உரைத்தது, காலம் உரைத்தது என்பன போன்ற உட்தலைப்புகள் வைத்துப் படுவப்பத்து என்னும் சிறுகதையை எழுதியுள்ளார். இச்சிறுகதைக்கு ஐந்து விதமான முடிவுகளைத் தந்துள்ளார். முதல் பாதம் முதல் ஐந்தாம் பாதம் வரை என முடிவுகள் தந்து இந்த முடிவுகளுக்குப் புறம்பான முடிவுகளும் சாத்தியமே எனச் சிந்திக்க வைப்பது புதிய அணுகுமுறையாக உள்ளது.
அங்கத நடை
அங்கத நடை என்பது வெளிப்படையாகச் சொல்லப்படுவதற்கும், உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமைவதுடன் அதனுள் இருக்கும் உண்மை, நேர்மை சோகம் என்பன போன்ற உணர்வுகளை உணர வைப்பதாகும். சுருக்கமாக வசைப்படைப்பு (கேலி) எனலாம். நாஞ்சில் நாடன் அங்கதம் என்னும் உத்தியைக் கொண்டு, பல கதைகளில் இதழோரம் சின்ன நகையை ஏற்படுத்துவதோடு பொட்டிலறைந்தார்போல் உண்மையை உரக்கச் சொல்லிச் செல்கிறார். கறாரான கதை சொல்லியாக இவர் தொடர்ந்தாலும், அனைத்திலும் சொல்வதில் நேர்மை, மனிதநேயம் என என்றும் மாறாதவற்றைத் தனது சிறுகதைகளுக்கு இலக்கணமாக வரிந்து கொண்டுள்ளார். அதைத் தனது நடையின் மூலம் படிப்போரின் மனதிலிருத்துகிறார்.
வளைகள் எலிகளுக்கானவை கதையில்,
“பிரயாணங்களின் போது ரயில் பெட்டிகளில் தண்ணீர் வசதி இருந்தால் மலஜலம் கழிக்கலாம். பெரும்பாலும் பாசஞ்சர் பயணிகளை ரயில்வே நிர்வாகம் மனிதர்களாகக் கருதுவதில்லை. குளிர்பதன ரயில்பெட்டி என்றால் கக்கூஸில் கூட மின்விசிறி இருக்கும். ஆனால் பாசஞ்சர் பயணிகள் லொத்தி, விட்டை, புழுக்கை, எச்சம் போடும் ஊர்வன, நடப்பன, பறப்பன பிரிவினர் அவர்களுக்கு எதற்குத் தண்ணீர் என்பது கருதுகோள்”. (14) எனக்கதையை எதார்த்தமாகச் சொல்லிச் செல்லும் பொழுது அவரின் சமூகச் சீற்றம் எள்ளல் தொனியில் வெளிப்படுகிறது.
யாம் உண்பேம் சிறுகதையில்
“கோதுமை மாவை உப்புத்தண்ணீர் தெளித்துப் பிசைந்தால் மலவாடை வந்தது. எந்த முரட்டு ரகக் கோதுமையும் மட்டரக அரிசியும், கெட்ட நாற்றத்துடன் விளைவதில்லை. மலிவான ரகங்களை ஆதரவு விலைகொடுத்து வாங்கிப் புழுங்க வைத்து, மக்க வைத்து, நிறம் மங்க வைத்து, கசங்க வைத்து, நாற வைத்து, ஒன்றிரண்டு ஆண்டுகள் மழையில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, புழுக்க வைத்து, மக்கள் தின்பதற்கென்று வள்ளன்மையுடன், பெருங்கருணையுடன், தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள். தேசத் தலைவர்களும் தேசத்தைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த அதிகாரிகளும். அமெரிக்க ஐரோப்பிய நாட்டுப் பன்றிகள் தின்னாது அவற்றை” (15)
என நாட்டின் உண்மைநிலையை உரக்கச் சொல்லும்போது வேதனை நம் மனதைத் தொடுகிறது என்பதை மறுக்க முடியாது.
கடவுளின் கால் சிறுகதையில்,
“சட்டத்துக்கு ஒற்றைக் கண் எனில் ஓட்டைகளுக்கு ஓராயிரம் கண்கள். சட்டத்தின் பாதுகாப்பில் ஓட்டைகளில் உயிர்வாழும் தேசம் நமது” (16)
எனச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் செய்திகளைச் சாடுவதுடன்,
“எப்போதும் பால் எடுத்த தேங்காய் பூ கோருகளைத் தானே பாடப்புத்தகங்கள் உண்ணத்தருகின்றன!” (17)
என மனிதர்களை மனிதர்களாகப் பண்படுத்தும் கல்வியைக்கூட அரசால் சரியாகத் தரமுடியவில்லை எனச் சுட்டிச் செல்கிறார்.
