தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
31. புறநானூறு காட்டும் வீரத்தாய்
வி. சசிகலா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
முன்னுரை
பண்டைத் தமிழரின் தமிழ் இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் முன்மொழிவன. தமிழரின் வீரவாழ்க்கை சங்கப் புலவர்களால் பல்வேறு விதமாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்கள் பல வீரர்களின் தனித்த அடையாளத்தைப் பறைச் சாற்றுவதுடன் அவ்வீரர்களின் தாய்மார்கள் வீரர்களின் வீரத்தையும் மிஞ்சும் அளவிற்குச் செயலாற்றியமையைப் பதிவு செய்துள்ளன. இயல்பு நிலையிலும் மீவியல்பு நிலையிலும் புறநானூற்றில் காணலாகும் வீரத்தாய்களை இனம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வீரத்தாய்
ஆடவர் என்று பெயர் படைத்தார் எல்லாம் ஆண்மையுடையவராயிருத்தல் வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. “பிள்ளையைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமை. சீலனாக்குதல் தந்தைக்குக் கடமை. வாள் எடுத்து வீசி வலிய யானையைக் கொன்று வருதல் அப்பிள்ளையின் கடமை” என்று பாடியுள்ளார் பொன்முடியார். மேலும் தமிழ்நாட்டில் பெண்களும் மனத்திண்மையுடைவராய் விளங்கினார்கள். தம் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று விரும்பினார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத்தாயர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்பதனைப் புறநானூறு தன் பாடலின் வழியே கூறிச்செல்கிறது.
“நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன் என்று பலர் கூற,
‘மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலை அறுத்திடுவென், யான்’ எனச் சினைஇ,
கொண்ட வாளோடு படு பிணம் பெயரா
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே” (புறம்: 278)
இப்புறநானூற்றுப் பாடல், வயது முதிர்ந்த ஒரு தாயின் மகன் போர் புரியச் சென்றான். அவன் போரில் வெற்றி பெற்று வருவான் என எண்ணிக் காத்திருந்தாள் அவன் தாய். ஒரு நாள் அவளிடம் சிலர், ‘உன் மகன் பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடினான்’ என்று சொல்லக் கேட்ட அத்தாய் கோபமுற்று எழுந்து ஓர் அரிவாளை எடுத்துக் கொண்டு போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள். என் மகன் பேடியாய்ப் புறங்காட்டி ஓடியது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய மார்பை இவ்வாளால் அறுத்திடுவேன் என்று கூறினாள். போர்க்களத்திலே பிணங்களோடு தலைவேறு, உடல் வேறாய்க் கிடந்த தன் மைந்தனைக் கண்டாள். அவனைச் சேர்த்தெடுத்து அணைத்து ஆனந்தம் கொண்டாள். மகனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் அவன் விழுப்புண் பட்டுக் கிடைந்ததைப் பார்த்தவுடன் பேரானாந்தம் கொண்டாள் என்று பொருளுரைக்கின்றது.
தாயின் இன்பம்
மகன் இறந்தான் என்பதைப் பற்றிக் கவலைக் கொள்ளாது. எப்படி இறந்தான்? என்ற வினாவிற்க்கான பதிலைத் தேடும் வீரஉணர்வுடைய தாயாகத் திகழ்வதை இப்பாடல் புலப்படுத்துவதை அறியலாம்.
“மீன் உண் கொக்கின் துவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத்தூங்கிய சிதரினும் பலவே” (புறம் : 277)
என்ற புறநானூற்றுத் தும்பைத்திணை பாடல் ஒன்று நெடுங்காலம் பிள்ளையில்லா மாது ஒருத்தி முதுமைப்பருவத்தில் ஒரு புதல்வனைப் பெற்றாள். மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அவன் காளைப்பருவம் எய்திய போது நாட்டிலே ஒரு போர் மூள போர்க்களம் செல்ல ஆசைப்பட்டுத் தன் தாயிடம் ஆசி பெற்றுச் சென்றான். போர்க்களத்தில், ஒரு யானையோடு போர் செய்து, இறுதியில் யானையைக் கொன்று தானும் இறந்தான். இச்செய்தியைக் கேட்ட தாய் பிறவியின் பயனைப் பெற்றது போல் பேரின்பம் கொண்டாள் என்று புறநானூறு கூறுகிறது.
