என் கூடவே இருந்தான்; என்னுடனே உண்டான்; உறங்கினான். கடைசியில எனக்கே உலை வச்சுட்டான்… இந்த மாதிரிப் புலம்பலை பலரும் புலம்பிக்கிட்டே இருக்கறாங்க… கூட இருந்தே குழிபறிக்கின்ற துரோகம் இன்றைக்குப் புதுசா தோன்றியது கிடையாதுங்க… அது அந்தக் காலந்திலிருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது…
இத்தகைய துரோகிகளை நாம் சட்டென்று அடையாளம் காண முடிவதில்லை. ஏனென்றால் இருட்டறையில் நாம் சிக்கிக் கொள்ளும்போதுதான் பூனையின் நகங்கள் எவ்வளவு நீளம் என்பது நமக்குத் தெரிகிறது. பூனையைப் போன்ற பலர் நேரம் வரும் வரை வாலைச் சுருட்டவும், காலம் கனிந்தால் பாலைக் குடிக்கவும், உறவு கசந்தால் தனக்குப் பால் வார்த்த ஆளின் கதையையே முடிக்கவும் செய்வார்கள். நம்பிக் கெடுவதும், நம்பிக்கை இன்மையால் வாழ்வதும் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
துரோகிகள் புனையும் போலி வேடங்கள் உண்மையைக் காட்டிலும் படு கவர்ச்சியாக இருக்கும். அதனால்தான் நண்பர்களைப் போன்று இருந்து நமக்கு உலை வைக்கும் நண்பரின் துரோகமும் நமக்குத் தெரியாமல் போகிறது. வள்ளுவர் தெரியாமாலா, “மக்களைப் போல்வர் கயவர்” அப்படின்னு சொன்னார். சாதாரணமாகத்தான் துரோகிகள் இருப்பாங்க.. அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் துரோகத்திலிருந்து தப்பிக்க வேண்டும்… நட்பென்ற துரோகத்ததால் வீழ்த்தப்பட்டவர்தான் ஜூலியஸ் ஸீஸர். அவர் ரோமாபுரியை வல்லரசாக உருவாக்கியவர் அவர் பல சீர்திருத்தங்களை நிர்வாகத்தில் செய்து ரோம் சாம்ராஜ்ஜியத்தை உலகில் புகழடையச் செய்தவர்.
அரசு அதிகாரத்திற்கு அடையாளமாக 2000 ஆண்டுகள் நீடித்த ஒரு பெயர் சீசர் என்பதாகும். பண்டைக் காலத்தில், சீசர் எனும் குடிவழியைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர், ரோமப் பேரரசை ஆண்டனர். இவர்களுக்கு முன்னோடியானவர், ஜுலியஸ் சீசர். அவருக்குப் பேரரசர் என்ற பட்டம் இல்லை. இருப்பினும், தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் விரிந்த நிலப்பரப்பைத் தம் உறுதியான ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார். அதன் மூலம் ரோம் பேரரசுக்கு வலுவான அதிகாரத்தை அவர்தாம் முதலில் உண்டாக்கினார். இவருக்குப் பின்பு, அகஸ்டஸ் என்ற பட்டத்துடன் ஆண்ட ஆக்டோவியன், டைபீரியஸ் (Tiberius) ஆகியோர் பேரரசிற்குப் புகழைத் தேடித்தந்தனர். ஆகையால் சீசர் என்ற பெயரை கெய்சர் என ஜெர்மன் பேரரசரும், ஜார் என ரஷியப் பேரரசரும் 20ஆம் நூற்றாண்டில் தங்கள் பட்டங்களாகக் கொண்டிருந்தனர்.
