தமிழ் மொழியையே தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் மதத்தினை மரபு வழியாக்கி வாழுகின்ற இரண்டு சமூகங்களை இப்பிரதேசம் கொண்டுள்ளது.
01. முஸ்லிம் சமூகம் (இஸ்லாமியர்)
02. பறங்கியர் சமூகம்
மட்டக்களப்பு பிரதேசத்தில் இஸ்லாம் மதத்தினை மரபு வழியாக கொண்டு வாழுகின்ற முக்கியத்துவம் பெற்ற சமூகமாக முஸ்லிம்கள் விளங்குகின்றனர். கி.பி 13ம் நூற்றாண்டில் கலிங்க மாகோனின் சமூக வரையறைக்குள் முஸ்லிம்கள் இனம் காணப்படாமையால் ஏற்கனவே அறியப்பட்ட பட்டாணியர் தொடர்பான தேடல்கள் அவசியமாகின்றது. வியாபார நோக்கில் வந்த பட்டாணியர் பற்றியும் அவர்களது போர்க்கலைகள் பற்றியும் மட்டக்களப்பில் சொல்லப்படும் தகவல்களைப் போன்றே முற்குகர் பெருமளவில் வாழ்ந்த புத்தளப் பிரதேசத்திலும் மற்றும் சிங்களப் பிரதேசங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலிப் பகுதிகளிலும், கேரளத்தின் கரையோரப் பகுதிகளிலும் இது போன்ற தகவல்கள் பெருமளவு கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரசீகர்களும் அராபியர்களும் வணிகம் மற்றும் அரசியல்ரீதியான தொடர்புகளைக் கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலம் முதலே மிக நெருக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பது அறியப்பட்டதே. எனினும் அவர்களது அன்றைய தமிழகத்தின் சமூக நிலை தொடர்பில் வரலாற்று ரீதியாக எதனையும் அறிய முடியவில்லை.
நீண்ட காலமாக மட்டக்களப்பில் தமிழருடன் இரண்டறக் கலந்து கிடக்கும் மக்களின் வரலாறு பற்றிப் பலர் புதுப்புது அக்கறையின் பால் வெவ்வேறுபட்ட தகவல்களை வரலாறாகப் பதிவு செய்ய முனைகின்றனர். இது தொடர்பாகத் தென்னிந்திய ஈழ வரலாற்றாசியர்களின் கருத்துக்கள் ஆழமாகக் கவனிக்கத் தக்கவையாகின்றன. கிறிஸ்துவுடன் தொடர்ந்த காலத்தே இந்திய உப கண்ட வர்த்தகத்தில் பாரசீகர்களும் அராபியர்களும் இடைநிலை வர்த்தகர்களாகச் செயல்பட்டனர். கி.பி 3ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கிரேக்க ரோமானிய வர்த்தகர்களும் நுழைந்து கொண்டனர். இவர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு இலகுவான தரைப்பாதை அராபிய பாரசீக நாடுகளுக்கூடாக இருந்ததால் அராபியர்களும் பாரசீகர்களும் தங்கள் நாட்டுப் பாதைகளை கட்டுப்படுத்தினர். இதனால் அரேபியக் கடல் மார்க்கப் பாதை ஒன்றினைக் கிரேக்கரும் ரோமானியரும் உருவாக்க வேண்டியதாயிற்று. இதன் பின் இரு சாராருக்கும் இடையில் வர்த்தகத் துறையில் பெரும் போட்டி நிலவலாயிற்று. கி.பி 4ம் நூற்றாண்டில் கிரேக்க ரோமானியர்களின் எதிரியாகக் கருதப்பட்ட சஸ்ஸானிய மரபினர் பாரசீகத்தில் மேலாதிக்கம் பெற்றதும் கிரேக்க ரோமானிய வர்த்தகச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டன. கி.பி 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்திய உபகண்ட வர்த்தகத் துறையை பாரசீகர்கள் தங்கள் ஆதிக்கத்தினுள் வைத்திருந்தனர். இவர்கள் நெஸ்ரோரிய கிறிஸ்தவத்தை சார்ந்தவர்கள். இவர்களையே தென்னிந்திய நாடுகள் பட்டாணியர் என்ற பெயரில் அழைக்கலாயினர். தமிழகத்தின் பண்டைய குறிப்புகள் இதனை முழமையாக சான்றுபடுத்துபவையாகவே உள்ளன. கழகத் தமிழ் அகராதியும் உருது மொழி பேசும் பாரசீகரே பட்டாணியர் என விரித்துக் கூறுகின்றது.
