நிக்காஹ் முடிந்தது.
மணமகன் அய்யூப்கானும் மணமகள் நாடியாவும் மேடையில் ஜோடி சேர்ந்து நின்றிருந்தனர்.
மணமகன் நீலநிற புல்சூட்டில் இருந்தான். கால்களில் சர்ச்சில் அண்ட் கம்பனி ஷு. தலையில் அஜ்மீர் ஷரீப் இஸ்லாமிக் தொழுகைத் தொப்பி. தொப்பியில் ஏராளமான எமப்ராய்டரி வேலைகள். தாடியை ட்ரிம் செய்திருந்தான். கண்களில் சுருமா ஈஷியிருந்தான்.
இளம் சிவப்பு நிறப் பட்டுப்புடவை கட்டியிருந்தாள் மணமகள் நாடியா. தலையில் சாட்டின் துணி மரூன் நிற ஸ்கார்ப் அணிந்திருந்தாள். கழுத்தில் நெக்லஸ், கைகளில் வளையல்கள், இடது மணிக்கட்டில் வாட்ச்.
மணமக்களுக்குப் பின்னால் மணமகளின் இளையதங்கை ஹுமைரா நின்றிருந்தாள். பரிசுப் பொருட்களையும் மொய் கவர்களையும் வாங்கி வைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாள்.
ஒவ்வொருவராய் வந்து பரிசளித்துக் கைகுலுக்கினர் முசாபஹா கொடுத்தனர். கொடுத்த பின் ஒளிப்படத்திற்கும் விடியோவுக்கும் போஸ் கொடுத்தனர்.
பரிசுப்பொருள் கொடுக்க நீண்ட வரிசையில் நண்பர்களும் உறவினர்களும்.
ஏர்கூலர் மணமக்களின் முதுகுக்கு பின் நின்று குளிர்மை வீசியது.
வரிசையை மீறி ஓர் இளைஞன் தடபுடவென்று மணமக்களிடம் வந்தான்.
“ஹே… தீபக் நல்லசாமி வாடா...”
‘விரும்பின பொண்ணையேக் கட்டிக்கிட்ட… சந்தோஷம்தானடா...”
வெட்கிச் சிரித்தான் அய்யூப்கான்.
“நான் உனக்கு இரணடு பரிசுப்பொருட்கள் கொண்டு வந்திருக்கிறேன்…. என்ன வென்று யூகி”
“கல்யாண மாப்பிள்ளைக்குக் கண்டதை யூகிக்கிற வேலை எல்லாம் தரலாமா? நீயேச் சொல்லுடா…”
சிரித்தான் நல்லசாமி.
“வைரக்கல் பதிச்ச பத்துகிராம் தங்கமோதிரமும் நாற்பதாயிரம் ரூபா பெறுமானமுள்ள பட்டுவேட்டியும் பட்டுச் சட்டையும்…”
“இவ்வளவு காஸ்ட்லியா எதுக்குடா கிப்ட் எல்லாம் வாங்கற?”
“அத விடு… உன் இடது மோதிர விரலை நீட்டு. மோதிரத்தை மேடையிலேயேப் போட்டு விடுறேன்...”
“பட்டுவேட்டி, பட்டுச்சட்டை?”
“நீ ஹனிமூன் போறப்ப அணிஞ்சு பாத்துக்க”
கிப்ட் பேக்கிலிருந்து மோதிரத்தை எடுத்தான் நல்லசாமி. தலைக்கு மேலே உயர்த்திக் காட்டினான். வைரம் டாலடித்தது.
நீட்டிய விரலில் மோதிரத்தை நுழைக்கும் மைக்ரோ நொடியில்…
ஒரு கை நல்லசாமியின் தோளில் கை வைத்தது. “மோதிரத்தை போடாதே தம்பி…”
சுழன்று திரும்பினான் நல்லசாமி.
மருதாணி பூசிய தாடி வைத்த பெரியவர் முறுவலித்தார்.
“என் நண்பனுக்குப் பரிசு கொடுக்றதை நீங்க ஏன் தடுக்கிறீங்க பெரியவரே”
“காரணமிருக்கு. இஸ்லாமிய ஆண்களுக்கு தங்க ஆபரணங்கள் அணிவதும், பட்டு ஆடைகள் உடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளன தம்பி”
“புரியலப் பெரியவரே...”
“மற்றவர்கள் பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்கு நாம் தடையாய் நிற்க வேண்டாம். பின்னுக்கு வாருங்கள் விளக்கமாகப் பேசலாம்...”