ஜுலியஸ் சீசர் ரோம் நகரில் கி.மு. 100-ஆம் ஆண்டில் ஜுலை மாதம் 13-ஆம் நாள் பிறந்தார். இவருக்கும் இவரது தந்தைக்கும் ஒரே பெயர்: கேயஸ் ஜுலியஸ் சீசர் என்பதே அப்பெயராகும். அவரின் தாயின் பெயர், அவ்ரேலியா கொட்டா. இவருடைய முன்னோர்களில் ஒருவர் அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறந்தார். அதைக் குறிக்கும் சிசேரியன் என்பதை ஒட்டிய சீசர், அவருடைய குடும்பத்திற்குப் பொதுப்பெயர் ஆயிற்று எனப் பிளினி எனும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஜுலியஸ் சீசருடைய காலத்தில் ரோமில் இரண்டு பிரிவினரிடையே மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. செனட் சபைக்கு ஆதரவான பழமைவாதிகள், செல்வம் மிக்கவர்களுக்கு ஆதரவாளர்கள். எளிய வெகுமக்களின் தலைவர்கள் அவர்களை எதிர்த்தனர். எளியவர்களுக்குப் பொதுச் சபைகள் ஆதரவு தந்தன. சீசரின் உறவினரான மரியஸ் வெகுமக்களின் தலைவர். அவருக்கும், செனட் சபையின் ஆதரவு பெற்ற சுல்லாவுக்கும் மோதல் ஏற்பட்டது. அது உள்நாட்டுப் போராக வளர்ந்தது. இறுதியில் வெற்றிபெற்ற சுல்லா, தன்னைச் சர்வாதிகாரியாக நியமித்துக் கொண்டார். மரியஸின் ஆதரவாளர்களைக் கொன்றார். அவர்களுள் சிலரை நாடு கடத்தினார். இந்தக் கடுமையான நடிவடிக்கை, சீசர் மீதும் பாய்வதற்கு இருந்தது. இருப்பினும், சுல்லாவின் ஆதரவாளர் சிலரின் பரிந்துரையால், ஜுலியஸ் சீசர் தப்பினார். கடற்கொள்ளையரை ஒழித்தார்.
தம்முடைய 18 ஆம் வயதில், கி.மு. 82 –ஆம் ஆண்டில், சீசர் ராணுவத்தில் சேர்ந்தார். இக்காலத்தில் துருக்கி எனப்படும் ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். கி.மு. 78-ஆம் ஆண்டில் சுல்லா இறந்த பின்பு சீசர் ரோம் திரும்பினார். சிறந்த சொற்பொழிவாளர் என்ற பெயரைத் தாங்கி, வழக்குரைஞர் தொழில் செய்தார்.
தமது விவாதத் திறனை வளர்த்துக் கொள்ள, அதைப்பற்றிய படிப்பிற்காக, கிரீஸ் நாட்டிற்குக் கிழக்கில் உள்ள ரோட்ஸ் தீவு சென்றார். வழியில் ஏஜியன் கடலைக் கடக்கும் பொழுது, கடற் கொள்ளையரால் கடத்தப்பட்டார். விடுதலைத் தொகை கட்டி விடுதலையானார். விடுவிக்கப்பட்டவுடன், கப்பற் படையைத் திரட்டிக் கொள்ளையர்களைப் பிடித்துச் சிலுவையில் அறைந்து கொன்றார். ஆசியாவில் இருந்த போண்டஸ் நாட்டினர், ரோம் பேரரசில் ஊடுருவியபோது, அதையும் முறியடித்தார்.
ரோம் திரும்பிய சீசர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியா (ஹிஸ்பேனியா) வின் ஆளுநர் ஆனார் (இப்பொழுது ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளைக் கொண்டதாக அந்நிலப்பரப்பு இருக்கிறது) மேலும் அங்கு நடத்திய போரில் சில பகுதிகளை வென்றார்.
ரோம் திரும்பிய சீசர் கி.மு. 59-ஆம் ஆண்டில் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நில விநியோகச் சட்டங்களைக் கொண்டு வந்தார். நிருவாகத்தை முறைப்படுத்தினார்; அதைத் தூய்மையுடைய தாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்தார். செனட் சபையில் நடந்தவற்றைப் பதிவு செய்து, பொது இடத்தில் வைக்கச் செய்தார்.
கான்சல் பதவி முடிந்த பின்பு, கி.மு.58-ஆம் ஆண்டில், இத்தாலியின் வடமேற்கில் இருந்த கால் (Gaul) பகுதியின் ஆளுநர் ஆனார். (ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட பகுதிகளுக்கு அப்பொழுது கால் எனப் பெயர்) அந்நிலப்பரப்பில் கடுமையான போர்களை நடத்தி, அதை முழுதும் ரோம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார். ரைன் நதியைக் கடந்து, மேற்கு நோக்கி வந்த ஜெர்மனிய இனக் குழுக்களை விரட்டியடித்தார். கி.மு. 55, 54 –ஆம் ஆண்டுகளில், ரோம் படையை முதல் முதலாக இங்கிலாந்தின் மீது ஏவி சில வெற்றிகளைப் பெற்றார்.
ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ் மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு, ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர். ரோம் வரலாற்றில் இது முதல் மூவராட்சி எனப்படுகிறது. கி.மு. 53 - ஆம் ஆண்டில் போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட்டார். ஆகையால் மூவராட்சி முடிவுக்கு வந்தது. பாம்பே, மற்றும் சீசர் இருவருக்கும் இடையில் அதிகாரப் போட்டி வலுத்தது. கி.மு. 50-ஆம் ஆண்டில் கால் மாநில வெற்றிகளுக்குப் பின்பு, வலிமையும் புகழும் மிக்கவராகச் சீசர் திரும்பினார். சட்டப்படி அவருடைய படைகள் கலைக்கப்படவேண்டும் என பாம்பே சொன்னார். சீசர் மறுத்தார். வடக்கில் இருந்த ரூபிகன் நதியைத் தம் படையுடன் கடந்து இத்தாலியினுள் நுழைந்தார். அதனால் உள்நாட்டுப்போர் மூண்டது. பாம்பே, கிரீஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு, பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு கொல்லப்பட்டார்.
எகிப்து நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவருடைய மனைவி கிளியோபாட்ராவும் சீசரும் காதலர் ஆயினர்; கூடிக்களித்தனர். பின்பு, ஆசியா மைனரில் வெற்றியுடன் போர் ஒன்றை முடித்துக் கொண்டு சீசர் ரோம் திரும்பினார். எகிப்திலிருந்து திரும்புவதற்கு முன்னால் சீசர் கிளியோபட்ராவை தன் சார்பில் எகிப்தின் அரசியாக நியமித்தார். வட ஆப்பிரிக்காவில் இருந்த தன் மற்ற எதிரிகளை வென்ற பின்னர், கி.மு. 47-ஆம் ஆண்டு தனது ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்திய மனநிறைவுடன் ரோமிற்குத் திரும்பினார். ஆனால் சீசர் அதனுடன் நிற்கவில்லை. கி.மு. 44 - ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போரிட்டு வந்தார்.
சீசர் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னை வாழ்நாள் சர்வாதிகாரியாகப் பிரகடனம் செய்து கொண்டார். ரோமன் காலண்டர் மாற்றி அமைக்கப்பட்டது. நகரெங்கும் சீசரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது.
தன் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக அவரை இனியும் விட்டு வைத்தால் ரோம் நகரம் சீரழிந்து விடும் என அவருக்கு நெருங்கியவர்களுள் ஒரு சிலரே சீசரைக் கொல்லத் துணிந்தார்கள். சீசர் பெரும் பொருட்செலவு செய்தார். அவரது இந்தச் செயலும் அதிகார ஆணவமும் அவரது அரசவையில் இருந்தவர்களை அவர் மீது வெறுப்படைய வைத்தன. அவரது அரசவையிலிருந்த அறுபது உறுப்பினர்கள் சீசரின் சர்வாதிகாரத்தை ஒழிக்க ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று தீர்மானித்தார்கள்.
டமாஸ்கசைச் சேர்ந்த நிக்கோலஸ் என்பவர் சீசரது மரணத்தைப் பற்றி பின்வருமாறு விரிவாக விளக்குகிறார்.
சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை. யாராவது ஒருவர் வீட்டில் சிலர் கூடிப் பேசுவார்கள். நிறையத் திட்டங்கள் அலசப்பட்டன; எப்படி, எங்கே சீசரைத் தீர்த்துக் கட்டுவது என்று... சிலர் சீசர் எப்போதும் நடந்து செல்லும் புனித வழி எனும் பாதையில் அவரை மடக்கிக் கொன்றுவிடலாமென்று கூறினர். இன்னொரு யோசனை சீசரைத் தேர்தலின் போது கொன்று விடுவது என்பது. அந்தச் சமயத்தில் சீசர் தேர்தலுக்கான மாஜிஸ்ட்ரேட்டுகளை நியமிப்பதற்காகப் பாலத்தைக் கடந்து செல்வார். அது சரியான தருணமாக இருக்கும் என்பது அவர்கள் கணக்கு. யார் பாலத்திலிருந்து சீசரைக் கீழே தள்ளுவது, யார் அவரைக் கொல்வது என சீட்டுப் போட்டுப் பார்க்க வேண்டும் என்றார்கள். அடுத்த யோசனை கத்திச் சண்டை போட்டி நடக்கும்போது அவரைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்பது. அந்த சமயத்தில் கத்தியுடன் யார் சென்றாலும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் பெரும்பாலானோர் சீசரை அரசவையில் வைத்துக் கொன்றுவிட வேண்டுமென்று விரும்பினார்கள். அப்போது உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். கத்திகளை மறைத்து வைப்பது சுலபம் என்பது அவர்கள் எண்ணம். கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
ஜூலியஸ் சீசரின் நெருக்கமான நண்பர்களுக்கு அவரைக் கொல்வதற்கான திட்டங்கள் பற்றிய வதந்திகள் கசிந்து வந்தன. அவர்கள் சீசர் அரசவைக்கு வர வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்கள். சீசரது மருத்துவர்களும் சீசரின் உடல் நிலையைக் கருதி அவர் அன்று அரசவைக்குச் செல்ல வேண்டாம் என்றார்கள். அவரது மனைவி கல்பூரினா சில நாட்களாகக் கெட்ட கனவுகள் கண்டிருந்ததால் தன் கணவருக்கு ஆபத்து வருமோ எனக் கலங்கியிருந்தாள். இந்த நிலையில் அவளும் கணவன் அரசவை செல்வதை விரும்பவில்லை.
