ஆர்த்தி டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நான்கு மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது. தரைத்தளத்தில் தானியங்கள், குளிர்பானங்கள், பால் பொருட்கள் மற்றும் சாக்லேட்டுகள். முதல் தளத்தில் குழந்தைகளுக்கான நாப்கின்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள். இரண்டாவது தளத்தில் சூட்கேஸ்கள், மற்றும் பேட்டரி கார்கள். மூன்றாவது தளத்தில் பெண்களுக்கான நாப்கின்கள், அழகுப் பொருட்கள் மற்றும் உள்ளாடைகள். நான்காவது தளத்தில் செருப்பு, ஷு மற்றும் பெல்ட்கள் விற்பனை.
ஆர்த்தி டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் மொத்தம் 100 ஊழியர்கள். ஒவ்வொரு தளத்துக்கும் இருபது இருபது ஊழியர்கள். தளத்திற்கு ஒரு மேற்பார்வையாளர். இரு லிப்ட் ஆபரேட்டர்கள். பில்லிங் பகுதியில் ஆறு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மேய்க்க ஒரு மேலாளர்.
சாப்பாடு வயர் கூடையுடன் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழைந்தாள் ஸஹ்றா. ஹிஜாப் அணிந்திருந்தாள்.
மணி காலை 8: 55.
பயோமெட்ரிக் இயந்திரத்துக்குள் கார்டை திணித்து எடுத்தாள். கழுத்தில் அடையாள அட்டை மாலையை போட்டுக்கொண்டாள்.
மேலாளர் ராஜ்வி எதிர்பட்டாள்.
“குட் மார்னிங் மேனேஜர்!” என்றாள் ஸஹ்றா.
“குட்மார்னிங் குட்மார்னிங்… ப்ரஷ்ஷா நீட்டா டிசென்ட்டா வரும் உன்னைப் பார்த்தாலே எங்க எல்லோருக்கும் ஒரு புத்துணர்ச்சி… மயிலுக்குத் தோகை போல உனக்கு உன் ஹிஜாப்…”
“ரொம்ப புகழாதிங்க மேனேஜர் அம்மா!”
“உள்ளதைத்தானடி சொன்னேன்…”
“மேனேஜரம்மா நாளையிலிருந்து ரமலானின் முதல் நோன்பு தொடங்குகிறது…”
“சரி அதுக்கென்ன?”
“இந்த வருஷத்து முப்பது நோன்பையும் நான் வைக்கப் போறேன்…”
“சீரியஸாத்தான் சொல்றியா?”
“ஆமாம் ஆமாம்…”
ராஜ்வியின் முகம் கறுத்தது.
“உன்னுடைய வேலை பனிரெண்டு மணி நேர வேலை. காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை. இடையில் உணவு இடைவேளை அரை மணி நேரம். சாயந்தரம் கால் மணி நேரம் டீ டைம். ஒன்பது மணி வேலைக்கு
காலைலயே எந்திரிச்சு குளிச்சு உணவுதயாரிச்சு அரைமணி நேரம் பஸ்ஸில் டிராவல் பண்ணனும். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போக முக்கால் மணி நேரமாகும்!”
“தினமும் இதைத்தான் செய்றேன்!”
“நீ முஸ்லிமாக இரு. ஹிஜாப் அணிஞ்சிக்க. வாடிக்கையாளர்கள் கிட்ட கண்ணியமா நட. இதெல்லாம் உன் இஷ்டம்… ஆனா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ல வேலை பாத்துக்கிட்டே முப்பது நோன்பு வைக்றது டூ மச். அதுக்கு நீ முதலாளிகிட்ட
முன்னனுமதி வாங்கனும்!”
“மதச்சடங்குகளை நிறைவேத்றது என் அந்தரங்கமான விஷயம்… அதுக்கேன் நான் முதலாளிகிட்ட முன்னனுமதி வாங்கனும்?”
“உனக்கு ரெண்டு நாள் லீவு வேணும்னா என்ன பண்ற?”
“லீவ் லெட்டர் எழுதி வந்து முதலாளிகிட்ட ஷைன் வாங்கிறேன்!”
