ஸ்கூட்டியில் சீறி பாய்ந்தாள் ஃபமிதா ஷஹர். வயது 22. உயரம் 150 செமீ. ரோஜா குல்கந்து உருவத் தோற்றம். பின்னுக்கு நீண்ட தலைக்கேசம். ஆயிஷா நாச்சியார் கண்கள்.
ஒரு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி ஸ்டாண்டிட்டாள் ஷஹர்.
லட்டு உருண்டைகள் கொண்ட டப்பாவை எடுத்துக் கொண்டாள். அந்த வீட்டுக்குள் நடந்தாள் ஃபமிதா ஷஹர்.
சாச்சி முனிபா ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளது மகளும் மருத்துவர் மருமகனும் மருத்துவர்.
வாலிபத்தில் பேரழகியாக திகழ்ந்தவள்.
“சாச்சி! அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம். ஃபமிதா ஷஹரா? வா… என்ன இவ்வளவு தூரம்?”
முனிபாவின் முகத்துக்கு நேராகவும் ஃபமிதாவின் முதுகுக்கு நேராகவும் ராகீலா நின்றிருந்தாள். ராகீலா 65 வயது முதியவள். முனிபா வீட்டில் வேலை பார்ப்பவள்.
“இளங்கலை பல் மருத்துவத்தை தங்கப் பதக்கம் வென்று முடித்துள்ளேன்!”
“பல் டாக்டர் தானே? மெயின் மருத்துவ படிப்புகளை விட டென்டல் ஒரு படி கீழ்தானே?”
“அப்படி யார் சொன்னது? ஒரு இதயத்தின் பிரச்சினைகளை சரி பண்ண படித்தால் அவர் கார்டியாலஜிஸ்ட். ஒரு மனிதனின் 32 பற்களின் பிரச்சனைகளைச் சரி பண்ண படித்தவன்/ ள் ஒரு டென்டிஸ்ட். பல் பராமரிப்புக்கும் இருதய ஆரோக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. நான் தொடர்ந்து எம்டிஎஸ் மற்றும் பிஹெச்டி பண்ணுவேன்!”
ஃபமிதாவுக்கு தெரியாமல் உதட்டைச் சுழித்தாள் முனிபா.
ஒரு இழிவான முகபாவத்தை ராகீலாவிடம் காட்டினாள். நாக்கை நீட்டி வழிப்பம் செய்தாள். உடலை ஒரு மாதிரி ஆட்டி காட்டினாள். கண்களால் ஜாடை செய்தாள்.
‘என்னவோ பெருசா படிச்சுக் கிழிச்ச மாதிரி பீத்திக்கிறா?’
“லட்டு எடுத்துக்கங்க சாச்சி!”
“கிருஷ்ணா ஸ்வீட்ஸ் லட்டா?”
“இல்ல… வேற கடை…”
“எனக்கு தான் சுகர் இருக்கே.. லட்டு வேணாம்மா!”
“எப்பவாவது ஒரு நாள் ஒரு லட்டு சாப்பிட்டால் ஒண்ணும் ஆய்டாது. சாப்பிடுங்க சாச்சி!”
லட்டை எடுத்து ஊட்டினாள் ஃபமிதா ஷஹர்.
இடது கையில் அப்படியேத் துப்பி விரல்களை மூடிக்கொண்டாள் முனிபா.
“என் எதிர்காலம் சிறக்க அல்லாஹ்விடம் துஆ பண்ணுங்க சாச்சி!”
பற்களை நறநறவென கடித்தாள் முனிபா. “துவாதானே பண்ணிடலாம்…”
“நான் புறப்படுகிறேன் சாச்சி!”
“இம்!”
மீண்டும் 500 ரூபாய் நோட்டுகளை எண்ண ஆரம்பித்தாள் முனிபா. வெளி வாசலுக்கு நடக்கும் ஃபமிதாவை பின் தொடர்ந்தாள் ராகீலா.
திரும்பி ராகீலாவை பார்த்துவிட்டாள் ஃபமிதா.