ஆனால், நண்பனைப் போல் உடனிருந்து சீசரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தவர்களில் முதல்வனான புரூட்டஸ், சீசரிடம் “இது என்ன பைத்தியக்காரத்தனம்! ஒரு பெண் கண்ட அர்த்தமில்லாத கனவுகளையும் சில அறிவில்லாதவர்களின் வார்த்தைகளையும் கேட்டு அவைக்கு செல்லாதிருக்கலாமா? இது அவைக்கு நீங்கள் செய்யும் அவமானமில்லையா? நான் சொல்வதைக் கேளுங்கள். யார் யாரோ சொல்வதைக் கேட்டு அவைக்கு வராமலிருக்க வேண்டாம்” என்றான். புரூட்டஸ் சொன்னதைக் கேட்டு மனம் மாறிய சீசர் அவைக்குச் செல்ல நினைத்தார்.
சீசர் அரசவை செல்லும் முன் அவரது குருமார்களும் அவருக்காக பலி ஏற்பாடு செய்தபோது ஏற்பட்ட தீய சகுனங்களைக் கூறி அவரை எச்சரித்தார்கள். தீய சகுனங்களால் பலி ஏற்பாட்டை மாலை வரை ஒத்தி வைத்து, மாலை வரை சீசரை அரசவைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். சீசரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் அங்கே இருந்த புரூட்டஸ் எங்கே தங்கள் திட்டம் வீணாகி விடுமோ என்று எண்ணி, சீசரிடம் மறுபடியும் சென்று, “அரசே யாரோ வேலையில்லாதவர்கள் உளறுவதைக் கேட்டு அரசவைக்கு வராமல் இருக்காதீர்கள். தாங்கள் கூட்டிய அரசவை தங்களுக்காகக் காத்திருக்கிறது. தீய சகுனங்களையே மாற்றி நல்லவைகளாக்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. வாருங்கள்!” என்று கூறிக் சீசரது பதிலுக்குக்கூட காத்திருக்காது அவரது வலது கையைப் பற்றியவாறே சீசரை அரசவைக்கு அழைத்துச் சென்றான்.
அரசவையின் கொலு மண்டபத்திற்கு வந்த சீசரை அங்கிருந்த உறுப்பினர்கள் கையொலி எழுப்பி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் அவர் அருகில் நின்றனர். டில்லியஸ் சிம்பர் எனும் அந்த உறுப்பினர் சீசரால் நாடு கடத்தப்பட்ட தன் சகோதரனுக்காக அவரிடம் பேசும் சாக்கில் சீசரது கைகளை அவரது மேலங்கியுடன் சேர்த்துத் தன் கைகளால் பிடித்துக் கொண்டார். சிம்பர் சீசரின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதால் சீசரால் அவற்றை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.
சரியான தருணத்தை உணர்ந்த எதிரிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிச்சுவாக் கத்திகளை வெளியே எடுத்து சீசரை நோக்கிப் பாய்ந்தார்கள். முதலில் சர்விலஸ் காஸ்கா என்பவன் கத்தியைச் சீசரின் இடது தோளை நோக்கிச் செலுத்த முயன்றான். ஆனாலும் அந்தப் பரபரப்பில் அவனது குறி தவறியது. சீசர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது காஸ்கா தனது சகோதரனை நோக்கிக் கத்த, அவன் சீசரின் விலாவில் கத்தியைச் செலுத்தினான். இன்னொரு உறுப்பினரான காசியஸ் லான்ஜினஸ் குத்த முயன்றபோது குறி தவறி மார்கஸ் புரூட்டஸின் விரலில் குத்திவிட்டான்.
