உமர் முக்தார் மெலாமைன் கோப்பையில் இருந்த தேநீரை உறிஞ்சியபடி ‘ரஹ்மத்’ இஸ்லாமிய அச்சு இதழை வாசித்துக் கொண்டிருந்தான்.
செதில்கள் நீக்கி துண்டாடி விரால் மீன் துண்டுகளை மஞ்சளும் உப்பும் இட்டு சுழற்றிக் கொண்டிருந்தாள் ரமீஜா.
“ரமீ!”
“என்னப்பா?”
“விரால் மீனைச் சுத்தப்படுத்ற வேலை முடிஞ்சிட்டா கொஞ்சம் இங்க வாயேன்!”
புடவை முந்தானையால் முக வியர்வையை ஒற்றியபடி வந்தாள் ரமீஜா.
“சொல்லுப்பா…”
“தினமும் அரை மணி நேரம் குர்ஆன் ஓதுற, பெண்கள் மதரஸாவில் ஓதரம்மா குர்ஆன் ஓதுது. நம்ம வீட்டுக்கு பாத்தியா ஓத வர்ற ஹஜ்ரத் குர்ஆன் ஓதுராரு. ஆனா யாருமே திருக்குர்ஆனை முழுமையாச் சரியான விதத்தில் ஓதலன்னு தோணுது. எங்க போனா குர்ஆன் கல்பு நனையுற மாதிரி ஓதுரதைக் கேக்கலாம்?”
தோள்களை குலுக்கி உதடு பிதுக்கினாள் ரமீஜா.
வாசலில் கனத்த காலடி அரவம் கேட்டது.
“யாரது?”
“அஸ்ஸலாமு அலைக்கும்!” ஆண் குரலும் பெண் குரலும் இணைந்த கோரஸ். ஆண் குரலில் நாகூர் இ.எம். ஹனீபா, டி.எம். சௌந்தரராஜன், யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல்கள் கலந்திருந்தன. பெண்குரலில் பி.சுசீலா, ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, அனுராதா ஸ்ரீராம், அனுபமா, ஸ்வர்ணலதா, லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே குரல்கள் கலந்திருந்தன.
“வஅலைக்கும் ஸலாம்!” என்றபடி வெளிவாசலுக்கு நடந்து போனான் உமர்முக்தார்.
ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் பச்சைநிற அங்கி அணிந்து நின்றிருந்தார். கைகளில் வெள்ளை மோதிரங்கள். கழுத்தில் பாசிமணி மாலைகள். தலையில் தலைப்பாகை.
அவருக்கு அருகில் ஒரு 30 வயது பெண் நின்றிருந்தார். அவர் கருப்பு நிற புர்காவும் ஹிஜாப்பும் அணிந்திருந்தார்.
இருவருமே கண்களில் சுருமா ஈஷியிருந்தனர்.
அவரவர் இடது தோளில் ஒரு ஜோல்னாப்பை தொங்கியது.
“நீங்கள் இருவருமே கணவன் மனைவியா?”
“ஆம்!”
“கோபித்துக் கொள்ளக்கூடாது. நீங்களிருவரும் முஸாபர் அல்லது பக்கீர் அல்லது மிஸ்கீன்களா?”
“இல்லை… ஏன்?”
“மிஸ்கீன் என்றால் உங்களுக்குத் தலா ஐம்பது ரூபாய் தர விரும்புகிறேன்!”
“எங்களுக்கு வேண்டாம்!”
“பின்னே? எதற்காக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்?”
“ஒரு இஸ்லாமியர் வீட்டுக்கு இன்னொரு இஸ்லாமியர் வர வலுவான காரணங்கள் தேவையா? குர்ஆன் ஓதுதலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வந்தோம்!”
“இருவரும் உள்ளே வாருங்கள். எங்கள் வீடு உங்களை வரவேற்கிறது!”
