ஹஜ்ரத் குத்புல் அக்தாப் அல்தாப் ஹுசைன் ஆண்டவர் தர்கா. தந்தை கருணைராஜாவும் மகன் முசாகுதீனும் உள்ளே பிரவேசித்தனர். இஸ்லாமியர்களும் இந்து மதச் சகோதரர்களும் பின்னிப்பிணைந்த கூட்டம். காற்றில் சந்தனமும் சாம்பிராணி புகையும் கலந்த நறுமணம்.
“அத்தா!”
“என்னப்பா!”
“எனக்கு தர்காவுக்குப் போவது பிடிக்காது. தர்காவுக்குச் செல்வது ஷிர்க் ஆகும்!”
“யார் சொன்னது?”
“என் நண்பர்கள் சொன்னார்கள்!”
“உன் நண்பர்கள் கூறியது தவறு என்பதனை நான் ஆதாரத்துடன் சொல்கிறேன். இன்றைய தினம் இந்தத் தர்காவில் கந்தூரி உரூஸ் கொண்டாடப்படுகிறது!”
“கந்தூரி உரூஸ் என்றால் என்ன?”
“நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்களின் நினைவு நாள் அல்லது பிறந்தநாளை ஜமாத்துல் ஆகிரில் கொண்டாடப்படும் மத விழாவே கந்தூரி. இது இறந்த புனிதர்கள், நபிமார்கள் அல்லது வலிமார்களின் ஆன்மாக்களை கௌரவிக்கும் விழா.“
‘உரூஸ்’ என்றால் புதுமணவாளன் எனப் பொருள். புது மணத் தம்பதிகளை ‘அரூஸ்’ என்பர். இறந்தவரைச் சவ அடக்கம் செய்த பின் முன்கர், நகீர் என இரு வானவர்கள் ஆரம்பக் கட்ட விசாரணை செய்வர். அந்த விசாரணையில் வெற்றி பெற்ற பிரேதங்கள் புது மாப்பிள்ளை போல் உறங்கும். அதனைப் போல அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்கள் நபிகள் நாயகத்தின் முகதரிசனம் கிடைத்து மகிழ்ச்சியின் உச்சியில் இருப்பர்….”
“இறந்தவரின் மண்ணறைகளை வணங்குவது இறைவனுக்கு இணை வைப்பது இல்லையா?”
“ஒரு சிறுவனுக்குச் சைக்கிள் தேவைப்படுகிறது. அத்தாவிடம் நேரடியாகக் கேட்கத் தயக்கம். அம்மாவிடம் சொல்லி அம்மாவின் சிபாரிசில் அத்தா சைக்கிள் வாங்கித் தருகிறார். நம்முடைய வேண்டுதல்களைச் சிபாரிசுடன் கொண்டு போய் சேர்ப்பது வலிமார்கள்!”
“நான் கன்வின்ஸ் ஆகவில்லை அத்தா!”
“வணங்கக் கூடியவன் அல்லாஹ் மட்டுமே. தர்காவுக்குச் செல்பவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்”
“ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து உயிர் நீத்த தியாகிகளின் கபுருகளை ஜியாரத் செய்து வந்திருக்கிறார் நபிகள் நாயகம். இது ஷிர்க்கா?”
“கபுருக்களை ஜியாரத்.செய்யுங்கள். அவை மரணத்தை நினைவூட்டுகின்றன என்றார் நபிகள் நாயகம். இது ஷிர்க்கா?”
“எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தன் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஜியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என எழுதப்படும். இது ஷிர்க்கா?”
“இந்து மதச் சகோதரர்கள் தர்காவுக்கு வருவதிலிருத்தே தெரியவில்லையா? தர்கா ஷிர்க்கான சமாச்சாரம் என்று…”
“முஸ்லிம் மக்களுடன் பிற மதச் சகோதரர்கள் எப்போதும் முட்டி மோதிக் கொண்டே இருக்க வேண்டுமா? அவர்கள் இணக்கமாக இருந்தால் தவறா? இஸ்லாம் மனிதக் குலத்திற்கு சாந்தியும் சமாதானமும் அருளும் மார்க்கம். பிற மதத்தினர் அந்தச் சாந்தியையும் சமாதானத்தையும் பெற்று செல்வதால் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது?”
“நமது வாதத்தைப் பின்னர் வைத்துக் கொள்வோம். கந்தூரி உரூஸ் அன்று தர்காவில் என்ன நடக்கும்?”
