தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
32. தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகள்
முனைவர் ந. சதீஷ்குமார்
மேனாள் உதவிப்பேராசிரியர்,
பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, கன்னியாகுமரி.
முன்னுரை
‘தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு’ (1)
எனும் பாடல் வரிகளில் பயின்று வரும் குணம் எனும் சொல் தமிழரின் பண்பட்ட குணநலன்களை அதாவது, பண்பாட்டையே குறிக்கிறது. குணம் - குணநலன்கள், பழக்கம் - பழக்க வழக்கங்கள் பண்பாடாகப் பரிணமிக்கும் போது, அவை வாழ்க்கையோடு இணைந்து வாழ்வியலின் பண்பாட்டுக் கூறுகளாகின்றன. இவ்வாழ்வியல் கூறுகள் வாழ்க்கையோடு ஒன்றிப்போய் காலங்காலமாய்ப் பின்பற்றப்பட்டும், பேணப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.
பண்பாடு
ஈராயிரம் ஆண்டுகள் முற்பட்ட தொன்மை வாய்ந்தது தமிழர் பண்பாடு. பண்டைத்தமிழர் பண்பாட்டின் நிலைக்களனாய், சிகரமாய் வாழ்ந்து சிறந்தவர்கள். அன்றைய வாழ்வியற் பண்பாடு போற்றத்தக்கது மட்டுமல்ல, நம் வாழ்வுக்கு வழிகாட்டியாகவும் கொள்ளத்தக்கது. அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த மண்ணை அதன் இயல்போடு எப்படி நேசித்தார்கள் என்பதையும் அவர்களைச் சுற்றி வாழ்ந்த உறவுகளிடம் எப்படி அன்பு காட்டி வாழ்ந்தார்கள் என்பதையும் சங்க இலக்கியங்கள் நம் கண்முன்னே திரையிட்டுக் காட்டுகின்றன.
“ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதமில்லை;
நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமுமில்லை” (2)
என்ற திரையிசைப் பாடல்வரி, பாரத நாட்டையும், பண்பாட்டையும் பிரிக்கவே முடியாது என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் சான்றோனாக வாழ வேண்டும் என்பதே பண்டையத் தமிழரின் குறிக்கோள். உலகத்தோடு ஒத்துப் பொருந்தி வாழும் பண்புகளால் மனித உறவுகள் பலப்படுத்தப்பட்டு, மண்ணும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையைச் சங்கப்பாடலான புறநானூறு வழி அறிய முடிகிறது.
பண்புடையார் இலக்கணம்
“பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்” (3)
என்ற பண்புடைமை இயலில் (அதி. 100) வள்ளுவர் சான்றாண்மை, ஈகை, அருளுடைமை, விருந்தோம்பல், தனக்கென வாழாமை, பிறருக்கென வாழ்தல், பொல்லாங்கு செய்யாமை ஆகிய குணங்களை உடையவரே பண்பாளர் என்கிறார். மேலும், பண்புடையார் பெற்ற பெருஞ்செல்வம், மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் (4) என பண்பில்லாதவர் குணங்களையும் வரிசைப்படுத்துகிறார்.
கற்பு
தமிழர் வாழ்வில் தனிமனித ஒழுக்கத்தைக் கட்டிக்காக்க ‘கற்பு’ எனும் உயர்ந்த பண்பாட்டைத் தமிழன் காலம்காலமாய் பின்பற்றி வந்துள்ளமையைச் சங்க இலக்கியங்களும், தமிழ் இலக்கண நூல்களும் கூறுகின்றன. திருவள்ளுவர் திருக்குறளில் கற்பியல் என்ற தனி இயலையே வகுத்துள்ளார் பாரதியார்,
“கற்புநிலை என்று பேசவந்தால் - அதை
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்” (5)
என்று ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது கற்பு என்கிறார். ஒருவனுக்கு ஒருத்தி என்றும் உயர்ந்த பண்பாட்டை விளக்க வந்ததே கற்புநெறி! உண்மைக் காதல் ஒருமுறை மட்டுமே உயிரினங்களின் மனதில் தோன்றும். அக்காதல் காலங்களை வெல்லும் காவியக்காதல் அது தனது உண்மைக்காதல் ஈடேற உயிரையும் மாய்த்துக்கொள்ளும் துய்மையான காதல். இதனை காலங்காலமாய் தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் வழி நாம் அறியலாம். இதனையே பாரதியார்,
“காதல் காதல் காதல் காதல் போயின்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்” (6)
என்கிறார்.
ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையான சிலப்பதிகாரம் கற்புக்கரசி என்று தமிழ்க்கூறும் நல்லுலகால் போற்றப்படும் கண்ணகியின் வாழ்க்கையைக் கூறுகிறது.“கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்” என்பது அவ்விலக்கியம் சுட்டிக்காட்டும் உண்மை.
