நகரப் பேருந்து கூடாரத்தில் ஹம்னாஃபிர்னாஸும் ஏகவள்ளியும் நின்றிருந்தனர். இருவரும் முதுகலை மனோதத்துவ இயல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள். ஹம்னா ஹிஜாப் அணிந்திருந்தாள். மாநிறம். மெல்லிய திரேகம். லேசர் கண்கள். குர்ஆனியம் தடவப்பட்ட வாய். வயது 22.
ஏகவள்ளி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இந்துப்பெண். தலைமுடியைப் பாப் பண்ணி இருந்தாள். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. கழுத்தில் பல்வர்ண பாசி மாலை. வலது கையில் வண்ண கண்ணாடி வளையல்கள். இடது கையில் கடிகாரம்.
இருவரும் படித்து வேலைக்கு போய் மக்களின் மனநலத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற உயரிய குறிக்கோள் உள்ளவர்கள். இருட்டுவதற்குள் கல்லூரியின் விடுதிக்குப் போய்ச் சேர வேண்டும். இரண்டு மணி நேரமாக நகரப் பேருந்துக்குக் காத்திருக்கிறார்கள்.
ஹம்னாஃபிர்னாஸ் அமைதியாக சாந்த சொரூபியாக நின்றிருந்தாள்.
ஏகவள்ளியோ காலில் வெந்நீர் கொட்டிக் கொண்டது போல பரபரத்தாள்.
“எங்க பஸ்ஸைக் காணம்? எங்க பஸ்ஸைக் காணம்? பஸ் நிறுத்தம் இல்லாத இடத்தில் நிற்கிறோமா? அல்லது டவுன் பஸ்காரங்க திடீர் ஸ்ட்ரைக் பண்ராங்களா? அல்லது பஸ் ஸ்டாப்ல ஹம்னாவும் வள்ளியும் நிப்பாள்க. அவள்களைப் பஸ் ஸ்டாப்ல பல மணிநேரம் நிறுத்தி வைப்போம்னு பஸ் டிப்போகாரன் செய்ற சதியா? டவுன் பஸ்களில் பெண்களின் இலவசப் பயணம் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் ஏதாவது ஜட்ஜ்மென்ட் குடுத்திருச்சா?”
சிரித்தாள் ஹம்னா.
“சந்தேகம் அவ்வளவுதானா, இன்னும் இருக்கா?”
“அது இருக்கு ஆயிரம் சந்தேகம்!”
“யார் கண்டா? நாம வரதுக்கு சிலபல நிமிடங்களுக்கு முன்பே சில பல பஸ்கள் வந்து போயிருக்கலாம்… அல்லது பஸ்கள் வர்ற வழில ஏதாவது ட்ராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கலாம்… இங்கிருந்து நம்ம ஹாஸ்டல் நான்கைந்து கிலோ மீட்டர் தூரம் இருக்குமா? மெதுவா பொடி நடை நடந்து ஹாஸ்டலுக்கு போய் சேர்வோம்!”
“உன் கூட ரெண்டு வருஷமா படிக்கிறேன்… ஒரே ரூம்ல தங்கி இருக்கோம்… எப்டிடி சுனாமில நெத்திலி மீன் பிடிக்ற?”
“பஸ் வரல… அவ்வளவுதானே? வானமா இடிஞ்சு நம்ம தலை மேல விழுந்திருச்சு?”
“பஸ் விஷயம் இன்னைக்கி. இந்த இரண்டு வருஷத்தில முப்பது நாற்பது சம்பவங்கள் நடந்திருக்கு. அத்தனையிலும் அசாத்திய பொறுமை காட்ற?”
“அப்படியா?”
“ஒரு தடவை உன்னை தேள் கொட்டிருச்சு. நாங்களாயிருந்தா கூகொல்லைன்னு கத்திருப்போம். நீ அமைதியா பூ மாதிரி இருந்த. வாய்க்குள் எதையோ முணுமுணுத்த நாங்கதான் பதறிசிதறி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். சிரிச்சுக்கிட்டே ஊசி போட்டுக்கிட்ட…”
“சரி!”
