தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
56.பட்டினத்தாரின் திருவேகம்ப மாலையில் நிலையாமைச் சிந்தனைகள்
முனைவர் ப. சு. செல்வமீனா
உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம்,
அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி
முன்னுரை
பதினெண் சித்தர்களுள் பட்டினத்தார் தலைச்சிறந்த தகைமையாளர். இவர் தமிழ் உலகிற்குப் படைத்தளித்த நூல்களுள் ‘திருவேகம்பமாலை’ காஞ்சி மாநகரத்தில் உள்ள ஏகம்பம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பநாதனைப் [சிவபெருமானை] புகழ்ந்து பாடியது. இந்நூல் 41 பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் சித்திரிக்கப்பெற்றுள்ள நிலையாமைச் சிந்தனைகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நிலையாமை
உலக உயிர்கள் நிலையற்றவை. உலகத்துத் தோன்றும் எவ்வுயிரும் நிலைபெற்றுத் தங்குவதில்லை. நிலையாமை என்பதற்கு “அநித்தியம், உறுதியின்மை” என்று பொருள் (பி.இராமனாதன், கழகத்தமிழ் அகராதி, ப.610) ‘Instability’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லே நிலையாமை என்பதாகும். தமிழ் இலக்கியங்கள் அக, புற மற்றும் அறக்கருத்துகளோடு நிலையாமைச் சிந்தனைகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தன. நிலையாமையைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,
“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள்.புறத்.76)
என்று கூறுவர்.
இதனால் இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற தொல்காப்பியரின் கருத்தை உணர முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணரின் கருத்துப்படி நிலையாமை மூவகை என்பதனை, “காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம். அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது. நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என இவற்றுள்” என்ற கூற்றினால் அறிய முடிகிறது [தொல்.பொருள்.இளம் பூரணாரின் உரை, பக்.125-126]
வள்ளுவர் நிலையில்லாதவற்றை நிலையானதாகக் கருதுவதனைப் ‘புல்லறிவாண்மை’ என்று கூறுவதனை,
“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மைக் கடை” (திருக்குறள்: 331)
என்ற குறள் விளக்குகிறது.
இளமை நிலையாமை
மனித வாழ்க்கையில் வசந்த காலமாகக் கருதப்படுவது இளமைப் பருவமாகும். எப்பருவமும் நிலைத்து நிற்பதில்லை. இளமை நிலையாமையைத் தொல்காப்பியர்,
“கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை” (தொல். பொருள்.புறத்.77)
என்று கூறியுள்ளார். இத்துறைக்கு ‘முதுகாஞ்சி ’ என்று பெயர்.
திருவேகம்பமாலையில் பட்டினத்தார் காஞ்சியுள் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே, இந்த உலகத்தில் தோன்றி பேரின்பத்தை மறந்து, நிலையாமையை உடைய காம இன்பத்தில் மயங்கி, அதனை அனுவிப்பதன் பொருட்டு, மாதிரிடையே கிடந்து வருந்தி, பொருளைத் தேடி அவர்களுக்கு அளித்துப் பின் முதுமை வந்து சேர்வதால் தடுமாற்றம் அடைந்து நோய் மிகப் பெற்று வாழ்நாள் வீணாகப் போனதனை எண்ணி வருந்தியதனை,
“பிறந்து மண் மீதில் பிணியே
குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற் றின்பத்தின் மேல்மய
லாகிப்புன் மாதருக்குள்
பறந்து உழன் றேதடு மாறிப் பொன்
தேடியப் பாவையர்க் கீந்து
இறந்திட வோபணித் தாயிறை
வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை பா.30)
என்ற பாடலில் சுட்டியுள்ளார்.
மேற்குறித்த பாடலுள் இளமைப் பருவம் எப்பயனும் இன்றி வீணேக் கழிந்து முதுமைப் பருவம் எய்திற்று என்ற கருத்தினால் இளமை நிலையாமை பற்றிய சிந்தனை கூறப்பெற்றது.
