வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
4. அடைக்கலம் கேட்டவருக்குத் துரோகம்
துரோகத்துல மிகப்பெரிய இழிவிலும் இழிவான துரோகம் எது தெரியுமா…? நம்மை நம்பி வந்தவர்களைக் காட்டிக் கொடுப்பதுதான்… அடைக்கலம்னு வந்தவர்களை அப்படியே அவர்களைக் கொல்ல வருகிறவர்களிடம், “இதோ இங்கேதான் இருக்கான், அவனைக் கொல்லுங்க” என்று அப்படியே ஒப்படைத்துவிட்டு கொல்ல வந்தவங்களோட காலில் விழுந்து பலனடையப் பார்ப்பது துரோகத்தின் உச்சகட்டம்.
ஒரு பெரிய கழுகு முயலைப் பிடிக்கத் துரத்தியது. அந்த முயல் உயிர் தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியது. கடைசியில் ஒழிவதுக்கு இடமில்லாமல் வண்டு குடியிருந்த ஒரு மரப்பொந்துக்குள் போய் ஒழிந்தது… அப்போது அங்கிருந்த வண்டுவிடம் முயல் தன் நிலைமையைச் சொல்லி, என்னைக் காட்டிக் கொடுத்துவிடாமல்…என்னைக் காப்பாற்றி உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.
அதைக் கேட்ட வண்டு, “நீ கவலைப் படாதே... நான் உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி, அந்த முயலுக்கு உண்ண உணவு கொடுத்தது. முயலைத் தேடி அலைந்த அந்தக் கழுகு கடைசியில் மரப்பொந்துல முயல் ஒழிந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டது.
அது வண்டுவிடம், “மரியாதையாக, அந்த முயலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று மிரட்டியது. ஆனால், அந்த வண்டு, “என்னிடம் அடைக்கலமாக வந்திருக்கிற முயலை நான் ஒருபோதும் விட்டுத்தர மாட்டேன்… இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன்… நீ இந்த முயலை விட்டுட்டுப் போயிடு… இல்லைன்னா நீ இறைவனோட சாபத்திற்கு ஆளாகி விடுவாய்… இந்த முயலை விட்டுஇடு…” என்றது.
ஆனால் அந்தக் கழுகு அதைக் காதில் வாங்காமல், தன்னோட கால்களை மரப்பொந்துக்குள் விட்டு நகங்களால், அந்த முயலைக் குத்திப் பிராண்டிப் பிடித்துக் கொண்டு போய்விட்டது.
அந்த வண்டுக்கு மிகவும் வருத்தமாகப் போனது… நம்மிடம் அடைக்கலமாக வந்த முயலை நம்மால் காப்பாற்ற முடியலியேன்னு நினைத்து வருத்தப்பட்டு… அழுதது. அந்த வண்டுக்கு மிகுந்த வருத்தம். அந்த முயலை அந்த வண்டால் மறக்க முடியவில்லை. கடைசியில ஒரு முடிவுக்கு வந்தது. அடைக்கலமாக வந்த முயலைக் கொன்ன அந்தக் கழுகைப் பழி வாங்கணும்னு நினைத்தது… அதனால், அந்தக் கழுகு கூடு கட்டும் இடத்துக்குப் போய் அது இடும் முட்டையை எல்லாம் கீழே தள்ளி உடைத்தது…இரைதேடிட்டுக் கூட்டிற்கு வந்த கழுகுக்கு மிகவும் வேதனையாகப் போனது…
வண்டால் வரமுடியாத உயரமான இடத்துக்குப் போய் முட்டையிட்டது. ஆனால் அந்த வண்டு விடவில்லை… அப்பவும் போயி அந்தக் கழுகு இல்லாத நேரத்துல அந்தக் கூட்டுல இருந்து முட்டையைக் கீழேத் தள்ளி உடைத்தது… இந்தக் கழுகால் அந்த வண்டை ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
கழுகு ஒரு முடிவுக்கு வந்தது. கடவுளிடம் சென்று முறையிட்டது. “கடவுளே... என்னோட முட்டையை நீங்கதான் பாதுகாக்கணும்…” என்று மிகவும் வருத்தத்துடன் வேண்டிக் கொண்டது. அதுக்குக் கடவுள், “சரி நீ என்னோட மடியில முட்டையிட்டுட்டுப் போ நான் பாத்துக்கறேன்” என்றார்.