இருவரும் உள்ளே நடந்து வந்தனர். இருவர் மீதும் அத்தர் வாசனையடித்தது.
வரவேற்பறையில் அவர்களை அமர வைத்து தானும் அமர்ந்தான் உமர் முக்தார்.
“உங்கள் பெயர்களை சொல்லுங்களேன்”
“என் பெயர் அல்காரீ அப்துல் ஸமது!” என்றார் ஆண்.
அவர், தனது மனைவியைச் சுட்டிக்காட்டி, “இவர் என் மனைவி இவரின் பெயர் அல்காரீ ருகைய்யா பேகம்!”
“மகிழ்ச்சி!”
ரமீஜா வந்து கணவனின் பின் நின்று கொண்டாள்.
“அல்காரீ என்றால் என்ன?”
“குர்ஆன் ஓதுவதில் திறமையான ஒருவரை காரீ என்கிறோம். அவர்கள் குர்ஆன் ஓதுவதற்கான விதிகளை (தஜ்வீத்) நன்கு அறிந்தவர்கள். அரபி எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும்? அரபி வார்த்தைகளை எப்படிப் பிரிக்க வேண்டும்? எந்த இடத்தில் நிறுத்தி ஓத வேண்டும்? - என்பதனை நன்கு புரிந்து கொண்டவர்கள் அல்காரீகள். மொத்தத்தில் அரபு மொழியை முறையாக உச்சரிப்பதில் வல்லவர்கள் அல்காரீகள். காரீ என்பது மரியாதைக்குரிய பட்டமாகும்!”
“ஆஹா! இரு அல்காரீகள் எங்கள் வீட்டுக்கு வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். உங்களை சந்திக்க வைத்ததற்கு இறைவனுக்கு நன்றி!”
ரமீஜா குறுக்கிட்டாள்.
“அல்காரீகள் குர்ஆனை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்களா?”
“ மனப்பாடமாக குர்ஆனை காரீகள் ஓதினால் தப்பில்லை. ஆனால் காரீகள் குர்ஆனை மனப்பாடம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!”
“நீங்களிருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?”
“அல்காரீகள் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் அதிகம். நாங்கள் மலேசியாவில் இருந்து வருகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து தர்காக்களையும் பார்க்க விழைகிறோம்!”
“நீங்கள் நாடோடிகளா?”
“இல்லை. மலேசியாவில் எங்களுக்கு நிலையான தங்குமிடம் இருக்கிறது!”
“தமிழ் நன்றாகப் பேசுகிறீர்கள்!”
“எங்கள் மூதாதையர்கள் காயல்பட்டினத்தில் இருந்து மலேசியாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். நாங்கள் உங்களை விட அருமையான தமிழ் பேசுவோம்.!”
“சிறப்பு!”
“காரீகள் பற்றி மேற்தகவல்கள் சொல்லுங்களேன்!”
“உலகின் நம்பர் ஒன் காரீ எகிப்தை சேர்ந்த அப்துல் பாசித் அப்துஸ் ஸமத். மரபு நெறியைப் பின்பற்றி, மனதைக் கவரும் ஒலியனுடன் கச்சிதமான தஜ்வீத்துடன் நாத ஒலி எழுப்புவார் ஸமத். இவர் 1950 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டுகளில் மிக பிரபலமானவர். இவருக்கு மௌரிச் சுல்தான் என்கிற பட்டம் உண்டு. இந்தியாவின் நம்பர் ஒன் அல் காரீ காயல்பட்டினம் ஏ.டி. ஹாஜியார்!”
“காரீயின் பணி என்ன?”
“மக்கள் முன்பாக திருக்குர்ஆன் ஓதுதல், பிறருக்கு குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல்!”
“ஓவ்!”
“உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறவர்களே என்கிறது அல்புகாரி ஹதீஸ் எண் 5027”
“காரீயின் பணி அவரது ஒலி, ஓதும் பாணி சமுதாயத்தின் ஆன்மிக உணர்வைத் தூண்டும் அளவுக்கு ஆழமானது!”