“வந்திட்டேன் இப்பச் சொலலுங்க...”
“இஸ்லாமிய ஆண்கள் தங்கநகை அணிஞ்சு பார்த்திருக்கியா?”
“மைனர் செயின், பிராஸ்லெட், மோதிரம், தங்கக் கடிகாரம் அணிந்த சில முஸ்லிம் நண்பர்கள் எனக்கு உண்டு. நிறைய இஸ்லாமியத் திருமணங்களில் பெண் வீட்டார், மாப்பிள்ளைக்கு ரோலக்ஸ் வாட்ச், மைனர் செயின் மோதிரம் பரிசளிப்பதைப் பார்த்திருக்கிறேன்”
“நீ சொல்லும் நபர்கள் வெறும் இஸ்லாமியப் பெயர் தாங்கிகள். ஈமான் கொண்டோர் இஸ்லாம் தடை செய்யப்பட்ட விஷயங்களைக் கனவிலும் கூடச் செய்யத் துணிய மாட்டார்கள்”
“நீங்க வேற… நிறைய மாப்பிள்ளைகள் தங்கத்தில அருநா கொடிகள் கேக்கிரான்க...”
“பேராசைக்காரர்கள்”
“சரி... தெரியாமத்தான் கேக்கிறேன். உங்க நபிகள் நாயகம் தங்க ஆபரணங்கள் அணிந்தாரா இல்லையா?”
“இல்லை அவர் வெள்ளியினால் ஆன முத்திரை மோதிரம்தான் அணிந்திருந்தார்”
“தடை ஆண்களுக்கு மட்டும்தானே...”
“ஆமாம்... பெண்கள் தங்கநகை அணிய ஒரு தடையும் இல்லை”
‘ஏனிந்தத் தடை?”
“தங்கம் செல்வத்தின் அடையாளம்… இஸ்லாமிய ஆண்கள் ஆடம்பரத்திலிருந்து விலகி நிற்க இஸ்லாம் கூறுகிறது. ஆடை அணிகலன் அணிவதில் இஸ்லாமிய ஆண்கள், இஸ்லாமியப் பெண்களை நகல் எடுக்கக்கூடாது. ஆண்களைப் பின்பற்றும் பெண்களையும், பெண்களைப் பின்பற்றும் ஆண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்”
“வேறெந்த உலோகத்தாலும் இஸ்லாமிய ஆண்கள் மோதிரம் அணியக் கூடாதா?”
“தங்கம் அல்லாத வெள்ளி, பிளாட்டினம், இரும்பு உலோகங்களில் இஸ்லாமிய ஆண்கள் மோதிரம் அணியலாம்”
“நாலஞ்சு மோதிரம் அணியலாமா?”
“தப்ஸ் அடிக்கும் பக்கீர்கள் இரு கைவிரல்களிலும் ஏழெட்டு வெள்ளிமோதிரங்கள் அணிந்திருப்பர். கழுத்தில் பாசிகளாலான மாலைகள்… இவர்கள் அஜ்மீர் பக்கீர்கள்... ஆனால் எனக்குத் தெரிந்த வரை இஸ்லாமிய ஆண்கள் ஒரே ஒரு வெள்ளி மோதிரம்தான் போடலாம். எடை நான்கு கிராம்களுக்கு மிகக் கூடது”
“வெள்ளி மோதிரங்களில் கல் பதிக்கலாமா?”
“தாராளமாகப் பதிக்கலாம். ரத்தினக்கல், பச்சைக்கல், கறுத்த உயிரகை கனிப்பொருள், பலவண்ண படிகக்கல்கள், பச்சைமணிக்கல், மரகதம், மாணிக்கக்கல் பதிக்கலாம்’
“ஓஹோI”
“இஸ்லாமிய முறையில் நோய் குணப்படுத்தும் முறை ஒன்று உள்ளது, அதனை ‘ருக்பா’ என்பர், குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஓதி நோயைக் குணப்படுத்துதல். இம்முறையில் குணப்படுத்துபவர்களை ருக்யா மருத்துவர்கள் எனக் கூறலாம். இவர்கள் ஏராளமான தங்கமில்லாத வேறு உலோக மோதிரங்களையும் மணிமாலைகளையும் அணிந்திருப்பர்…”
“அப்படி என்றால் இஸ்லாமிய ஆண்கள் தங்கத்தைத் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதிக்கபட மாட்டார்களா?”
