வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த இசக்கியம்மாள், மகராசியம்மாள் வருகையை எதிர்பார்த்துத் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை, மகராசியம்மாள் சிறிது தூரத்தில்தான் வந்து கொண்டிருந்தாள்.
"என்னடி மகராசி இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டா வர்ற...? வீட்டில எதுவும் வேலையைக் கொடுத்திட்டாங்களா...?" என்று இசக்கியம்மாள் மகராசியைப் பார்த்துக் கேட்டாள்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்கம்மா... இன்னைக்கு வெள்ளிக்கிழமையாச்சே... குளிச்சுக் கிளம்பி வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு..." என்று சொல்லியபடி அங்கிருந்த சேரில் சென்றமர்ந்தாள்.
பின்னர் அவளே, "ஆமாம், நேத்து ஏதோ... பொம்மைக்காரனைப் பத்திச் சொல்றேன்னு சொன்னீங்களே... அதப்பத்திச் சொல்லுங்க..." என்று இசக்கியம்மாளைப் பார்த்துக் கேட்டார்.
இசக்கியம்மாளும் அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
மாசாணம் மவன் பொம்மைய எறக்கி வைத்தாமுல்ல அந்த வீட்ல மாரியப்பன்னு ஒரு பெரிய மனுசர் இருந்தாரு. அவருக்கு ரெண்டு புள்ளேளுவ. அதுல மூத்தவன் கலியாணம் முடிச்சு வந்தபொறவு வென தொடங்கிருச்சு.
அவரு வீட்டம்மா பூங்கொடிக்கு பொழுதெனக்கும் வாசத்திண்ணயில உக்காந்து வம்படிக்கதுதான் சோலி. அவள் கதை சொல்லச் சொல்ல மகராசியம்மாள் மனக் கண்முன் காட்சிகள் விரிந்தன...
*****
சிவகாமி சோலியெல்லாம் முடிஞ்சிச்சா. சீயக்கா தேச்சி குளிச்சிட்டு உக்காந்திருக்கியாக்கும். ஊருக்குப் போயிட்டு வந்தியே. உன் மாமியா என்ன சொன்னாங்க ஆரம்பித்தாள் பூங்கொடி.
புதிதாய்க் கல்யாணம் முடிந்து தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் சிவகாமிக்கு பூங்கொடியின் மருமகள் தேவியிடம்தான் பேச ஆசை. ஆனால் இவள் விட மாட்டாளே.
ஆமா போயிட்டுவந்துட்டேன். எல்லாரும் நல்லா இருக்காங்க.
அப்புறம் என்ன கொடுத்துவிட்டாங்க. எதும் குடுத்து உட்டாங்களா. பண்டம், பலகாரம், வத்தல், சாம்பார்ப் பொடி இந்த மாதிரி. ஒத்தேல கெடந்து கஷ்டப்படறியேன்னு கேட்டேன். நீ என்ன உங்கம்மா வீட்டுக்கா பொயிட்டுவந்த. இதயெல்லாம் எதிர்பாக்கறதுக்கு. சரி சரி சுதாம்மா வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் எங்க வீட்டுத்திண்ணையில உக்காந்து பேசலாம் வா.
அழைப்பு விடுத்துவிட்டுச் சென்றுவிட்டாள். சிவகாமியின் மனசு யோசிக்க ஆரம்பித்தது. ஆமாம் ஒத்தப் பிள்ள தானே என் மாமியாருக்கு. இவங்க சொன்னதெல்லாம் கொடுத்திருக்கலாமே. ஏன் கொடுக்கல. யோசிக்க ஆரம்பித்தாள். ஒண்ணுவிட்ட நாத்தனாரப் பாக்க வண்ணாரப்பேட்ட போயிருக்கையில சொன்ன ஞாபகம்.
எங்க சித்தி அதான் உங்க மாமியார் கைப்பக்குவம் வத்தல் இருக்கு. பொரிச்சுக் குடுக்கட்டான். கேட்ட ஞாபகம்.
அப்டின்னா என் மாமியார் ஊருக்கெல்லாம் செஞ்சு குடுக்குது. எனக்கு வெறும் வாய்வார்த்த தான். என் மருமகளப் போல உண்டான்னு. என்னதான் வாயாடின்னாலும் பக்கத்துவீட்டு அத்த சரியாதான் சொல்லுது. எம் மாமியாருக்கு ஓரவஞ்சனை தான். அடுத்த தடவை போகும்போது கேட்டுறணும். தீர்மானித்துக் கொண்டாள்.