அத்தா முறுவலித்தார். மகனின் தோள்களைத் தட்டிக் கொடுத்தார்.
“கந்தூரி செயல்பாடுகளை ஆறு அம்சங்களாக பிரிக்கலாம். ஒன்று- இரவு அஸர் தொழுகைக்குப் பின் மனிதர்கள் ஒன்று கூடுதல். சலாம் கூறி பரஸ்பரம் நலம் விசாரித்தல். இரண்டு- ஜியாரத். மூன்று- கத்தமுல் குர்ஆன் ஓதுதல். மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அதன் கூலியைச் சேர்த்து வைக்க முடியும். உயிருள்ளவர் செய்யும் தர்மத்தின் கூலி மரணித்தவருக்குச் சேரும். உங்களில் மௌத்தானவர்களுக்கு சூரத்துல் யாஸினை ஒதுங்கள் - என்கிறார் நபிகள் நாயகம்.
“உங்களில் யாரேனும் மரணம் அடைந்து விட்டால் அவரை அடக்குவதில் தாமதம் காட்டாதீர்கள். அவரது தலைமாட்டில் சூரத்துல் பகரா ஆரம்பத்தையும் கால் மாட்டில் பகராவின் கடைசி ஆயத்தையும் ஓதுங்கள். கபர்ஸ்தான்களுக்கு சென்று யாஸீன் சூரா ஓதினால் கபுராளிகளை தொடும் வேதனை இலேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்தக் கபுராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்கிறார் நபிகள் நாயகம்!”
“தொடர்ந்து கூறுங்கள் அத்தா!”
“நான்கு -ஸலவாத், திக்ர் மஜ்லிஸ், மௌலித் ஓதுதல்.
“தர்காவிற்கு சென்று நபிகள் நாயகத்தின் புகழ் பாடி ஸலவாத் ஓத வேண்டும். இறைவனின் நாமங்களை திக்ர் எடுக்க வேண்டும். மரணித்த வலிமார்களின் நற்பண்புகளையும், சிறப்புகளையும், போதனைகளையும் மௌலித் மூலம் பாராயணம் செய்ய வேண்டும்!”
“சரி!”
“தர்காவுக்குச் செல்பவர்களுக்கு மனதைரியம், படிப்பினை மற்றும் மறுமை பற்றிய நினைவூட்டல்கள் இருந்து கொண்டே இருக்கும்!”
“புரிகிறது!”
“ஐந்தாவதாக தர்காவில் கொடியேற்றல். ஆறாவதாக மறுநாள் சாப்பாடு செய்து அனைவருக்கும் விநியோகிப்பது. இதுதான் கந்தூரி உரூஸ். ஸலாம் கூறுதல், சிறப்பான தர்மம், நல்ல குடும்ப உறவு, அயலவரின் நல்லுறவு, நல்லவருக்கு உபகாரம், ஏழைகளுக்கு சுவையான உணவு வழங்கல் ஒரு முஸ்லிமின் அடிப்படை…”
-விடிய விடிய கவ்வாலி பாட்டுகள் பாடப்பட்டன.
வரிசையில் நின்று பொட்டிச் சோறுக்கான டோக்கன்களை பெற்றுக் கொண்டனர். முசாகுதீன் ஒரு டோக்கன் பெற்றுக் கொண்டான்.
“பொட்டிச் சோறு என்றால் என்ன அத்தா?”
“நெய்ச் சோறை இரு நபர்கள் சாப்பிடும் அளவில் பனை ஓலைப் பெட்டியில் அடைத்து தால்ச்சாவும் சில சிக்கன் துண்டுகளும் ஊற்றித் தருவார்கள். ஓர் ஆளுக்கு ஒரு பொட்டிச்சோறு. ஆயிரம் டோக்கன்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால் ஆயிரம் பொட்டிச் சோறு வழங்குவர்!”
“பொட்டிச் சோறு முஸ்லிம்களுக்கு மட்டும்தானா?’
“டோக்கன் கொடுக்கும் போதே மதபாரபட்சம் காட்ட மாட்டார்கள். மிஷ்கீன்கள் கூட டோக்கன் பெற்றிருப்பர்!”
