“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பழமொழி வழங்கி வரும் தமிழகத்தில் ஒளரங்கசீப்பை விடக் கொடுமையாளன் ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் ஆச்சரியமாயில்லை. சில நேரங்களில் நாம் நினைப்பதை விட சில நிகழ்வுகள் நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அது சில வேளைகளில் நம்ப முடியாததாகக் கூட இருக்கும். இங்கு வெளிநாட்டுக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
தந்தையை இழந்த குழந்தை. அந்தக் குழந்தையைத் தாய் எந்தவிதக் குறையும் தெரியாமல் வளர்த்தாள். தந்தை இருந்து ஒரு குழந்தைக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று நினைப்பானோ அதையெல்லாம் செய்து தந்தையில்லாக் குறையை நிவர்த்தி செய்து வந்தாள். அந்தப் பையனுக்குத் தலைவலித்தால் தனக்கு வலித்தது போல் அவள் துடிதுடித்துப் போவாள். அவன் வளரவளர அதை நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைந்து வந்தாள்.
அவன் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுத்தாள். அந்தப் பையன் வளர்ந்து பெரியவன் ஆனான். வேலைக்கும் போனான்…அவன் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்று அந்தத் தாய் நினைத்தாள். ஆரம்பத்தில் அவனும் பாசமாகத்தான் இருந்தான்.
அப்படி இருந்தபோதுதான், அவனோட மனதிலும் ஒருத்தி நுழைந்தாள். அவன் அதைத் தனது அம்மாவிடம் சொன்னான். அவளும் மகனின் விருப்பத்துக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை… ஆனால், அந்தப் பெண் அவன் மனதுக்குள் விஷவிதையைத் தூவ ஆரம்பித்தாள்.
அவனிடம், “உன் அம்மாவுக்கு உன் மேல் பாசமே இல்லை, இது உண்மை… நீதான் அவள் மேல் பாசமாகவும் அன்பாகவும் இருக்கிறாய்... அவளிடம் இவை துளிகூட இல்லை” என்று ஏதேதோ சொல்லி, அவனின் மனதைக் களைத்தாள்.
அவன் மனதிலும் சந்தேகம் முளை விடத் தொடங்கியது.
தன் காதலியிடம், “ஆமாம்…நீ சொல்வை நான் எப்படி நம்புவது… எதை வைத்து என் அம்மாவிற்கு என் மேல் அன்பு எதுவுமில்லை என்று நான் கண்டறிவது?” என்று கேட்டான்.
அந்தப் பெண், “உன் அம்மாவிடம், என்னை நாளைக்கே வீட்டுக்குக் கூட்டி வரப் போவதாகச் சொல்லி அனுமதி கேளுங்க… அவங்க உன் மேல் அன்போடு இருந்தால் சரின்னு உடனே சொல்வாங்க… உங்க மேல் அன்பில்லாவிடில், நான் அங்கே வருவதுக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்...” என்று சொன்னாள்.
அவனும் காதலி சொன்னதைக் கேட்டு, வீட்டுக்குப் போனதும் தன் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னான்.
அவன் அம்மா, “இல்லப்பா... உடனே அந்த மாதிரி செய்யக் கூடாது... அவளோட அப்பா அம்மா சம்மதத்தைப் பெற்று அவளை இந்த வீட்டுக்குக் கூட்டி வருவதுதான் நல்லது… அதுவரைக்கும் பொறுமையாக இரு… அவசரப்படாதே...” என்று சொன்னாள்.
அவனோட மனதிற்குத் தன் காதலி சொன்னதுதான் சரி என்று பட்டது. “ச்சே.. நம் அம்மா நம் மேல் சிறிது கூட அன்பில்லாமல் நடந்து கொள்கிறாளே... நம்ம மேல அன்போட இருந்திருந்தால், சரி, அவளைக் கூட்டிக்கிட்டு வான்னு சொல்லியிருப்பாள்... நம் வாழ்க்கையைப் பற்றி அவளுக்குச் சிறிது கூட அக்கறை இல்லை” என்று நினைத்தான்.
அம்மா தன் மகனிடம் அன்பாகப் பல விஷயங்களை எடுத்துச் சொன்னாள். கோபப்பட்ட மகனுக்கு அம்மாவோட எண்ணம் சரின்னு பட்டது. அம்மா சொல்றதும் சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் தன் காதலியிடம் நடந்ததைச் சொல்லித் தன் அம்மா தன் மேல் அன்பாகத்தான் இருக்கிறதாள் என்று சொன்னான். ஆனால், அவனோட காதலி அவனிடம், “உன் அம்மா, உன்னிடம் தவறுகளாகச் சொல்லி உன்னை மோசம் பண்ண நினைக்கிறாள், அவ உன்னிடம் நடிக்கிறாள்... அவ சொல்வதை நீ நம்புகிறாய்... ஆனால், நான் சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறாய்… என் மேல் உனக்குச் சிறிது கூட அன்பே இல்லை” என்று கோபித்துக் கொண்டாள்.