என்ன. மலையப் பொறட்டர யோசன. இங்க வந்து உக்காரு. சுதாம்மா கூப்பிடவே அடுத்தவீட்டுத் திண்ணைக்கு இடம் மாறினாள். பரஸ்பரம் அதே கேள்விகள் சுதாஅம்மாவிடமிருந்தும். பின்னர் பேச்சு திசைமாறியது.
எதுத்த வீட்டு நாச்சியாரோட நாத்தனார் பொசுக்குனு செத்துட்டாளாமே. சேதி தெரியுமா. சுதாம்மா ஆரம்பித்தாள்.
அப்டியா என்னவாம். இது பூங்கொடி.
என்னவோ நாலுநாள் ஆஸ்பத்திரில சேத்துருந்தாங்களாம். அங்கேயே உயிர் போயிடுச்சு போல. வியாதினு ஒண்ணும் பெரிசாயில்ல... திடீர் வயித்துவலிதான் . என்ன என்னன்னு பாத்து நாலு நாள் மருந்து மாத்திர கொடுத்திருக்காங்க. டாக்டர்ங்க வியாதி கண்டுபிடிக்கறதுக்குள்ள அது போய்ச் சேந்திருச்சு.
துக்கம் கேக்க நாம எப்பம் போலாம் பூங்கொடி கேட்டாள்.
அப்டியொண்ணும் போயெல்லாம் கேக்க வேணாம். வெளில வாசல்ல பாக்கும்போது கேட்டாப் போதும்.
நாச்சியாரு செத்த வீட்டுக்குப் போயி அவளோட நக நட்டயெல்லாம் பேசி திரும்ப வாங்கிட்டு வந்திருச்சுன்னு கேள்விப்பட்டேன். நாங்கூட நாச்சியார் எவ்ளோ நல்லவ மாமியாருக்கு உதவியா இருக்கான்னு நெனச்சேன். பெறகுதான் தெரிஞ்சது வாங்கிட்டு வந்த நகைய தன் மாமியா கிட்ட குடுக்காம யாருக்கிட்ட இருந்தா என்ன உங்க பொண்ணே போயிட்டா இத வச்சி என்ன பண்ணப் போறீங்க. நீங்க குடுத்ததா நெனச்சி எம் புள்ளைக்கு சீதனமா வச்சிக்குடுதேன்னு சொல்லிட்டாளாம். சும்மாவா நூறு களஞ்சி நகையில்ல.
ஆமா சிவகாமி உனக்கு எவ்ளோ நக போட்டாங்க. சிவகாமிக்கு சொல்ல மனசில்லை. அவளின் கணவன் எனக்கு எதுவுமே வேண்டாமென்று சொல்லிவிட்டான். மாமியாரும் மாமனாரும் ஒருவார்த்தை கேட்கவில்லை இப்போதுவரை யாருக்கும் அவள் எவ்வளவு நகை, வெள்ளிப்பாத்திரம் கொண்டுவந்தாள் என்று தெரியாது. அப்படியிருக்க இவுங்களுக்கு நான் ஏன் சொல்லணும்.
மாமியார் வீட்டிலயும் ஒருமுறை பக்கத்துவீட்டுக்காரி கேக்கும்போது மாமியார் என்ன சொன்னாள் யோசித்தாள். எம் மருமக வேணுங்கற அளவு சீதனம் கொண்டு வந்திருக்கா. தங்கமான பொண்ணு. எம் மகன் குடுத்துவச்சவன். இதுதான் அவளின் பதில். ஆனால் அது இங்கு செல்லுபடியாகாது.
இதுங்க கொண்டுவரச்சொல்லி நிறுத்துப் பாக்கக் கூட தயங்காத ஜன்மங்க. என் நேரம். இவுங்க கூட பொழுதக் கழிக்க வேண்டியிருக்கு. ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு விட்டுற வேண்டியதுதான்.