“உனக்கு எதாவது முன்பணம் வேணும்னா என்ன பண்ற?”
“முதலாளிகிட்ட கேட்டு தொகையை சாங்ஷன் பண்ணி வாங்கிறேன்!”
“உனக்கு என்ன வயசாகுது?”
“இருபத்தியேழு!”
“உனக்குக் கல்யாணமாய்ருச்சா?”
“இல்லை!”
“இங்க எத்னி வருஷமா வேலை பாக்ற…”
“ஏழு வருஷமா…”
“கடந்த ஆறு வருஷமா நோன்பு வைச்சியா என்ன!”
“வைச்சேன். அப்ப பெரிய முதலாளி இருந்தார். அவர்கிட்ட கேக்காமதான் நோன்பு வச்சேன். பெரிய முதலாளி இறந்த பிறகு சின்ன முதலாளி இப்ப பவருக்கு வந்திருக்காரு!”
“ஆட்சி மாறினா ரூல்ஸ் மாறும்ல… இப்ப ரூல்ஸ் மாறியிருக்கு… நான் வாரணாசிக்கு பத்து நாள் ஆன்மிக சுற்றுலா போனேன்… கெஞ்சிக் கெதறி காக்கா பிடிச்சு பெர்மிஷன் வாங்கினேன். பத்து நாளுக்கு ஒரு பதிலியை ஏற்பாடு பண்ணிட்டு
போனேன்!”
“என்ன வேணுலும் சொல்லுங்க… மேனேஜரம்மா நான் நோன்பு நோற்க முதலாளிகிட்ட பெர்மிஷன் கேக்கப் போறதில்லை!”
“பெர்மிஷன் கேட்காம நீ இன்னைக்கு வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன்!”
“மிரட்றீங்களா?”
“இல்லடி… யதார்த்தத்தை சொன்னேன்…”
“நான் இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல வேலைதான் பாக்றேன். முதலாளிக்கு அடிமையாக அல்ல நான்…”
“பிடிவாதம் பிடிக்காதே… இப்ப மணி 9.10. உனக்கு இருபது நிமிடம் அவகாசம் தருகிறேன். அதற்குள் முதலாளியிடம் சென்று அனுமதி பெற்று வா…”
கண்களை மூடிக்கொண்டு முப்பது நொடிகள் யோசித்தாள் ஸஹ்றா.
“சரி போறேன் ஆனால் பெர்மிஷன் கேட்க அல்ல!”
முதலாளியின் அறைக்கதவை மும்முறை நாகரிகமாக டொக்கினாள்.
“யெஸ் கமின்!”
குளிர்பதன மூட்டப்பட்ட அறையின் குளிர் முகத்தில் அறைந்தது.
“குட் மார்னிங் சார்!”
“யார் நீ?”
“நான் நம்ம டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ல பணிபுரியும் ஊழியை. பெயர் ஸஹ்றா…”
“எந்தத் தளத்தில் பணிபுரிகிறாய்?”
“பெண் வாடிக்கையாளர்களுக்கான மூன்றாவது தளத்தில்…”
“என்ன வேண்டும்?”
“நான் ஒரு இஸ்லாமியப் பெண். நாளையிலிருந்து ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. 30 நாளும் நோன்பு வைத்துக் கொண்டே வேலையை பார்க்கப் போகிறேன். அதனை ஒரு தகவலாய் உங்களிடம் கூறுகிறேன்!”
“எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் பக்தி அறுபது வயதுக்கு மேல் தான் வரவேண்டும். கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி பெத்து பேரன் பேத்திகள் எடுத்த பிறகு நோன்பு வை. இப்போது வைக்காதே!”
“எனக்கு இறைபக்தி பத்து வயதிலிருந்தே வந்துவிட்டது. ஐந்து வேளை தொழுகிறேன். முப்பது நோன்பு நோற்கிறேன்…”
“காலை நாலு மணிக்கு சாப்பிடுவ. மாலை 6: 30 மணிக்கு நோன்பு திறப்ப. இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் குடிக்கமாட்ட. எச்சி முழுங்க மாட்ட. கொலைபட்டினில நீ வேலை செஞ்சு மயங்கி விழுந்தா உன் குடும்பத்துக்கு யார் பதில் சொல்றது?”