அவளோட கோபத்தத் தணிக்க அவன், “அன்பே, உன் மேல் நான் உயிரையே வைத்திருக்கிறேன்... நீ கோபப்படாதே... நீ இல்லாமல் நானில்லை, எங்கம்மா என் மேல் அன்பாக இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க இன்னொரு வழி சொல்…” என்று கேட்டான்.
உடனே அவனோட காதலி, “என் மேல் உனக்கு உண்மையிலேயே அன்பிருந்தால், எனக்கு உன்னோட அம்மாவோட இதயம் வேணும்... அதை எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தால்தான், உண்மையிலேயே நீ என் மேல் அன்பு வைத்திருப்பதை நம்புவேன்... உன்னோட அம்மா தன்னோட இதயத்தை உன் கிட்டக் கொடுத்தா அவ உன் மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறால் என்று அர்த்தம்...” என்று சொல்லி அவனை அனுப்பினாள்.
நேராக வீட்டுக்கு வேகவேகமா வந்த அவன் தன்னோட அம்மாவிடம், “அம்மா, நீ என் மேல் உண்மையிலேயே பாசமா இருக்கிறாயா...? என் மேல் அன்பாக இருக்கிறாயா?” என்று கேட்டான்.
அவனது அம்மா, “ஆமாம் மகனே, நீ தான் என் உலகம்… நீ நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் உயிரோடு இருக்கிறேன்” என்று சொன்னாள்.
இதைக் கேட்ட அவன், “ஆமாம், இதை நான் எப்படி நம்புவது...? நான் காதலிக்கிற பெண் எனக்குக் கிடைக்க வேண்டுமென்றால் உன்னோட இதயம் வேணும். அதைத்தான் அவள் கேட்கிறாள்... உண்மையிலேயே நான் சந்தோஷமா இருக்க வேண்டுமென்று நீ நினைத்தால் உன்னோட இதயத்தை நீ இப்பவே எனக்குத் தரணும்… அதை எடுத்துக் கொண்டு போய், நான் அவளிடம் காட்டி அவ மேல நான் எவ்வளவு அன்வு வச்சிருக்கிறேன் என்பதை நிரூபிக்க வேண்டுன்” என்று சொன்னான்.
அதைக் கேட்ட அவனோட அம்மா தன்னோட இதயத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கத்தியை மகனின் கையில் கொடுத்தாள். மகனும் அம்மாவின் நெஞ்சில கத்தியைப் பாய்த்து, அவளின் இதயத்தை இரத்தம் சொட்டச் சொட்ட எடுத்துக் கொண்டு போய் தன் காதலியிடம் கொடுக்க வேகவேகமா ஓடினான்.
அப்படி வேகமா ஓடிப்போய்க் கொண்டிருந்தவன் காதலியின் வீட்டு வாசல்படியில் ஏறும் போது வாசல்படி தட்டிக் கீழே விழுந்தான். அந்த இதயம் வீட்டுக்குள்ளிருந்த அவன் காதலியின் காலடியில் போய் விழுந்தது… கீழே விழுந்த அந்த இதயம், மகனைப் பார்த்து, “மகனே... உனக்கு ஏதாவது அடிபட்டு விட்டதா?” என்று கேட்டது.
அவன் அப்படியே நொறுங்கிப் போய் விட்டான். அவன் மிகவும் வருத்தப்பட்டான். அவனோட தவறு அவனைக் குத்திக்கிட்டே இருந்தது. காதலியை மணந்து கொண்ட அவனால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை… அவன் இதயத்தில் முள்ளாக அவனோட அம்மாவின் நினைவு வலம் வந்து கொண்டே இருந்தது... அவனோட வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. கடைசி வரைக்கும் அவன் நிம்மதியில்லாமல் வாழ்ந்து இறந்து போனான். அவனோட காதலியும் வருத்தப்பட்டு இறுதியில் துயரம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள்.
என்னங்க உங்க மனமும் கலங்கி விட்டதா? இதே மாதிரிதான், நம் தமிழக வரலாற்றிலும் ஒரு பெரிய வருந்தத்தக்க துரோக நிகழ்வு நடந்தது. இராணி மங்கம்மாளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்... வீர மங்கையாக வாழ்ந்த அவள்… தாயில்லாமல், தந்தையில்லாமல் இருந்த தன்னோட பேரனை வளர்த்து ஆளாக்கினார். கடைசியில், அந்தப் பேரனே அந்த அம்மாவுக்குத் துரோகம் செய்யற துரோகியாக மாறினான்.
