பூனைமலை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்.
கேனன் இஒஎஸ் ஆர் 5 மார்க் டிஜிட்டல் கேமிரா நின்றிருந்தது.
தலையில் ‘நான் ஒரு கேமரா ஓவியன்’ வாசகங்கள் கூடிய தொப்பி அணிந்து நின்றிருந்தார் கேமிராமேன்.
ஆங்காங்கே ரிப்ளக்டர்கள்.
படப்பிடிப்பின் ஒட்டுமொத்த ஒலியையும் பதிவு செய்யும் ஒலிப்பதிவுக் கருவி.
இயக்குனர் சாரா புதியவன் நடிகர் கிருஷ்ணராஜாவிடம் காட்சியைப் பற்றி விளக்கினார்.
“காட்சிப்படி நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்களைக் குளிக்க வைத்துக் கபன் துணி போர்த்தி சந்தூக்கில் கிடத்தி பள்ளிவாசலுக்கு ஜனாசா தொழுகைக்குத் தூக்கி வருகிறார்கள்!”
“சின்னச் சந்தேகம். கபன்துணி என்றால் என்ன? சந்தூக்கு என்றால் என்ன? ஜனாசா தொழுகை என்றால் என்ன?”
“நல்லடக்கம் செய்யவிருக்கும் ஒரு இஸ்லாமியனின் உடலை முழுவதும் போர்த்தும் காடாதுணி கபன் துணி. சந்தூக்கு என்பது நான்கு முனைகளில் நான்கு அல்லது எட்டு பேர் பிரேதத்தை சுமந்து செல்லும் மரப்பல்லாக்கு. ஜனாஸா தொழுகை இறந்தவருக்காக நடத்தப்படும் அஞ்சலி தொழுகை!”
“புரிகிறது, காட்சியைச் சொல்லுங்கள்!”
“உங்களை கபன்துணி போர்த்தி சந்தூக்கில் உறவினர்கள் தூக்கி வரும் போது பள்ளிவாசலின் வெளிவாசலில் மறிக்கப்படுகிறீர்கள். மறிப்பவர்கள் உங்கள் இரு மூத்த மகன்கள். ‘இறந்த செய்தியை எங்களுக்கு சொல்லாமல் சவ அடக்கம் செய்ய எங்கத்தாவை ஏன் பள்ளிக்குக் கொண்டு வந்தீர்கள்’ என சண்டை இடுகிறார்கள்!”
“சரி… நான் இந்தச் சண்டைக்கு இடையே சந்தூக்கில் அமைதியாக படுத்திருக்க வேண்டும் இல்லையா?”
“ஆமாம்! இந்த ‘மாஷா அல்லாஹ்’ படம் உங்கள் சினிமா கேரியருக்கான செகன்ட் இன்னிங்ஸ்!”
இருபது பேர் ஊர்வலம்.
எட்டு பேர் சந்தூக்கை தூக்கி வர, பள்ளியின் வெளிவாசலில் இரு மகன்களாய் நடிக்கும் நடிகர்கள் ஊர்வலத்தை இடைமறிக்கின்றனர்.
“ஸ்டார்ட்! கேமிரா! ஆக்ஷன்!”
காட்சி ஓடும் போது ஒரு கர்ணக்கடூரகுரல் சாரா புதியவனை உலுக்கியது.
“நிறுத்துங்க இந்த ஷுட்டிங்கை!”
“கட்! கட்!” இயக்குனர் குரல் வந்த திசைக்கு திரும்பினார்.
தலைகேசத்துக்கும் தாடிக்கும் ஆரஞ்சு நிற டை அடித்த 70 வயது முதியவர் காட்சியமைப்புக்குள் தோன்றினார்.
“அஸ்ஸலாமு அலைக்கும்! யார் நீங்க?”
“நான் இந்த பள்ளிவாசல் முத்தவல்லி!”
“என்ன விஷயம்? ஷூட்டிங்கை ஏன் இடைமறிக்கிறீர்கள்?”
“நீ இந்த படத்தின் டைரக்டரா?”
“ஆமா!”
“உன் பேர் என்ன?”
“சினிமாவில் என் பெயர் சாரா புதியவன். இயற்பெயர் காஜாமைதீன். சொந்த ஊர் கடையநல்லூர். இது என் நான்காவது படம். இந்தப் படம் மூலம் இஸ்லாமியரின் வாழ்வியலை வெகுஜனப் பார்வைக்குக் காட்சிப்படுத்தப் போகிறேன்!”
