புனித மெக்கா நகரம்.
ரஷானா அல் ரவ்தா நான்கு நட்சத்திர விடுதி. விடுதியில் மொத்தம் 670 அறைகள். அறை எண் 602-ல் கவிஞர் அத்தாவுல்லா தங்கி இருந்தார்.
அத்தாவுல்லா வளைகுடா நாட்டில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின் தனது பிறந்த ஊரான நாகர்கோவிலுக்குத் திரும்பி விட்டார். வயது 62. பேசினால் அவரது நாவில் நாகர்கோவில் தமிழ் நர்த்தனமாடும். கவிஞர் ஏற்கனவே ஹஜ்ஜும் பல உம்ராக்களும் நிறைவேற்றி இருந்தாலும் ஒரு வாசகரின் அன்பு உபசரிப்பில் மீண்டும் உம்ரா வந்திருக்கிறார்.
கைபேசியில் தனக்கு வந்த குறுஞ்செய்திகளுக்குப் பதிலாக குரல் பதிவுகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.
அறைக்கதவு மும்முறை நளினமாக தட்டப்பட்டது.
“அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணன்!” என்றபடி பைரோஸ்கான் உட்பட்டார்.
பைரோஸ் ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கான வழிகாட்டி. வயது 35. மதுரையைச் சேர்ந்தவர்.
“வஅலைக்கும் ஸலாம் தம்பி!”
எதிரில் வந்தமர்ந்தார் பைரோஸ்.
“காலை உணவு சாப்பிட்டீர்களா அண்ணன்?”
“சாப்பிட்டு விட்டேன். நீங்கள்?”
“நானும் சாப்பிட்டு விட்டேன். உங்களை நிழல் போலத் தொடர்ந்து நீங்கள் விரும்பும் இடங்களைப் பார்க்க உதவும்படி உங்கள் வாசகர் ஷாஜஹான் கூறியுள்ளார்!”
“அவரது அன்புக்கு நன்றி… எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்!”
“இன்று நாம் எங்கு போகப் போகிறோம் தெரியுமா?”
“எங்க?”
“மஸ்ஜித் அல் ஜின் எனப்படும் ஜின்கள் பள்ளிவாசலுக்குப் போகப் போகிறோம்!”
“அது எங்கே இருக்கிறது?” உரையாடலை வளர்க்கும் விதமாய் வினவினார் அத்தாவுல்லா
“அல் ஹஜ்ஜுன் மாவட்டத்தில் இருக்கிறது. மஸ்ஜித் அல் ஹரத்திற்கு வடக்கே 900 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. நபிகள் நாயகம் திருக்குர்ஆன் ஓதிய அழகைக் கண்டு ஒரு ஜின்கள் கூட்டம் இஸ்லாமைத் தழுவியதாக இப்பள்ளிக்கு ஒரு வரலாறு உண்டு. இந்த மசூதிக்கு மஸ்ஜித் அல் பயா (உறுதிமொழிகளின் மசூதி) என்றும் மஸ்ஜித் அல் ஹராஸ் (காவலரின் மசூதி) என்றும் பெயர்கள் உண்டு. இந்த மசூதி நபிகள் நாயகத்திற்கு ஜின்கள் கூட்டம் விசுவாசப் பிரமாணம் எனும் பையத் செய்த இடம். ஜின் தலைவர்களை நபிகள் நாயகம் சந்தித்த போது நபி தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம் மணலில் வரையப்பட்ட ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு விலகாமல் அமர்ந்திருக்குமாறு நபிகள் நாயகம் பணித்தார் என கூறுவர்!”
மஸ்ஜித் அல் ஜின் பற்றி கூடுதல் தகவல்கள் அத்தாவுல்லாவுக்கு தெரிந்தாலும் தகவலை பைரோஸ்கான் வாய் வழி காதுர விரும்பினார்.
“இம்… சொல்லுங்க பைரோஸ்!”