சூடிய பூ சூடற்க சிறுகதையில்,
“எல்லோரும் உபதொழிலாக மீன்பிடித்தார்கள். எனவே தூண்டிலும் கையுமாக அலைய வேண்டியிருந்தது. அவரவர் தூண்டில் மீன் அவரவர்க்கு. பெரிய மீன்கள் சிக்கும் போது பெருந்துண்டு அதிகாரிக்கும், சின்னக் கண்டம் பிடித்தவருக்கும் என்பதோர் உடன்பாடு. நடுமுள், தலை எனக் கிடைக்கும் பூமிநாதனுக்கு. பெருந்துண்டு முள்நீக்கி வறுத்து டப்பாக்களில் அடைக்கப்பட்டு மேலேறிச் செல்லும் என்றார்கள். அதிகாரி, மேலதிகாரி, உயரதிகாரி, மேலுயர் அதிகாரி, அமைச்சர், உயரமைச்சர் எல்லோரும் மீன் தின்னும் சாகபட்சிணிகள் தான் என்றார்கள்” (18) என அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதை விவரிக்கின்றார்.
இங்கு லஞ்சத்திற்கு “மீன்” குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் “இன்று சங்கங்கள் யாவும் தங்கம் செய்து கொண்டிருக்கின்றன” (19) என நாட்டின் சங்கங்களின் நிலையைத் தோலுரிக்கின்றார்.
சொல்லவந்த கதை, கதை உணர்த்தும் கருத்து என மட்டுமே முதன்மைப்படுத்தாது சூழலோடு நம்மையும் கதைக்குள் புகுத்தி, அதைக் காட்சிப்படுத்துவதிலும், உணர வைப்பதிலும் வெற்றி பெறுகிறார்.
‘தேர்தல் ஆணையத்துக்குத் திறந்த வெளிக்கடிதம்’ எனும் கதையில்
“பணம், பதவி, அதிகாரம், சாதி என்பன அரசியலில் அணு ஆயுதங்கள். முன்பானால், வெளியே தெரியாமல் வீசலாம். இன்று தெரிந்தே வீசலாம். முகத்துக்கு நேரே” (20) என இன்றைய அரசியல் நிலையையும் தன் எள்ளல் நடையில் நம் மனதிலிருத்திச் செல்கிறார்.
முடிவுரை
நாஞ்சில் நாடனின் படைப்புகள் நாஞ்சில் நாட்டு வட்டார மொழி நடையைக் கொண்டிருக்கின்றன. பேச்சு வழக்கு, வட்டார வழக்கு நடை, உரையாடல் உத்திமுறை, குறியீடு, அங்கத உத்திமுறை, ஆசிரியரின் தனிக்கூற்று, உவமை, உருவகம், எடுத்துக்காட்டுகள், பழமொழி, வர்ணனை மற்றும் சொற்றொடர் அமைப்பு போன்றவற்றுடன் கதைச் சூழலுக்கு ஏற்ப பிறமொழிச் சொற்களும் கலந்து வந்துள்ளன. சங்கப் பனுவலின் அமைப்பைப் போன்று சிறுகதைக்கும் உட்பிரிவுகள், முடிவுகள் என நவீனக் கட்டமைப்பைப் பயன்படுத்தியுள்ளமையும் மொழிநடையைச் சிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவருடைய இலக்கிய சொல்லாடல்களைப் பயன்படுத்தும் உத்தி, அங்கத உத்தி, இலக்கிய, வட்டார செய்திகளைப் பதிவு செய்தல் ஆகியவை இவரது நடையை உயிரோட்டானதாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
அடிக்குறிப்புகள்
1. இராமமூர்த்தி.எல், தமிழ் இலக்கியங்கள் கட்டவிழ்ப்பும் கட்டமைப்பும், காவ்யா - 2005, ப.1
2. நாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க, தமிழினி, டிசம்பர் 2012, ப.77
3. மேலதுப.27
4. மேலது ப.17
5. மேலது ப.103
6. மேலது ப.33
7. ஞானமூர்த்தி, தா.ஏ., இலக்கியத்திறனாய்வியல், ஐந்திணை, 2006, ப.69
8. நாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க, தமிழினி, டிசம்பர் 2012, ப.14
9. மேலது ப.81
10. மேலது ப.104
11. மேலது ப.32
12. மேலது ப.33
13. மேலது ப.69
14. மேலது ப.20
15. மேலது ப.31
16. மேலது ப.48
17. மேலது ப.48
18. மேலது ப.92
19. மேலது ப.95
20. மேலது ப.113
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.