“ஈன்ற பொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத்தாய்” (குறள்:69)
என்கிற திருக்குறளை இப்புறநானூற்றுப் பாடலோடு ஒப்பு நோக்கலாம். ஒரு தாய் தன் மகன் இறந்தாலும் கூட அவன் சான்றோனாகவும், வீரனாகவும்தான் இறக்கவேண்டும் என்றும், இது அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரியதாகும் சங்கத் தமிழரின் வாழ்க்கை நெறிமுறையை உணர்ந்தே குறளும் வீரத்தாயின் உணர்வினை படம் பிடித்துக் காட்டியுள்ளது என்றும் மொழிகிறது திருக்குறள்.
வீரத்தாயின் துணிவு
“சிற்றில் நல் தூண்பற்றி நின்மகன்
யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர் களத்தானே” (புறம்: 86)
என்ற வாகைத்திணைக்குரிய ‘காவற்பெண்டிர் பாட்டு’ சிறிய வீட்டில் உள்ள நல்ல துணைப் பற்றிய வண்ணம் உள்ள ‘உன் மகன் எங்கு உள்ளான்’ என ஒருபெண் வினவ, ‘என்மகன் எங்கிருந்தாலும் நான் அறிவேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவாகும். அவன் போர் நிகழும் களத்தில் இருப்பான், அவனைக் காண்பதற்கு அங்குச் செல்’ என்று தன்மகனின் மீது நம்பிக்கை வைத்து ஒரு தாய் கூறுவதாக அமைகின்றது. இப்பாடலில் தாய் தன் வயிற்றைப் ‘புலி கிடந்தக் குகை’ என்று கூறுவது வீரத்தின் அடையாளத்தைப் புலப்படுத்தும் சிறந்த உவமை எனலாம்.
“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதில் மகளிராதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டு பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி
வேல் கைக்கொடுத்து வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!” (புறம்: 279)
என்ற வாகைத்திணைப் பாடலொன்று, மறக்குடியில் பிறந்த ஒரு பெண் முதல் நாள் நடந்தப் போரில் இவளுடைய தந்தை யானையைக் கொன்றுத் தானும் இறந்தான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் இறந்தான். இன்று போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு விருப்பம் கொண்டு இருநாளிலும் போர்புரிந்து இறந்துப்பட்ட தந்தையையும் தலைவனையும் நினைத்து அவள் தயங்காமல் வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போக வேண்டும் என்பதால் எஞ்சி நின்ற தன் சிறிய மகளை அன்போடு அழைத்து வெண்மையான ஆடையை உடுத்தித் தலையைச் சீவிமுடித்து வேலை எடுத்துக் கையிலே கொடுத்து போர்க்களத்தை நோக்கி அனுப்பி வைத்தாள். எனவே, அன்றைய காலத்தில் ஒரு தாய் என்பவள் தன் மைந்தனின் தாய் என்பதை விட ‘வீரத்தாய்’ என்பதிலேயே மகிழ்ச்சி பெற்றுள்ளாள் என்பதைப் பறை சாற்றுகின்றது.