“நபிகள் நாயகமும் ஜின்கூட்டமும் சந்தித்த நிகழ்வே திருக்குர்ஆனின் சூரத்துல் ஜின் அத்தியாயம் 72ன் அடிப்படை!”
தலையாட்டினார் அத்தாவுல்லா.
“இந்த ஜின்கள் பள்ளிவாசலை யார் எப்போது கட்டினார்கள் என்பதற்கு தெளிவான தகவல் இல்லை. கிபி 1700-ல் கட்டப்பட்டு இருக்கலாம். இந்த ஜின்கள் பள்ளிவாசலை அரசர் பகத்தும் அரசர் அப்துல் அஜீஸும் பல தடவைகள் புணரமைத்துள்ளனர்!”
“ஓ!”
“இந்தப் பள்ளியைத் தரிசிப்பது ஹஜ் உம்ரா யாத்ரீகர்களின் கட்டாயச் சடங்குகல்ல. விருப்பத்தேர்வு மட்டுமே!”
“நாம் கட்டாயம் போவோம்!’‘
“ஜின்கள் பள்ளிவாசல் ஜன்னத் அல் மு அல்லா மயானத்திற்கு மிக அருகில் உள்ளது அண்ணன்!”
“இம்!”
“ஜின்கள் பள்ளிவாசல் ஒரு வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அமைப்பு. பள்ளி 500 சதுர மீட்டர் பரப்பளவு அமைந்துள்ளது. கிபி 2000-ல் முழுமையாக இப்பள்ளி புணரமைக்கப்பட்டது. ஒரு பிரதான அரைக்கோள குவிமாடம். குவிமாடத்தில் திருக்குர்ஆன் வசனங்கள். 28 மீட்டர் உயரமுள்ள ஒற்றை மினரா. 350 தொழுகையாளிகள் தொழும் வசதி. பிரதான தொழுகை மண்டபத்தில் கிரானைட் பதிக்கப்பட்ட மிஹ்ராப் மற்றும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் சொற்பொழிவு மேடையை மையமாகக் கொண்ட 270 சதுர மீட்டர் பரப்பளவுள்ள செவ்வக இடம் உள்ளது. பெண்கள் தனியாகத் தொழ வடக்குப்பகுதியில் 130 சதுர மீட்டர் பரப்பளவுள்ள மூடப்பட்ட மண்டபம் உள்ளது. பள்ளியில் மொத்தம் 42 செவ்வக கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன!”
“உங்கள் வர்ணிப்பு ஜின்கள் பள்ளியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது தம்பி!”
அத்தாவுல்லாவும் பைரோஸ்கானும் அறையைப் பூட்டிவிட்டு விடுதிக்கு வெளியே வந்தனர்.
ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் நடைமேடைகளில் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
க்ளைடாஸ்கோப் யாத்ரீகர்கள்.
புனித மக்கா நகரம் 210 நாடுகளின் யாத்ரீகர்களும் வந்து ஆன்மிக இளைப்பாறும் வேடத்தாங்கல்.
இஹ்ராம் ஆடையின் வெண்மை புரட்சி காட்சியமைப்பில் பக்தி பரவசம் காட்டியது.
இருவரும் பராக்கு பார்த்தபடியே ஜின்கள் பள்ளிவாசலுக்கு நடந்தனர். பள்ளியை நெருங்கும் போது பைரோஸ்கானுக்குப் போட்டிம் செயலி மூலம் அழைப்பு வந்தது.
“அண்ணன்! பள்ளியைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரண்டு ரக்காத் தொழுங்கள். ஓர் அவசரப்பணி. போய்விட்டு 20 நிமிடங்களில் திரும்பி விடுவேன்!”
“சரி!”
பள்ளிக்குள் போனார் அத்தாவுல்லா. ஒளு செய்தார். இரண்டு ரக்காத் தொழுதார். தொழுது முடித்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்து திருக்குர்ஆனை மனனமாக இசை நயத்துடன் ஓத ஆரம்பித்தார்.