“இறைவன் தொழாள் கணவன் தொழுதெழுவாள்
பெய்யன பெய்யும் மழை” (7)
எனும் திருக்குறள் பாடல்வரி கற்புடைய பெண்டிரின் சொல்வன்மையைக் கூறுகிறது.
குடும்பம்
குடும்பம் என்ற அமைப்பு வெளிநாடுகளில் இருப்பதைப் போலில்லாமல், இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வமானது. உண்மையான அன்புடன் கலந்த நெருக்கமான அடித்தளங்களைக் கொண்டது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை என குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் குடும்ப அங்கத்தினர் எல்லோரும் ஓடிச்சென்று உதவுகின்றனர். விழாக்கள், நல்லநாள் நிகழ்வுகள், இறப்பு, இழப்பு என எல்லாவற்றையும் உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் பங்குப்போட்டுக் கொள்பவன் தமிழன்.
பிறன்மனை நோக்காமை
வள்ளுவர் இதை‘பிறன் மனை நோக்கா பேராண்மை’ என்கிறார். பொதுவாக, தமிழ்ச்சமூகத்தில் தவறு செய்பவனை ‘ஆண்மை இல்லாதவன்’ (அடக்கி ஆளுமை தன்மை) என்று குறைகூறும் பழக்கம் உள்ளது. ஆனால், இங்கு பிறன் மனைவியை விரும்பாதத் தன்மையை வள்ளுவர் ‘பேராண்மை’ என்கிறார்.
செய்நன்றி மறத்தல்
“நன்றி மறப்பது நன்றன்றுநன்றல்லது
அன்றே மறப்பது நன்று” (8)
என்று திருவள்ளுவரும், நன்றி மறவேல் (9) என ஔவையாரும் பிறர் தனக்குச் செய்த உதவியை ஒருநாளும் மறக்கக் கூடாது என்பதற்கு சிறுவயதிலேயே நீதிக்கதைகளும் (10) கூறப்படுகிறது. ஒருவர் செய்த உதவியை எளிதில் மறந்து விடும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழன் தனது இழகிய மனம் மற்றும் இரத்தத்தோடு கலந்த, பலனை எதிர்பாராது உதவிசெய்யும் உன்னதமான, உதாரத்துவமான குணத்தின் காரணமாக பிறருக்கு உதவி செய்தலைத் தன் தலையாயப் பண்பாக, பண்பாடாகக் கொண்டிருக்கிறான். கைமாறு கருதாமல் செய்யப்பட்ட உதவியைப் பெற்றவர்கள் பல நேரங்களில் செய்த நன்றியை மறந்து தீமை செய்துவிடுகிறார்கள். இரக்கக் குணத்திற்குப் பதிலாக அரக்கக் குணத்தைக் காட்டி விடுகிறார்கள். இதனால், நல்லவர்களும் கூட இக்கட்டான நேரத்தில் தக்க உதவிகள் கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள்.
சான்றாண்மை
கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருந்து உயிர் துறந்து உண்மையான நட்புக்கு இலக்கணமானவர் பிசிராந்தையார். ஒருவன் கவலையின்றி வாழ்ந்தால் நரையின்றி, நெடுநாள் இளமையோடு வாழலாம். அதற்கு அவனுடைய மனைவி, மக்கள் நல்ல குணநலன்களில் சிறந்து, அறிவுடையவர்களாய் இருத்தல் வேண்டும். அவன் வாழும் நாட்டின் மன்னன் முறை தவறாது மக்களைப் பாதுகாத்தல் வேண்டும். அவன் வாழும் ஊரில் நற்குணத்தால், பரிவுடையவர்களாய் மனம்போன போக்கில் வாழாது, கட்டுப்பாடோடு வாழும் சான்றோர் பலர் வாழ்தல் வேண்டும். நற்பண்பும், சான்றாண்மையும் உடையோர்கள் பலர் வாழ்வதாலேயே இவ்வுலகம் அழியாது நிலைப்பெற்று வாழ்கின்றது என்பதைத் திருவள்ளுவரும்,
“சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை” (11)
என்கிறார்.
அன்பு
“அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” (12)
என்கிறார் திருவள்ளுவர். அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் பாவிப்பவன் அவ்வுயிர்களுக்குத் தீங்கு செய்யத் துணியமாட்டான். பிற உயிர்களைக் கொல்வது எவ்வளவு பாவமோ அதுபோல் பிற உயிர் பசிக்கப் பார்த்திருப்பதும் பாவம் என்கிறார் வள்ளல் பெருமான். அனைத்துயிர்களிலும் ஆன்மா இருக்கிறது. எனவே, அனைத்துயிர்களையும் தன்னுயிர் போல் பாவிக்க வேண்டும். அனைத்துயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணி அவ்வுயிர்களின் துயர் துடைப்பவன் “ஜீவகாருண்யம்” பொருந்தியவன் ஆகின்றான். இயற்கையோடு ஒன்றி வாழ்வதோடு சுற்றியுள்ள உறவுகளையும் நேசித்து மதித்து அன்புகாட்டி வாழந்தால் இறவாப் பெருவாழ்வு வாழமுடியும் என்கிறார் வள்ளல் பெருமான். ஏழைமக்கள் பசியினால் வாடி, உடல் சோர்ந்து, மனம் சோர்ந்து அவர்கள் உயிர் பிரியும் தருணம் ஏற்படுவதைக்கண்டு மனம் பதைக்கிறார். நமக்கு உணவு தரக்கூடிய பயிர்கள் தளதளவென்று வளராமல் வாடிவதங்கி இருப்பதைக் கண்டு வாடுகிறார். இதனையே,
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” (13)
என்கிறார்.