கி.பி 6ம் நூற்றாண்டில் கொஸ்மஸ் என்பவரால் எழுதப்பட்ட பயணக் குறிப்புகள் இலங்கையில் பாரசீகரின் வர்த்தகக் குடியிருப்புகள் இருந்தமையை உறுதி செய்கின்றன. இக்குடியிருப்புகள் கி.பி. 4ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக அனுராதபுர பகுதியில் இருந்தமைக்கு அவை சான்றளிக்கின்றன. எனவே அங்கிருந்த பாரசீக வர்த்தகர்கள் மட்டக்களப்பு உட்பட இலங்கை முழுவதிலும் அக்காலத்தே வர்த்தக மையங்களை நிறுவிச் செயல்பட்டனர் என்பதனை மறுக்க முடியாது. கி.பி 4ம் நூற்றாண்டினைக் கொண்ட பாரசீகரின் குடியிருப்பு ஒன்று அனுராதபுரத்தில் இருந்தமை வரலாற்றுத் துறையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்டதான சிலுவைச் சின்னம் தாங்கிய கற்சிற்பம் பண்டைய பாரசீக நெஸ்ரோரிய கிறிஸ்தவர்களது வாணிபம் இலங்கையில் இடம் பெற்றமையை ஐயத்துக்கு இடமின்றி வெளிப்படுத்துவதாக அமைகின்றது. யாழ்ப்பாண அரசிருக்கையான கந்தரோடையில் பெறப்பட்ட சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயமும் இதனையே வலியுறுத்துவதாக அமைகின்றது. கி.பி 6ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாம் மதம் கி.பி. 7ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மத்திய ஆசியாவில் எழுச்சி பெற்ற போது பாரசீகர்கள் நெஸ்ரோரியக் கிறிஸ்தவத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு உருது மொழியோடு நபிகள் பெருமானது தூய குர் - ஆனையும் முழுமையாக ஏற்றுக் கொண்டனர். இதன்பின் பாரசீகரும் அராபியரும் அபிசீனியரும் (மூவினம்) இணைந்த இஸ்லாமிய வர்த்தக மையங்கள் இலங்கையில் இடம் பெறலாயின.
அக்கால சேர நாட்டு (கேரளா) வாணிபக் குறிப்புகளின்படி அவர்களது வர்த்தகக் கப்பல்கள் கொல்லம் துறைமுகத்துக்குச் சென்று பின்னர் இரு மார்க்கமாகப் பிரிந்து ஒன்று மன்னார் குடா வழியாகவும் மற்றது இலங்கையின் தென்வழியாக காலித்துறை மற்றும் கிழக்கு வழி சென்று பின்னர் கங்கைச் சமவெளி முகத்துவாரங்களில் தரித்திருக்கின்றன. இவர்கள் இதனூடே நாட்டின் உள்ளுர்த் துறைகளிலும் தங்கள் வாத்தகத்தை மேற்கொண்டனர். மட்டக்களப்பில் பன்குடாவெளித்துறை, தீh;வைத்துறை (ஆரையம்பதி - காத்தான்குடி), அம்பிளான் துறை, மண்டூர்துறை, கிட்டங்கித்துறை, சம்மாந்துறை என்பவை இதில் முக்கியத்துவம் பெற்ற உள்ளுர்த் துறைகளாகும். வரலாற்றாசிரியர் செ.கிருஸ்ணராசாவும் இஸ்லாமியரின் உள்ளுர் வர்த்தகத் துறையாக அம்பிளான்துறை, சம்மாந்துறை என்பவை விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பன்னெடுங்காலமாகத் தென்னிந்திய வரலாற்றோடு ஈழத்து வரலாறு பின்னிப் பிணைந்து கிடப்பதால் அங்கே முஸ்லிம்கள் தடம் பதித்த காலமும் நமக்கு அவசியமாகின்றது. கி.பி 1311 ல் டில்லி அலாவுதீன் கில்சியின் தளபதியான மாலிக்காபூர் தலைமையில் நிகழ்ந்த தமிழ்நாட்டின் மீதான படையெடுப்பு வெற்றி பெற்றதும் தொடர்ந்து நிலைபெறவில்லை. அதன்பின் கி.பி 1318ல் டில்லி சுல்தான் முபாரக் காலத்தில் தளபதி குஸ்ருக்கான் தலைமையில் நடந்த படையெடுப்பானது பாண்டிநாடு வரை முன்னேறினாலும் ஆட்சியைக் கைப்பற்றித் தக்க வைக்க அவனால் முடியவில்லை. கி.