இராணிமங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் (1659 -1682) தளபதியாக இருந்த தப்பகுளலிங்கம நாயக்கர் அவர்களின் மகளாவார். சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவருக்குப் பட்டதரசி என்று பட்டம் சூட்டவில்லை. தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் நினைத்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1682 –ஆம் ஆண்டில் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது, அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் மூன்று மாதக் குழந்தை. எனவே, தன் மகனைக் காக்க வேண்டி உடன்கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினைத் தன் மகன் சார்பாகக் காப்பாளராகப் பொறுப்பேற்றார்.
மகனையும் பேரனையும் அரசராக்குதல்
மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்து வைத்தார். அதன் பிறகு முத்து வீரப்ப நாயக்கருக்கு அரசுரிமை அளித்து அரசராக்கினார். அன்னையின் வழிகாட்டலோடு உதவியோடும் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார்.
தனது தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, ஔரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு அரசர்கள் எல்லோரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்து வீரப்ப நாயக்கர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு, “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார். இத்தகைய வீரமிக்கவராக முத்து வீரப்ப நாயக்கர் திகழ்ந்தார்.
ஆனால் அது நிலைக்கவில்லை. ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் அம்மை நோயால் 1688-ஆம் ஆண்டில் காலமானார். கணவர் இறந்த சில நாள்களிலேயே ஆண் மகனைப் பெற்றுத் தந்த சின்னமுத்தம்மாள் உடன்கட்டை ஏறித் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். தனது மகனும் மருமகளும் இறந்து விடவே மூன்று மாதக் கைக்குழந்தையாக இருந்த தனது பேரன் விசயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டி, அவரது சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராகப் பதவி ஏற்றுக் கொண்டு, இராணிமங்கம்மாள் என்ற பெயரில் ஆட்சி செய்து வந்தார்.
இராணி மங்கம்மாள் வீரமிக்கவர். அவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை, மைசூர்ப் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். வஞ்சகமாகத் தன்னை ஏமாற்றிய திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மனைத் தன் தளபதி நரசப்பய்யரின் தலைமையில் படை நடத்தி வெற்றிகண்டு அவனிடம் இருந்து திறை பெற்றாள். மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல. இராணி மங்கம்மாள் தான் சார்ந்த சைவ சமயத்தைப் போலவே கிறித்தவ சமயத்தவர்க்கும், இசுலாமியர்க்கும் ஆதரவாக இருந்தார். சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், வாய்க்கால் சீரமைப்பு, சாலை ஓரம் மரம் நடுதல், அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள் ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன.
மங்கம்மாளின் கோயில் பணிகள்
நல்லாட்சி நடத்திய மங்கம்மாள் சைவசமயக் கோயில்கள் சிலவற்றில் தனது பங்களிப்பை அளித்துள்ளமையை இன்றும் காண்கிறோம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் முன்பாக உள்ள நகரா மண்டபம் மங்கம்மாளால் கட்டப்பட்டதாகும். ஐந்து வேளையும் வழிபாடு நடைபெறும் போது இம்மண்டபத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நகரா (முரசு) என்னும் இசைக்கருவியை முழக்கி ஒலி எழுப்புவதற்காக இம்மண்டபம் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் தென் கிழக்கு மூலையில் உள்ள தூணில் இராணிமங்கம்மாளும், அவளது பெயரன் விசயரங்க சொக்கநாதரும் நிற்பதாக உள்ள திருஉருவச் சிற்பம், இது மங்கம்மாளின் பணி என்பதற்குச் சான்றாகும்.
மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு சிறு மண்டப விதானத்தில் தீப்பட்டுள்ள அம்மையின் திருமணக்காட்சி ஓவியத்தில் மங்கம்மாளின் உருவம் காணப்படுகிறது. இதில் மங்கம்மாளின் அருகில் விசயரங்க சொக்கநாதனும் காட்டப் பட்டுள்ளான். அதில் இருவரது பெயர்களும் தமிழ், தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. எதிர்ப்புறம் திருமணக் காட்சியைக் காணும் மக்களிடையே தளபதி நரசப்பய்யரும் நிற்கிறார். ஆனால், அவரது பெயர் ராமப்பய்யர் எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் கோயிலில் முன் மண்டபம் இராணிமங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்டதாகும். இம்மண்டபத்தின் மேற்கு வரிசைத் தூண் ஒன்றில் முருகன் தேவசேனையின் திருமணக் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இத்தூணின் எதிரில் உள்ள (கிழக்கு வரிசை) தூணில் ராணிமங்கம்மாள் தன் பெயரருடன் நின்று திருமணக் காட்சியைக் கண்டு வணங்குவது போலச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்.