மறுநாள்-
பெரிய பெரிய தேக்ஸாக்களில் நெய்ச்சோறு தயாராகி இருந்தது. தனி தேக்ஸாக்களில் மட்டனும் எலும்புகளும் கலந்த தால்ச்சா கொதித்துக் கொண்டிருந்தது. மட்டன் கிரேவியும் சிக்கன் 65யும் தனியே தயாராக. பனை ஓலைப் பெட்டிகளில் சோற்றை நிறைத்து ஒரு கறித்துண்டு இரு சிக்கன் துண்டுகளுடன் தால்ச்சா ஊற்றி வைத்தனர்.
“கந்தூரி சாப்பாடு டேஸ்ட் உலகத்டில வேற எங்கயும் கிடைக்காது!” என்றார் கருணைராஜா.
“ஏன்? அதில அவுலியாக்களின் வாசனை கலந்திருக்குமோ?” கிண்டலாய்க் கேட்டான் முசாகுதீன்.
வரிசையில் நின்று மக்கள் பொட்டிச்சோறை வாங்க ஆரம்பித்தனர்.
அவர்களிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு பொட்டிச் சோறு வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு.
பொட்டிச்சோறு கொடுக்குமிடம் அல்லோலகல்லோலப்பட்டது. பொட்டிச் சோறு வினியோகிக்கும் நபர் காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்தார்.
நான்கைந்து பேர் கருப்பு பர்தா அணிந்த பெண்ணை பிடித்திருந்தனர்.
“ஏய் திருடி! உன் மூஞ்சிய காட்டு. காட்டலேன்னா வலுக்கட்டாயமா மூஞ்சித் திரையைக் கிழிப்பேன்!”
அந்தப் பெண் முகத்தை திறந்து காட்டினார். மஹல்லாவை சேர்ந்த ஏழை இஸ்லாமியப்பெண்.
“எல்லோருக்கும் சோறு வேணாமா? டோக்கனை நாலஞ்சு கலர் ஜெராக்ஸா எடுத்து இதுவரைக்கும் அஞ்சு பொட்டிச் சோறு வாங்கிட்ட…”
“மன்னிச்சுக்கங்கய்யா… பொட்டிச்சோறுன்னா எங்களுக்கும் எங்க உறவுகளுக்கும் உசுரு. நாக்கு ருசில நாலஞ்சு தடவை வாங்கிட்டேன்…” அழுதார்.
ஜமாஅத் உறுப்பினர்கள் கூடி அந்தப் பெண்ணை கடித்துக் குதறினர்.
“கட்டிப் போடுங்கப்பா!” அடிக்க ஓடினர்.
“போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல போடுங்கய்யா…” கைகளை முறுக்கினர்.
“வாட்ஸ் அப்ல இந்த பொம்பிளை மூஞ்சியை போட்டு நாறடிங்கய்யா…” கோரமுகம் காட்டினர்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கருணை ராஜா களத்தில் குதித்தார்…
“என்னய்யா சாதாரண விஷயத்துக்கு இவ்வளவு ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க. கழுத்துக்கு கீழ் போனா நரகல்ய்யா. தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை அணைத்து கெட்ட மரணங்களைத் தடுத்து எழுபது வகைப் பாவங்களை போக்கும். தர்மம் விதியில் உள்ள தீயதை மாற்றும். அஞ்சு பொட்டிச் சோறு வாங்கினதுல உங்க சொத்தெல்லாம் திருடு போய்ருச்சா? அஞ்சு குடும்பங்களின் பசியைத்தானே போக்குச்சு, உங்க ஓவராக்சன் அல்லாஹ்வுக்கே பொறுக்காது…. அபராதம் எதுவும் கட்டனுமா? இதோ இப்பவே கட்றேன்!”
கூடியிருந்த முஸ்லிம் மக்கள் அனைவரும் கருணைராஜாவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.
“பசித்த வயிறுக்கு இறைபக்தி தெரியாது… இந்தாங்க… எங்க டோக்கன்கள்… அந்தம்மா வாங்கின நாலஞ்சு பொட்டிச் சோறுக்கு பர்த்தியா வச்சுங்கங்க….(அந்த ப்பெண்ணிடம்) அவங்க சார்பா நாங்கள் மன்னிப்புக் கேட்குக்கிரம்… நீங்க போங்கம்மா…”
இரு கை கூப்பியபடி அந்தப் பெண் வெளியேறினார். அவுலியா ஜமாத்தாரை விடாமல் சபிக்க ஆரம்பித்தார்.