தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
50.'வடிகால்' சிறுகதைத் தொகுப்பின் தனித்தன்மைகள்
முனைவர் வாணி அறிவாளன்
கதை, நாடகம், கட்டுரை, கவிதை எனப் பல வடிவங்களில் படைக்கப் பெறுகின்ற இலக்கியங்கள், மனிதகுலத்தின் சிந்தனைகளை நெறிப்படுத்துபவை; வாழ்வை வளப்படுத்துபவை. அவற்றுள் கதை, நாடக வடிவ இலக்கியங்கள், படித்தோர், பாமரர், சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினராலும் விரும்பப் பெறுபவை. கடந்த நூற்றாண்டில் இவ்வகை இலக்கியங்களே, தமிழ்ச் சமுதாயத்தில் வேரோடிக் கிடந்த மூடப் பழக்க வழக்கங்களையும், சமூகக் கொடுமைகளையும் களைந்தெறிந்து, சமூக மறுமலர்ச்சி ஏற்படப் பெரும்பங்காற்றின. இவ்வகைப் படைப்பிலக்கியங்களுள் சிறுகதையானது வார, மாத இதழ்களால் வளர்ச்சி பெற்று, மக்களின் பொழுதை நல்லவழியில் போக்கும் வகையில் என்றும் உதவி வருகின்றது. 'வடிகால்' சிறுகதைத் தொகுப்பு, சிறுகதை உலகத்தற்குப் புதிய வரவு. பொழுதுபோக்கிற்காக விரும்பிப் படிக்கப் பெறும் இச்சிறுகதைகளை, ஆலவிதைகளைப் போன்று, மனித மனங்களுள் நற்சிந்தனைகளை, மாற்றங்களைத் தோற்றுவிக்கும் வகையில் படைப்பது ஒரு கலை. இச்சிறுகதைத் தொகுப்பின் கதாசிரியரான அமுதா பாலகிருஷ்ணன் அவர்களும், அக்கலைநயம் வாய்க்கப் பெற்றவர் என்பதை இச்சிறுகதைத் தொகுப்பு காட்டி நிற்கின்றது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் தனித்தன்மைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
கதாசிரியர் - சிறுகுறிப்பு
'வடிகால்' சிறுகதைத் தொகுப்பின் கதாசிரியரான அமுதா பாலகிருஷ்ணன் நாடறிந்த எழுத்தாளர். கி. பக்கிள் நாடார் - ப. ஜெகஜோதி அம்மாள் இணையரின் திருமகனான தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வீரமாணிக்கம் எனும் சிற்றூரைச் சார்ந்தவர். இவர்தம் சிறுகதைகள், தினத்தந்தி-குடும்ப மலர், ராணி, கவிதை உறவு முதலான வார, மாத இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நூலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்லர். தன்முன்னேற்ற நூல்கள், வியாபார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்கள், நல்வாழ்விற்கு வழிகாட்டும் நூல்கள், பயணக்கட்டுரை நூல்கள் எனப் பன்முகப் படைப்பாற்றல் உடைய எழுத்தாளர்; இவ்வாறு இருபத்தி இரண்டு நூல்களை எழுதியுள்ள இவர், சிறுகதைச் சிற்பி, இலக்கியத் தேனீ, இலக்கியத் தென்றல், செந்தமிழ்ச் செம்மல், தமிழ் இலக்கிய மாமணி உள்ளிட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
சிறந்த தொழிலதிபர்; குறைவான கட்டணத்திற்கு நிறைவான கல்வியைத் தரும் பள்ளிக்கூடம் ஒன்றைத் தம் பெயரில் நிறுவிக் கல்விப்பணி ஆற்றி வருபவர்; அனைத்திற்கும் மேலாகச் சமூகப் பொறுப்புணர்வும், நேர்மறைச் சிந்தனைகளும் கொண்ட நல்ல தமிழர். இத்தகைய நற்குணங்களும், ஆற்றல்களும் கொண்டு தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருகின்ற நூலாசிரியர் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் மட்டுமின்றிப் பின்பற்றுதலுக்கும் உரிய எடுத்துக்காட்டு மனிதர்.
கதைகளின் கருக்கள்
'குத்துவிளக்கு' என்ற தலைப்பில் மங்களகரமாகத் தொடங்கும் இச்சிறுகதை நூலின் அனைத்துக் கதைகளின் களமும் வீட்டின் அகமாகவே அமைந்துள்ளது. நல்ல குடும்பங்களே நல்ல சமூகத்தின் தூண்கள். எனவே தம் கதைகளின் மூலம் ஒரு நல்ல குடும்பத்தை எடுத்துக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டு இச்சிறுகதைகளைப் படைத்தளித்துள்ளார். அதனால் குடும்பப் பிரச்சினைகளே கதைகளின் கருக்கள்; குடும்ப உறுப்பினர்களே கதாபாத்திரங்கள். இந்நூலைப் படித்து முடிக்கும்போது ஒரு குடும்பத் திரைச்சித்திரத்தைப் (சினிமா) பார்த்த நிறைவு ஏற்படுகிறது.