கழுகும் அப்படியே முட்டையிட்டுட்டுப் போனது.
அப்போது அங்கு வந்த வண்டு, “ஆஹா! கடவுளோட மடியில் அந்தக் கழுகு முட்டையிட்டு வச்சிருக்கு” அப்படீன்னு அத எப்படியாவது கீழே தள்ளி உடைக்கணும்னு முடிவு செய்தது. வண்டு கீழே கிடந்த நாற்றமடிக்கும் கழிவுகளை எடுத்துக் கொண்டு வந்து கடவுளோட மடியில் போட்டது. நாற்றம் தாங்க முடியாத கடவுள் தன்னோட மடியிலிருந்துதான் அந்த நாற்றம் வருகிறதென்று கண்டுபிடிச்சு சட்டுன்னு எழுந்து விட்டார். அவர் அப்படி எழுந்திருக்கும் போது கழுகின் முட்டையெல்லாம் கீழே விழுந்து உடைந்து போனது.
இது மாதிரி செய்தது யார்? என்று கடவுள் பார்த்த போது அங்கே அந்த வண்டு இருந்தது.
உடனே அந்த வண்டைப் பார்த்து, “நீ இப்படிச் செய்யலாமா…?” என்று கேட்டார்.
அதற்கு அந்த வண்டு நடந்த அனைத்தையும் கூறி தனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லச் சொல்லி கேட்டது. அந்த வண்டு சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்ட கடவுள், தான் அடைக்கலம் கொடுத்த கழுகுவிடம், “நீ இந்த வண்டுக்குச் செய்தது தவறு… அது அடைக்கலம் கொடுத்த முயலை நீ கொன்றிருக்கக் கூடாது… நீ இனிமேல் வண்டுகள் உருவாகாத காலம் எதுவோ அந்தக் காலத்திலதான் நீ முட்டையிடணும்” அப்படின்னு சொன்னாரு. அதைக் கேட்ட கழுகும் வண்டும் சமாதானம் ஆகிப் போயின.
பகுத்தறிவில்லாத சின்னஞ்சிறு உயிர்கள் கூட அடைக்கலமாக வந்த ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தது… ஆனால் பதவி ஆசைக்காக, அரச போகத்துக்காகத் தன்னைக் காப்பாற்றியவரே அடைக்கலம் கேட்ட போது அடைக்கலம் என்று சொல்லி ஏமாற்றி காட்டிக் கொடுத்துத் துரோகம் செய்தான் ஒருவன்… அவன்தான் ஆப்கானிஸ்தானின் தளபதியாக இருந்த மாலிக் ஜீவன்…
மொகலாயப் பேரரசின் ஆட்சி காலத்தில் இந்த நன்றி கெட்ட துரோகச் செயல் அரங்கேறியது… காதலிக்காக தாஜ்மகால் கட்டின ஷாஜகான் ஆட்சி காலத்துலதான் நடந்தேறியது… அதுவும் அவரது உடல்நலம் குன்றியபோது இந்தக் கொடூரம் நிகழ்ந்தது…
ஷாஜகானின் உடல் நலம் குன்றிய காலத்தில் அவருக்கு அடுத்து அரசராகப் போவது யார் என்ற அதிகாரப் போட்டி அவரது மகன்களுக்கிடையில் ஏற்பட்டது. ஷாஜகானுக்கு அவரது மூத்த மகன் தாராவை அரசராக்கிவிட வேண்டும் என்ற ஆசை… ஆனால் அவரது இரண்டாவது மகனான மூரத், மூன்றாவது மகன் ஒளரங்கசீப், நான்காவது மகன் ஷூஜா ஆகிய மூவரும் அரசராக வேண்டும் என்று போட்டி போட்டனர். மொகலாய சிம்மாசனத்திற்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது.
