முஹம்மது ஹதீஸ் ரியாஜி மனைவி கொடுத்த மணிச்சுடரை வாங்கிப் படித்தார். ஹதீஸுக்கு வயது 45. 12 வருடங்கள் தொடர்ந்து மார்க்கக் கல்வியை பயின்றவர். ஓர் இஸ்லாமிய இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். மனைவி ஆலிமா பட்டம் பெற்றவர். தனது 30 ஆவது வயதில்தான் ஹதீஸ் திருமணம் செய்து கொண்டார். 14 வயதில் மகன் 10 வயதில் மகள்.
ஜமாத்துல் உலமா சபை கொடுத்த அடையாள வில்லையை ஒரு முறை பார்த்துவிட்டு ஜிப்பா பாக்கட்டில் பத்திரப்படுத்தினார் ஹதீஸ்.
அடுத்து தனது பான் கார்டை எடுத்து முன்னும் பின்னும் பார்த்தார். வருமான வரி கட்டுமளவுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் ஒரு தேவைக்காக பான் கார்டு எடுத்து வைத்திருக்கிறார் ஹதீஸ்.
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் ஒரு உருட்டு உருட்டினார்.
மனைவி கணவரின் உருட்டலைக் கவனித்தாள். “என்ன அட்டைகளோடு விளையாடுறீங்கஜி?’
“இல்ல… பசி பட்டினி கடன் இல்லாத இமாம் என ஏதாவது ஒரு அட்டை இருந்தால் அது எனக்கு கிடைக்குமா செல்லம்?”
“இமாம்களும் வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒரு சந்தேகம்ஜி!”
“என்ன?”
“வருமான வரி கட்ற இமாம்கள் யாராவது தமிழ்நாட்டில இருக்காங்களா?”
“மாதம் ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் சில இமாம்கள் சென்னையில் உள்ளனர். தமிழ்நாட்டில் 2500 மசூதிகள் இருக்கும். ஐயாயிரம் இமாம்கள் இருப்பர். அதில் அரை சதவீத இமாம்கள் கூடப் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல….”
“புலம்பாதிங்கத்தா. அம்மா ஒண்ணு கவனிச்சியா? அத்தா மூஞ்சி இன்னைக்கி ஜீனத்தா இருக்கு?”
“நோன்பாளி முகத்ல அப்படி என்ன ஜீனத்தை கண்டுட்ட மகனே!”
“இன்னைக்கி லைலத்துல் கத்ருக்கு அடுத்த நாள் அத்தாவுக்கு போனஸ் தராங்க!”
“அட ஆமா… மறந்தே போய்ட்டேன்.. நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல?”
“உண்மைதான்… இன்னைக்கி பள்ளிவாசல்ல எனக்குப் போனஸ் தராங்க!”
“போனஸ் எவ்வளவு தருவாங்கத்தா!”
“இரண்டு மாச சம்பளம்!”
“32 ஆயிரம் ரூபாய்!”
“போனஸ் உங்களுக்கு மட்டுமா? பள்ளில யாராருக்குத் தருவாங்க?”
“ஒரு துணை இமாம் ஒரு மோதினாருக்கும் தருவாங்க. சில பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கும் தராங்க!”
“பணமாத் தருவாங்களா, வங்கி கணக்குல போட்டு விட்ருவாங்களா?”
“பணமாத் தருவாங்க!”
“‘பணத்தோடு ஸ்வீட் பாக்ஸ் ஆயத்த ஆடை கிப்ட்பேக் தருவாங்களா?”
“சில பள்ளிகள் தராங்க எங்க பள்ளில கிடையாது!”
இமாமின் மனைவி முகத்தில் இருள் சூழ்ந்தது. “ஜி! அந்தப் பணத்தை அந்தல சிந்தல பண்ணாம நேரா என்கிட்டக் கொண்டு வந்து குடுங்க. மொதச் செலவு 100 கிலோ கர்நாடகாப் பொன்னி சாப்பாட்டு அரிசி மூட்டை ஒண்ணு வாங்கி போடுறதுதான். 7000 ரூபா அரிசி மூட்டைக்குச் செலவாகும் ஒரு மூணு நான்கு மாதம் நல்ல சோத்தை நாம்பளும் நம்ம பிள்ளைகளும் தின்னலாம்!”