செல்வம் நிலையாமை
நிலையாமை வகையுள் செல்வ நிலையாமையும் ஒன்று “உயிரைப் போலவே செல்வமும் நிலையில்லாதது. கூத்து அரங்கத்துக்குள் ஒருவர் ஒருவராக உள்ளே நுழைவது போல் செல்வம் வருகிறது. ஆனால் கூத்து முடிந்து வெளியேறும் மக்களைப் போல் எல்லாமே ஒட்டு மொத்தமாக வெளியேறி விடுகிறது” (கவிஞர் குடந்தையான், தமிழர் பண்பாடு அன்றும் - இன்றும் ப. 171)
“செல்வம், சகடக்கால் போல்வரும்” என்று நாலடியார் குறிப்பிடுகிறது. சக்கரம் நிலையில்லாது சுழலுவது போல செல்வமும் நிலையில்லாதது.
இவ்வுலகில் பிறக்கும் போது எவரும் செல்வத்துடன் பிறப்பதில்லை. வறுமையுள் பிறந்து பெரிதும் முயன்று ஈட்டிய செல்வத்தை இறக்கும் போதும் எவரும் கொண்டு செல்வதில்லை பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உண்டானதாக எண்ணப்படும் செல்வம் நிலையற்றது என்பதனை,
“பிறக்கும் பொழுது கொடுவந்தது
இல்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவது
இல்லை” (திருவேகம்பமாலை- 7: 1- 4)
என்ற பாடலடிகளில் பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். பரந்துபட்ட உலகில் பொன்னைச் சிறந்த பொருள் என்று எண்ணித் தேடுபவர் பலர் இருக்கின்றதனை,
“பொன்னை நினைத்து வெகுவாகத்
தேடுவர்” (திருவேகம்பமாலை- 38:1- 2)
என்ற அடிகள் மெய்ப்பிக்கின்றன.
மேற்குறித்த பாடல்களால் செல்வம் நிலையற்றது இருக்கின்ற காலத்தில் இரப்பார்க்கு ஈவதும் இறையை நினைப்பதுமே நிரந்தரமானது என்பது உணரப்படுகிறது.
யாக்கை நிலையாமை
நிலையாமைக் கூறுகளுள் யாக்கை நிலையாமையும் ஒன்று. உலகத்தில் தோன்றிய உயிர் இறந்துபடும் என்பதே உறுதி, யாக்கை நிலையாமையை,
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”(திருக்குறள்: 339)
என்று வள்ளுவர் சுட்டுவர். “உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு என்பது முட்டை ஓட்டுக்கும் குஞ்சுக்கும் உள்ள உறவைப் போன்றது” (கவிஞர் குடந்தையான், தமிழர் பண்பாடு அன்றும் - இன்றும் ப.171) உடம்பைத் தனியாக விட்டு விட்டு உயிர்ப்பறவை பறந்தோடி விடும். இதனை,
“குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு” (திருக்குறள் : 338)
என்று குறள் கூறுகிறது.
திருவேகம்பமாலை, “பொய்யான உடலைப் பாதுகாக்கும் பொருட்டு உணவு தேடும் கவலை பெரிது” (8) என்று சுட்டுகிறது. பொய்யான உடல் நரிகளுக்கோ, கழுகுகள், பருந்துகள் முதலியவற்றுக்கோ, கொடிய நாய்களுக்கோ தீயினுக்கோ இரையாகப் போவதனைப் பட்டினத்தார்,
“... ... ... ... ... தமியேன் உடலம்
... ... ... ... ... நரிக்கோ கழுகு பருந்தினுக்
... ... ... ... ... கோ வெய்ய நாய் தனக்கோ
எரிக்கோ இரை” (திருவேகம்பமாலை : 11:4- 7)
என்று குறிப்பிட்டுள்ளார். உடல், எப்போதும் நீங்காத அழுக்குடைய உடல்; பொய்யே நிரம்பியுள்ள கொட்டில்; தசையினால் மூடப்பட்டுள்ள பல துளைகளையுடைய துருத்தி; ஓயாமல் சோற்றை இட்டு வைக்கும் தோலால் இயன்ற பை; கூறுவதற்கு அரிய காற்றை அடைத்து வைத்த பசுமண் பாத்திரம் என்று பட்டினத்தார் இழித்துக் கூறுவதனை,
“ஊற்றைச் சரீரத்தை ஆபாசக்
கொட்டிலை ஊன் பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடும்
தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற
பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்துவிட் டேனிறை
வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை : பா.எ. 27)
என்ற பாடல் செப்புகிறது.