“இதெல்லாம் நான் கேட்டேனா? யாரை கேட்டு எங்கள் பள்ளிவாசலில் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்? பள்ளியின் சந்தூக்கை நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள்?”
“படப்பிடிப்புக்கு உங்கள் பள்ளிவாசலின் பொருளாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றுள்ளோம். பள்ளிவாசலின் வளர்ச்சி நிதிக்கு 25000 ரூபாய். ஹதியா கொடுத்துள்ளோம்!”
“ஒரு பள்ளியில் முத்தவல்லி பெரியவரா, பொருளாளர் பெரியவரா”
“அல்லாஹ் பெரியவன்!”
“உங்கள் படப்பிடிப்பு குழுவில் எத்தனை காபிர்கள் இருப்பார்கள்?”
“அமில வார்த்தையை வீச வேண்டாம். இருபதுக்கும் மேற்பட்ட பிற சமயச் சகோதரர்கள் எங்கள் படப்பிடிப்புக் குழுவில் இருக்கிறார்கள்!”
“அவர்கள் எங்கள் பள்ளிக்குள் அத்துமீறி பிரவேசித்தது ஹராமான செயல். சந்தூக்கை அவர்கள் தொட்டு தூக்கியது நஜீஸ்!”
தயாரிப்பாளர் ஓடி வந்தார். அழகிய முகமன் பரிமாற்றம்.
“நாங்கள் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள். க்ரவுட் பண்டிங் மூலம் பணம் சேர்த்து இந்த படம் எடுக்கிறோம்…”
“சினிமா ஷைத்தானின் கண்கள்… சினிமா எந்த வடிவத்திலும் பள்ளிக்குள் நுழைவதை அனுமதிக்க மாட்டோம்!”
“ஆங்கிலேயரின் ஆட்சியின் போது ‘ஆங்கிலம் கற்பது ஹராம்’ என பத்வா கொடுத்தீர்கள். உங்களை போன்ற பழைமைவாதிகளுக்கு ஓவியம் ஹராம் - இசை ஹராம் - இலக்கியம் ஹராம் - புகைப்படம் ஹராம் - கவிதை ஹராம். ஹராம்ஹராம் எனக் கூவிக் கொண்டே வெகுஜன ஊடகங்களிலிருந்து விலகி தனித்து நிற்கிறீர்கள். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கென தனி டிவி சானல் இருக்கிறதா? தினசரி இருக்கிறதா? எப்எம் ரேடியோ இருக்கிறதா? கண்ணிருந்தும் பார்க்காதவர்களாய் காது இருந்தும் கேளாதவர்களாய் வாயிருந்தும் பேசாதவர்களாய் நூறு வருடம் பின்தங்கி நிற்கிறோம். மலையாளத்தில் மிக அருமையான இஸ்லாமிய படங்கள் வருகின்றன. தமிழில் அது போல் வராததற்கு உங்களைப் போன்றோரின் துர்நடத்தைகள் தான் காரணம்!”
“தமிழ் சினிமா எடுத்து அதில் இஸ்லாமியர்களை குத்தாட்டம் போடச் சொல்கிறீங்களா?”
“எந்த விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. உலகம் முழுக்க ஆயிரம் மில்லியன் பேர் சினிமா பார்க்கிறார்கள்… கத்தியால் அறுவை சிகிச்சை செய்து ஒரு உயிரைக் காப்பாற்றவும் செய்யலாம். அதேக் கத்தியை வைத்துக் கொலையும் பண்ணலாம்!”
“எனக்குப் பாடம் நடத்துகிறீர்களா?”
“கசக்கும் உண்மையைச் சொன்னோம். ‘மாஷா அல்லாஹ்’ கதையைக் கேளுங்கள். கேட்டபின் நீங்களே மனம் மாறுவீர்கள்!”
“தேவையில்லை… கற்பனையால் நிஜத்தைச் சொல்லும் உத்தி எனக்குப் பிடிக்காது!”
“இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”
“என் அனுமதி இல்லாமல் பள்ளிவாசலில் ஷுட்டிங் நடத்தியதற்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கிறோம். காபிர்கள் கைபட்ட சந்தூக்கை இனி நாங்கள் பயன்படுத்த மாட்டோம். எங்கள் சந்தூக்கை போலவே அச்சுஅசலாய் ஒரு புது சந்தூக்கு செய்து கொடுத்து விடுங்கள்!”