நல்லாத்தான் மழுப்பக் கத்துக்கிட்ட சிவகாமி. பரவாயில்ல. எவ்ளோ நக இருந்தாலும் அத பத்திரப்படுத்தி வச்சுக்கோ. மாமியா வீட்ல கொண்டு குடுத்துறாத. நாத்தனார் இல்லன்னா என்ன. இதுக்குன்னே ஒண்ணுவிட்ட சகோதரிங்க இருக்கப் போறாளுங்க. அப்டி யாரும் இருக்காங்களா?
ஆமாம். வண்ணாரப்பேட்டையில. சிவகாமியின் பதிலுக்குப்பின் சுதாம்மா தொடர்ந்தாள்.
வண்ணாரப்பேட்டைக்கும் திருநெல்வேலிக்கும் என்ன பெரிய தூரம். நெனச்ச நேரம் போயிட்டு வந்துடலாமே. எதுக்கும் நீ பத்திரமாவே இரு. உம் பட்டுப்புடவை, வெள்ளிப் பாத்திரம், புழங்காத பெரிய பித்தாளப் பாத்திரங்க எல்லாம் எங்க இருக்கு. அங்க உட்டுட்டு வந்திருந்தேன்னா ஒவ்வொண்ணையா போகும் போதும் வரும் போதும் ஏதும் சாக்கு சொல்லி எடுத்துட்டு வந்திரு. நம்ம சமுத்திரபுரத்துல பாதுகாப்பு அதிகம்தான்.
நம்ம நாச்சியாரப் பாரு. காரியத்துல கண்ணா அஞ்சு வயசுப் புள்ளைக்கு இப்பவே மாமியா வீட்டு நூறுகளஞ்சி நகைய ஒரு பொல்லாப்பும் இல்லாம கொண்டுசேத்துக்கிட்டா. நீயும் அவள மாதிரி சின்ன வயசு. அதனால சொல்லுதோம் வேற ஒண்ணுமில்ல.
பையப்பைய ஒட்டிக்கிட்டு திரியுற ஒண்ணுவிட்ட நாத்தனார வெட்டி விடுற வழியப் பாரு. தோணினதச் சொல்லிட்டோம். அப்புறம் உன் சாமர்த்தியம்.
*****
கடசியில என்ன ஆச்சுன்னு சொல்லுங்கம்மா... என்று மகராசியம்மாள் கேட்க இசக்கியம்மா ஆச்சியும் அந்தக் கதையைத் தொடர்ந்தாள்.
பெறகு என்ன நடந்திச்சு... சிவகாமி மனசுல இவுக வெதச்ச வெச விதை மரமா முளச்சி புருசன் கிட்டயும் மாமியா கிட்டயும் நித்தமும் சண்ட போட்டு மாமியா கெழவி நொந்து செத்தே போயிட்டா. புருசன் தாடி வளத்துட்டு பண்டாரம் கணக்கா திரிஞ்சிக்கிட்டிருக்கான். இந்தா வெளிய வந்து எட்டிப் பாக்குதால்ல அவதான் சிவகாமி கெழவி. பாவம். புள்ளயும்இல்ல குட்டியும் இல்ல. அவளுக்கு மூட்டி குடுத்துகுடியக் கெடுத்தால்ல பூங்கொடி அவ மருமக தேவி அந்தா நிக்காபாரு பேரப்பிள்ளேளுக்கு பலூன் வேங்கிக் கொடுத்துட்டு. சுதாம்மாவேற ஊருக்குப் போயிடுச்சு. அதுவும் நல்லாத்தான் இருக்கு. சொந்தத்துல யோசிக்காம சொல்புத்திக்கு கேக்குதவங்களுக்கு சிவகாமி நெலமதான் கெடைக்கும்.
அது சரி, சொல்புத்தி கேக்குதவங்களுக்குச் சரியான பாடம்தான்... நான் போயிட்டு நாளைக்கு வர்ரேன்... என்று சொன்ன மகராசியம்மாள் அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.
என்ன அதுக்குள்ள கிளம்பிடே... செத்த இருந்துதான் போயேன்...
இல்லைங்கம்மா... இன்னிக்கு என் மருமவ... அம்பாசமுத்திரம் வரைக்கும் போகனும் விரசா வந்திருங்கன்னு சொல்லி அனுப்பினா... என்றபடி மகராசி முன்னாடியேக் கிளம்பிச் சென்றாள்.