இந்த நான்கு பேரில் நல்ல உள்ளம் படைத்தவர் தாரா தான். இவரது முழுப் பெயர் தாரா சிக்கோ (Dara Shikoh) என்பதாகும். இவர் 1615-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாள் மொகலாயப் பேரரசர் ஷாஜகானுக்கும் மும்தாஜ்மகாலுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தான் மொகலாய அரச மரபிற்கு உரிய இளவரசராவர்.
தாரா ஷிகோ என்றால் பாரசீக மொழியில் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், தாராவின் உடன்பிறந்த சகோதரியான ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு விதி வேறு மாதிரி இருந்தது. மக்களும் தாராவையே பெரிதும் நேசித்தார்கள்.
தாரா அனைத்துத் தரப்பு மக்களையும் நேசித்தார். இந்துக்களின் இதிகாசங்களையும் உபநிடதங்களையும் வெகுவாக நேசித்தார். அவற்றில் மனதைப் பறிகொடுத்து, அவற்றைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இதனாலேயே ஒளரங்கசீப் தன் சகோதரனை வெறுத்தார்.
அதிகாரப் போட்டி
1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையைக் கைப்பற்ற ஷாஜஹானின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. ஷாஜகானை எதிர்த்துத் தாக்குவதற்குத் தாராவைத் தவிர்த்த அவரது மற்ற மகன்கள் மூவரும் கொடூரமான போருக்குத் தயாராயினர். அவர்களை அடக்கும் பொறுப்பை ஷாஜகான் தாராவிடம் ஒப்படைத்தார்.
இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஷாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்கசீபின் மீது படையெடுத்தார்.
வங்காளத்தின் மன்னனாகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட ஷாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜாவின் மீது தாரா தனது மூத்தமகன் சுலைமான் ஷிகோவை படைகொண்டு எதிர்க்கச் செய்தார். ஷாஜகானுக்கு பேரன் சுலைமானை மிகவும் பிடிக்கும். ஷாஜகான் தனது பேரனை வாழ்த்திப் போருக்கு அனுப்பினார். வங்காளத்தில் நடந்த போரில் ஷாஷூஜாவை சுலைமான் வெற்றி கொண்டான். ஷாஷூஜா சுலைமானிடம் தோற்று ஓடினான். தோற்று ஓடிய ஷாஷூஜாவை விரட்டி வெகுதூரம் துரத்தினான் சுலைமான். ஆனாலும் அவனாலும் பிடிக்க முடியவில்லை. தாரா ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போரிட்டார். தனக்கு உதவுவதற்குச் சுலைமானை வருமாறு தாரா அழைப்பு விடுத்த போது, அதிக தூரத்தில் இருந்ததால் அவனால் தன் தந்தைக்கு உதவ வரமுடியவில்லை.
தாராவிற்கு உதவ ஷாஜகானால் அனுப்பப் பெற்ற ஜெய்சிங்கும், திலிர்கானும் ஒளரங்கசீப்பின் அழைப்பை ஏற்று அவரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டனர். இதனால் போர்க்களத்தில் தாரா தனிமரமானார். எந்தவிதமான உதவியுமின்றி தாரா தவித்தார். போர் தொடர்ந்து நடைபெற்றால் உயிர் தப்ப முடியாது என்ற நிலையில் தாரா தப்பி ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நன்றி மறந்த துரோகி
போர்க்களத்திலிருந்து ஒளரங்கசீப்பிடம் தோற்று உயிர்தப்பி ஓடினார் தாரா. அவருக்கு அடைக்கலம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானத்தில் தளபதியாக இருந்த மாலிக் ஜீவன் குறித்த நினைவு தாரவுக்கு வந்தது. ஏனெனில் மாலிக் ஜீவன் ஒரு பெருந்தவறு செய்து இரும்புச் சங்கிலிகளால் பேரரசர் ஷாஜகானின் முன்பு பிணைக்கப்பட்டு மரணதண்டனை அறிவிக்கப்பட்ட போது, தாரா மன்னரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஷாஜகான் அரைமனதோடு மாலிக்கை விடுவித்தார்.