“ஒரு தடவை ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிட்ட இருபது பேருக்கு புட் பாய்ஸன் ஆய்ருச்சு. ஃபுட் பாய்ஸன் ஆனதில நீயும் ஒருத்தி. சாந்த சொரூபியா டாய்லட்டுக்கு ஊர்வலம் போய் வந்துகிட்டு இருந்த. அப்பயும் வாய்க்குள் எதையோ முணுமுணுத்த. நாங்கதான் பதறிசிதறி உன்னையும் பாதிக்கப்பட்ட மத்தப் பெண்களையும் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணினோம்!”
“ஆமா!”
“நீ ஹிஜாப் போடுறது பிடிக்காத ஆசிரியர் உனக்கு இன்டர்னல் மார்க்ல இருபதை குறைச்சுப் போட்டார். நாங்களா இருந்தா சாமியாடி இருப்போம். ஆசிரியரை திட்டித் தீர்த்திருப்போம். அப்பயும் நீ அமைதியா இருந்த வாய்க்குள் எதையோ முணுமுணுத்த…”
முறுவலித்தாள் ஹம்னாஃபிர்னாஸ்.
“நாம ஒரு தடவை மனநல மருத்துவமனை விசிட் போனோம். நாம போனது நாப்பது பேரு. ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் குறிப்பா உன்னை பார்த்து ஓடிவந்து உன் கையை கடிச்சிட்டார். நீ அவரின் தலையைத் தடவிக் கொடுத்து ‘உன்னை யாராவது துன்புறுத்தினார்களா?’ என பரிவுடன் விசாரித்தாய். அத்துடன் வாய்க்குள் எதனையோ முணுமுணுத்தாய்… நாங்கதான் உன்னை டாக்டர்கிட்ட கூட்டிப்போய் கடிகாயத்தை கழுவி மருந்திட்டு ஊசி போட்டோம்…”
“சரி!”
“ஒரு தடவை வகுப்பில் ஆசிரியர். ‘நபிகள் நாயகம் பிறக்காது இருந்திருந்தால் இஸ்லாம் தோன்றியிருக்காது. இஸ்லாம் தோன்றி இருக்காவிட்டால் உலக மக்கள் அமைதியாக இருந்திருப்பர்’ என்றார். வகுப்பறை நிச்சலனமாக இருந்தது. நீ எழுந்து ‘உங்களின் வார்த்தை வெறுப்பரசியலின் விளைவு. இஸ்லாம்தான் தனிமனித ஒழுக்கம், உணவு சுகாதாரம், ஈகை, உண்ணாவிரதத்தால் உடல் மனத் தூய்மை, பெண்களுக்கான சம உரிமை போன்றவற்றை உலக மக்களிடம் தக்க வைத்து
வருகிறது. மதங்களிடம் குறைபாடு இல்லை. அதனை பின்பற்றும் மக்களில் சிலருக்குத்தான் குறைபாடு இருக்கிறது. உங்களுக்கு எதிர்க்கருத்து கூறியதற்கு மன்னிக்கவும்’ எனக் கூறி அமர்ந்தாய். வகுப்பு மொத்தமும் கைதட்டியது. அப்போதும் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தாய்!”
“கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். வன்முறை கூடாது!”
“கடந்த இரண்டு வருடங்களில் நீ உன் அம்மாவிடமும் உறவினர்களிடமும் முஸ்லிம் தோழிகளிடமும் பேசுவாய். பேசும்போது அவர்கள் உன்னிடம் குடும்பப் பிரச்சனைகளைக் கூறி ஆறுதல் தேடுவார்கள். ஆறுதல் கூற வேண்டிய நீ ‘சபுர் செய்ங்கம்மா…’ ‘சபுர் செய்ங்க பெரித்தா’ ‘சபுர் செய் தோழி’ என்பாய்… எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் சபுர் செய்வது என்றால் சபுர் என்பது மந்திர வார்த்தையா? இரண்டு மணி நேரமா டவுன்பஸ் வராம இருக்றதுக்கு கூட நீ சபுர்தான்
செய்திருப்பாய்… சபுர் என்றால் என்ன?”
“நடைமேடையில் நடந்து கொண்டே பேசுவோமா?”
“சரி!”
நடக்க ஆரம்பித்தனர்.
“சபுர் என்பது அரபி வார்த்தை. பொறுமை, சகிப்புத்தன்மை, மனஉறுதி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை சபுர் என்கிற ஒற்றை வார்த்தை அர்த்தப்படுத்துகிறது…”
“ஓஹோ!”
