சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். நடைமேடை ஏழில் சென்னை சென்ட்ரலிருந்து சந்திரகாச்சி வரை செல்லும் 22808 காத்திருந்தது. குளிர்பதனமூட்டப்பட்ட மூன்றாம் வகுப்புப் பெட்டியில் நானும் அலிமாவும் ஏறினோம்.
நாங்கள் கொல்கத்தாவில் இருக்கும் மகன் குடும்பத்தைப் பார்க்கப் போகிறோம். மகன் நிலாமகன் மருமகள் பஹிமா ஆப்ரின் மூத்த பேரன் முஹம்மது அர்ஹான். இளைய பேரன் அயான் அஹமதை எங்கள் கண்கள் தேடுகின்றன.
இளையபேரன் அயான் அஹமது பிறந்து ஏழு மாதங்கள் ஆகின்றன. அயான் அர்ஹானின் திருத்தியமைக்கப்பட்ட ஜெராக்ஸ் காப்பி. பால் வெண்மை. வட்ட முகம். திராட்சைக்கண்கள். தேன்நிற தலைக்கேசம். தினம் விடியோகாலில் அர்ஹானிடம் பேச முயற்சிப்போம். மூடு இருந்தால் பேசுவான். இல்லாவிட்டால் விளையாட ஓடிவிடுவான்.
அயான் அஹமது முகத்தை சில நொடிகள் காட்டுவாள் மருமகள்.
அயான் பொக்கைவாய் திறந்து சிரிப்பான். மேலே இரு பற்கள் கீழே இரு பற்கள். அணில் குஞ்சு போலிருப்பான். பேரன்களுக்கு ஆடைகள், பொம்மைகள், தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு போகிறோம். 25 மணி நேரப் பயணம்.
மறுநாள் காலை 10: 55 மணிக்கு சந்திரகாச்சி போய்ச் சேர்ந்தோம்.
மகன் இருப்பது 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஜோகோவில். டிடிசி சதர்ன் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகளின் பிளாக் எண் 21 பிளாட் எண் 1 டிக்கு நாங்கள் போக வேண்டும்.
‘உபர்’ அமர்த்தினோம். கார் விரைந்தது. குடியிருப்பின் பிரதான வாசலின் செக்யூரிட்டி எங்களை நிறுத்தினான். கவிதை பெங்காலியில் வினவினான். “யார் நீங்கள்? யாரைப் பார்க்கனும்?”
சொன்னோம். மருமகளுக்கு போன் பண்ணி நாங்கள் உறவினர்தான் என்பதனை உறுதி செய்து கொண்டு உள்ளுக்குள் அனுமதித்தான்.
பிளாக் 21ன் கீழ் உபர் நின்றது. மகன் ஓடி வந்தான். பயணச்சுமைகளைக் கவர்ந்து கொண்டான். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
வீட்டுக்குள் பிரவேசித்தோம்.
அர்ஹான் ஓடி வந்தான். ‘அத்தலாமலேக்கும்… எப்ப வந்தீங்க?”
தூக்கிக் கொஞ்சினேன்.
கன்னத்தில் கடித்து வைத்தான்.
இறங்கி பாட்டியிடம் ஓடி கட்டிக் கொண்டான்.
மருமகள் அயானை தூக்கி வைத்திருந்தார். சலாம் கூறினர்.
அயானை தூக்கிக் கொஞ்சினேன். பால் வாசனையடித்தான். இரண்டு மாத இடைவெளியில் நன்கு வளர்ந்திருந்தான்.
“குளிச்சிட்டு வாங்கI சாப்பிடலாம் மாமா, மாமி”
குளித்துத் திரும்பினோம்.
நெய்ச்சோறும் மட்டன் கிரேவியும் செய்திருந்தார் சாப்பிட்டோம்.
சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்தோம்.
மாலை அயான் அஹமதுவுக்கு தலைக்கு எண்ணெய் தடவி புது ட்ரஸ் உடுத்தி விட்டு கால்களில் விசில் ஷு மாட்டி விட்டிருந்தார் மருமகள்.
“அலிமா, அயானை தூக்கிட்டு நில்லு. ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்!”
மருமகள் தயங்கினார்.
“போட்டோ எடுங்க… வேணாம்னு சொல்லல, ஆனா போட்டோவை பேஸ்புக்குல போட்டுராதிங்க!”
“ஏன்ம்மா.. நிறைய முஸ்லிம்கள் தங்களோட பிறந்த குழந்தையின் போட்டோவை போடுறாங்க… அதுல என்னமா தப்பு?”
“மத்தவங்களுக்கு எப்படியோ? எனக்கு அது சரிப்படல…”
“என்னம்மா பிரச்சனை?”
|
நிவாரணமளிப்பானாக...!
அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன். உமக்கு தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும் பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமைகளிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதி பார்க்கிறேன்.