அப்போது மாலிக் ஜீவன் தாராவிடம், “என்னைக் காப்பாற்றிய உங்களுக்கே என் உயிர் சொந்தம். இந்த உதவியை என் உயிர் உள்ளளவும் நான் மறக்க மாட்டேன்” என்றான். இந்தச் சம்பவம் நினைவுக்கு வரவே தாரா அவனிடம் சென்று சிலநாட்கள் அடைக்கலமாகத் தங்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அவனது முடிவினை அவனுடன் இருந்தவர்கள் வேண்டாம் என்று மறுத்தபோது, தாரா, “மாலிக்ஜீவன் நன்றியுள்ளவன். அவன் எந்த நிலையிலும் எனக்கு உதவாமல் இருக்கமாட்டான். அவனை நம்பிப் போகலாம்” என்று கூறி அவர்களது பேச்சைப் புறந்தள்ளினார்.
தாதர் கோட்டைக்குத் தாரா சென்றபோது, அவனை மாலிக்ஜீவன் கோட்டைக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் காத்திருந்து அழைத்துச் சென்றான். தனது கோட்டையில் மூன்று நாள்கள் தாராவை மாலிக்ஜீவன் தங்க வைத்து விருந்து உபசரித்தான். மாலிக்ஜீவனின் உபசரிப்பில் மகிழ்ந்த தாரா அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து தனது படையுடன் கிளம்பினார்.
மாலிக்ஜீவன் நல்லவன் போன்று தாராவை வழியனுப்பி வைத்தான். தாரா கோட்டையிலிருந்து வெளியேறியவுடன் மாலிக் நன்றி மறந்து ஒளரங்கசீப்பிற்குத் தகவல் கொடுத்துவிட்டு, அவனே தாராவின் படையை முற்றுகை இடுகிறான். தாராவிற்கு ஒன்றும் புரியாத நிலையில் அவரையும் அவரது படையையும் சரணடையச் செய்கின்றான் மாலிக்ஜீவன்.
அதன் பின்னர் தாராவையும் தாராவின் மகன் சிஃபிரையும் அவனது மகள்களையும் கைது செய்து மீண்டும் கோட்டைக்குள் அழைத்துச் சென்று மாலிக் அடைத்து வைக்கிறான். வஞ்சகத்தாலும் துரோகத்தாலும் தான் வீழ்த்தப்பட்டதை உணர்ந்த தாரா செய்வதறியாது மனம் வருந்துகின்றான். தாராவையும் அவனது குடும்பத்தாரையும் கைது செய்து வைத்திருப்பதை ஒளரங்கசீப்புடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்த ஜெய்சிங்கிற்கும், பகதூர்கானுக்கும் மாலிக் தெரிவிக்கின்றான்.
தாரா இருக்குமிடத்தை அறிந்து கொண்ட பகதூர்கான் படைகளோடு வந்து தாராவையும் சிஃபிரையும் கைது செய்து விலங்கிட்டு டெல்லிக்கு ஒளரங்கசீப்பிடம் அழைத்துச் சென்றான்.