கதைகளின் தலைமை மாந்தர்
ஒவ்வொரு குடும்பத்தையும் தாங்கி நின்று வழி நடத்துபவர்கள் பெண்களே. அதனால் இவர்தம் கதைகளின் கருக்களும் பெண்களைச் சுற்றியே அமைந்துள்ளன. குறிப்பாக, மருமகள் கதாபாத்திரமே பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ளது. மருமகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?, ஒரு குடும்பத்தின் மருமகளின் கடமைகள் என்னென்ன என்பன போன்ற கருக்களை மையமாகக் கொண்டு எழுதப் பெற்றுள்ளன.
சின்னத்திரையில் எந்த சானலைத் (Channel) திறந்தாலும், குறுந்தொடர், நெடுந்தொடர் என்ற பெயரில் பெண்டிரைக் கொடுமையான மனம் கொண்ட வில்லிகளாகவே காட்டிச் சமூகத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில்,பெண்களை வீட்டின் கண்களாக மட்டுமே அனைத்துக் கதைகளிலும் காட்டியுள்ளமை பாராட்டத்தக்கது. இவர்தம் கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள், புதுமைப் பெண்கள் என்ற பெயரிலும், புரட்சிப் பெண்கள் என்ற பெயரிலும் சமூகப் பழக்கவழக்கங்களை, பண்பாட்டை, மண்ணின் அடையாளங்கள் அவமதிப்போர் அல்ல. சென்ற நூற்றாண்டு வரையிலும், அமைதியுடனும், அறிவுடனும், பண்பாடு தவறாமல் குடும்பங்களை ஆற்றுப்படுத்திய தமிழ்ப்பெண்டிர்தான், இவர்தம் கதாநாயகியர். ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த அத்தகைய தமிழ்ப் பெண்டிரை, மீண்டும் தம் கதைகளில் காட்சிப்படுத்துவதன் மூலம், தமிழ்ப் பெண்டிரின் மாண்புகளை தமிழ்ச் சமூகத்திற்கு நினைவூட்டுகிறார். சமூகம் மாறவேண்டும்; நம் நாட்டின் அடையாளமாக உலகமே போற்றிவரும், சமூக விழுமியங்கள் போற்றப் பெற வேண்டும். தமிழ்ப் பெண்டிருக்குரிய இலக்கணம் மாறாமல், பாரதி கண்ட புதுமைப் பெண்களாகத் தமிழ்ப் பெண்டிர் திகழவேண்டும் என்ற ஆசிரியரின் அவா, கதைகளில் பின்னி இழையோடுகிறது.
நேர்மறை உணர்வும், நகைச்சுவை உணர்வும்
படைப்பாளர்தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துபவையே அவர்தம் படைப்புகள். அவ்வகையில் ஆசிரியரின் இந்நூற் சிறுகதைகள் அனைத்தும் இன்பியல் வகையினவாகவே உள்ளன. இச்சிறுகதைகளுள் ஓரிடத்தில் கூட அவநம்பிக்கை அல்லது துன்ப உணர்வைத் தோற்றுவிக்கும் தொடர்களையோ, சொற்களையோ கையாளாத தன்மை அவர்தம் நேர்மறை எண்ணங்களைப் எதிரொலிக்கின்றது. இவ்வாறு நல்ல கருக்களையும் நேர்மறையான முடிவுகளையும் கொண்டு சிறுகதைகள் அனைத்தும் பலாச்சுளைகளாக மணம் வீசுகின்றன.
மேலும் கதைகள் கூறப்பெற்றுள்ள நடை எளிமையாக இருப்பதோடு, நல்ல நகைச்சுவை உணர்வுடனும் எழுதப் பெற்றுள்ளன. அவற்றுள் 'விளக்குமாறு' சிறுகதை, முழுநீளத் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளைப் போன்று, முழுக்கமுழுக்க நகைச்சுவைச் சிறுகதையாக அமைந்துள்ளது. 'இணை' சிறுகதை, படிப்போரின் மனத்தை உருக்குவதாய் அமைந்துள்ளது என்றாலும், நல்ல நகைச்சுவையுடன் தொடங்கப் பெற்றுள்ளது. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இச்சிறுகதையைப் படிக்கும் போது, வாசகனின் மனம், தம்மை அறியாமல் நெகிழும். இத்தொகுப்பிற்கு அணிந்துரை நல்கியுள்ள திரைப்பட இயக்குநர் திரு. விசு அவர்கள் இக்கதையைப் பற்றி,'வயது காரணமா? இல்லேன்னா எனக்கு வந்திருக்கிற வியாதி காரணமான்னு தெரியலை... அமுதா, இந்தக் கதையைப் படிச்சதும், எனது அழுகை நிற்க, நீண்ட நேரம் ஆனது' எனக் கூறியுள்ளமை மேலும் மனதை நெருடுகிறது. வயதான இணையர், யார் இக்கதையை வாசிக்க நேரிட்டாலும், இயக்குநர் விசுவுக்கு உண்டான உணர்வே எழும்.
