கோயம்புத்தூர், துடியலூர், சக்தி நகர்.
தரைத்தளத்தின் படுக்கையறை, கணினியின் பட்டன்களுடன் விரல் நடனம் புரிந்து கொண்டிருந்தார் கேசிகன்.
கேசிகனுக்கு வயது 66. காவல்துறையில் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். 175 செ.மீ உயரம். செயற்கைச் சாயம் ஏற்றப்பட்ட தலைமுடி, முறுக்கு மீசை, சிவாஜி கண்கள், முந்திரிப்பழ மூக்கு, நாவல் நிற உதடுகள். கழுத்தில் புலி நகத்துடன் கூடிய மைனர் செயின். இடது கையில் ராடோ வாட்ச். வலது கைவிரல்களில் இரு வைர மோதிரங்கள். மிடுக்கான குரல்.
தனது 37 ஆண்டுக் காவல்துறைப் பணியைச் சுயவரலாறாகக் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். இதுவரை 12 அத்தியாயங்கள் தட்டச்சு செய்து முடித்து விட்டார்.
மனைவி மிளிர் மகிழ் காபி கொண்டு வந்து வைத்தாள்.
“காபியைக் குடிச்சிட்டு நீங்க பண்ற வேலையைப் பாருங்கள்!”
கேசிகன் காபியை எடுத்து உறிஞ்சினார்.
“காபி நல்லா இருக்கே. என்ன காபிதூள் போட்ட?”
“கான்டினென்டல்…”
“ப்ரூவை விட இது நல்லா இருக்கு…”
“மகிழ்ச்சி!”
“என் கூட ஏதோ பேச விரும்புற போல… உன் உடல் மொழியில் தெரியுது!”
“ஆமாம்!”
ஒரு சேரை கணவரருகே இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“வீட்ல நீங்க ஒரு டிஎஸ்பியா அல்லது என் புருஷரா?”
“நான் உன் டிஎஸ்பி கணவர்!”
“நம்ம ஒரே மகன் மனைவி இரு குழந்தைகளோடு கனடாவிலிருந்து இந்தியாவுக்கு நிரந்தரமா திரும்புறான் இல்லையா?”
“ஆமா டிசம்பர்ல வர்றதா சொல்லிருந்தான்!”
“இன்னைக்கி காலைல உங்களுக்குப் போன் பண்ணிருக்கான். நீங்க தூங்கிட்டு இருந்திருக்கீங்க. எனக்குப் போன் பண்ணினான்!”
“என்ன சொன்னான் இளமாறன்?”
“அவனும் அவனது குடும்பமும் ஜூன் மாதம் இருபதாம் தேதி தாயகம் திரும்புறாங்களாம்…”
“நல்ல விஷயம் தான்!”
“இளமாறன் நம்ம வீட்ல நம்மளோட சேந்திருக்க விரும்பவில்லை. தனிவீட்டில்தான் குடியிருப்பானாம்… உறுதியாச் சொல்லிட்டான்!”
“என்னம்மா சொல்ற… பங்களா மாதிரி வீடு கட்டியிருக்கோம். நாலு பாத்ரூம் அட்டாச்டு படுக்கையறைகள் இருக்கு. மூணுல அவனும் அவன் குடும்பமும் புழங்கலாம். ஒண்ணுல நீயும் நானும் இருந்துக்கலாம்!”
“அவன் அய்டியா வேற. நாம வாடகைக்கு விட்ருக்கிற வீட்டுக்கு மூவ் ஆக விரும்புகிறான்…. அவனுக்கு பிரைவசி வேணுமாம்!”
சிரித்தார் கேசிகன்.
“பெத்த தாய் தகப்பன்கிட்டயிருந்து விலகி நிற்கிறது தான் பிரைவசியா? தவிர, நம்ம வீட்ல குடி இருக்ற ரவூப் ஹக்கீம் பாய்க்கு டிசம்பர் வரைக்கும் வீட்டைக் காலி பண்ண டைம் குடுத்திருக்கிறோம். திடுதிப்னு இன்னும் 13 நாள்ல வீட்டைக் காலி பண்ணுங்கன்னு சொல்றது நியாயமா?”