“உலகத்தில 200 கோடி முஸ்லிம்கள் இருக்காங்க. அதில வயோதிகர்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள் தவிர்த்து குறைந்தபட்சம் 120 கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்கிறார்கள். எங்காவது நோன்பு வைத்தவர்கள் மயங்கி விழுந்ததாக செய்தி
உண்டா?”
“நோன்பு வச்சா நீ தொழுவ சாயந்தரம் நோன்பு திறப்ப. இதெல்லாம் உன் வேலைக்கு தொந்திரவு இல்லையா?”
“தொழ அஞ்சு அஞ்சு நிமிஷம். வேலை பாத்துகிட்டே இரண்டு பேரீச்சம் பழங்களை தின்னு தண்ணி குடிச்சு நோன்பு திறந்திருவேன்!”
“நான் நீ நோன்பு வைக்க அனுமதி தரலன்னா வேலையை விட்டு போயிருவ. அப்படித்தானே?”
“நோன்பு வைப்பது என் மதம் சார்ந்த பிறப்புரிமை. பிறரிடம் நான் ஒருபோதும் நோன்பு வைக்க அனுமதி கேட்க மாட்டேன். தவிர ஏழு வருஷமாப் பாத்த வேலையை உணர்ச்சி வசப்பட்டு எப்படி விடுவேன்?”
“பின்ன?”
“சகமதத்தினரின் உணர்வுகளை மதியுங்கள் முதலாளி!”
“என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”
“நாளை மறுநாள் நோன்பு வைத்துவிட்டு வேலைக்கு வருவேன். என் வேலையில் சிறு சுணக்கம் இருந்தாலோ அல்லது நான் மயங்கி விழுந்தாலோ நோன்பு வைப்பதை பரிசீலனை செய்கிறேன். சிசிடிவி மூலம் என் செயல்பாடுகளை
கண்காணியுங்கள்!”
“மயங்கி விழும் உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் போலீஸுக்கு யார் பதில் சொல்வது?”
“என்னுடைய முப்பது நோன்புகளின் பின்விளைவுகளுக்கு நானே பொறுப்பு!”
“இவ்வளவு சிரமப்பட்டு நீ முப்பது நோன்பு வைப்பதால் உனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது?”
நிலாவினாள் ஸஹ்றா.
“அந்த ஆன்மிக பேரானந்தத்தை எப்படி வார்த்தைகளில் விவரிப்பது? உடலும் மனமும் புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்கும். முப்பது நோன்பு முடிந்த பிறகு ‘ஹைய்யோ நோன்பு முடிந்து விட்டதே அடுத்த ரமலானுக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே’ என நெஞ்சம் ஆவலாதிக்கும். முப்பது நாளும் தினம் இரவு விசேஷ தொழுகை - நோன்புகள் நிறைவுற்ற பின் பெருநாள் தொழுகை - ஜக்காத்து சதகாத்து - உறவினர் நண்பர்களுடன் விருந்துண்ணல். அடடா… பரவசம் பரவசம் பிரளய பரவசம்!”
முதலாளி எழுந்து கைத்தட்டினார். “சபாஷ் உன் மனத்திடத்தினைச் சோதிக்கத்தான் எதிர்மறையாகப் பேசினேன். தினம் உனக்கு ஒரு பேரீச்சம் பழம் பாக்கட்டும் ஒரு பழ ரசபாட்டிலும் இலவசமாகத் தரப்படும். தினமும் நீ வீட்டுக்கு இரவு ஏழு மணிக்கே போய்விடலாம். நோன்புத் தொழுகையில் எங்களுக்காகவும் வேண்டு…. வாழ்த்துகள்!”
“நன்றி முதலாளி!” என மிழற்றி விட்டு மான்குட்டி போல தனது பணி இடத்துக்கு ஓடினாள் ஸஹ்றா.