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள அவனியாபுரத்தின் கிழக்கில் அமைந்துள்ள வல்லானந்தபுரத்தில் இராணி மங்கம்மாள் காலத்தில் அனுமார் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும், திருச்சுழிக்கும் ஒரு சாலை மங்கம்மாளால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மங்கம்மாள் சாலை என்று பெயர் இன்றும் வழங்கி வருகிறது. இக்கோயிலின் அருகிலேயே கிணறு ஒன்று இருந்து நடைப்பயணத்து மக்களுக்குத் தாகம் தீர்த்துள்ளது. மங்கம்மாளின் பெயரில் வழங்கிய அக்கிணறும் தற்போது இல்லை.
இன்று மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில் மட்டுமே உள்ளது. இக்கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு கல்லில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டே பல செய்திகளைத் தருகிறது. பலகைக் கல் ஒன்றின் மூன்று புறமும் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு மொத்தம் 86 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. சக வருசம் 1615 (கி.பி. 1693ல்) முத்தியப்ப நாயக்கருக்குப் புண்ணிய மாக அவருடைய புத்திரி மங்கம்மாள் அவநியாபுரத்தில் கட்டின அனுமார் ஆழ்வார், அலங்காரப் பிள்ளையார் கோயில் என்று கல்வெட்டில் கூறப்படுகிறது. இக்கோயிலுக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மங்கம்மாள் காலத்தில் இவ்விரண்டு கோயில்களுக்கும் இரண்டு ‘மா’நிலம் கொடுக்கப்பட்டது.
இக்கோயிலை நிர்வகிக்க ஆந்தேரய கோத்திரத்தைச் சேர்ந்த கேடாழப் பய்யங்கார் புத்திரன் சீனிவாசயங்கார் என்பவர் நியமிக்கப்பட்டார். இக்கல்வெட்டின் அருகிலேயே நடப்பட்டுள்ள மற்றொரு ஸ்தம்பத்தில் இராணிமங்கம்மாளின் திருஉருவம் இடையில் உடைவாளோடும் அஞ்சலிக்கும் கரத்தோடும் வடிக்கப்பட்டுள்ளார். மங்கம்மாளின் வரலாற்றுக்கு இக்கல்வெட்டு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது.
இவ்வாறெல்லாம் சிறப்பாக ஆட்சி செய்த இராணி மங்கமாளின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. மிகத் திறமையாக ஆட்சி செய்த இராணிமங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. பலருடைய தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இராணிமங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார்.
பேரனின் துரோகம்
தனது பேரன் தவறான வழியில் செல்கின்றான் என்பதை அறிந்த இராணி மங்கம்மாள் மனக் கவலையுற்றார். பேரனை நல்வழிப்படுத்தி அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க நினைத்தார் மங்கம்மாள். ஆனால் பேரன் விஜயரங்கனோ தடம்மாறிப் போனான்.
தனக்கும் இராயசம் அச்சையாவுக்கும் தொடர்பிருப்பதாக தனக்கு முன்பாகவே தனது பேரன் விஜயரங்கன் பேசியதைக் கண்ட இராணி மங்கம்மாள் மன வேதனையுற்றார். விஜயரங்கனே தனது பாட்டியின் மீது இத்தகைய இழிவானதொரு கருத்தை அரண்மனை முழுவதும் பரப்பி இராணியின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினான்.
பேரன் விஜயரங்கன் அப்பாவி என்ற நினைப்பு மாறி அவனுக்குள்ளும் விஷம் இருப்பது இராணி மங்கம்மாளுக்குப் புரியத் தொடங்கியது. மிகவும் பெரிய பெரிய ராஜ தந்திரப் பிரச்சனைகளுக்குக் கூடப் பதறாமல் இருந்த இராணி மங்கம்மாள் இந்த இழிந்த அவமானத்திற்காகப் பதறிக் கலங்கினாள். அவள் மனம் சஞ்சலப்படத் தொடங்கியது. சொந்தப் பேரனே, சிறுவயதில் இப்படி அபவாதங்களையும் வதந்திகளையும் நம்பி அதனைப் பரப்பித் தன்னை எதிர்த்துக் கேட்கும்படி ஆகிவிட்டதே என்று வருந்தினாள். யாராவது அவனுடைய மனத்தை அப்படிக் கெடுத்திருப்பார்களோ? என்று எண்ணிக் கவலைப்பட்டாள்.