பத்து நிமிடங்கள் ஓதியிருப்பார்.
யாரோ அவரின் முன் வந்து நின்றனர்.
கண்களை அகலத் திறந்தார் அத்தாவுல்லா. ஏழேகால் அடி உயரத்தில் ஒரு கருப்பின ஆண்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம். யார் நீங்கள்?”
“நீங்கள் குர்ஆன் ஓதும் அழகை பார்த்து மயங்கி நின்றுவிட்டேன். என் பெயர் ஜாவியன். நான் ஒரு எகிப்தியன் முஸ்லிம். என்னுடைய பாட்டனாரின் பெயர் முஹம்மது ஹுசைன் ஹைக்கல். 1914-ல் அவர் ‘ஜைனப்’ எனும் நாவலை எழுதினார். அவரை நவீன அரபு நாவல்களின் தந்தை என அழைப்பர். அல் ஸியாஸா நாளிதழை நிறுவியவர். 1940-ல் எகிப்தின் கல்வி அமைச்சராக இருந்தார். அவர் எழுதிய நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிக மிகப் பிரபலமானது!”
திடுக்கிட்டார் அத்தாவுல்லா.
“ஜாவியன்! இறைவன் எப்படிப்பட்ட சந்திப்புகளை நிகழ்த்துகிறான் பாருங்கள். நான் உங்கள் பாட்டனார் எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் ‘புகழப்பட்டவர்’ என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறேன்! என் பெயர் அத்தாவுல்லா…”
“பெருமகிழ்ச்சி ஒரு சிறு வேண்டுகோள்”
“என்ன?”
“திருக்குர்ஆனை ஓதினீர்கள். காது குளிரக் கேட்டேன். இன்னும் ஒரு அரை மணி நேரம் ஓதுங்களேன்… ப்ளீஸ்!”
மீண்டும் அத்தாவுல்லா ஓத ஆரம்பித்தார்.
காட்சி அமைப்புக்குள் ஒரு ரசவாதம் நிகழ்ந்தது.
அத்தாவுல்லா ஓதும் திருக்குர்ஆனை கேட்க 300-க்கும் மேற்பட்ட கறுப்பின முஸ்லிம் ஆண்கள் கூடினர்.
அனைவரின் முகங்களும் கருப்பு நிற சூரியகாந்தி பூக்கள் போல மலர்ந்தன.
ஓதி முடித்த அத்தாவுல்லா ஜாவியனை பார்த்தார். ஜாவியன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.
“ஏன் அழுகிறீர்கள் ஜாவியன்!
”
“நான் உங்களிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன். நான் எகிப்து நாவல் எழுத்தாளரின் வம்சாவளி அல்ல. பதிலாக நபிகள் நாயகத்தின் குர்ஆன் ஓதும் அழகைக்கண்டு இஸ்லாமில் சேர்ந்த ஜின் கூட்டத்தின் வம்சாவளி நானும் இங்கு கூடியிருக்கும் மற்றவர்களும்!”
“நீங்கள் ஜின்களா?”
“ஆம். நாங்கள் ஜின்கள். நீங்கள் குர்ஆன் ஓதும் அழகைப் பார்க்க எங்கள் மனைவிமார்கள் ஜின்னியாக்களும் வந்துள்ளனர். அவர்கள் பெண்கள் மண்டபத்தில் நிற்கிறார்கள். இதோ என் எளிய பரிசு!” பச்சை நிற மரகதத்தால் ஆன தஸ்பீஹ்மணி மாலையை நீட்டினான் ஜாவியன்.
அனைத்து ஜின்களுடன் ஜாவியன் கரைந்து மறைந்து போனான்.
தஸ்பீஹ்மணி மாலையை தடவிக் கொடுத்து, “எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்றார் அத்தாவுல்லா.