நாள்தோறும் முயன்று சோறும் கறியுமான உணவை நிரப்பிப் பேணி வருகின்ற பசுமண் பாண்டம் போன்றதும், நரிகள் இறுதியில் உண்ணக் கட்டிவைத்த சோற்று மூட்டை போன்றதும் ஆன தீய நாற்றம் வீசுகின்ற புல்லிய இந்தவுடல், மங்கையரின் மலமும், செந்தீரும் கழிகின்ற அல்குல் என்ற குழியிலே விழுந்து அழியாதபடி கரையேறிவிடும்படியாக அருள் செய்ய வேண்டியதனை,
“நாறும் உடலை நரிப்பொதி
சோற்றினை நான் தினமும்
சோறும் கறியும் நிரப்பிய
பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமும்
சோரும் குழியில் விழாது
ஏறும்படியருள் வாய் இறை
வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை : பா.எ.34)
என்ற பாடல் வழிப் பட்டினத்தார் விளம்பியுள்ளார். உடல் நன்றாக இருக்கும் காலத்திலேயே அறச்செயலைச் செய்தல் இறையின்பத்தை அடைதல் இன்றியமையாதவை என்பது புலனாகிறது.
பேரின்ப வாழ்வு
உலக உயிர்கள் நிலையாமைத் தத்துவத்தை உணர்தல் சாலச் சிறந்தது.
“பிறந்த - தோன்றிய - உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே ஒருநாள் அழிந்து போய்விடும் என்பது இந்துமதச் சிந்தாந்தம்” (கவிஞர் குடந்தையான், தமிழர் பண்பாடு அன்றும் - இன்றும் ப.171) இக்கூற்றிற்கேற்ப நிலையாமையை உணர்ந்து பேரின்ப வாழ்விற்குச் செல்வதற்குரிய வழிகளைப் பின்பற்ற வேண்டும். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை எவ்வளவு குறுகிய காலமோ அவ்வளவு குறுகிய காலமே மனித வாழ்க்கை அக்குறுகிய காலத்திற்குள் இறையை அடைதற்குரிய செயல்களைச் செய்தல் வேண்டும்.
இறையருள் கிடைப்பதற்காக இவ்வுலக வாழ்வை வெறுத்து, ஆசையை ஒழித்து, மாறுபாடான குணங்களை அடக்கி வாழவேண்டும் என்பதனைப் பட்டினத்தார்,
“பேதங் குணம் அற்றுப் பேராசை
தான் அற்றுப் பின்முன் அற்றுக்
காது காரணங் களும் அற்று
ஆனந்தக் காட்சியிலே
ஏதம் களைந்து இருப் பேனிறை
வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை: 31:3 - 8)
என்னும் அடிகளில் சித்திரித்துள்ளார்.
இவ்வுலகில் வாழ்பவர் பலர் எல்லாவற்றையும் அறிந்திருந்தும் ஊழ்வினை காரணமாக அறிவு மயக்கம் கொண்டு மெய்ம்மையை உணராது, யான், எனது என்பது முதலிய சொற்களைச் சொல்லி மெய்ந்நூல்களுடன் மாறுபட்டுப் பின் எல்லாம் சிவன் செயலே என்று தெளிவர் [பா. 37] பிறவியை வெறுத்து தன்னைக் காக்கும்படி பட்டினத்தார் வேண்டுவதனை,
“இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
என்சேய் வேன்கச்சி ஏகம்ப நாதனே” (திருவேகம்பமாலை- 41:7- 8)
என்னும் அடிகள் விளக்குகின்றன.
முடிவுரை
பதினெண் சித்தர்களுள் பட்டினத்தாரும் ஒருவர். சித்தர்களின் முக்கியக் குறிக்கோள்களான உலக நிலையாமை, இறையருளே உண்மை என்பதற்கேற்பப் பட்டினத்தார் திருவேகம்பமாலையில் அவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இதில் இளமை, செல்வம், யாக்கை நிலையாமைகளை உணர்ந்து, வாழும் காலங்களில் இரப்பவர்க்கு ஈவதும் அறச்செயல்களைக் காலந்தாழ்த்தாமல் இயற்றுவதும் இறையின் இன்றியமையாமையை உணர்வதும் பட்டினத்தாரின் நிலையாமை குறித்த சிந்தனைகளாய் இருந்ததனை ஆயும் வழி அறிதற்கிடனாகிறது.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.