உளவியல் நோக்கு
இத்தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள், ஆசிரியர்தம் உளவியல் அறிவை வெளிப்படுத்துகின்றன. தவறே செய்யாவிட்டாலும், தன்னை எப்போதும் திட்டும் பெற்றோர், தம் தங்கை, தம்பி என்ன தவறு செய்தாலும் ஏதும் கண்டு கொள்ளாமல் இருப்பதேன்? என எண்ணும் ஒரு மகனின் மனப்போராட்டத்தை வடிகால் என்ற சிறுகதையில் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். தான் தன் பெற்றோருக்கு வடிகாலாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து மனம் நிறைவடைவதாக முடித்திருப்பது அழகு. இச்சிறுகதைத் தலைப்பே, இத்தொகுப்பின் தலைப்பு. இதுபோன்று, மரகதம், மருமகள், சடங்கு முதலான சிறுகதைகளைப் படைத்திருக்கும் பாங்கும், ஆசிரியரின் உளவியல் பாங்கைக் காட்டிநிற்கின்றன. 'பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்னும் பழமொழியை நினைவுபடுத்துமாறு 'பாறாங்கல்' சிறுகதை அமைந்துள்ளது.
சமூக அக்கறை
இத்தொகுப்பின் அனைத்துச் சிறுகதைகளிலும் நல்லதொரு குடும்பம் எவ்வாறு விளங்கவேண்டும் என்பதற்குரிய இலக்கணம், சமூக அக்கறையுடன் குழைத்துத் தாயன்புடன் தரப்பெற்றுள்ளது. 'குழந்தைகளை இலவசத்திற்குக் கை நீட்டப் பழக்கக் கூடாது', 'படித்த இளைஞர்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு பெற்றோர்களைத் தனிமைப்படுத்தலாகாது' என்பன போன்ற இக்காலச் சமூகத்திற்குத் தேவையான நற்கருத்துகளைத் தம் கதைகள் மூலம் வாசகர் மனத்தில் பதியச்செய்துள்ளமை பாராட்டிற்குரியது.
வட்டார வழக்கு
தென்மாவட்டத்தைச் சார்ந்த நூலாசிரியர், சென்னையில் குடியேறிப் பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், தம் வட்டார வழக்கைத் தன் சிறுகதைகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருவது சிறப்பு. அதனால், சிறுகதைகளைப் படிக்கும்போது, அவற்றில் வரும் கதாபாத்திரங்கள், கிராமியத் தோற்றத்துடன் மனத்துள் பிம்பங்களாகத் தோன்றுவதைத் தடுக்க இயலவில்லை. அதனால், நற்கருக்களை உடைய அக்கதைகள், என்றும் மறக்க இயலாத அளவிற்குக் காட்சிகளாக நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பிடித்து விடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
கதாசிரியர், 'நல்ல குடும்பங்கள் உள்ள சமுதாயமே, ஆரோக்கியமான சமுதாயமாக, நற்பேற்றுடன், உலக அரங்கில் ஒளிரமுடியும்' என்ற கருத்துடையவர். அதனால் தமிழ்க் குடும்பங்களின் ஒவ்வொரு உறவுகளும் எங்ஙனம் திகழவேண்டும் என்பதற்கான இலக்கணத்தைக் கதாபாத்திரங்களின் வழிப் படிப்போர் மனத்தில் பதியச் செய்துள்ளார். மொத்தத்தில் இச்சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்து. படைப்புலகில் அரியன சாதித்து வரும் அறிஞர் அமுதா பாலகிருஷ்ணன் மேலும் பல படைப்புகள் படைத்துத் தமிழுக்கு வளமை சேர்க்கட்டும்; சமூகம் பயன்பெறட்டும். சிறுகதை எழுதும் படைப்பாளர் மட்டுமின்றி, எந்த வகைப் படைப்பாளரானாலும் (குறிப்பாகச் சின்னத்திரை, பெரிய திரை முதலான ஊடகங்களில் பங்களிக்கும் படைப்பாளர்கள்) இந்நூலாசிரியர் போன்றே சமூக அக்கறையுடன், படிப்போர் மனத்தில் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில் மட்டுமே படைப்புகளை அளிக்கும் போது, சமுதாயம் நலம்பெறும் என்பது திண்ணம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.