பி 1324ல் முகம்மது பின் துக்ளக் என அழைக்கப்பட்ட உலூக்கான் டில்லியிலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுத்தான். தேவகிரியை வெற்றி கொண்டு தெலிங்கானாவில் புகுந்து வாராங்கல்லைத் தாக்கிய பின் தமிழகத்துக்குள் நுழைந்தான். பாண்டிய நாட்டைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியனைக் கைது செய்தான். உலூக்கான் முகம்மது பின் துக்ளக் என்ற பெயரில் டில்லி சுல்தானாகித் தனது மதுரைப் பிரதிநிதியாக சலாவுதீன் அஸன்சாவை நியமித்தான். கி.பி 1333ல் அஸன்சா டில்லியிலிருந்து பிரிந்து மதுரையில் தனது சுய ஆட்சியை நிறுவினான். கி.பி 1386 வரை 53 ஆண்டுகள் மதுரை முஸ்லிம்கள் வசமிருந்தது. இக்காலத்தில் சமயச் சார்பு ஆட்சி முறை பாண்டி நாட்டில் பெருமளவு இந்துக்களை இஸ்லாமைத் தழுவ வைத்தது. இதனைத் தொடர்ந்து வியாபாரம் மற்றும் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் இம்மக்கள் ஈழத்தின் வடமேற்கு பிரதேசத்துள் வரலாயினர் எனத் தமிழக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்காலத்தே புத்தளப் பிரதேசத்தில் முற்குகரிடையே ஏற்பட்ட மத மாற்றங்களும் நம் கவனத்திற்கு வருகின்றன. புத்தளம் முற்குக வன்னியன் குஞ்சித்தம்பி சிங்கள வன்னியன் ஒருவனுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து முஸ்லிம்களின் உதவி பெற்றுத் தனது புத்தளத்து வன்னிமை உரிமையினை நிலை நாட்டியபின் தனது உறவினர்களுடன் இஸ்லாத்தைத் தழுவிக் குஞ்சித்தம்பி சேகு லெவ்வை வன்னியன் என அழைக்கப்பட்டதாக புத்தளத்துத் தகவல்கள் கூறுகின்றன. போர்த்துக்கீசர் புத்தளம் (சிலாபம்) பிரதேசத்தைக் கைப்பற்றிய காலத்தே சிலாபம் முனீஸ்வரம் கோவிலுக்குரித்தான 64 தமிழ் கிராமங்கள் இருந்ததாகத் தங்கள் தோம்பில் பெயர் விபரங்களை எழுதியுள்ளனர். இவர்கள் கிறிஸ்தவத்தைக் கட்டாயப்படுத்திப் பரப்ப முற்பட்டபோது அங்குள்ள தமிழர்களால் நெருக்கமாகக் கருதப்பட்ட இஸ்லாமிய தமிழர்களின் அரவணைப்புக் காரணமாக மீண்டும் இஸ்லாத்தை தழுவினர். இதன் காரணத்தாலும் தங்கள் வர்த்தகத்துக்கு முஸ்லிம்களால் ஏற்பட்ட பெரும் இடையூறு காரணமாகவும் வலுக்கட்டாயமாக முஸ்லிம்களை வெளியேற்றும் வேலையில் போர்த்துக்கீசர் தீவிரம் காட்டினர். இதனால் அல்லலுற்ற முஸ்லிம்கள் குருநாகலூடாக மத்தியக் கண்டியை நோக்கிப் பயணமாகினர்.
போர்த்துக்கீசரை எதிர்த்துக் கொண்டிருந்த கண்டி மன்னன் செனரதன் இவர்களது கோரிக்கைகளை அனுதாபத்துடன் ஏற்று சிலரை மத்தியப் பகுதிகளில் குடியமர்த்தினான். ஏனையவர்களைத் தனது நட்புக்குரிய முற்குக வன்னியர்களின் துணை கொண்டு மட்டக்களப்பில் குடியேறச் செய்தான். இதில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் கி.பி. 1626ல் குடியேறியதாகத் தகவல்கள் உள்ளன.
இதனிடையே ஏறாவூரில் குடிபதிகளான பட்டாணியர் எனப்பட்டவர்களது பண்டைய மரபினரின் மட்டக்களப்பு முற்குக மணவினை வாரிசுகள் தொடாந்தும் பல ஆண்டுகள் விரிவாக்கம் பெற்றே வந்திருப்பர் என்பதனை வரலாற்றில் குறிப்பிட்டே ஆக வேண்டும். கி.பி 8ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட அராபிய பாரசீக அபிசீனிய பிணைப்பினை இச்சமூகம் பெற்றதா என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் இதற்கான வாய்ப்புகள் அன்று இருந்ததாகவே கொள்ளவேண்டும்.
இவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை குடிவழி மரபினை இறுக்கமாகப் பற்றியிருந்தமை தெரிகின்றது. அம்பாரை - மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம்களிடையே காலிங்காகுடி, உலகிப்போடி குடி, படையன் குடி, பணிக்கன் குடி, கச்சிலான்குடி எனப்படும் முற்குகக் குடிப்பெயர்களும், வடக்கன்குடி, மாந்தறாகுடி, பொன்னாச்சிகுடி, வரிசைநாச்சிகுடி, பூமாலைக்குடி, முகாந்திரம்நாச்சிகுடி போன்ற வேறு குடிகளும் தென்படுவதைக் காணுகின்றோம். இவர்களுக்கான குல விருதாகத் தொப்பி அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனிடையே இப்பிரதேச முற்குகர்கள் தங்கள் மத அனுஷ்டானங்களில் பட்டாணியர் மடை என ஒரு மடை வைப்பதுவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தைப் போன்று காத்தான்குடியின் பண்டைய ஜூம்மாப் பள்ளியான மீரா பள்ளியில் 12 புனித நிகழ்வுகள் இடம் பெறுவதும் தொடக்க நிகழ்வில் தான்தோன்றீச்சர நிருவாகிகள் கலந்து கொள்வதும் தான்தோன்றீச்சர திருவிழா முதல் வைபத்தில் மீரா பள்ளி நிருவாகிகள் பன்னிருவரும் தான்தோன்றீச்சரம் சென்று உப்பு வழங்கி கௌரவம் பெறுவதும் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நடைமுறையாக தொடர்ந்து வந்துள்ளது. இதே போன்ற நடைமுறைகள் அக்கரைப்பற்று, சம்மாந்துறை கரவாகு ஏறாவூர் பகுதிகளிலும் பரவலாகத் தென்பட்டன. இத் தொடர்புகள் அறுந்த தன்மையே மட்டக்களப்பின் பிணைப்புற்ற இரு சமூகத் தளத்துள் கீறல்களை உண்டுபண்ண ஏதுவாக அமைந்தது.
மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம்கள் பற்றி இவ்வத்தியாயத்தை நிறைவு செய்யுமுன் காத்தான்குடி தமிழறிஞர் எம்.எம்.எம்.மஹ்றூப் ஹரீம் அவர்களது ஆய்வுக் கட்டுரையிலிருந்து (மட்டக்களப்பு சாகித்திய விழா மலர் - 1993) சில பகுதிகளைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும்.
கொக்கட்டிச் சோலை கோயில் தேர்த் திருவிழாவில் தேர் வடத்தைப் பிடித்துத் தொடக்கிவைக்க முஸ்லிம் ஒருவருக்கு இடம் கொடுப்பதும் கோயில்களில் மடை வைக்கும்போது பட்டாணியர் மடை என்ற ஒரு மடை வைக்கப்படுவதும் முற்குகர்கள் முஸ்லிம்களை எவ்வாறு மதித்தார்கள் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.
வியாபார வர்த்தகச் சமயக் கலாசாரத் தொடர்பால் இந்தியாவின் கரையோரப் பட்டணங்களான காயல் பட்டணம், அதிராமப் பட்டணம், கீழ்க்கரை, ஏர்வாடி, கொச்சி முதலிய இடங்களிலிருந்து முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறினர்.
கி.பி. 1626ல் இலங்கையின் மேற்குக் கரைப்பகுதியில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்களை போர்த்துக்கேயரின் வியாபாரத்திற்கு இடையூறு செய்வதாகக் கூறி முஸ்லிம்கள் மிகவும் இம்சிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறான முஸ்லிம்கள் கண்டிய அரசன் செனரதனிடம் சரண்புகுந்தனர். அவன் அவர்களை அன்புடன் பெறுப்பேற்று கண்டியிலும் மட்டக்களப்பிலும் நாலாயிரம் பேர்கள் வரை குடியமர்த்தினான் என அறியக்கிடக்கின்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தில் 12 நாட்களுக்குக் குடிமுறைத் தேர்த்திருவிழா நடைபெறுவதைப் போன்று காத்தான்குடியின் ஜூம்மா பள்ளிவாசலான மீராபள்ளியிலும் 12 நாட்களுக்கு அதே மரபை ஒட்டித் தாய் வழி தொடர்பால் வரும் 12 குடி மௌலிது ஊதிக் காணிக்கை நேர்ச்சை வழங்கும் மரபும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
அரேபிய முற்குகத் தொடர்பால் முஸ்லிம்களிடமும் தமிழ்ப் பெண்களைப் போன்ற ஆடை ஆபரணம் அணியும் வழக்கத்துடன் திருமண சம்பிரதாயங்கள் பலவும் பின்பற்றப்பட்டு இன்று அருகி வருகின்றன.
இருதயத்தின் ஈரிதழ்போல் இந்துமுஸ்லிம் யாம்
ஒருவயிற்றுப் பாலகர் போலுள்ளோம்- அரசியலிற்
பேராசை கொண்டோர் பிரித்துநமை வேறாக்கி
ஆராயார் செய்வார் அழிவு
என்ற புலவர் மணி பாடலையும் தனது கட்டுரையில் ஜனாப் ஹரீம் இணைந்துள்ளார்.