வயிற்றை அறுத்த வீரத்தாய்
ஒருமகன் போர்க்களம் சென்றான். அவன் பகைவர் பலரை வென்றான். அதோடு அல்லன் ஒரு யானையின் மீதும் வேற்படையை வீசினான். அந்த யானை விழுந்துபடாமல் வேலோடு ஓடிவிட்டது. அப்போது வெறுங்கையனாய்த் திரும்பினான் மைந்தன். வீடுவந்து சேர்ந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்ததை அறிந்த அவன் தாய் மிக வருந்தி, இதுவரை யானையைப் போகவிட்டுப் புறங்காட்டித் திரும்பியவன் என் குடியில் எவரும் இல்லை. என்றுமில்லாத வசை இன்று வந்துவிட்டதே என்பதை,
“எம் இல் செய்யாப் பெறும்பழி செய்ய எல்லாக்
காளையை ஈன்ற வயிறே” (புறத்திரட்டு, 1460, சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு)
என்று மனம் நொந்து உரைத்து இவனைப் பெற்றபாழும் வயிற்றைப் பீறி எறிவேன் என்று உரைக்கின்றது. ஒரு தாய்க்குத் தன்மகன் வீரனாக இருக்க வேண்டும் என்பதே பெருவிருப்பம் அவன் கோழையானவன் என்று தெரிந்தவுடன் தான் சுமந்த வயிற்றைக் கூடக் அறுத்திடுவேன் என்று துணிந்து கூறுவது பண்டைத் தாயின் வீரஉணர்வை முன் வைக்கின்றது.
களிறெறிந்த காளை
நால்வகைப் படையும் சுற்றிநின்று போர் புரியும் போர்க்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டுள்ளது. இதனை,
“கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்” (குறள் : 704)
என்கிறார் திருவள்ளுவர். ஒரு வீரன் போர்க்களத்தில் பிளிறிய யானையின் மீது தன் வேலை விட்டெறிய அஃது அடிபட்டு விழுந்தது. அப்பொழுது மற்றொரு யானை அவனைத் தாக்க வந்தது. இன்னொரு வேல் கிடைத்தால் இந்த யானையையும் கொன்றிடலாம் என்று அங்குமிங்கும் பார்த்தான். அந்நிலையில் அவன் மார்பில் தைத்திருந்த வேல் ஒன்றைக் கண்டான். அதுவரையும் போர்வெறியில் தன் மேனியிற் பாய்ந்திருந்த வேலையும் அறியாதிருந்த வீரன், அதை ஆர்வத்தோடு பறித்து இழுத்தான். வேழத்தைக் கொல்ல ஒரு வேல் கிடைத்ததே என்று மகிழ்ந்தான். ஒருவீரன் சாகும் தறுவாயில்கூடப் போரிடவேண்டும் என்ற மனஉறுதியுடன் செயலாற்றியதைப் புறநானுறு கூறுகிறது.
தாயின் உள்ளம்
“வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்றவ்வே
வேந்து உடன்று எறிவான் கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே” (புறம்: 296)
போர்க்களத்திலிருந்து தன் மகன் காலம் தாழ்த்தி வந்தமைக்கான காரணத்தை எண்ணிப் பார்ப்பதாக இப்பாடல் அமைகிறது.
“கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரித்
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே” (புறம்: 295)
என்ற பாடல் கடலின் ஆரவாரம் போன்றது பாசறை, அப்பாசறையில் போர்க்களத்திற்குத் தேவையான படைக்கருவிகள் கூர்மையாகத் தீட்டப்பெற்றன. இவ்வாறு கூர்மை செய்யப்பெற்ற வேலை வீரர்கள் பகைவர்பால் திருப்பினர். தலைவன் ஒருவன் மறவர் தொகுதியை முற்படச் செலுத்தித் தானும் அவர்களோடு எழுந்து போருக்குப் புறப்பட்டான். போர்க்களத்தில் பகைவரைத் தாக்க முயலும் போது படைத்திரளின் இடையில் வெட்டுண்டு உடல் சிதைந்து வேறுபட்டான். புறம் காட்டி ஓடாத கொள்கையை உடைய காளைக்குத் தாயாகிய இவள் சிறப்புக்குரிய தன் மகனின் மறமாண்பு கண்டு அன்பு மேலிட அத்தாயின் வற்றிய முலைகளில் இருந்து பால் ஊறிச்சுரந்தன. எனவே தன் மகனை நினைத்து அத்தாய்க்குப் பெருமையுடன் கூடிய அன்பு பெருகியது என்றுரைக்கின்றது.
“பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறா அது ஓச்சிய சிறுகோல் அஞ்சியோடு
உயவொடு வருந்தும் மனனே இனியே
புகர் நிறம் கொண்ட களிறட்டு ஆனான்
முன்நாள் வீழ்ந்த உரவேர் மகனே
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே”(புறம்: 310)
சிறு பிள்ளையாக இருக்கும் போது கிண்ணத்தில் பாலை ஊற்றிக் கையால் எடுத்து ஊட்டினாலும் குடிக்கமறுத்த மகனை சிறுகோல் கொண்டு அடிப்பது போல மிரட்டியேப் பாலை குடிக்கும்படி செய்துள்ளாள் ஒரு தாய். இத்தகு இளமைக் காலத்தை எண்ணி கவலைப்பட்டு வருந்துகின்ற தாய் பின் தன் மனதை நோக்கி மனமே! என்மகன் முன்பொருநாள் பகைவருடன் வீரப்போர் புரிந்து வீழ்ந்த வீரன் பெற்ற வீரன் இவன் துதிக்கையை உடைய யானையை வீழ்த்தியது மட்டும் அல்லாமல் தன் மார்பில் அம்பு பாய்ந்தது கூட அறியாத வீரனாகக் கேடயத்தின் மீது வீழ்ந்து கிடந்தான். என் இனிய வீரமகன் என்று ஒரு தாய் தன் கணவனையும் தன் மகனையும் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்த பாடலும் ஒரு தாயின் வீரமாண்பினைப் பறைசாற்றுவதாக அமைகிறது.
முடிவுரை
சங்ககாலத்தில் பெண்கள் வீரமுடைய பெண்ணாகவும், வீரப்புதல்வர்களைப் பெற்ற வீரத்தாயாகவும் இருந்துள்ளனர். ஆண்குழந்தை வீரத்தின் அடையாளமாக, முக்கியமாகக் கருதப்பட்டதைப் போல அவர்களுக்கான வீரமும், வீரமரணமும் முக்கியமானதாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வீரமகனைப் பெற்றெடுத்த தாயின் உணர்வுகள் மிகமிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
* பெற்றபோது மகிழ்ந்ததைவிட வீரன் என்ற சொல் கேட்ட போது மகிழ்வதும்,
* மகன் வீரமற்றவன் என்பதைப் பிறர் கூறக்கேட்டுத் தன் மார்பினையே அறுத்தெறிய முயன்ற போக்கும்,
* யானையால் வீரமரணம் அடைந்த தம் மகனைக்கண்டு மனம் கலங்காமல் அச்செயலைத் தனது பிறவிப்பயன் என்று கூறுவதும்,
* வீரமகனைப் பெற்ற வயிற்றைப் ‘புலிக்குகை’ என்று புனைந்துரைப்பதும்,
* தனது சிறிய மகனையும் போருக்கு அனுப்ப முயன்ற வீரவுணர்வும்,
* புறமுதுகிட்டு ஓடும் மரபு சார்ந்தவன் என்மகன் அல்லன் என்கிற மன உறுதியையும்
இப்புறநானூற்றுப்பாடல்கள் தெளிவாகப் புலப்படுத்திச் செல்வதை அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூல்கள்
1. புறநானூறு மூலமும் உரையும் (ஞா. மாணிக்கவாசகன்)
2. தமிழின்பக் கட்டுரைகள் (பேரா ரா. பி. சேதுப்பிள்ளை)
3. புறநானூறு (தொகுதி - 1, 2)
4. தமிழர் நாகரீகமும் பண்பாடும் (அ. தட்சணாமூர்த்தி)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.