டெல்லிக்குக் கைதாகி வந்த தனது உடன் பிறந்த சகோதரனைப் பதவி வெறி கொண்ட ஒளரங்கசீப் பெருத்த அவமானத்திற்கு உள்ளாக்குகின்றார். தாராவையும் அவனது மகனையும் கிழிந்து போன கந்தலாடைகளை உடுத்தச் செய்து மிகவும் சிறிய அழுக்கு நிறைந்த பெண் யானையின் மீது அவர்களை அமர வைத்து டெல்லித் தெருக்களில் ஊர்வலம் வரச் செய்தார். தாராவிற்கும் அவனது மகனுக்கும் பின்னால் உருவிய வாளுடன் ஒளரங்கசீப்பின் அடிமையாகிய நாசர்பெக் என்பவன் இருந்தான். தாராவோ அவனது மகனோ தப்பியோட முயற்சித்தால் வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும் என்று ஒளரங்கசீப் அந்த அடிமைக்கு ஆணையிட்டிருந்தார்.
துரோகி பெற்ற வெகுமதி
தாராவையும் அவன் மகனையும் அவ்வாறு பார்த்த மக்கள் அனைவரும் ரத்தக் கண்ணீர் வடித்தனர். அந்தக் காட்சியைக் கண்ட அவர்கள் மண்ணள்ளித் தூற்றினார்கள். அந்தளவிற்கு அம்மக்கள் தாராவின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். செய்நன்றி மறந்து துரோகியான மாலிக்ஜீவனுக்கு ஒளரங்கசீப் ஆயிரம் குதிரைகளைக் கொண்ட படையை நிர்வகிக்கும் பதவியுயர்வினை வழங்கினான். துரோகி மாலிக் மகிழ்ச்சியடைந்தான்.
சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலைநகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா ஷிகோ, ஔரங்கசீபின் ஆட்களால் 1659-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் நான் கொல்லப்பட்டான். ஔரங்கசீப், இறந்து போன தாராவின் உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். தாராவின் முடிவு மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் இருந்த நல்லவர்களின் உள்ளங்களை உலுக்கியெடுத்தது.
தாரா ஷிகோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராகத் திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர மத அடிப்படைவாதியான ஔரங்கசீபைத் தாரா ஷிகோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா பெரும் மாற்றத்தைக் கண்டிருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தாரா ஷிகோ லாகூர் நகரின் புகழ்பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.
தாரா ஷிகோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிபெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.
தனது சகோதரன் ஔரங்கசீப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டத நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் தாரா ஷிகோ திகழ்ந்தார். 1630 –களில் துவங்கி அவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பை அவரது மனைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் அழிக்கப்படவில்லை.
ஞானியாகத் திகழ்ந்த தாராவைக் காட்டிக் கொடுத்த நன்றி கெட்ட நயவஞ்சகன் மாலிக் ஜீவனின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. ஒளரங்கசீப் அரசனாகிய சில நாட்களிலேயே மாலிக்கை ஒதுக்கி வைத்தான். மாலிக்கின் நடவடிக்கைகள் சரியாக இருக்கவில்லை என்று கூறி அவனைக் கொன்றார். அதோடுமட்டும் நில்லாமல் ஒளரங்கசீப் கொடுமையின் உச்சநிலைக்கே சென்றான். தாராவின் மகன் சுலைமான் ஒளரங்கசீப்பால் கொல்லப்பட்ட விதம் மிகமிகக் கொடூரமானதும் குரூரத்தன்மை வாய்ந்ததுமாகும். சுலைமான் தனது தந்தையார் கொல்லப்பட்ட பிறகு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கர்வால் மலைப் பகுதியிலுள்ள இந்து அரசர் ஒருவரிடம் அடைக்கலம் புகுந்திருந்தார் இதனைச் சில கைக்கூலிகள் மூலம் அறிந்து கொண்டு அவரையும் ஒளரங்கசீப்பிடம் காட்டிக் கொடுத்தனர். சுலைமான் ஒளரங்கசீப்பின் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு அவரின் முன்னால் நிறுத்தப்பட்டான்.