“பணத்தை வேறெப்படிம்மா செலவு பண்ணுவ?”
“10 ஆயிரம் ரூபா கடன் இருக்கு. அடைச்சிரலாம். உனக்கு டியூஷன் பீஸ் கட்டுவேன். 5 கிலோ புளி வாங்கி வருஷ உபயோகத்திற்கு வச்சுக்குவேன். நானூறு ரூபாய்க்கு அஞ்சு கிலோ பஞ்சாப் கோதுமை வாங்கி தினம் ராத்திரி சப்பாத்தி சுடுவேன். 1500 ரூபாய்க்கு பத்து கிலோ உளுந்து வாங்கி வருட உபயோகத்திற்கு வச்சுப்பேன். 5 லிட்டர் ரைஸ் பிராண் ஆயில் வாங்குவேன். தலைக்குத் தேய்க்க இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்குவேன்!”
“நிறுத்தும்மா உனக்கு என்னம்மா வாங்குவ?”
“20 ரூபாய்க்கு எள்ளுமிட்டாயும் இருபது ரூபாய்க்கு தேன் மிட்டாயும் வாங்கி குழந்தைகளோடுப் பகிர்ந்துப்பேன்!”
குறுக்கிட்டார் இமாம்.
“செல்லம்! கண்ணாடிக்காரன் கனவு போல கனவு கண்டு கண்ணாடிப் பொருட்களை எட்டி உதைத்து நொறுக்காதே. பணம் கைக்கு வந்த பின் உன் செலவுக் கணக்குளை போடு!”
வெறுமையாக சிரித்தாள் மனைவி.
“உண்மைதான்… பத்திரமாப் போய் வாங்க…”
மொபெட்டை ஸ்டார்ட் செய்தார் முஹம்மது ஹதீஸ்.
பள்ளிவாசல். மினராக்களின் மேல் புறாக்கள் பறந்தன.
முத்தவல்லி அறை.
முத்தவல்லியும் இரு மூத்த நிர்வாகிகளும் அமர்ந்திருந்தனர்.
கூப்பிடுவார்கள் கூப்பிடுவார்கள் என ஒரு மணி நேரம் எதிர்பார்த்துப் பொறுமை இழந்த முஅத்தின் முத்தவல்லி அறை வாசலில் நின்று குரல் கொடுத்தார்.
“போனஸ் இன்னைக்கி குடுப்பீங்கதானே?”
“சலவை தொழிலாளி ஆட்டுத்தலைக்கு பறக்கிற மாதிரி பறக்காதிங்க மோதினார். போனஸ் தராம எங்க போய்டுவோம்? இமாம் துணை இமாமோட உள்ள வாங்க!”
மூவரும் உள்ளே போயினர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
ஒரு நிர்வாகி தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார். “போனஸ் சட்டம் 1965 இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட லாபம் தரும் தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் 8. 33சதவீதம் அல்லது சம்பளத்தில் 20 சதவீத்த்தை வருடாந்திர போனஸாகத் தர வலியுறுத்துகிறது. பள்ளிவாசல் என்ன லாபம் ஈட்டும் ஒரு அமைப்பா? இல்லை. இது ஒரு இறை சேவை மையம். இங்கே உங்களுக்கெல்லாம் மாதா மாதம் சம்பளம் தரவே திண்டாடித் திணறிப் போகிறோம். சந்தாத் தொகை வசூல் பண்றதுக்குள்ள எங்களுக்கெல்லாம் நுரை தள்ளிப் போகுது!”
மோதினார் கண்களில் கண்ணீர் ததும்பியது.
“இப்ப என்னதான் சொல்ல வரீங்க பாய்?”