“ஆஹா… உங்களை மறந்துட்டேன் ராகீலா நன்னி… லட்டு எடுத்துக்கங்க… நான் பிடிஎஸ் பாஸ் பண்ணிட்டேன்!”
“எனக்கு ஒரு நாள் பல்செட் கட்டிவிடும்மா…”
“ப்ரீயாகவே செஞ்சு தரேன்.. நீட் எழுதுற வரைக்கும் ஒரு டென்டல் கிளினிக்லதான் வேலை பாக்கப் போறேன்”
“நன்றி செல்லம்… உனக்கொரு விஷயம் சொல்லத்தான் ஓடோடி வந்தேன்!”
“சொல்லுங்க நன்னியம்மா!”
“உங்க சாச்சிக்கு அவளோட மகள் மருமகன் தவிர யாரும் உங்க குடும்பத்ல டாக்டரா இருக்க கூடாதுன்னு நரி விருப்பம். நீ பிடிஎஸ் படிச்சது அவளுக்கு படுஅதிருப்தி. இன்னும் ஒரு மாசத்துக்கு நிம்மதியா தூங்க மாட்டா. அவ சட்டில மொஹல் பிரியாணி இருந்தாலும் அடுத்தவங்க சட்டியில கம்பங்கூழ் இருக்கவும் பொறுக்க மாட்டா உன் சாச்சி…”
“அப்படியா?”
“நீ கொடுத்த லட்டை தின்னாளா அவள்? நீ ஊட்டி விட்டதை கூட இடது கைல துப்பி மறைச்சிட்டா..”
“ஓஹோ!”
“நீ பேசும்போது அவ என்கிட்ட காட்டின எக்ஸ்பிரஷன்கள் எல்லாம் பார்த்திருந்த நொந்து நூலா போயிருப்ப…”
“கத்தியால குத்தினாலும் தாங்கிப்பேன் குத்துறது சாச்சியாச்சே?”
“உங்க சாச்சி மாதிரி கேரக்டர்களை இஸ்லாம் என்ன பெயரிட்டு அழைக்குது தெரியுமா?”
“தெரியாது!”
“உங்க சாச்சி ஒரு முனாபிக்!”
“அப்டின்னா?”
“யர்பூ என்கிற மணல் எலி ஒன்று இருக்கிறது. அது இரு இடங்களில் குழி தோண்டி உள்ளே இரண்டையும் இணைத்து ஒரு வளையாக ஆக்கிக் கொள்ளும். எதிரியைக் கண்டால் ஒரு குழிக்குள் நுழைந்து இன்னொரு குழி வழி ஓடிவிடும். ஒரு குழி பெயர் நாபிகா. இன்னொரு குழி பெயர் காசிஆ. நாபிகா என்கிற வார்த்தை முனாபிக் என மாறியது!”
“எங்க சாச்சியை பெரிய வார்த்த எல்லாம் சொல்லி அவதூறு பண்ணாதீங்க நன்னிம்மா!”
“நான் உங்க சாச்சிகிட்ட 22 வருஷமா வேலை பாக்றேன்… யார் வளர்ச்சி கண்டும் உங்க சாச்சி சந்தோஷப்பட்டதில்லை. பொறாமை பொறாமை பொறாமை தான். முனாபிக்குக்கான அடையாளங்களை சொல்கிறேன் கேள்…”
கண்களை அகலத்திறந்தாள் ஃபமிதா ஷஹர்.
“முனாபிக்குகள் என்னென்ன செய்வார்கள் என பட்டியலிடுகிறேன் கேள்… பொய்கள் பேசுவார்கள். வாக்குறுதி மீறுவார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்வார்கள். வாதத்தில் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். குணக்கொலை நிகழ்த்துவார்கள். சண்டையை ஆரம்பித்து வைத்துவிட்டு நடிப்பார்கள். சோம்பலான நாடக இறைவணக்கங்கள் செய்வார்கள். ஆடம்பர ஆடை அலங்காரப் பேச்சு தூய்மையற்ற இதயம் கொண்டவர்கள். மொத்தத்தில் இரட்டை முகம் இரட்டைப் பேச்சு… இந்த அத்தனைக் கெட்டக் குணங்களும் உன் சாச்சியிடம் மண்டிக் கிடக்கிறது!”