ஈகை
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” (14)
என்பது பொய்யாமொழிப்புலவர் கூற்று. நாம் இன்று அனுபவிக்கும் பதவி, பட்டம், வசதிகள் யாவும் முன்பு செய்த வினைப்பயனால் கிடைத்ததாகும். இவ்வுலகில் அறம்,பொருள், இன்பம் என்று சொல்லப்படும் மூன்று உறுதிப்பொருளின் வழியில் வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நமது செல்வம் உதவாமல் போனால் நாம் நம்மையே பாதுகாவாதவர்கள் ஆவோம் என்பதைப் புறநானூற்றுப் புலவன் உணர்ந்து கூறியுள்ளான்.
“அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றா மைந்நிற் போற்றாமையே” (15)
எனும் பாடல் வரிகள், தர்மம் தலைகாக்கும் என்பதையும், பகுத்துண்டு வாழும் வாழ்க்கையே நல்ல வாழ்க்கை என்பதையும் உணர்த்துகின்றன. ஒருவன் தன் தேவைக்குப் போக மிகுந்தவற்றைப் பிறர்க்கு ஈந்துவக்கும் இன்பமே இன்பம். மன்னனுக்கும், காட்டு வேடனுக்கும் அடிப்படைத் தேவைகள் யாவும்ஒன்றுதான். பின் அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுதான் என்ன? ஈதல் ஒன்றுதான். ஈயாத மன்னனுக்கு நாகரீகம் ஏது? தேடிய செல்வம் அனைத்தையும் தானே நுகரவேண்டும் என்று ஒருவன் நினைத்தால் நினைத்த கணமே அவனுக்கும், செல்வத்திற்கும் கேடு வந்துவிடும் என்பதை,
“உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே” (16)
என்ற தமிழ்ச்செய்யுள் விளக்கிக் காட்டும்.
முடிவுரை
இன்றைக்கு கற்பு என்பது சொற்களில் மட்டுமே உள்ள வார்த்தை ஜாலமாகி விட்டது. தன்மானம் இழந்து தவிக்கிறான் தமிழன். பிறன் மனையை மட்டுமே விரும்பும் பெண்மகனாய் போய்விட்டான் தமிழன். கண்ணில்லாதவன் கையேந்தும்போது கண்களிருந்தும் குருடனாய் போனான் தமிழன். தின்ற சோற்றில்மண் வாரிப்போடும் நன்றி மறந்த இனமாகிக் கொண்டிருக்கிறான் தமிழன். உலகிலேயே உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்பட்ட தமிழ்க் கூட்டுக்குடும்பம் என்ற கட்டமைப்பு இன்றைக்கு உடைந்து சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு”
என்ற பாரதிதாசனாரின் பாடல் வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். தமிழன் இழந்து கொண்டிருக்கிற இப்பண்பாட்டுக் கோலங்களை எல்லாம் மீட்டெடுத்துப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய மாபெரும் பொறுப்பு இன்றைய தமிழர்களாகிய நமக்குண்டு!
அடிக்குறிப்புகள்
1. தமிழன் இதயம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள், பாடல்வரி 1, 2;
2. கவிஞர் வைரமுத்து, ராஜா சின்ன ரோஜா திரையிசைப்பாடல் வரிகள்
3. திருக்குறள் 991
4. திருக்குறள் 997, 1000
5. தனிப்பாடல்கள் - சமூகம் - பெண்கள் விடுதலைக்கும்மி - பாரதியார் பாடல்கள்
6. பாரதியார் பாடல்கள் - குயில்பாட்டு
7. திருக்குறள் 55
8. திருக்குறள் 108
9. ஆத்திச்சூடி - ஔவையார் பாடல்கள், வரி 8
10. நீதிக்கதைகள் - புறாவும் வேடனும், சிங்கமும் எலியும்
11. திருக்குறள் 990
12. திருக்குறள் 72
13. திருவருட்பா,வள்ளலார் பாடல்கள் வரி 3471
14. திருக்குறள் 231
15. புறுநானூற்றுப் பாடல் வரிகள் 21 - 30
16. புறுநானூற்றுப் பாடல் வரிகள் 181 - 190
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.