தனது பாட்டி தனக்கு உரிய வயது வந்தும் அரியணையை ஒப்படைக்கவில்லையே என்று மனம் குமுறினான் விஜயரங்கன். இராணி மங்கம்மாளின் பகைவர்கள் பேரன் விஜயரங்கனைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினர். பகைவர்களின் உள்நோக்கம் அறியாது ஆட்சியின் மீது ஆசை கொண்ட விஜயரங்கன் எடுப்பார் கைப்பிள்ளையானான். இராணி மங்கம்மாளின் நற்செயல்களுக்குத் தடைகளை ஏற்படுத்தினான்.
அவன் அடிக்கடி பாட்டியிடம் வந்து எதிர்த்துப் பேசினான். தர்மசங்கடமாகப் பல கேள்விகளைக் கேட்டான். தனக்கு உடனே முடிசூட்டுமாறு வற்புறுத்தினான். இராணி மங்கம்மாளை வசை பாடினான். பாசத்துக்கும் ஆத்திரத்திற்கும் நடுவே சிக்கித் திணறினாள் இராணி மங்கம்மாள். அவளுடைய மனநிம்மதி அறவே பறிபோனது. அவனைத் திருத்துவதற்கு எவ்வளவோ இராணி மங்கம்மாள் முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பாக அவன் செயல்பட்டான்.
இராணி மங்கம்மாளைச் சிறை செய்தல்
விஜயரங்கன் யாரும் அறிய முடியாத ஒதுக்குப்புறமான மறைவிடம் ஒன்றில் போய்த் தங்கிக் கொண்டு தன் நண்பர்களையும் தன்னோடு ஒத்துழைத்த கலகக்காரர்களையும் சந்தித்துப் பேசினான். இராணி மங்கம்மாளின் ஆட்சியை எப்படி ஒழிப்பது என்று திட்டமிடலானான். பாட்டியைத் தன் விரோதி என்றே தீர்மானித்திருந்தான் விஜயரங்கன். தன்னைப் பற்றி பாட்டிக்கு நல்லெண்ணம் எதுவும் இருக்க முடியாது என்றே அவன் முடிவு செய்து விட்டான். அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் சதியாலோசனைகளைத் தொடர்ந்தார்கள்.
அரண்மனையில் இருந்த படைவீரர்களையும் படைத்தலைவர்களையும் மறைமுகமாக மிரட்டி அவர்களைத் தன் சதிவேலைக்குப் பயன்படுத்திக் கொண்டான் விஜயரங்கன். அரண்மனை முழுவதும் விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தனது கட்டுப்பாட்டுக்குள் அரண்மனை வந்தவுடன் தனக்குத்தானே அரசனாக இரகசியமாக விஜயரங்கன் முடிசூட்டிக் கொண்டான். தனது பாட்டியை அவளது அந்தரங்க அறையிலேயே சிறைக் கைதியாக்கினான்.
பேரன் விஜயரங்கனின் செயலைக் கண்டு பதறிப் போனாள் இராணி மங்கம்மாள். தான் பாலுட்டி சீராட்டி வளர்த்த தன் பேரனா இவ்வாறு நடந்து கொள்கிறான்? என்ற வியப்பு ஒருபுறம், அநியாயமாகப் பகைவர்களின் வஞ்சக வலையில் பேரன் வீழ்ந்துவிட்டானே என்ற பாச உணர்ச்சி மறுபுறம் இராணி மங்கம்மாளை வாட்டியது. தான் வளர்த்த பேரனாலேயே இராணி மங்கம்மாள் சிறை வைக்கப்பட்டாள்.
சுதந்திரமாக வளர்ந்து பேரரசனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் மறைந்த பின்னும் அந்தப் பேரரசைத் தன்னந்தனியே வீராங்கணையாக நின்று கட்டிக்காத்து, முடிவில் சொந்தப் பேரனாலேயே இப்படிச் சிறை வைக்கப்பட்ட கொடுமை அவள் மனத்தைப் பிளந்தது. அவள் மனம் புழுங்கினாள். தவித்தாள். குமைந்தாள். குமுறினாள்.
தன்மேல் விசுவாசமுள்ள யாராவது பேரனுக்குத் தெரியாமல் தன்னை விடுவிக்க வருவார்கள் என்று நம்பினாள் அவள். அரண்மனையிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள யாரும் சுயமாக இயங்கமுடியாதபடி விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிட்டதால் அவள் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று அவளுக்கு யாரும் வந்து சொல்லக்கூட முடியவில்லை. இந்தத் தனிமையும் நிராதரவுமே பேரனின் துரோகத்தை விட அதிகமாக அவளைக் கொடுமைப்படுத்தின. அவள் மனம் ஒடுங்கி உணர்வுகள் செத்து நடைப் பிணமாகச் சிறையில் இருந்தாள். அவள் மான உணர்வு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்திரவதை செய்தது.