“வேறு பிரபலமான காரீகள் உள்ளனரா?”
“எகிப்தைச் சேர்ந்த முகமது சித்திக் மின்ஷாவி. மென்மையான எண்ணிக்கையைத் தவற விடாத ஓது முறை இவருடையது. இவரது ஓதுதல் ஒரு தியான நிலை. இவர் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாணியில் ஓதுவார். புக்கி யாரஹ்மான் அழகு ஓதல்கள். மூன்றாவதாக எகிப்தைச் சேர்ந்த மஹ்மூது கலீல் அலி ஹுசைரி. இவர் ஹாபிழ் மாணவர்களுக்கு குரு. நான்காவதாக சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் சாத் காமிதி. அழகான நாதமிக்க மனதை அமைதியூட்டும் ஓதல். யாஸீன், முல்க், காப் சூராக்கள் ஓதுவதில் வல்லவர்!”
“தொடர்ந்து கூறுங்கள்!”
“ஐந்தாவதாக சேக் மிஷாரி ராஷித் அல் பாஷி. குவைத்தை சேர்ந்தவர். நஷீத் இஸ்லாமிய பாடல்களும் பாடுவார். ஆறாவதாக மக்காவின் முன்னாள் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரகுமான் அல் சுதாய்ஸ். ஏழாவதாக ஷேக் சாத் அல் சுரைம். எட்டாவதாக எகிப்தைச் சேர்ந்த காரீ அஹ்மது நுவைனா. ஒன்பதாவதாக மக்கா இமாம் காரீ யாசர் அல் டோசரி. பத்தாவதாக காரீ ஷேக் அபுபக்கர் அலி சத்ரி. இவருக்கு பாசுரக் குரல்!”
“அல் காரீகளே! இன்று எங்கள் வீட்டில் தேங்காய் சோறும் விரால் மீன் குழம்பும். இருவரும் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுங்கள். மஹ்ரீப் தொழுகைக்குபின் எங்கள் வீட்டில் இருவரும் சேர்ந்து குர்ஆன் ஓதுங்கள். எங்கள் வீடு இறையருளால் நிரம்பி வழியட்டும்!”
-இருவரும் திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்தனர்.
வீட்டுக்குள் ஆயிரக்கணக்கான பூக்களின் நறுமணம் கமழ்ந்தது. திருக்குர்ஆனை கேட்க கேட்க உமர் முக்தாரும் ரமீஜாவும் இரு புறாக்களாய் மாறி காபாவின் மீது பறந்தனர்.
அறை முழுக்க மலக்குகள் நிறைந்து பேரானந்த பரவச நிலை அடைந்தனர்.
மனக்கண்ணில் இறைசெய்தியை சொல்லும் நபி நாயகமும் அதனை எலும்பில் எழுதும் நபி தோழரும் தெரிந்தனர். மொஸார்ட் பீத்தோவான் இசை வழிந்தது. இரு ஜோடி காதுகளில் தேன் சுனாமி.
மூன்று மணி நேரம் ஓதுதலுக்கு பின் ஆனந்தக் கண்ணீர் கசிய பரவசித்தனர் உமர் முக்தாரும் ரமீஜாவும்.
“எங்கள் வீட்டைத் தேர்ந்தெடுத்து எப்படி வந்தீர்கள் அல் காரீகளே?”’
“ஒரு முதிய தம்பதியினருக்குப் பல் செட் பொருத்தும் செலவை ஏற்றுக் கொண்டீர்கள். அதனால் உங்களைச் சிறப்பிக்க கனவு மூலம் எங்களுக்குச் செய்தி வந்தது! அதனாலே வந்தோம்….”
ஒரு கவ்வாலி பாட்டை பாடியபடி அல்காரீ ஜோடிகள் தெருமுனைக்கு நடந்து மறைந்தனர்.