“உறவினர்களில் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்… நாம்தான் சகித்துப் போவனும் நன்னிம்மா!”
“நரகத்தின் அடித்தளத்தில் முனாபிக் எனும் நயவஞ்சகர்கள் வெந்து சீரழிவார்கள்!”
“ஓ!”
“முனாபிக்குகள் மந்தையில் கள்ள ஆடுகள். முனாபிக்குகள் வேஷதாரிகள். முனாபிக்குகள் போலி முஸ்லிம்கள். முனாபிக்குகள் பாசாங்குகாரர்கள் நயவஞ்சகர்கள் பொய் சத்தியம் செய்பவர்கள். அராஜக ஆட்சியாளர்களோடு கூட்டு சேர்வார்கள். ஒரு முனாபிக்கை முதலாளி என அழைக்கக் கூடாது….”
சிரித்தாள் ஃபமிதா ஷஹர்.
“என்ன நன்னிம்மா உங்களுக்கும் எங்க சாச்சிக்கும் சண்டையா? எங்க சாச்சியை கழுவிக்கழுவி ஊத்றீங்க? ஆண்களில் முனாபிக் இருக்கலாம் பெண்களிலுமா முனாபிக் இருக்கிறார்கள்?”
“நியாயமான காரணமின்றி விவாகரத்தும் திருமணமும் கோரும் பெண்கள் முனாபிக்குகளே!”
“அவ்வளவுதானே நான் போகலாமா?”
“முனாபிக்குகள் குழப்பமான மனம் உடையவர்கள் இன்பத்தின் மயக்கத்தில் திளைப்பவர்கள். தற்பெருமை கொண்டவர்கள். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்வார்கள். பதட்டமான தடுமாற்ற மனதுடனேயேத் திரிவார்கள். நயவஞ்சகம் பேச்சிலும் நடத்தையிலும் மட்டும் செய்ய மாட்டார்கள். கண்களாலும் செய்வார்கள். கண் ஜாடை, கண் சிமிட்டல், உதடு சுழிப்பு மூலம் நெகட்டிவ்விட்டியைப் பரப்புவார்கள்!”
“ஓவ்!”
“நயவஞ்சகர்களுக்குக் கீழ்படியாதே, அவர்களைப் புறக்கணி, அவர்களிடம் வாக்குவாதம் பண்ணாதே அவர்களின் துர்நடத்தையை இழிவாகப் பேசு, அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதே”
“நயவஞ்சகத்தை எப்படிச் சாத்வீகமாக வெல்லலாம்?”
“40 நாள் தினசரிக் கூட்டுத் தொழுகை. பரோபகாரம் இரவில் பிரார்த்தனை. ஜிஹாத் திக்ர் துஆ அன்சாரி மீதான அன்பு. அலி இப்னு அலி தாலிப் மீதான அனபு…”
“பேசி முடிச்சிட்டீங்களா நன்னியம்மா. நெருங்கிய உறவுகளில் யார் முனாபிக் என்கிற ஆராய்ச்சி தேவையற்றது. பொறாமையும் சுயநலமும் இல்லாத மனிதர்கள் ஏது? இளங்கலை பல் மருத்துவத்தில் நான் தேர்வான விஷயத்தை இனிப்புடன் பகிர்ந்து கொள்ள சாச்சியிடம் வந்தேன். சாச்சியின் உள்ளக்கிடக்கை இறைவன் அறிவான். சாச்சியின் மகள் மருமகன் தவிர நான்கைந்து பேர் நம் குடும்பத்தில் மருத்துவராய் உள்ளனர். இரண்டு மூன்று பேர் மருத்துவம் படித்தும் வருகின்றனர். யார் முன்னேற்றத்தையும் யாரும் குறுக்கேப் படுத்துத் தடுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்”
உள்ளே... முனிபாவின் காலடியில் ஊர்ந்து வந்த நட்டுவாக்கலி முனிபாவின் கால் விரலில் கொடுக்கால் ஒரு போடு போட்டது.
முனாபிக் முனிபா வானம் வெடிக்க வலி தாளாது ஊளையிட்டாள்.