“அய்யா போலீசு! உன் நியாயத்தை எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வச்சிக்க… ஒரு முஸ்லிமுக்கு வீட்டை வாடகைக்கு விடுறதே தப்பு… வீட்டை நாறடிச்சிருவாங்க…. கஜமுஜான்னு பிள்ளைகள் பெத்துப்பாங்க… எப்பப் பாத்தாலும் அல்லா அல்லான்னு பக்திக் கூச்சல் போடுவாங்க”
“பொதுப்புத்தில நிலவுகிற பொய்புனைவுகளை அவதூறாச் சொல்லாதே. ரவூப் ஹக்கீம் பாய் நம்ம வீட்டுக்கு குடிவந்து 11 வருஷமாகுது. வாடகையை டாண்னு ஒண்ணாந்தேதியே நம்ம வங்கிக் கணக்குல போட்ருவார். நம்மை விட வீட்டைச் சுத்தமா வச்சிருக்காங்க. இரண்டே மகன்கள். இளையவனுக்கு ஆட்டிஸ பாதிப்பு. அவங்க தெய்வத்தை அவங்க கும்பிடுராங்க நமக்கென்ன அதில் பிரச்சனை?”
“ரவூப் ஹக்கீம் பாய்க்கு பிரசாரகர் வேலை பார்க்காதிங்க. ரவூப் ஹக்கீம் சொக்கத்தங்கம்தான். அவருக்கு நம்ம வீட்டை எழுதி வச்சுருவோமா?”
“டிசம்பர் வரை நம்ம மகன் குடும்பம் நம்ம வீட்லயே இருக்கட்டும். டிசம்பரில் ரவூப் ஹக்கீம் வீட்டை காலி பண்ணியவுடன் நம்ம மகன் குடும்பம் அந்த வீட்டுக்கு மூவ் ஆகிக்கிடட்டும்!”
“ஸாரி…. அது முடியாது!”
“அம்மாவும் மகனும் சேர்ந்து அல்சாட்டியம் பண்றீங்களா? நான் இளமாறனிடம் பேசுகிறேன்!”
“வீடு விஷயமா நான் போலீஸ்காரரிடம் எதுவும் பேச விரும்பவில்லை எனக் கூறிவிட்டான் இளமாறன். அவன் வரும் போது வீடு மராமத்து பார்க்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுசா ரெடி டு ஆக்குபைட் ஸ்டேஜ்ல இருக்கனும்னு சொல்லிட்டான்!”
“அதனால?”
“இன்னைக்கி வியாழக்கிழமை. வருகிற ஞாயிற்றுக்கிழமை காலைல வீட்டை காலி பண்ணிக் கொடுத்திடணும்னு ஸ்ட்ரிக்ட்டா அந்த ரவூப் ஹக்கீம் கிட்ட சொல்லிடுங்க!”
“அப்படி ஞாயிற்றுக்கிழமை ரவூப் பாய் வீட்டை காலி பண்ணலேன்னா?”
“வீட்ல இருக்ற சாமான்களை வெளிய தூக்கியெறிந்து வலுக்கட்டாயமா அவர் குடும்பத்தை வீட்டை விட்டு காலி பண்ண வைப்பேன்!”
“அவ்வளவு பெரிய கொடுங்கோலியா நீ?”
“நான் பரம சாது தான். என் மகனுக்கு ஒண்ணு தேவைன்னா இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் பகைச்சிப்பேன்!”
மனைவியை ஆழமாகப் பார்த்தார் கேசிகன்.
“சைலன்ட் பார்ட்டி படுவயலென்ட் ஆகிட்டியே?”
“பல வருடங்களுக்கு பிறகு என் மகன் குடும்பத்தோட இந்தியால செட்டில் ஆகப்போறான். அவனுக்குப் பிடிச்சதெல்லாம் செஞ்சு அவனைப் பக்கத்திலேயே தங்க வைக்றது தானே ஒரு புத்திசாலி அம்மாவுக்கு அழகு!”