“மறுமையில் சொர்க்கம் புகும் ஆண்களுக்குத் தங்கத்தால் ஆன ஆடை அணிவிக்கப்படும்”
“இம்மையில் இஸ்லாமிய ஆண்கள் பங்கரையாகத் திரிய வேண்டுமா?”
“அல்லாஹ் தன் அடியார்கள் மீது வள்ளண்மையும், அருட்கொடை மிளிர்வதையும் ரசிக்கிறான். தங்க நகை அணிவதுதான் ஆண்மையா? சுத்தமாக, ஆரோக்கியமாகப் புத்தாடை அணிந்து அத்தர் பூசி மிடுக்காய் இஸ்லாமிய ஆண் நகர்வலம் வரலாம்.”
“தங்க நகை கூடாது என்பதில் யாருக்காவது விதிவிலக்கு உண்டா?”
“விலக்கப்பட்ட பொருட்களில் நிவாரணம் கிடையாது என்கிறது இஸ்லாம்”
“பட்டு ஆடைகளும் இஸ்லாமிய ஆண்களுக்கு விலக்கப்பட்டவையா?”
“ஆமாம்… ஆண்மை பகட்டு ஆடையில் அல்ல. பெற்றோரை, மனைவி, மக்களைப் பேணிக் காப்பதில்… இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றுதலில் ஆண்மை பளிரிடுகிறது”
“ஆண்கள் தங்கநகை அணியகூடாது என்பதில் மருத்துவக் காரணங்கள் உண்டா?”’
“உண்டு... ஆண்கள் தங்கநகை அணிந்தால், ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்கிற தகவலும் உண்டு”
“தங்கம் அணியக்கூடாது, பிளாட்டினம் அணியலாம் என்கிறீர்கள் இரண்டும் சமமான விலை மதிப்பு உள்ளவைதானே?”
“விதாண்டாவாதம் எதற்கு? பிளாட்டினம் ஆடம்பரம் என்றால், அதனையும் அணியாமல் தவிர்க்கலாமே? வெள்ளிநகை நான்குகிராம் எடைக்குள் இருக்க வேண்டும் என்பதனை ஒத்துக்கொள்ள முடியாது. எத்தனைக் கிராம் வெள்ளிநகையும் அணியலாம் என்கிற பிரிவினர் எங்களிடம் உண்டு...”
“மகிழ்ச்சி. மார்க்க விஷயத்தை பற்றி ஏராளமான விஷயங்களை கூறி என்னைத் தெளிவுபடுத்துனீர்கள். மோதிரத்தை மணப்பெண்ணுக்கு அளித்து விடலாமா?”
“மோதிரத்தை மாப்பிள்ளையின் விரல் அளவுக்கு வாங்கியிருப்பீர்கள். தவிர, நீங்கள் மாப்பிள்ளையின் தோழர். மணப்பெண்ணுக்கு நீங்கள் பரிசளிப்பது எப்படிச் சரியா இருக்கும்?”
“அதுவும் சரிதான்”
தீபக் நல்லசாமி தனது சகாவை அழைத்துக் கொண்டு பைக்குக்கு பாய்ந்தான். பைக் சீறிப்பாய்ந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் திரும்பினான் நல்லசாமி.
“நண்பாI உனக்கு வைரக்கல் பதித்த பிளாட்டினம் மோதிரமும், பனிரெண்டு ஆயத்தஆடை மேற்சட்டைகளும் காற்சட்டைகளும் வாங்கி உள்ளேன்”
சிரித்தான் அய்யூப்கான்.
“உனக்கேன் இவ்வளவு சிரமம்...”
“அல்லாஹ்வின் அருளால் நீயும், சகோதரியும் இரு குழந்தைகள் பெற்று நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்”
கை குலுக்கினான். க்ளிக்I க்ளிக்I ஒளிப்படங்கள் பிரசவித்தன.
வீட்டுக்கு வந்த தீபக் நல்லசாமி தன் கழுத்தில் இருந்த பத்து பவுன் புலிநக மைனர் செயினையும், 24கிராம் நான்கு மோதிரங்களையும், ஒரு தங்க கடிகாரத்தையும் கழற்றி மனைவியிடம் தந்தான். “பீரோல பூட்டி வை.”
“ஏங்க என்னாச்சு?”
“பெண்கள் மாதிரி ஆண்கள் நகை அணிவது ஆண்மைக்கு இழுக்கு என்பது எனக்குமான பாடம்தான்… இனி ஒருபோதும் ஒரு பொட்டு தங்கம் அணியமாட்டேன்” சூளுரைத்தான் நல்லசாமி.