மாமன்னனாக விளங்கிய ஒளரங்கசீப் தனது பதவிக்குப் போட்டியாக சுலைமான் வந்துவிட கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இருபத்தைந்து வயது கூட நிறைவடையாத இளவரசருக்கு மரண தண்டனை விதித்தார். ஒளரங்கசீப்பிடம் சுலைமான் ஒரு வேண்டுகோள் வைத்தான். “தன்னைக் கொல்வதென்றால் உடனடியாக கொன்று விடுங்கள் என்றும் சித்திரவதை செய்து கொல்ல வேண்டாம் “என்றும் ஒளரங்கசீப்பை மன்றாடிக் கெஞ்சி கேட்டுக் கொண்டான்.
ஆகட்டும் என்று மட்டும் ஒளரங்கசீப் தலையசைத்து கொண்டார். ஆனால் நடந்ததென்னவோ அதற்கு மாறாகவே நடந்தது. ஒளரங்கசீப் தனது அண்ணன் மகனை பௌஸ்தா என்ற போதை தரும் மதுபானத்தில் அபின் என்ற போதைப் பொருளைக் கலந்து கொடுத்தார். அவன் போதையின் பிடியில் இருந்தபோது சுலைமானின் ஒவ்வொரு அங்கங்களையும் சிறிது சிறிதாக வெட்டி நாற்பது நாளுக்கு மேல் சித்ரவதை செய்து வலியே இல்லாமல் (?) துடிதுடிக்க கொன்றார். இதனை இரத்தக்கறை படிந்த வரலாற்று ஏடுகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
பதவி வெறி அதிகார வெறி எங்கே இருந்தாலும் அந்த இடம் மிகப்பெரிய பிணக்காடாகத்தான் இருக்கும். பதவியும் அதிகாரமும் போதைப் பொருள் போன்றது. அதுக்கு அடிமையானவர்கள் அதற்காக எதனையும் ஈவிரக்கமின்றி செய்வார்கள்… அவர்களிடம் எந்தவிதமான நன்றியையும் எதிர்பார்க்க முடியாது.
அதனால நாம ஒருவருக்குச் செய்ததால் அவர் நம்மிடம் நன்றி விசுவாசத்தோடு நடந்து கொள்வார் என்று நினைத்துக் கொண்டு அவரை முழுமையாக நம்பி விடக் கூடாது… கருப்பட்டியிலும் கல்லு இருக்கும், தேனிலும் சிராய் (மரத்தின் மிகச்சிறியதொரு மரப்பட்டை) இருக்கும் என்று விழிப்புடன் இருக்க வேண்டும். தொண்ணூறு சதவிகிதம் நம்பினாலும் பத்து சதவிகிதம் அவரைப் பற்றி சிறிதாவது சிந்தித்து அவர் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் துரோகத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். துரோகிகள் எப்போது எங்கிருந்து வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
உண்டவீட்டுக்கு ரெண்டகம் செஞ்சுட்டான்… பால் குடிச்ச வீட்டுக்குப் பாதகம் நெனச்சிட்டான்… தீட்டுன கட்டையிலேயே பதம்பாத்துட்டான்னு சொல்வாங்கள்ள… அது என்னவென்று தெரியுமா…? குடிச்ச பாலு கொமட்டுல (வாய்க்குள்) இருக்கும்போதே மார்பகத்தை அரிபவர்கள் இருக்கிறார்கள்… வளத்த கடா மார்பில் பாய்ந்தது என்று சொல்வார்களல்லவா…? அந்த மாதிரி வரலாற்றில் நிறைய நடந்திருக்கிறது… தன்னை வளர்த்து ஆளாக்கியவரையே ஒருத்தர் துரோகத்தால் வீழ்த்தி அரச பதவியைக் கைப்பற்றிய வரலாறு கூட உண்டு. அந்தத் துரோகி யார் என்று தெரிந்து கொள்ள சிறிது காத்திருங்கள்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.