பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
56. மேடு - பள்ளம்
நிலத்தில் பள்ளம் மேடு என்பது இயற்கையாகவும் செயற்கையாகவும் அமைகின்றது. மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், எரிகல் விழுதல் ஆகிய இயற்கைச் சீற்றங்களாலும், மாற்றங்களாலும் பூமியில் பள்ளங்களோ, மேடுகளோ ஏற்படுகின்றன. மனிதன் தனக்கு ஏதாவது தேவையெனில் நிலத்தைத் தோண்டி மேட்டைப் பள்ளமாகவும் பள்ளத்தை மேடாகவும் மாற்றுகின்றான். இது காலங்காலமாக உலகில் நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும். இம்மேடுகளையும், பள்ளங்களையும் நம் முன்னோர்கள் பல்வேறுவிதமான பண்பாட்டு நெறிகளை விளக்கிடப் பயன்படுத்தியுள்ளனர். இப்பழமொழிகள் நம் வாழ்க்கைக்குப் பல்வேறு வகையில் உதவும் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றன.
மேடு பள்ளம்
வாழ்வில் பல்வேறுவிதமான ஏற்றங்கள் உயர்வுகள், முன்னேற்றங்கள் வருவதை மேடு என்று குறிப்பாகக் கூறுவர். உயரத்தில் ஏறும் போது வாழ்வில் முன்னேறுகிறான் என்று குறிப்பிடுவர். வாழ்க்கையில் ஏதோ ஒருநிலையிலோ அல்லது ஊழின் காரணமாகவோ ஒருவர் கீழ்நிலையை அடையும் போது, அவனைப் பார்க்கும் உறவினர்களோ, மற்றவர்களோ, ‘‘அவனப் பாரு அதல பாதாளத்துக்குள்ள விழுந்து விட்டான்” என்று கூறுவர்.
நெருங்கிய உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்தால் வாழ்வில் நிலைகுலைந்து கீழ்நிலையை அடைந்தவனைப் பார்த்து,
‘‘பள்ளத்துக்குள்ள அவன் விழுந்து விட்டான். விழுந்துவிட்ட அவனை நாமதான காப்பாத்தணும். அத விட்டுட்டு நாமளே வேடிக்கை பார்க்கலாமா?” என்று கூறி அவனுக்கு உதவ முன்வருவர்.
சிலர் வாழ்வில் துன்பம் வந்த பொழுது மிகவும் வருந்திச் சோர்ந்து விடுவர். அவர்களைப் பார்க்கும் நண்பர்கள், ‘‘அட ஏம்பா இப்படிச் சோர்ந்து போயி கவலையோட ஒக்காந்துட்ட…கவலைப் படாதப்பா… பள்ளம் மேடுங்கறது வாழ்க்கையில இயல்புப்பா... அதப் புரிஞ்சுக்கோ” என்று ஆறுதல் கூறுவர்.
இன்னும் சிலர் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பர். அவர்களைப் பார்த்து, ‘‘என்னப்பா ஏன் இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருக்குறே…கவலைப் படாதப்பா…”என்று கூறினால் அதற்கு அவர்,
“ஒண்ணு மேட்டுக்கு இழுத்தா
இன்னொண்ணு பள்ளத்துக்கு இழுக்குது”
“மேடுன்னு இருந்தா பள்ளம்னு ஒண்ணும் இருக்கத்தான் செய்யும்”
என்று கூறுவார்.
இப்பழமொழி ஒரு வழியில உயர்ந்தால், இன்னொரு வழியில் தாழ்வு வந்து விடுகிறது. ஒருபக்கம் உயர்ந்தால் மற்றொரு பக்கம் வாழ்வில் தாழ்வு வருகின்றது என்று வாழ்வில் ஏற்படும் துன்பத்தை எடுத்துரைக்கின்றது.
வாழ்வில் இன்பம் துன்பம் ஏற்படுவது இயற்கை. அவற்றைப் பெரிதுபடுத்தாது, முன்னேற்றப் பாதையில் கவனத்தை வைத்து முன்னேற வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை நமக்கு அறிவுறுத்துகிறது. இன்பமும் துன்பமும் நாணயத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் போன்றது. இவ்வின்பமும் துன்பமும் நிரந்தரமானது கிடையாது. இவை தற்காலிகநிலைதான். அவை சிறிது காலம் தான். அதனால் மேடாகிய இன்பத்தையும், பள்ளமாகிய துன்பத்தையும் சமமாகக் கருதி வாழவேண்டும். அப்போதுதான் வாழ்வு சிறக்கும். இல்லையெனில் மனம் சலனப்பட்டு வாழ்க்கையில் துன்பங்கள் நேரிடும். இதனையே இப்பழமொழிகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
எல்லோரது வாழ்விலும் இத்தகைய நிலையை நாம் பார்க்கலாம். சிலர் வெளிப்படையாகக் கூறுவர். சிலர் கூறமாட்டார்கள். இப்பழமொழியுடன்.
‘‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்”
என்ற கண்ணதாசனின் கவிதை வரிகளும் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.