- ஸஹீஹ் முஸ்லிம் 4403
|
“சில மாதங்களுக்கு முன் அர்ஹானின் போட்டோ போட்டீங்க. தொடர்ந்து ஒரு வாரம் அவனுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு”
“அப்படியா?”
“நானும் நிலாவும் ஜோடியா நிக்ற போட்டோவை நீங்க போட்டாலும் எங்களுக்கு உடம்பு சரியில்லாமப் போகுது”
“எதனாலன்னு நினைக்ற?”
“கண் திருஷ்டி மாமா…”
“டாக்டருக்கு படிச்ச நீங்க ரெண்டு பேருமா கண்திருஷ்டியை நம்புறீங்க?”
“இஸ்லாமிய நீதிக்கதை எழுதும் உங்களுக்கு கண் திருஷ்டி உண்மைதான்னு தெரியாதா? ‘கண் திருஷ்டிப் படுவது உண்மையாகும். ஒரு விதியை அது முந்தக்கூடியதாக இருந்தால் கண் திருஷ்டி முந்தும்’- என்கிறது முஸ்லிம் 2188.
கண்திருஷ்டிக்கு எதிராக ஓதி பார்த்து மந்திரித்து பாதுகாப்பு தேடிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்கிறது புகாரி 5738…”
சிரித்தேன்.
“கண் திருஷ்டி உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அதற்காக நம் தினசரி நடவடிக்கைகளை ஒளித்து மறைக்க முடியுமா? கண் திருஷ்டி படும் காரியங்களை செய்வதற்கு முன் அல் பலக் மற்றும் அல் நாஸ் அத்தியாயங்களை ஓதிவிட்டு காரியங்களை தொடர வேண்டியதுதான்”
“கண்திருஷ்டி படும் எனத் தெரிந்தும் ஏன் கண்திருஷ்டிக் காரியங்களை செய்ய வேண்டும்? கண்திருஷ்டிக் காரியங்களைச் செய்து விட்டு குர்ஆனின் இரு அத்தியாயங்களை ஓத வேண்டும்? வரும்முன் காப்பு சிறப்பல்லவா?”
என் மனைவி அலிமா குறுக்கிட்டாள்.
“குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும் விளையாட அனுப்பும் போதும் ‘இறைவாI மக்களை இரட்சிப்பவனேI துன்பத்தை போக்குபவனேI குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு யாருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக’- என துஆ பண்ண வேண்டியதுதான்”
“இன்னொரு துஆ கூட இருக்கிறது. ‘அல்லாஹ்வின் முழுமையான குணமளிக்கும் சொற்களைக் கொண்டு ஒவ்வொரு சைத்தானிடமிருந்தும், நச்சு பிராணிகளிடமிருந்தும், தீயஎண்ணத்துடன் தீண்டும் பொறாமைக் கண்ணிலிருந்தும். அவனிடம் பாதுகாப்பு கோருகிறேன்’ எனவும் வேண்டலாம்”
“மாமா, உங்க முகநூல் பதிவுகளில் பேரன் பேத்திகள் ஒளிப்படங்கள் போடும்போது ‘பார்த்தீர்களா பார்த்தீர்களா என் பேரன் பேத்திகளை எவ்வளவு க்யூட்டா இருக்காங்கன்னு… உங்க பேரன் பேத்திகளை விட, எங்க பேரன் பேத்திகள் செம இல்ல’ன்ற ஒரு சுய தம்பட்டம் தெரிகிறது. கொஞ்சம் நீங்க அடக்கி வாசிக்கலாம்”
“சுயதம்பட்டம் என் நோக்கம் இல்லை. என்னுடைய சந்தோஷத்தை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனி முகநூல் பதிவுகளில் பேரன் பேத்தி போட்டோ போட மாட்டேன்”
சொன்னபடியே அயானை தூக்கிக் கொஞ்சினேன். இடது நெற்றிப் பொட்டில் ஒரு திருஷ்டி பொட்டு. முகவாயில் ஒரு திருஷ்டிப் பொட்டு. இரு உள்ளங்கால்களில் இரு திருஷ்டிப் பொட்டுகள்.
“மருமகளேI இது கொஞ்சம் டூ மச் இல்லையா?”
சிரித்தார் மருமகள்.
“ஹஜ்ரத் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அழகான சிறுவனைப் பார்த்தால், அவனுடைய நாடிப்பகுதியில் கரும்புள்ளியைக் கொண்டு அடையாளமிடுங்கள் கண்திருஷ்டி அணுகாமல் இருக்க’ என்று கூறுவார்கள். ஆதாரம் நூல் மிர்காதுல் மஃபாதீஹ் 7 / 2870”
“ஒண்ணு வைக்கலாம். நீ நாலு வச்சிருக்க…”
“இது தாயின் மிகை அன்பு. புள்ளிமான் போல நூறு கண் திருஷ்டி பொட்டு வைக்கவில்லை என திருப்தி அடையுங்கள் மாமா”
அயான் அஹமது அணில் பற்களைக் காட்டிச் சிரித்தான். ஜொள்ளு ஒழுகியது.