“ஜமாத்துல் உலமா சபை வாய் வலிக்காம உங்களுக்குப் போனஸ் கொடுக்கச் சொல்லுது. முட்டை இடுற கோழிக்கு தானே வலி தெரியும்!”
“நேரடியா பேசுங்க நிர்வாகி!”
“பள்ளி வாசலின் பொருளாதார நிலை மிகவும் மோசமா இருக்கு. உங்களுக்கெல்லாம் நாங்க சுத்தமாக போனஸே தர மாட்டோம்னு சொல்லல. ரெண்டு மாச போனஸுக்கு பதிலா ஒரு மாச போனஸ் வாங்கிக்கங்க!”
“வயித்துல அடிக்காதிங்க பாய். இந்தப் போனஸ் பணம்தான் எங்க வருடாந்திர ஆக்ஸிஜன். வருடம் முழுக்க மூச்சுத் திணறும் நாங்கள் ரமலான் போனஸில்தான் நிம்மதியாகச் சுவாசிக்கிறோம்!”
“என்ன மோதினார்? ஆக்ஸிஜன் கீக்ஸிஜன்னு பேசுறீங்க…”
இமாம் முஹம்மது ஹதீஸ் மோதினாருக்கு முன்னே போய் நின்றார். “எங்கள் சம்பளப் பணத்தையே உங்களிடம் நேரடியாக வாங்காமல் ஜமாத்துல் உலமா சபை மூலம் வாங்க விருப்பப்படுறோம். லாபம் ஈட்டும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களை விட மும்மடங்கு அதிகமாய் பள்ளிக்கு உழைக்கிறோம். போனஸ் பெற நாங்கள் மிக மிகத் தகுதியானவர்கள். நீங்கள் இரண்டு மாத போனஸ் தராவிட்டால் ஜமாத்துல் உலமா சபையிடம் முறைப்படி புகார் செய்வோம்!”
“கலகம் பண்ணுகிறீர்களா இமாம்?”
“எங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறோம்... ஏன் ஒரு மாத போனஸ் தருகிறீர்கள்? அதனையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு நாங்கள் வேலையைப் பார்க்கிறோம்!”
முத்தவல்லியும் நிர்வாகிகளும் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர். “நமக்குள் நடந்த வாக்குவாதம் மஹல்லாவில் யாருக்கும் தெரிய வேண்டாம்… கையெழுத்து போட்டுவிட்டு இரண்டு மாத போனஸைப் பெற்றுச் செல்லுங்கள்!”
கையெழுத்திட்டு பணம் பெற்றனர். இமாமைக் குரோதமாய் பார்த்தார் நிர்வாகி.
ஒரு தேன்மிட்டாயை ‘பிஸ்மில்லாஹ்’ கூறி வாய்க்குள் போட்டார் இமாம்.
வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
காரில் இருந்து மஹல்லாவின் பணக்காரர்களில் நால்வர் வந்திறங்கினர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“பள்ளி நிர்வாகிகள் உங்களுக்கு இரண்டு மாத போனஸ் தர முரண்டி இருப்பார்களே? மஹல்லாவின் பத்துப் பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து உங்களுக்கு 50000 பணம் தருகிறோம். ரம்ஜானை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்!”
பணத்தை மறித்தார் முஹம்மது ஹதீஸ். ‘எங்களை விடக் கிராமப்புற இமாம்களும் மோதினார்களும் பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உழல்கின்றனர். ஐந்து பள்ளிகளைக் கூறுகிறேன். ஒவ்வொரு பள்ளி இமாமுக்கும் மோதினாருக்கும் அய்யாயிரம் அய்யாயிரம் கொடுப்போம். அவர்களும் ரம்ஜானை மகிழ்ச்சியாகக் கொண்டாடட்டும்!”
“கிளம்புங்கள் இமாம்… நீங்கள் பரிந்துரைத்தபடி ஐந்து பள்ளி இமாம் முஅத்தீன்களுக்கு பணம் கொடுத்து வருவோம்!”
கார் முஹம்மது ஹதீஸுடன் பறந்தது.