மங்கம்மாளின் இறுதிக் காலம்
"வாழ்க்கையில் இவ்வளவு தான தர்மங்களைச் செய்தும் எனக்கு இந்தக் கதியா? கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் இத்தனைப் பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாக்குகிறாய்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்ததில்லையே! என் பேரனுக்குப் பக்குவமும் வயதும் வந்ததும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கலாம் என்றுதானே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்? எனக்கா இந்தத் தண்டனை?" என்று எண்ணி எண்ணி மனம் நொந்தாள் ராணி மங்கம்மாள்.
அவள் அந்தச் சிறைச்சாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள். வேளா வேளைக்கு அன்ன ஆகாரமும் பருக நீரும் கூடத் தருவாரில்லை. இதுவரைத் தன் பகையரசர்களிடம் கூடப் படாத அவமானத்தைச் சொந்தப் பேரப்பிள்ளையிடம் படுகிறோமே என்ற எண்ணம் இராணி மங்கம்மாளை அணு அணுவாகச் சிதைத்து நலிய வைத்தது. பேரன் மகா அயோக்கியனாக, மாபாதகனாக இந்த இளம் வயதிலேயே உருவெடுத்து இப்படிக் கெடுதல்கள் செய்வான் என்பது அவள் கனவிலும் எதிர்பாராத அதிர்ச்சியாயிருந்தது.
உண்ண உணவின்றியும் பருக நீரின்றியும் இருந்த இராணி மங்கம்மாள் வருந்தினாள். சில நாட்களுக்குப் பின் யாரோ இரக்கப்பட்டு அவளுக்கு உணவும் தண்ணீரும் தர ஏற்பாடு செய்தார்கள். அப்புறம் சில நாட்களில் பேரனால் அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது.
தான் கட்டிய சிறைக்குள் இராணி மங்கம்மாள் அடைக்கப்பட்டு எலும்பும் தோலுமாக நலிந்து மெலிந்து போனாள். அந்தப்புரத்தின் ஒதுக்குப்புறமான படுக்கையறையிலேயே அவளுடைய துயரம் நிறைந்த இறுதி நாட்கள் ஒவ்வொன்றாகக் கழியலாயின.
தனது பாட்டியை பேரன் விஜயரங்கன் சிறையில் வந்து பார்க்கவில்லை. மற்றவர்களும் யார் என்ன ஆனார்கள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. இறுதிக் காலத்தில் அநாதையாக மங்கம்மாள் விடப்பட்டாள். தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம், தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்ற உணர்வே மங்கம்மாளைச் சரிபாதியாகக் கொன்று விட்டிருந்தது. இத்தனைக் கொடுமைகளை அடையத் தான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுள் அழுகை குமுறியது.
பேரனோ பாட்டியின் தவிப்புகளையும், வேதனைகளையும் அறியாமல் அவளுக்குப் பருக நீரும், உண்ண உணவும் கூடத் தரக்கூடாது என்று கடுமையான உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் ஈவு இரக்கமே இல்லை. பாட்டியைத் தன் முதல் எதிரியாகவே பாவித்து நடத்த ஆரம்பித்திருந்த அவனுக்கு அறிவுரை கூற முதியவர்களும், பெரியவர்களுமாக எவருமே அப்போது அந்த அரண்மனையில் இல்லை. இருந்தவர்கள் அற்பனான அவனுக்கு எதையும் எடுத்துக் கூறப் பயந்தார்கள்.
அறிவுரை கூறியவர்களை விஜயரங்கன் கடுமையாகப் பேசித் தண்டித்தான். அதனால் அவனுக்கு யாரும் அறிவுரை கூற முன்வரவில்லை. விஜயரங்கன் ஈவு இரக்கமற்றுக் குரூரமாகவும், கொடூரமாகவும் நடந்து கொண்டான். நாளாக நாளாக அவனது குரூரம் அதிகமாகியதேயன்றி ஒரு சிறிதும் குறையவில்லை. பாட்டியைச் சித்திரவதை செய்தே தொலைத்து விடுவது என்னும் வெறி அவனுள் மூண்டிருந்தது. பாட்டியைச் சிறை வைத்திருந்த அறைக்குள் உணவு பருகத் தண்ணீர் எதுவும் வழங்கலாகாது என்ற முதலில் தடை விதித்திருந்த விஜயரங்கன் பின்பு அதை விடக் கொடூரமான வேறொரு முறையைக் கையாண்டான். அதைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் கண்டவர்கள் எல்லாரும் மனம் வருந்தினார்கள். அருவருப்பு அடைந்தார்கள்.