“போன்ல ரவூப் ஹக்கீம் பாயோட பேசுறேன்!”
“போன்ல எல்லாம் கொஞ்ச வேண்டாம்… நேரா இப்பவே அவர் வீட்டுக்குப் போங்க. பழைய கார்களை வாங்கி விக்றதுதானே அவர் வேலை. வீட்லதான் இருப்பார். கரன்ட் ரீடிங் பாருங்க. அவர் அட்வான்ஸ் கொடுத்த கணக்கு எல்லாம் எழுதிட்டு போங்க. வீட்டைக் காலி பண்ணச் சொல்லி, கணக்கு வழக்கை உடனடியாக செட்டில் பண்ணிருங்க!”
“சரி!”
இவர்கள் வாடகைக்கு விட்டிருக்கும் வீடு. இவர்களின் வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி அமைந்துள்ளது.
பைக்கில் விரைந்தார் கேசிகன்.
வாசலின் அழைப்பு மணியை மும்முறை அமுக்கினார்.
கதவு திறந்தது. மருதாணி பூசிய தாடியுடன் வரவேற்றார் ரவூப் ஹக்கீம். “வாங்க வாங்க ஹவுஸ் ஓனர் சார்! நல்லா இருக்கீங்களா?”
“நல்லாயிருக்கேன். நீங்க?”
“அல்லாஹ்வின் அருளால் நானும் என் குடும்பமும் நலம். என்ன விஷயமா வந்திருக்கீங்க? இந்த மாச வாடகையை ஏற்கனவே உங்க கணக்கில போட்டுட்டேனே?”
“என் மகன் குடும்பத்தோட இந்தியாவில் செட்டிலாக வரான். வருகிற ஞாயிற்றுக்கிழமை வீட்டை நீங்க காலி பண்ணிக் கொடுக்கனும்னு என் மனைவி சொல்றா!”
ரவூப் ஹக்கீமின் கண்கள் கலங்கின. “அவசரமா உங்களுக்கு வீடு தேவை. கேக்கறீங்க கொடுப்பவனும் அவனே, எடுப்பவனும் அவனே… சரி, நாளை ஜுஆம்மா தொழுகைக்கு பின் உங்க வீட்டை காலி பண்ணிக் கொடுத்திடுறேன்”
“நீங்கள் எங்கள் வீட்டில் குடியிருந்தவரை எங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கொடுத்தீங்க பாய். நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பீங்க பாய். எனக்கு நாலஞ்சு வீடு புரோக்கர்கள் தெரியும். அவர்களிடம் கூறி உங்களுக்கு ஒரு வீடு பார்க்க சொல்லவா?”
“வேண்டாம்… நான் பார்த்துக் கொள்கிறேன் சுக்ரியா” கணக்கு வழக்கு செட்டில் செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை மதியம் 2: 30 மணிக்கு வீட்டை முழுமையாகக் காட்டிச் சாவியை கையளித்தார் ரவூப் ஹக்கீம்.
மூன்று மாதங்களுக்கு பிறகு.
கேசிகன் வாகனமும் ரவூப் ஹக்கீம் பாய் வாகனமும் அன்பாய் முட்டிக்கொண்டன.
“எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கோம். உக்கடத்ல இருக்கிறோம். மனைவியின் நகைகளை விற்றோம். இருதரப்பு சகோதர சகோதரிகள் பணம் கொடுத்தனர். 30 லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கட்டின புது வீட்டை விலைக்கு வாங்கிக் குடிபோய்ட்டோம். சொந்த வீட்டுக்குக் குடிபோகும் வாய்ப்பை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி. உங்கள் மகன் குடும்பத்தாரும் உங்கள் துணைவியாருக்கும் எங்களின் அன்பான நல விசாரிப்புகள்… எங்கள் வீட்டுக்கு ஒரு தடவை வந்து சாயா குடிச்சிட்டு போங்க. லொக்கேஷன் அனுப்பறேன்”
“இன்ஷா அல்லாஹ்!” என்றார் கேசிகன்.