“நோய், துன்பம், இழப்பை, அமைதியுடன் தாங்கிக் கொள்வது சபுர். இயற்கையான உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தி இறைவனுக்குள் பொருந்தும் கட்டுப்பாடே சபுர். இறைவனுக்கான சரியான பாதையில் தொடர்ந்து பயணித்து சோதனையில் உறுதியாய் நிற்கும் விடாமுயற்சியே சபுர். பொறுமை ஒரு அருட்கொடை. பொறுமைதான் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் மிகப்பெரிய செல்வம். பொறுமையாக இருப்பவருக்கு இறைவன். சொர்க்கத்தில் வீடு கட்டி தருவான்.
“ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஆசையாக வளர்த்த பெற்றோர் ஒருவரின் குழந்தை இறந்து போகிறது. இறைவன் குழந்தையின் உயிரை எடுத்த மலக்கிடம் வினவுகிறான். ‘அடியானின் குழந்தை உயிரை எடுத்துக் கொண்டீர்கள் அல்லவா?’ மலக்
‘ஆமாம்’ என்றது.
‘அடியானின் இதயக்கனியை எடுத்துக் கொண்டீர்கள் அல்லவா?’ மலக்
‘ஆமாம்’ என்றது.
‘குழந்தை இறந்த துக்கத்தில் அடியான் என்னை திட்டினானா?’
‘அப்போதும் அவன் உன்னை புகழ்ந்தான். நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்றான் என்றது மலக்.
உடனே இறைவன் ‘அந்த அடியானுக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டி அந்த வீட்டுக்குப் புகழ்ச்சியின் வீடு என பெயரிடுங்கள்’ என்கிறான்…”
“அருமையாகக் கூறினாய்”
“சபுர் என்பது இறைவனின் மீதான முழுமையான நம்பிக்கையையும் அவனது திட்டத்தின் மீதான உறுதியையும் காட்டுகிறது. நற்செயல்களை செய்ய தேவையான ஆற்றலை தருவது சபுர். கட்டுபடுத்த முடியாத சூழ்நிலைகளை இறைவனின் விருப்பமாக ஏற்றல் சபுர். அல்-சபுர் என்பது இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அந்தப் பெயருக்கு மிகுந்த பொறுமையாளர் என பொருள். பொறுமையாளனாக இருக்கும் இறைவன் தனது படைப்புகளின் பொறுமையையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கிறான்.
“ ‘சபூர்’ என்கிற இன்னொரு வார்த்தை இருக்கிறது. தோரா, இன்ஜீல் போன்று தாவூத் நபிகளுக்கு அருளப்பட்ட வேதமே சபூராகும்!”
“ஒவ்வொரு பிரச்சனைக்குப் பின்னும் ஏதோ முணுமுணுப்பாயே… அதென்ன?”
“அது துஆ. தமிழில் பிரார்த்தனை. ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்னும் ‘கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் யாருமில்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என துஆ ஓதுவேன்…”
“நீ சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டதைச் சுருக்கமாகச் சொல்லவா?”
“சொல்!”
“இறைவனின் கட்டளைகளை உறுதியாக நிறைவேற்றல். தடை செய்யப்பட்ட பாவங்களைத் தவிர்த்து சுயக்கட்டுப்பாடுடன் இருத்தல், துன்பம் பேரழிவுகளை சகித்துக் கொள்ளுதல். இவை மூன்றுமே சபுர் எனப்படும்!”
இருவரும் பேசிக்கொண்டே விடுதியை அடைந்தனர்.
வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடப் போன இருவரையும் விடுதி வார்டன் இடைமறித்தார்.
“இரண்டு கழுதைகளும் ஏன் லேட்?”
“டவுன்பஸ் வரல!”
“நொண்டிச்சாக்கு. கையெழுத்துப் போடுங்க. ஆனா லேட்டா வந்த உங்க ரெண்டு பேருக்கும் இரவு சாப்பாடு கிடையாது!”
“நல்லது வார்டனம்மா. சாப்பாட்டுக்கு பதில் ஐஸ் வாட்டர் குடிச்சு சபுர் பண்ணிக்கிரம்... நைட் மெஸ்ல போடுற வறட்டு சப்பாத்தி மேல இறைவன் எங்க பெயர் எழுதல… தட்ஸ்ஆல்!” என்றாள் ஏகவள்ளி.