இராணி மங்கம்மாள் சிறைபடுத்தப்பட்டிருந்த அறை வாசலில் அறுசுவை உணவை அவள் பார்வையில் படும்படி வைக்குமாறு கூறி அவளுக்கு உண்ணக் கொடுக்காமல் தவிக்கவிடச் செய்தான் விஜயரங்கன். பசியையும் தாகத்தையும் விடக் கொடியது பசிக்கும் தாகத்துக்கும் அருமருந்தான உணவையும் நீரையும் எதிரே வைத்துவிட்டு உண்ணவும், பருகவும் விடாமல் தடுப்பது தான். அந்தக் கொடுமையைத் தன் பாட்டிக்குச் செய்து, அவள் பசியாலும் தாகத்தாலும் தவித்துத் துடிதுடிப்பதைத் தன் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான் விஜயரங்கன். உணவையும், தண்ணீரையும் கண்முன்னால் காண்பித்துவிட்டுக் கொடுக்காமலே அவளை வதைக்கும் சித்திரவதை தொடர்ந்தது.
ராணி மங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை. 'இத்தனை தான தர்மங்களைச் செய்த புண்ணியவதிக்கா இந்தக் கதி நேர்ந்தது?' என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அனுதாபமாகப் பேசிக் கொண்ட மக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அனுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்றுவிட்டன.
ராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடக்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த நெருப்பாயிருந்த இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம்.
ஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, 'ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்' என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள். இருந்தாலும் இராணி மங்கம்மாள் மீது வைத்திருந்த மதிப்பினால் அவர்கள் எந்தக் கலகத்திலும் ஈடுபடவில்லை. பேரனால் கொடுமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட இராணி மங்கம்மாள் புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் கதை முடிந்துவிட்டது. பதினெட்டு ஆண்டு காலம் மதுரைச் சீமையை ஆண்ட மகாராணி 1706-ஆம் ஆண்டு மரணம் அடைந்தாள்.
தன் வாழ்வின் இறுதியில் பேரனின் சூழ்ச்சியால் அவள் அடைந்த கொடுமைகள் வரலாற்றில் மெல்ல மெல்ல மறைந்து மங்கிப் போயின. ஆனால் அவள் ஆண்டது, புகழ் பரப்பியது, தானதருமங்கள் செய்தது ஆகியவையே வரலாற்றில் நிலைத்து நின்றன.
கோடரிக்காம்பின் அழிவு
விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசரப் புத்தியாலும் ஆத்திரத்தாலும் நாயக்க சாம்ராஜ்யம் ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலக முடியாத இருள் சூழ்ந்தது. இராணி மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின்படி விஜயரங்க சொக்கநாதன் நாட்டின் வருவாயைப் பெருக்கக் கருதி மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்துக் கொடுமைப் படுத்தினான்.
அவன் இட்ட புதிய வரிப்பளுவைத் தாங்க இயலாமல் மதுரை மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சிகளும் கலகங்களும் நாடெங்கும் பரவின. நாட்டில் அமைதி குலைந்தது. முன்பு மங்கம்மாளால் தானமாகக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்களுக்குக் கூட விஜயரங்கன் ஆட்சியில் வரி கொடுக்குமாறு அதிகாரிகளால் மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். தனது இறையிலி நிலத்துக்கு வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது பொறுக்க முடியாமல் கோயில் பணியாளர் ஒருவர் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்று வரலாற்றுக் குறிப்பொன்று குறிப்பிடுகின்றது.
விஜயரங்கனின் ஆட்சித் தொடக்கத்திலேயே நிகழ்ந்த பாட்டி மங்கம்மாளின் மரணமும், கோயில் பணியாளரின் தற்கொலையும் ஆட்சிக்குப் பெரிய அபசகுனங்களாகவும் நேர்ந்து விட்டன! அந்தக் கெட்ட பெயரே தொடர்ந்து நீடித்தது. பின்பு மனம் மாறித் தளவாயும், பிரதானியும் புதிய வரிகளை நீக்கி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி மக்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல பெயர் மீளவில்லை. இழந்தவை இழந்தவையாகவே போயின. விஜயனின் திறமைக் குறைவால் நாளடைவில் ஆட்சியின் எல்லைகள் சுருங்கின. ராஜதந்திரக் குறைபாடுகளால் எதிரிகள் பெருகினர். கவலைகள் அதிகமாயின. ஒன்றும் செய்ய இயலவில்லை. மங்கம்மாள் பதினெட்டு ஆண்டுகள் கட்டிக்காத்த ஆட்சியைப் பதினெட்டு மாதங்கள் கூட விஜயனால் நன்றாக ஆள முடியவில்லை. பாட்டிக்குச் செய்த துரோகம் அவனை மிகவும் வாட்டியது. அவன் செய்த துரோகமே அவனது நெஞ்சைப் பிசைந்து உலுக்கியது.
“தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்”
என்ற திருக்குறளுக்கேற்ப அவனை அவனது மனசாட்சி கூர் முள்ளென உறுத்தியது. தான் பாட்டிக்குச் செய்தது மிகப்பெரிய பாவம் என்று கருதிய அவன், விரக்தியாலும் கவலைகளாலும் தவித்த அவன் பாவம் போக்கத் திடீரென்று பக்திமானாக மாறினான். அவன் மனதிலே நிம்மதி இல்லாமல் போனது.
“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
அமைதி கொள்வதென்பது ஏது?”
அப்படின்னு ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறதா…? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்னு சொல்வது போல்… விஜயரங்கன் மனசு அமைதியிழந்து தவித்தது. அந்தத் தவிப்புத்தான் அவனைப் பக்திமானாக மாற்றியது. பக்திமானாக மாறிய விஜயரங்கன் தன் ஆட்சியின் வசத்திலிருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்துக்களையும் தல யாத்திரைகளிலும், கோயில் திருப்பணிகளிலும் எல்லையற்றுச் செலவழித்தான். மடாலயங்களுக்குக் கொடைகள் வழங்கினான். அரசியல் கடமைகளையும் கவலைகளையும் மறக்கும் போக்கிடமாகப் பக்தியை விஜயரங்கன் பயன்படுத்தியதால் அவனது ஆட்சி மேலும் தேய்ந்தது. நாட்டில் எங்கும் அதிருப்தி மேலோங்கியது. நாட்டில் கலவரங்கள் வெடித்தன. ஆட்சி சீர்குலைந்தது. தனக்குத் துர்ப்போதனை வழங்கியவர்கள் இன்று தன்னைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு நாட்டைக் கொள்ளையடிக்க நினைக்கும் கும்பலுடன் சேர்ந்து விட்டதை அறிந்து விஜயரங்கன் மனம் நொந்தான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? பாட்டிக்குச் செய்த துரோகமே அவனை இறப்பு என்ற குழிக்குள் தள்ளியது. குலத்தைக் கெடுத்த கோடரிக்காம்கான துரோகி தான் செய்த துரோகம் நெஞ்சை உறுத்த மாண்டான். நாயக்கராட்சி அழிவின் விளிம்பிற்குள் வந்தது.
தவறான சந்தேகம், பேராசை, அதிலும் அரசபதவியின் மீது ஆசை இதெல்லாம் சேர்ந்து தன்னை வளர்த்தவங்க என்ற எண்ணம் கூட இல்லாம துரோகம் செய்ய வைத்ததே... இந்தத் துரோகம் வரலாற்றிலே அழியாத கறையாகிப் போனது. காலங்கள் மாறலாம் ஆனால் மனித மனங்கள் மாறவே இல்லை… எதையும் தவறாகப் புரிந்து கொண்டால் மனதிலே சந்தேகம் வந்து விடும். அந்தச் சந்தேகம் பல்வேறு தவறான முடிவுகளை எடுக்க வைத்து விடும். குறிப்பாகத் துரோகம் செய்யத் தூண்டும். அந்தச் சூழ்நிலையிலே எடுத்த தவறான முடிவுகளாலே எதிர்காலம் நிம்மதியில்லாமப் போய்விடும். உண்மை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு மனதிலே இடம் கொடுக்கக் கூடாது என்பதை விஜயரங்கனோட இந்தத் துரோகத்தின் மூலம் நாம் மனதில் நிறுத்திக் கொள்ளலாம்.
நம்மை நம்பியவர்களுக்கு என்றுமே துரோகம் செய்யக் கூடாது, அதோட மட்டுமின்றி எல்லோரையும் எப்பவும் எந்த நேரத்திலும் எளிதாக நம்பி விடக் கூடாது, அப்படி நம்பினால் நாம் நடுத்தெருவுக்குத்தான் போக வேண்டியிருக்கும். நாம் நம்புகிறவர்கள் தீயவர்களாக இருந்தால், அதனால் அவமானம் தான் ஏற்படும். அப்படி ஒரு பெண்ணரசி ஒருவனை நம்பினாள், தான் நம்பியவர்களிடம் புனித நூலில் சத்தியம் வாங்கினாள். ஆனால், அந்தத் துரோகி ஏமாற்றி, நம்ப வைத்துக் கழுத்தறுத்தான். அதனால ஒரு வம்சமே அழிந்து அவர்களின் ஆட்சியதிகாரம் முடிவுக்கு வந்து விட்டது. அது எந்த வம்சத்தோட ஆட்சி...? நம்ப வைத்துக் கழுத்தறுத்த துரோகி யார்...? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற உங்கள் ஆசையை அடுத்த பகுதி வரைத் தள்ளி வைத்துக் காத்திருங்கள்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.