“இது அநியாயம்!”
“எங்கள் பள்ளியில் நான் வைத்ததுதான் சட்டம். அபராதம் கட்டாவிட்டால் படப்பிடிப்பு குழுவினர் அனைவரையும் சிறைப் பிடிப்போம். புது சந்தூக்கு செய்ய மூன்று நாட்கள் அவகாசம். நாங்கள் சொல்லும் ஆசாரி வைத்து நீங்கள் புது சந்தூக்கு வடிவமைத்துத் தர வேண்டும்!”
படப்பிடிப்புக் குழுவினர் ஒரு பக்கமும் முத்தவல்லி மற்றும் முத்தவல்லியின் கைத்தடிகள் ஒரு பக்கமும் பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டனர்.
வாய்ச் சண்டை கைச்சண்டையாய் முற்றும் நிலையில் கிருஷ்ணராஜா குறுக்கே புகுந்தார்.
“நானும் சினிமா துறைல நாற்பது வருஷமா இருக்கேன். முப்பது படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கிறேன். இஸ்லாமியச் சினிமா எடுப்பது கயிறு மேல் நடனம். தடுமாறி எந்தப் பக்கம் விழுந்தாலும் சிங்கம் புலிக்கு இரைதான்!”
“நீங்க என்ன தனியா பேருரையாற்றுகிறீர்கள்?”
“மிஸ்டர் முத்தவல்லி கடைசியா ஒன்று சொல்றேன். அபராதம் அம்பதாயிரம் நானே கட்றேன். புது சந்தூக்கு தேக்கு மரத்தில் செய்து தருகிறோம். தீட்டுப்பட்ட உங்கள் பழைய சந்தூக்கை எங்களிடம் கொடுத்து விடுங்கள்!”
“தர முடியாது!”
“நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால் போலீஸுக்கு போன் செய்வேன். அவர்கள் உங்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவார்கள்”
“மிரட்டுகிறீர்களா?”
“அரசியல் நடப்பு புரிந்து கொள்ளுங்கள். அம்பதாயிரம் பணம் இப்போதேத் தருகிறேன். புது சந்தூக்கு மூன்றே நாட்களில்!”
முத்தவல்லி தனது சகாக்களுடன் தனியே போய் கிசுகிசுப்பாய் பேசினார்.
பத்து நிமிடம் கரைசலில் வந்து “சரி” என்றார்.
புது சந்தூக்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பள்ளிவாசலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு லாரியில் பழைய சந்தூக்கை ஏற்றினர்.
தயாரிப்பாளர் கிருஷ்ணராஜாவிடம், “இந்த பழைய சந்தூக்கை என்ன பண்ண போறீங்க?”
“இந்த மூணு நாட்கள்ல தமிழ்நாட்ல இருக்ற பள்ளிவாசல்கள் எல்லாவற்றையும் அலசி சந்தூக்கு இல்லாத பள்ளிவாசலை கண்டுபிடித்து விட்டேன். அந்தப் பள்ளி தஞ்சாவூருக்கு அருகில் இருக்கிறது. பள்ளி இருக்கும் நகர் மத நல்லிணக்கப் பேட்டை. அங்கேயே ஷூட்டிங்கை தொடரலாம். அந்தப் பள்ளி முத்தவல்லிக்கு படத்தில் ஒரு சிறு வேஷம் தருவதாக வாக்கு தந்திருக்கிறேன்!”
மத நல்லிணக்க பேட்டையில் ஷுட்டிங் முடிந்த இரவு.
கிருஷ்ணராஜா படத் தயாரிப்பாளரிடம், “மாஷா அல்லாஹ்வுக்கு பிறகு புதுசா எதுவும் இஸ்லாமியப் படம் எடுக்க மாட்டீர்கள்தானே?”
“ஒற்றை மரக்குயில் கூவுவது போல, வனாந்திரத்தில் ஒரு மகிழம்பூ மலர்வது போல, லட்சம் பழைமைவாதக் குரல்களில் உயர்ந்தொலிக்கும் ஏகாந்தக்குரல் போல தொடர்ந்து இஸ்லாமியப் படங்கள் எடுப்போம்- ஈரானியன் சினிமாத் தரத்தில்… இறைவன் நாடினால்!”
“இறைவன் அருள் புரிவானாகட்டும்!” என்றனர் கிருஷ்ணராஜாவும் சாரா புதியவனும்.