எல்லாரும் கத்தியால் குத்தவே தன்னுடைய மகன் போல் நேசித்து நினைத்திருந்த புரூட்டஸிடம் சீசர் ஓடினார். ஆனால் அவனும் கத்தியால் குத்தவே சீசர் அவனைப் பார்த்து, “புரூட்டஸ் நீயுமா?” என்று கூறிவிட்டுத் திரும்பினார் சீசர். தாக்குதல் எல்லா முனையிலிருந்தும் சரமாரியாய் நடந்தது. ஒவ்வொருவரும் சீசரது கொலையில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதுபோல் தொடர்ந்து குத்தினர்.
இறுதியில் சீசர் பாம்ப்பேயின் சிலையின் கீழே காயங்களுடன் வீழ்ந்தார், உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக்களுடன். சர்வாதிகாரியாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட சீசரின் இறுதி மூச்சு பிரிந்தது.
யாரையெல்லாம் உயிருக்கு உயிரான நண்பர்களாக சீசர் நினைத்தாரோ அவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார். வஞ்சகனான புரூட்டஸ் துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு பதவி ஆசைபிடித்து கி.மு. 44 –ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் நாள் செனட் அரங்கில் சீசரைக் குத்திக் கொன்றான். தன்மீது சீசர் வைத்திருந்த நம்பிக்கையைத் தன் துரோகத்தால் தவிடுபொடியாக்கிவிட்டான் புரூட்டஸ். துரோகம் செய்த புரூட்டஸ் பின்னர் கொடூரமான முறையில் இறந்தான் என்பதையும் வரலாறு எடுத்துரைக்கின்றது.
“சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, சாவதேமேல்” என்பது சீசரின் புகழ்பெற்ற வாசகம். ஜுலியஸ் எனும் அவர் பெயரை மறையாமல் வாழ்விப்பதாக ஜுலை மாதம் இருக்கிறது. உலகம் உள்ளளவும் சீசரின் புகழ் நிலைத்திருக்கும். அதைப்போன்றே நட்பாக இருந்து நல்லவனைப் போல் பழகி அந்நட்புக்குத் துரோகம் செய்த புரூட்டஸையும் வரலாறு பழி தூற்றிக் கொண்டேதான் இருக்கும்.
ஷேக்ஸ்பியர் ஜூலியஸ் சீசர் நாடகத்தில் “யூ டு புரூட்!” என்ற இலத்தீன் வார்த்தையைச் சீசரே கூறுவதாகப் பயன்படுத்தியுள்ளார். இத்தொடரே வரலாற்றில் துரோகத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அழியாப் பழியைத் தரும் தொடராக நிலைத்து நின்றுவிட்டது.
இலக்கியவாதிகள், சீசர் அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த புரூட்டஸ்ஸே தன்னைக் குத்த வந்த பின்னர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் எந்தவிதமான முயற்சியையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு நம்பிக்கைத் துரோகியான புரூட்டஸின் துரோகச் செயலை விமர்சனம் செய்கின்றனர்.
ஆமாம்... நம்பிக்கைக்கு உரிய நட்புடையவர்கள் துரோகம் செய்து வஞ்சகத்துடன் நகத்தால் கீறினாலும் அது பகைவர்கள் வாளால் குத்தியதை விடவும் ஆழமான பாதிப்பையே ஏற்படுத்தும். இன்றைக்குப் புரூட்டஸைப் போன்றவர்கள் உலகத்தில் அதிகமாகி விட்டனர். அவர்களை நாம் அடையாளம் காண்பது மிகவும் சிரமம்… இருந்தாலும் நாம் சிறிதாவது விழிப்பாக இருக்க வேண்டும். இதுபோன்ற நம்பிக்கைத் துரோகம் செய்கின்ற நட்புத் துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களது வஞ்சக வலையிலிருந்து தப்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இது பரவாயில்லை...! நம்ப வைச்சுக் கழுத்தறுக்கறதுன்னு சொல்கிறார்களே... அப்படி என்றால் என்னவென்று தெரியுமா?செய்த நன்றியை மறந்து அடைக்கலமாக வந்தவருக்குத் துரோகம் செய்த நன்றி மறந்த துரோகி கூட இருக்கிறார்கள்...!